Sunday, 18 November 2012

க்ருஷ்ணாவதாரம்-4

"நாராயண நாராயண.. ஸ்வாமி இன்றைக்கு நான் தங்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும்படியாகிவிட்டது"

"அதிருக்கட்டும் நாரதா.. கம்ஸனிடம் அவன் முடிவு பற்றி சொல்லியாகிவிட்டதா"

"ஆமாம் ப்ரபோ.. நீங்கள் ஆணையிட்டபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து இங்குதான் வந்தேன்"

"ஸ்வாமி.. நாரதன் வந்தால், அவனைக் கொண்டு சேஷன் தான் காரணமென்று சொல்ல வைப்பதாக சொன்னீர்கள்.. நானும் சேஷனும் அதற்கே காத்திருக்கிறோம்.. இதோ நாரதனும் வந்தாயிற்று"

"லஷ்மி.. ஏன் இந்தப் பதற்றம்.. பொறுமை.. எல்லா விளக்கமும் கிடைக்கத்தானே போகிறது"

"நாராயண நாராயண.. ஓ ஏற்கனவே என் பெயர் இங்கே பிரஸ்தாபமாகியிருக்கிறது.. என்ன சங்கதி என்று தான் தெரியவில்லை.. ஆதி சேஷா நீயாவது சொல்லக் கூடாதா"

"தேவரிஷி.. நடப்பதெல்லாம் பெருமாளின் லீலை.. ஆனால் பகவானோ நானே காரணமெனச் சொல்லுகின்றார்"

"லஷ்மி, சேஷா, நாரதா.. இப்போது நான் பேசலாமா"

" ஸ்வாமி.. அடியாள் இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்"

"சொல்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு நான் பூலோகத்தில் அவதரிக்க வேண்டியதொரு அவசியம் வந்திருப்பதாக சேஷன் என்னிடம் சொன்னான்.. அதெப்படி சொல்கிறாய் எனக் கேட்டேன் - பஞ்சவித ஜோதிர் ஸிந்தாந்த பவர்த்த கத்வேன ஞான ப்ரகாச ஷோஸ்ய ப்ரஸித்தம் என்றும் சொன்னானப்பா அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்"

"நாராயண நாராயண.. சேஷா இது தான் சங்கதியா.. மனம் , வாக்கு , காயம் இதனை சுத்தி செய்ய வல்வனாயிற்றே நமது சேஷன்.. நஷத்திரம், அதனோடு கிரஹங்களுக்கு இருக்கும் சம்பந்தம், நமது சேஷனுக்கு தெரிந்த அளவுக்கு இங்கே யாருக்குத் தெரியும்.. அதிருக்கட்டும் ப்ரபோ.. எனக்கொரு ஐயம்"

"சொல் நாரதா..."

"தேவகி, வசுதேவருக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மட்டும் சொல்லச் சொன்னீர்கள்.. ஆனால் தாங்கள் தான் அந்த எட்டாவது குழந்தையாக அவதரிக்க இருப்பதாக சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டீர்களே அது ஏன் "

"மூவரும் கேளுங்கள்.. இந்த அவதாரம், கம்ஸனை வதைப்பதற்கானது மட்டுமல்ல.. இதிலே நிறைய வைபவங்கள், செய்தாக வேண்டியிருக்கிறது.. அவதாரங்களில் மிகவும் மஹத்துவம் கொண்டதான இதிலே எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.."

"ஸ்வாமி அடியாளுக்கு ஆவல் மேலோங்கியிருக்கிறது"

"என்ன அது லஷ்மி சொல் எல்லோரும் தெரிந்து கொள்வோம்"

"இந்த அவதாரத்திலே தாங்களின் திருநாமம் என்னவாக இருக்கப் போகிறது"

"உங்களுக்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதுமா.. இல்லை எப்படி இருக்கப் போகிறேன் என்றும் தெரிய வேண்டுமா"

"ப்ரபோ இதென்ன கேள்வி.. ஆவலைத் தூண்டி விட்டு, பின் ஏமாற்றம் தரும் வகைக்கு இஃது என் மாயை எனச் சொல்ல மாட்டீர்கள் தானே"

"சரி மூவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. நான் சொன்ன பிறகு கண்ணைத் திறக்கலாம்"

'நாராயண நாராயண.. ப்ரபோ.. ஆவல் தாங்க முடியவில்லை... கண்ணைத் திறக்கலாமா"


'கொஞ்சம் பொறுங்கள்... இப்போது திறக்கலாம்"

ப்ரும்மாண்ட உருவமில்லை.. கையிலே சார்ங்கமில்லை, சுதர்சனமில்லை. பாஞ்சஜன்யம் இல்லை, கௌமேதகம் இல்லை.. பத்மம் இல்லை.. ஏன் திருமார்பை அலங்கரிக்கும் துளசியுமில்லை.

ஆனாலும் மூவரும் அப்படியே லயித்துப் போயிருந்தார்கள்.. 

