Showing posts with label Brain. Show all posts
Showing posts with label Brain. Show all posts

Sunday, 5 June 2011

Tell-Tale Brain


கம்ப்யூட்டர் உபயோகிக்கும் எல்லாருக்குமே வாய்த்திருக்கும் இந்த அனுபவம்: நாம் சமீபத்தில் உபயோகித்திருக்கும் கோப்புகளை ஸ்டார்ட் மெனுவில் டாக்குமெண்ட்ஸ் எனும் உப மெனு மூலம் அணுகியிருப்போம். பின்னர் அந்த கோப்புகளை இடம் மாற்றி வைத்திருப்போம் அல்லது தேவையில்லை என டெலிட் செய்திருப்போம். ஆனால் அவற்றின் பெயர் ஸ்டார்ட் மெனுவின்
டாக்குமென்ட்ஸில் இருக்கும் அதனைக் கிளிக்கினால் கம்ப்யூட்டர் சற்று நேரம் தேடிவிட்டு, ' என்ன விளையாடுறியா இடம் மாத்தி வச்சிட்டியோ அல்லது காலி பண்ணிட்டியோ " என மெசேஜ் காட்டும்

மனிதனின் மூளை இப்படித்தான் மனிதனின் அங்கங்களை மேப் செய்து வைத்திருக்கிறது. விபத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ ஏதானும் உறுப்புகள் துண்டிக்கப்பட்டால் அவை இருந்த போது மூளையில் அந்த உறுப்புகளுக்காக உண்டாக்கப்பட்ட நினைவு மேப்பிங் அந்த உறுப்பு துண்டிக்கப்பட உடன் நீங்குவதில்லை

உதாரணமாக மணிக்கட்டுக்கு கீழே கை துண்டிக்கப்பட்டது என வைத்துக் கொல்வோம். அப்படிப்பட்ட நபருக்கு கீழே விழுந்திருக்கும் பொருளை எடுக்கும் தேவை உண்டாகும் போது அதற்கான கட்டளை கைக்க்குப் போகும்.. சற்று இடைவெளியில் ஆஹா நம்மாளுக்குத்தான் கையை பஞ்சாய்த்துல அன்னிக்கு வெட்டிட்டாங்களே என உரைக்கும். மூளையின் மேப்பிங்கில் நம்ம்வருக்கு கை
இல்லை என பதிவு அப்டேட் ஆக சில காலம் பிடிக்கும்

இப்படியான சுவாரசியமான மூளை குறித்த புத்தகம் Tell-Tale Brain ஆசிரியர் நரம்பியல் மருத்துவர் வி. எஸ் இராமசந்திரன்

7 என்ற எண்ணை எத்தனை பெரிசாக எழுதிக் காட்டினாலும் எனக்கு 7 எனச் சொல்லத்தான் தெரியும் சிலருக்கு சில நம்பரைப் பார்த்தாலே சில கலர் தெரியுமாம். இதற்கு சினஸ்தீஷியா எனப் பெயர். தகரத்தில் கிறீச் கிறீச் என கீறினால் பலருக்குப் பல் கூசும் ஆனால் சில சப்தங்களைக் கேட்டால் சிலருக்கு ஏதானும் வாசனை வருவது போல தோன்றுமாம்.

நேற்று திருப்பதி போயிருந்தேன். கோவிந்தா கோவிந்தா இரைச்சல், ஜருகண்டியுடன் மிக்ஸாகி பெருமாளை சேவித்து விட்டு வந்து ப்ரசாத க்யூவில் நின்றேன் . எனக்கு நல்ல பசி என்பது வெங்கி நன்கறிந்து இரண்டு தொன்னையில் மிளகுப் பொங்கல் ஏற்பாடு செய்திருந்தார். உடனே எனக்கு மெது வடை வாசனையும் வந்தது. அக்கம் பக்கம் பார்த்தேன் வடை இல்லை. ப்ரசாத லிஸ்டில் எப்பவும் மெதுவடை வராதாம். இப்படி மிளகுப் பொங்கலைப் பார்க்கும் போதெல்லாம் மெதுவடை வாசனை வருவது சினஸ்தீஷியா வகையில்
சேர்த்தியா என வி.எஸ் இராமசந்திரனிடம் மெயிலில் கேட்டிருக்கிறேன்.

அலுவலகத்தில் எத்தனை ப்ரஷர் இருந்தாலும் இரவு வீட்டுக்கு வந்தபின் ஜெர்ரியைத் துரத்தும் டாம் பூனையைப் பார்த்தால் எனக்கு ப்ரஷர் ஓடிவிடும். இப்பொதெல்லாம் அந்த எலி பூனையைப் பார்த்தால் எனக்கு வால்ட் டிஸ்னி ஞாபகம் வருவதில்லை.

ஒரு காரின் பிம்பம் நமது மூளையில் பதிவாகி இருப்பதும் அது ஓடும் போது பதிவாகும் பிம்பங்களின் தொடர்ச்சியும் வெவ்வேறானவையாம். சிலருக்கு மூளையில் ஏற்படும் காயத்தால் 'மூவ்மென்ட்" என்பது தெரியாமல் போய்விடுமாம். அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரை அவரால் புரிந்து கொள்ள முடியும் அதையே கீழே ஊற்றினால் அவருக்கு அந்த பிம்பம் தெரியவே தெரியாது.

வழக்கமாக தன்னிடம் வரும் நோயாளிகளிடம் டாக்டர் கேட்கும் கேள்வி, "என்ன செய்யுது"

"டாக்டர் எனக்கு நாலு நாளா.... " இப்படி இருக்கும் பதில்

ஆனால் தான் செத்துப் போய்விட்டதாக சொல்லும் ஒரு ஆசாமியிடம் டாக்டர் என்ன பதில் சொல்லனும் யோசித்துப் பாருங்கள்

இராமசந்திரன் இதனை Cotard syndrome or walking corpse syndrome, என்கிறார்

ஒவ்வொருவரின் செய்கையில் தெரியும் விநோதங்களுக்கும் ஒரு நரம்பியல் காரணம் இருக்கும் எனும் விஞ்ஞானத்தினை மிக எளிமையாக நல்ல உதாரணங்களுடன் சொல்லும் இராமசந்திரனை தமிழ்ப் பதிப்பகங்கள் கவனிக்க வேண்டும்