அவர்கள் எதிரே ஒரு சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தது.. கார்மேக வர்ணம்.. கையிலே குழல், தலையிலே மயிற் பீலி, பட்டுத் துணி.. ஆனாலும் மேலாடை இல்லை.மார்பிலே சின்னதாக இரண்டு முத்து மாலைகள் அத்தனை தான் அலங்காரம் 

லோகத்திலிருக்கும் ரம்மியமெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சின்னக் குழந்தையாக மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் இப்படி இருக்கும் என்று மாஹால்ஷ்மி, சேஷன், நாரதன் மூவரும் கை நீட்டி சொல்லியிருப்பார்கள்

இப்போதும் கை நீட்டி மூவரும் ஒன்று சேர குரல் தந்தார்கள், " ப்ரபோ.. ப்ரபோ... ப்ரபோ.. இந்தக் குழந்தையாகவா அவதரிக்கின்றீர்கள்.. இந்த திரு அவதாரம் என்ன பெயர் பெறவிருக்கிறது"

அந்தக் குழந்தை மிகச் சிவந்த உதடுகளைக் குவித்து பழிப்புக் காட்டி விட்டு, களுக் களுக் என்று சிரித்து விட்டு , மழலைக் குரலில்,,, க்ருஷ்ணாவதாரம் ... அதிருக்கட்டும் வாருங்கள் பூலோகத்திலே கம்ஸன் என்ன செய்கிறான்  என கவனிக்கலாம்.. இனிமேல் தான் நிறைய காரியங்கள் இருக்கிறது " என்று சொல்லியது

(தொடரும்)

Friday, 16 November 2012

க்ருஷ்ணாவதாரம்-3

தன் விதியைக் குறித்து நாரதர் சொன்னதும், கம்சனுக்கு முதலில் குப்பென்று வியர்த்து தான் போனது. 

"நிறுத்துங்கள்.. இந்த ஆட்டம் கொண்டாட்டம் , சங்கீதம் எல்லாம் நிற்கட்டும்.. யாரங்கே "

கிட்டத்தட்ட முழங்கினான் என்றே தான் சொல்ல வேண்டும்.

நாரதர் வந்ததையோ, அவர் கம்சனின் மரணம் குறித்து சொன்ன செய்தியையோ , அந்த சபா மண்டபத்திலே இருந்த இன்னொருத்தரும் கேட்டிருக்கவில்லை.. எல்லோருக்கும் கம்சனின் கோபம் கொப்பளிக்கும் கண்களின் மீது கவனமாக இருந்தது.

சிலர் கம்சனை நெருங்கி, என்னவென விசாரிக்கலாம் எனத் தலைப்பட்டார்கள். அவர்களை கம்சன் நிமிர்ந்து உற்று நோக்கி பார்வையாலேயே , "நில்லுங்கள்" என்று சொல்வது போல் பார்த்தான்.

கம்சனின் தந்த உக்கிரசேனன் கம்சனை நெருங்கி, " குழந்தாய்.. கம்சா.. ஏன் இந்த பதற்றமும் , கோபமும் .. என்ன நடந்தது.."

"விபரமாகச் சொல்ல வேண்டுமா.. கையிலே தம்பூர் வைத்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் நாராயண நாமம் சொல்லிக் கொண்டு லோகமெல்லாம் சுற்றிவருவாரே.. தேவரிஷி நாரதர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் என் முன்னே தோன்றி, இதோ இந்த யது குல திலகம் வசுதேவனை  மணந்து கொண்டு உல்லாசமான வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளே உங்கள் ஆசை மகள் தேவகி, இவர்களின் எட்டாவது குழந்தை என்னைக் கொன்று விடுமாம் ... சொல்லிவிட்டு அதோ அந்த வானத்திலே கரைந்து போனார் அந்த தேவ ரிஷி"

கம்சனின் கை சென்ற திசையிலே உக்கிரசேனனின் கண் ஒரு தரம் அரண்மனை முற்றத்தின் வழியே , மிக சொற்பமாக தெரிந்த ஆகாசத்தைப் பார்த்து திரும்பியது.. 

அவரது முதுமைக்கு கம்சனின் இந்த ஆவேசம் கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்க வேண்டும்.. பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு, நிற்கவும் முடியாமல் தடுமாறினார்.. ஒரு சேவகன் விரைந்து வந்து, ஆசனம் ஒன்றை போட்டுவிட்டு, " பிரபோ.. அமர்ந்து கொள்ளுங்கள் " என்று சேவித்து நின்றான்.

அந்த கோலாகலமான விருந்து அப்படியே நின்று போயிருந்தது.. மீண்டும் உக்கிரசேனன் புதல்வனைப் பார்த்து கேட்டார்,

"குழந்தாய் கம்சா.. நாரதர் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. தேவரிஷி வேறெந்த விபரமும் சொல்லவில்லையா"

இவர்கள் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் , தேவரிஷி, வைகுண்டத்தில், ஶ்ரீ ஹரியின் தரிசனத்துக்கு காத்திருந்தார்.

அக்கறையாக துவாரபாலகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார், " என்றைக்கும் பெருமான் என்னைக் காக்க வைத்தது கிடையாது.. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நீங்கள் என்னைக் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

"மன்னிக்க் வேண்டும் தேவரிஷி,, நாங்களாக எதுவும் சொல்வதில்லை, பரமாத்மாவின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்"

'ம்ம்ம் புரிகிறது.. நான் அதோ அப்படி நிற்கின்றேன்.. ஆணை வந்ததும் சொல்லுங்கள்"

"ப்ரபோ.. இதென்ன விளையாட்டு.. நாரதன் வந்திருக்கிறான்.. உங்களைத் தரிசிக்க அவனை அழைத்து  ஆசிர்வதிக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

" மஹாலஷ்மி.. இதில் என்னுடைய காரியம் எதுவுமில்லை.. இதோ நம்மிருவரையும் மெத்தை போலத் தாங்கி, குடை பிடித்துக் கொண்டிருக்கின்றானே.. சேஷன். இவன் செய்யும் வேலை இது"

"ப்ரபோ.. இதென்ன உங்கள் லீலைகளுக்கு என்னைக் காரணம் சொல்லுகின்றீர்கள்....பாருங்கள் மாதா என்னை சந்தேகமாகப் பார்க்கின்றார்கள்"

"ஆதிசேஷா.. நீ தானேயப்பா கிரஹங்கள், அவை நல்கும் பலாபலன்களை வைத்து அன்றைக்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாய்"

"ப்ரபோ.. இதென்ன.. நீங்களும் சேஷனும்.. என்னை விட்டு விட்டு நிறைய விஷயங்கள் பேசுகின்றீர்கள் போலிருக்கிறதே"

" மஹா லஷ்மி, சேஷா நீங்கள் சற்று காத்திருங்கள்.. இதற்கு நாரதன் தான் சரியான விளக்கம் சொல்லக் கூடும்.. அவனை அழைக்கிறேன்"

(தொடரும்)

Monday, 12 November 2012

க்ருஷ்ணாவதாரம் -2

அரண்மனை கோலாகலம் கொண்டிருந்தது.. மேல் மாடத்திலே அனைத்து தூண்களிலும் கதம்பமாக பூக்கள் சுற்றப்பட்டிருந்தது.. ராத்திரி நேரத்திலே அரண்மனையினைப் பார்த்தவர்கள் இது தேவேந்திரனின் அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகப் பேசிக் கொண்டார்கள். அப்படியாக தீபங்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.

வ்ருஷ்ணி தேசத்திலே இப்படி ஒரு கோலாகலக் கொண்டாட்டம் நடந்ததில்லை என்பதே எங்கும் பேச்சாக இருந்தது.. அரண்மனை மட்ட
ுமல்ல... தலைநகரமான மதுரா எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது..

அரண்மனையின் முன் மாடத்திலே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டதொரு ரதம் த்யாராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, யாரோ முக்கியஸ்தர் வெளியிலே கிளம்ப் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது..ரத சாரதி, அந்த அஸ்வங்களுக்கு போதுமான தீனியும் , குடிக்க ஜலமும் தந்து தயார் செய்திருக்க வேண்டும். அவை ரதத்திலே பூட்டப்பட்டிருப்பதனாலோ, நீண்ட பிரயாணத்திலே நில்லாமல் ஓட வேண்டும் என்ற காரியத்தினாலோ சோர்வு கொண்டதாகத் தெரியவில்லை .. மாறாக வெகு உற்சாகமாக துள்ளியபடி இருந்தன.. அந்த குதிரைகள் அரண்மனை வாசலைலைப் பார்ப்பதும் பின்னர் கொஞ்சம் ஏமாற்றம் கொள்வதும், அதன் பின்னர் சுபாவமாகத் துள்ளுவதுமாக இருந்தன..

ரதசாரதியும் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.. அரண்மனையின் வெளியிலேயிருந்த தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வாசலைப் பார்ப்பதாகவே இருந்தார்கள்

வருகை அற்வித்து கட்டியம் கூறுகின்றவன் கூட அந்த ப்ரம்மாண்ட கதவுகளின் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார்.. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தபடியால், அந்தக் கதவுகளில் வேலைப்பாடாகக் கோர்க்கப்பட்டிருந்த சின்ன மணிகள் அசைந்து, டிங் டிங் என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.. சில சமயம் எல்லா மணிகளும் ஆடி சப்தமெழுப்புகின்ற மாதிரி காற்றானது வேலை செய்தது

இருபது குதிரை வீரர்கள் முன்னேயும், நாற்பது ரதங்களில் சீதனங்கள் பின் தொடரவும், பிரதான ரதம் நடுவிலேயுமானதாக அந்தப் பவனி அரண்மனையினை விட்டுக் கிளம்பத் தயாராக இருக்கிறது..

வாத்தியக் கோஷ்டியினர் மங்கள இசையினை வெகு ரசனையுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

அரண்மனையின் உள்ளே, விருந்து தடபுடலாக இருக்கிறது.. பக்கத்து தேசத்திலிருந்தெல்லாம், ராஜாக்கள் வந்திருந்தார்கள்..

அவர்களெல்லாம் மஹாராஜா கம்சனின் ஆப்த சிநேகிதர்கள்.. கம்சனின் தங்கை தேவகியின் திருமணத்திற்கு வாராதிருப்பார்களா.. திருமணம் நேற்றே முடிந்துவிட்டது.. இன்றைக்கு விருந்து முடிந்து தேவகி, தன் புருஷன் வீட்டுக்கு கிளம்புகிறாள்.

எந்த தேசத்து ராஜாவோ கம்சனின் காதுகளில் என்னமோ ஹாஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டும்

கம்சனின் பரிகாசச் சிரிப்பு வெடித்துக் கிளம்பி காற்றிலே கலந்து கொண்டிருந்தது..

இந்தக் கணத்திலே அந்த இடத்திலே தேவ ரிஷியான நாரதர் தோன்றினார்.

"வருக வருக தேவ ரிஷி வருக.. உங்கள் வருகையால் இந்தக் கம்சன் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறான். நீங்கள் என் தங்கை தேவகியையும் மாப்பிள்ளை வசுதேவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.."

"அதெற்கென்ன கம்சா.. என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.. நீ தான் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.. அதைச் சொல்லவே நான் வந்தேன்..... நாராயண நாராயண"

"எனக்கென்ன வந்தது தேவ ரிஷி அவர்களே.. என்னை நெருங்க துணிவுள்ளவுள்ளவன் பூவுலகில் இருக்கின்றானா என்ன"

" நீ இப்படி நினைத்துக் கொள்வது தான் ஆபத்து கம்சா.. இதோ புது மணப்பெண்ணாக சிரித்துக் கொண்டிருக்கின்றாளே உன் தங்கை தேவகி.. அதோ பிரமுகர்களிடம் விநயமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே யது குல மன்னர் ,, உன் மாப்பிள்ளை வசுதேவர்.. இவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை.. உன்னைக் கொல்வான்.. அவனே உனக்கு எமன்"

இந்த வாக்கியம் முடிந்து போன போது கம்சனின் பதிலுக்கு காத்திருக்காமல் நாரதர் அந்த இடத்திலிருந்து மறைந்தார்..

கம்சன் முகம் இறுகியிருந்தது...

காற்றும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அசையாமல் நின்று போயிருந்தது

(தொடரும்)

Sunday, 11 November 2012

க்ருஷ்ணாவதாரம் -1

க்ருஷ்ணரைக் குறித்த ஏராளனமான செவி வழிக் கதைகள், குழந்தைகளுக்கு சோறூட்டும் போது சொல்லப்படும் தந்திரங்கள் நிறைந்த கதைகள். தத்துவ உலகில் பகவத் கீதை குறித்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், பண்டிகைக் காலங்களில், காலட்சேபங்களில் சொல்லப்படும் கதைகள்

இந்தியாவில் க்ருஷ்ணன் புராணம் கலந்த அதிசயம்.. இந்த பரந்த தேசத்திலே பல தரப்பட்ட கலாச்சாரங்களில் கலந்திருக்கும் ஆச்சரியம் க்ருஷ்ணன்..

நான் வாசிக்கின்ற பொழுதெல்லாம் புதியதும், பரவசம் தரக்கூடியதுமான க்ருஷ்ண வைபவங்களை நினைத்து நினைத்து சந்தோஷிக்கின்றேன்.

பிள்ளைப் பிராயத்து விளையாட்டு, அரசியல் நிகழ்வுகளை நடத்தி வைத்தவன், பெரும் தத்துவ உரைக்கு ஆசிரியன்.

இரிஞ்சாலக்குடா எனும் கேரள நாட்டு ஊரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும் ( ஐ , ஜி ஆர் மரார் எனும் போலிஸ் அதிகாரி பாத்திரம் நினைவுக்கு வரலாம்.. அந்தப் பெயரில் வரும் ஐ .. குறிக்கும் ஊர் இரிஞ்சாலக்குடா !!!!!)

இந்த இடத்திலிருக்கும் ரயிலடிக்குப் பக்கத்திலே திருக்காட்கரை எனும் திவ்ய தேசமிருக்கிறது.. அங்கே நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் பெருமாள் காட்காரையப்பன்)

இந்தப் பெருமாளை பாசுரம் பாடி மகிழும் நம்மாழ்வாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்


என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

ஒருவன் கள்ளத்தனம் செய்கிறான்,, சூதுவாது செய்கிறான் என்றால் அவனை விட்டு விலகி நிற்க வேண்டாமா.. ஆனால் இந்த கள்ளத்தனம் கொண்ட கண்ணனை ராப்பகலாக நினைத்து தான் கரையேற வேண்டும்

நம்மாழ்வாரை மிஞ்சி சொல்ல என்ன இருக்கப் போகிறது

இரண்டு தினங்களில் தீபாவளி இருக்க, இந்த க்ருஷ்ணாவதாரம் தொடரை தொடங்குகிறேன்

இந்த பதிவு அறிமுகம் தான்.. கதையின் முதல் பதிவு... தீபாவளி கழித்து தொடங்குகிறேன்

Monday, 3 September 2012

Uniform Civil Code-9

Uniform Civil Code-9

இந்திய அரசியல சாசனச் சட்டத்தின் தந்தை எனும் தனிப்பட்ட பெருமையினையும் அடைமொழியினையும் அம்பேத்காருக்கு மட்டும் வழங்கி, நாடு மகிழ்கிறது

ஆயினும் அரசியல் சாசனம் உருவானதில் அவருக்கு சற்றும் குறையாத பங்காற்றிய பலரின் பெயர்கள் அம்பேத்காரின் புகழ் வெளிச்சத்தின் காரணமாக அத்துனை அதிகம் தெரியாமலே போயின.

அப்படி ஒருவரே பெனகல் நரசிங் ராவ்.

நரசிங் ராவ், இந்திய அரசியல் சாசனச் சட்டம் உருவாக ஆற்றிய பங்களிப்பினை, அரசியல் சாசன சபையின் விவாதங்களின் வழி, சற்று காண்போமா

அன்றைக்கு திங்கட் கிழமை, டிசம்பர் 9 , 1946ம் வருஷம்.. புதுடில்லியில், நாடாளுமன்றக் கட்டிட  வளாகத்தில், மைய மண்டபத்தில் இந்திய அரசியல் சாசன சபையின் முதல் கூட்டம்.. மிகப் பிரசித்தியான சரித்திர நிகழ்வு.

சபையின் தற்காலிகத் தலைவராக, இருந்து வழிகாட்ட சச்சிதானந்த சின்ஹாவினை அழைத்தார்,  பெரியவர் ஆச்சார்ய க்ருபளானி அவர்கள் .

சபையின் முதல் நடவடிக்கைகள் தொடங்கின..  அமெரிக்க வெளியுறவுத் துறை, சீனாவின் தூதரகம் அனுப்பியிருந்த வாழ்த்து தந்தி வாசகங்களை அவைக்கு வாசித்துக் காட்டினார் சச்சிதானந்த சின்ஹா

அதன் பின்பு அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.. இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கம் எனும் சரித்திர நிகழ்வு , ஒரு சர்ச்சையுடன் தொடங்கியதென்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆச்சரியமிருக்கும்

ப்ரிடிஷ் பலுச்சிஸ்தானம் ப்ரதேசத்தின் பிரதிநிதியாக மொகமத் கான் ஜோஹாசியைத் தேர்வு செய்தது செல்லாது என முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார் கான் அப்துஸ் சம்த் கான். அதனை அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தார், தற்காலிகத் தலைவர் சின்ஹா,

பின்னர் தலைவரின் உரை .. இந்திய அரசியல் சாசன சபையின் முதல் உரை என்பதாகக் கூட சொல்லலாம்.. ஆனால் சச்சிதானந்த சின்ஹா தனது உரையின் வடிவத்தினை பெனகல் நரசிங்க ராவ் தன் சார்பாக வாசிப்பார் என்று சொல்லிவிட்டார்

பாரிஸ்டரும், சிறந்த இலக்கியவாதியுமான சச்சிதானந்த சின்ஹாவின் உரை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் சரித்திர நிகழ்வுகளின் தொடக்க உரையினை வாசித்தவர் பெனகல் நரசிங் ராவ்

ஆமாம் யார் இந்த பெனகல் நரசிங் ராவ்..

(தொடரும்)


Monday, 20 August 2012

Uniform Civil Code-8

Uniform Civil Code-8


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் வரைவு, அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்களுக்காகவும், ஒப்புதலுக்காகவும் முன்னிறுத்தப்பட்டு , பொது சிவில் சட்டத்தின் அவசியம் , அதனை மறுப்பவர்களின் ஆதங்கம், மறுப்பதற்கான காரணம் இவற்றினை மிக சுருக்கமாக நாம் சென்ற அத்தியாயங்களில் கவனித்தோம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 3 ஆகிய அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights) , பகுதி 4 ஆகிய Directive Principles of State Policy (அரசின் கொள்கை நிர்ணயத்துக்கான வழிகாட்டி) இவை இரண்டுக்கும் இடையேயான மிக முக்கியமான வேறுபாடு, பகுதி மூன்றானது உறுதி செய்யப்பட்ட, நீதி மன்றத்தின் வழியாக உரிமையாக கோரிப் பெற உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஷரத்துகள்.. ஆயின் பகுதி நான்கானது அப்படியானது அல்ல.

இதனாலேயே பொது சிவில் சட்டம் என்பதை ஓர் அடிப்படை உரிமை ஷரத்தாக உறுதி செய்து விட வேண்டும் என அம்பேத்கார் விரும்பினார். அவருடைய கருத்தை மிகவும் வலுவாக ஆதரித்தவர்க்ள் மஸானி, ராஜ்குமாரி அம்ரித் கௌர், ஹன்சா மேத்தா.

இந்த தொடரை வாசிக்கின்றவர்கள் இந்த மூவரைக் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

மஸானி என சுருக்கமான பெயரால் அழைக்கப்பட்ட மினோசெர் ருஸ்தும் மஸானி , லண்டனில் சட்டக் கல்வி பயின்ற பாரிஸ்டர், இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையின் உறுப்பினரில் ஒருவர்.. ராஜாஜி, என்.ஜி ரங்கா இருவருடன் இணைந்து ஸ்வதந்திரா கட்சியை ஸ்தாபிதம் செய்தவர்

ராஜ்குமாரி அம்ரித் கௌர்... ராஜ்குமாரி என்பது அடைமொழி.. பஞ்சாப் பிரதேசத்தின் கபூர்தலா ராஜவம்சத்தினை சேர்ந்தவர் என்பதால் அவர் ராஜகுமார். பள்ளி, கல்லூரிக் கல்வி லண்டனில் கொண்டவர். சுமார் பதினைந்து வருஷங்கள், மஹாத்மா காந்தியாரின் காரியதரிசியாக பணி புரிந்தவர். நாட்டின் விடுதலைக்குப் பின் நேருவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பணி செய்தவர். இந்தியாவில் மத்திய மந்திரி சபையில் காபினெட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட முதல் பெண் அமைச்சர்.. All India Institute of Medical Science எனும் மிகப் பிரசித்தியான மருத்துவ அமைப்பு தொடங்கிட இவரும் ஒரு காரணம்.. சென்னையில் இயங்கும் மத்திய தொழு நோய் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட இவர் ஒரு காரணம்.

ஹன்சா ஜீவராஜ் மேத்தா. புகழ்பெற்ற மனுபாஹ்ய் மேத்தாவின் புதல்வி. பெண் உரிமைகளுக்கான போராட்டத்தில் மிக முக்கியமானவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் குழுவின் தலைவராக அம்பேத்கார் இருந்தார்.. அந்த வரைவுக்கு குழுவுக்கு துணைக் குழுவும் இருந்தது.. அதன்றி, இந்திய அரசியல் சாசன வரைவுக்கென வெளியிலிருந்தும், நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டு, துணைக்குழு பிரதானக் குழு இவற்றில் விவாதிக்கப்பட்டன.

இப்படியான நிபுணர்களின் பெனகல் நரசிங் ராவ் மிகவும் முக்கியமானவர்.

இந்திய அரசியல் அமைபுச் சட்டத்தின் வரைவின் முதல் வடிவத்தினைத் தந்தவர் பெனகல் நரசிங் ராவ் தான்.. அவருக்குத் துணையாக எஸ் என் முகர்ஜி..

(தொடரும்)

Thursday, 16 August 2012

Uniform Civil Code-7

Uniform Civil Code-7

இந்திய அரசியல் சாசன சட்டத்தினை வடிவமைத்து நிறைவேற்றும் பெரும் பொறுப்புடன் அரசியல் சாசன நிர்ணய சபையின் கூட்டங்கள் நிகழ்ந்தன

1948 ம் வருஷம் டிசம்பர் மாசத்தின் இரண்டாம் நாள்.. வியாழக்கிழமை.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவை காலை ஒன்பதரை மணிக்குக் கூடியது..

அன்றைக்கு அடிப்படை உரிமைகளில், "பொது இடங்களில், பொது அமைதிக்கு பாதகம் வராத வகையில் ஆயுதம் தாங்காமல் கூடுவது" எனும் ஷரத்தினைக் குறித்த விவாதம் நிகழ்ந்தது..

இந்த விவாதத்தின் போது, அம்பேத்காரின் பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம், அரசியல் சாசன சபையின் துணைத்தலைவர் ஹெச் சி முகர்ஜி குறுக்கிட்டு, "அரசியல் சாசன வரைவு கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவருமே இங்கே முன்னிறுத்தப்படும் ஷரத்துகளுக்குப் பொறுப்பானவர்கள்.. அதன்றி ஒவ்வொரு முறையும், வரைவு கமிட்டியின் தலைவரான நண்பர் அம்பேத்காரை மட்டும் விளித்து உறுப்பினர்கள் விமர்சிப்பது அத்தனை நல்லதாகத் தெரியவில்லை" என்று சொன்னார்

தனது பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம்.. அம்பேத்கார் அமைதியாகவே இருந்தார்.. ஆயுதம் தாங்காமல் எனும் கட்டுப்பாட்டுக்கான காரணத்தினை விளக்கிச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.. சில சமயம் உறுப்பினர்கள் குறிப்பிட்ட் தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினார்

ஆனால் ஆயுதம் தாங்காமல் என்பது மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் எனும் கருத்து அவைக்கு வந்த போது, அம்பேத்கார் பேச எழுந்தார்

"துணைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.. இந்த பெர்சனல் சட்டங்கள் எனும் விவாதம் மீண்டும் ஒலிப்பது ஆச்சரியம். நாம் அரசின் வழிகாட்டும் நெறிகளை வரைவு செய்யும் போது, பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து மிகவும் விரிவாகப் பேசி விவாதித்திருக்கிறோம்.. அப்போதும் உறுப்பினர்கள் பொது சிவில் சட்டம் எப்படி அவரவர் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் என்று சொன்னார்கள்.. அதற்கு போதுமான விளக்கங்களை நானும், முன்ஷி, நண்பர் அல்லாடி தந்து விட்டோம்.. இப்போது அடிப்படை உரிமைகளைக் குறித்து விவாதிக்கும் இந்த தருணத்தில் ,"மதங்களுக்கான பெர்சனல் சட்டங்கள்" எனும் விவாதம் மீண்டும் தலைகாட்டுகிறது

இப்படி நாம் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதுகாக்க முனைந்து அதற்கென நமது அரசமைப்புச் சட்டத்தில், விலக்களித்து ஷரத்துகளைச் சேர்த்துக் கொண்டே போவோமானால் அது அரசமைப்புச் சட்டத்தினையே நீர்த்துப் போக வைக்கும் செயலன்றி வேறேதும் இல்லை. அது மட்டுமல்ல இந்தியாவில் நாடாளுமன்றம் மட்டுமல்ல மாநில சட்டமியற்றும் மன்றங்களும் எந்த சமூக முன்னேற்றம் சார்ந்த சட்டங்களும் நிறைவேற்றி செயல்படுத்த இயலாதன ஆகிவிடும் அபாயமும் உண்டு

பலவிதமான மதங்கள், இனங்கள் , பிரிவுகள் கொண்ட நமது பெரிய தேசத்தில் ஒவ்வொரு மனிதனும் பிறப்பது தொடங்கி, இறப்பது வரைக்கும் கணக்கில் அடங்காத வகைக்கு மதங்களுக்கு ஏற்ப நியதிகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன.. இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, நாமும் ஒவ்வொரு மதம் அதற்கான பெர்சனல் சட்டங்கள் நியதிகளைப் பாதுகாக்க தொடங்கி, அரசமைப்புச் சட்டத்திலும் ஏனைய சட்டங்களிலும் விதி விலக்குகளும் சலுகைகளும் அமைத்துக் கொண்டே போனோமானல் அது பிற்காலத்தில் சமூக முன்னேற்றத்தினை முட்டுக்கட்டை போடும் என நான் தீர்மானமாக நம்புகிறேன்

நாடு சுதந்திரம் பெற்று, நாம் நமக்கென அரசமைப்பு அமைத்துக் கொள்ள ஒருங்கிணைந்து கூடி விவாதிக்கும் இந்தத் தருணத்தில் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா ?

மதம், அதன் நியதிகளுக்கு என ஓர் எல்லையினை நாமே நியமித்துக் கொள்ள வேண்டாமா.. அப்படி நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொள்வது ஒன்றும் அசாதாரணமானது அல்ல

ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை,, நாம் நமக்கான அரசமைப்பினை வடிவமைத்துக் கொள்ள கூடி விவாதிக்கும் இந்த தருணத்தில் ஏன் மதம் எனும் பொருளுக்கு அங்கீகாரமும்,, அதற்கென அதிகார வரம்புகளும் கோருகின்றார்கள்

நாம் போராடி அடைந்திருக்கும் சுதந்திரம்.. இப்படி நாம் வேறுபட்டே நிற்போம் என்று கூடி சொல்வதற்காகவா.. நாம் அடைந்த் சுதந்திரம் இப்படியான சமூக சூழலை உருவாக்கிக் கொள்ளவா...

மதங்களும் அதன் பெர்சனல் சட்டங்ளும் மிகவும் முக்கியமெனில், இந்த சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் சபைகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்

குடியரசு என்பது மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்களுக்கான அரசு அமைத்து , அதற்கென சட்டங்களும் , விதிகளும் ஏற்படுத்திக் கொள்வது.. அதனால் உருவாகும் சட்டங்கள் மக்கள் மீது அரசு தனது கட்டுப்பாட்டினை செலுத்தும் அதிகாரம் மட்டும் கொண்டவை என்பது பொருளாகாது.. இதனை உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.. ஒரு சட்டம் பொதுவானது என செயல்வடிவம் பெறுவது பொது நன்மை எனும் அடிப்படையிலன்றி, எந்த ஒரு குறிப்பிட்ட சமூகம், இனம், மதம் இவற்றின் உணர்வுகளை, சம்பிரதாயங்களை பாதிக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்படுவதில்லை.. மதங்களின் பெர்சனல் சட்டங்கள், இந்தக் குடியரசின் சட்டமியற்றும் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் எனும் கருத்து உதயமாவதை நான் எதிர்க்கிறேன்"

இந்தக் கருத்துகளுடன் வேறுபல உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அம்பேத்கார் பதிலளித்தார்..


இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு நான்கானது Directive Principles of State Policy அதாவது, அரசு தனது கொள்கைகளை வகுக்கும் போது பின்பற்ற தேவையான நெறிமுறைகள் எனும் அளவில் கொள்ளலாம்.. இந்த பிரிவில் ஷரத்து எண் 44 பொது சிவில் சட்டத்தினை கொண்டு வர அரசு தேவையான முயற்சிகளை செய்யும் என்பதாக அரசமைப்புச் சட்டம் நிறைவேறியது
இந்தப் பகுதி நான்கானது அடிப்படை உரிமைகள் போல Enforceable கிடையாது.. ஒரு வேளை நமது அரசமைப்பின் அடிப்படை உரிமையாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமேயாயின் பல நீதி மன்ற வழக்குகளில் அந்த ஷரத்து பெருமளவு பேசப்பட்டிருக்கும்

பொது சிவில் சட்டத்தினை ஓர் அடிப்படை உரிமையாக, அடிப்படை உரிமையின் ஷரத்தாக கொண்டுவர அரசமைப்பு வரைவுக்கான துணைக்கமிட்டியின் ஆரம்ப கட்ட முயற்சிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது

அப்படியான முயற்சியில் அம்பேத்கார் முன்னிலை வகித்தார்.. அவருக்கு துணை நின்றவர்கள்...யாரெல்லாம் தெரியுமா

(தொடரும்)



Monday, 13 August 2012

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

மீண்டும் சுஜாதா தொடரினை பல காரணங்களினால் என்னால் தொடர இயலாது போனது

ஆனால் மீண்டும் தொடராக தொடர்ந்து எழுதிட தீர்மானிக்கிறேன்


எனது ப்ளாக்கில் "மீண்டும் சுஜாதா" எனும் லேபிளில் இந்த தொடரினை தொடரலாம். தொடரின் பழைய பதிவுகளை அங்கே படிக்கலாம்

----

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

"வாருங்கள் ரங்கராஜன்.. நலமாக இருக்கின்றீர்களா"

சுஜாதாவுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..

"என்னை ஞாபகம் வச்சு கூப்பிடறீங்களே அதெப்படி"

"நீங்கள் தானே என்னை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதாக இங்கிருக்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்"

"ஆமாம் எனக்கு கொஞ்சம் சந்தேகமெல்லாம் இருந்தது.. அதையெல்லாம் மனசிலே வச்சிக்கிட்டே தான் திருக்குறளுக்கு உரை எழுதினேன்"

"அப்படியா.. நீங்களும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கின்றீர்களா"

"இந்தியாவிலே ஒன்னு நீங்க கவனிக்கனும் வள்ளுவர் அய்யா"

"வசந்த் சும்மாரு.. டிஸ்டர்ப் பண்ணாத"

"அதென்ன பாஸ் .. நான் பேசினாலே எனக்கு தடை போடறீங்க"

"அவர் சொல்ல வந்ததை சொல்லட்டுமே"

"பார்த்தீங்களா பாஸ் வள்ளுவரே சொல்லிட்டார்.. நான் சொல்ல வந்தது என்னான்னா .. இந்தியாவிலே வக்கீல் உத்தியோகத்திலே பெரிசா பேர் எடுக்கனும்னா.. இன்டியன் கான்ஸ்டிட்யூஷன் பத்தி தடிமனா பொஸ்தகம் போட்டு கொறஞ்சது தொளாயிரம் ரூபாய்க்கு விலை வச்சு விக்கனும்.. அது மாதிரியே தமிழிலே எழுதிப் பேர் வாங்கனும்னா.. அவசியம் திருக்குறளுக்கு விளக்கம் எழுதனும்.. அப்படி ஒரு சம்பிரதாயம்"

"ஆனால் நான் வார்த்தைக்கு வார்த்தை விளக்கி அர்த்தம் எழுதல தெரியுமா .. வசந்த்.. ஓரளவுக்கு ரிசர்ச் பண்ணிதான் எழுதிருக்கன்னு நினைக்கிறேன்"

"உங்களுக்குள் இப்படி விவாதம் வேண்டாம் என நினைக்கிறேன்.. ரங்கராஜன் நீங்கள் உங்கள் ஐயங்களைச் சொல்லலாமே.. "

" என்னோட ஆரம்ப சந்தேகம்.. உங்களுக்கு இப்படி ஒரு மாரல் கான்டெக்ஸ்ட் கொண்டு வரணும்னு எப்படி தோணிச்சு.. உங்களுக்கு எதைப் பார்த்து எதைப் படிச்சு இப்படி எழுதனும்னு ஆர்வம் வந்தது"

"எந்த மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.. அப்படித்தானே.."

"ஆமாம் அய்யா .. அதிலே எந்த சந்தேகமும் இல்லை"

"ஆனால் ஒவ்வொருவருக்கும் அர்த்தம் மாறுபடும்.. அது இயற்கை.. இதையும் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்"

"ஒப்புக் கொள்கிறேன் .. அப்படி மாறுவது இயற்கை தான்"

"ஆனால் மனிதன் தனிப்பட்டவனில்லையே.. அவன் பிறரோடு இணைந்தும், உறவாடியும் வாழ்வு நடத்த அவசியம் இருக்கிறது. அப்போது தான் அவர்களுக்கு நீதி போதனைகள் தேவைப்படுகின்றன.. இதோ இந்த இரண்டு வழக்குறைஞர்களிடம் கேட்டால்.. குற்றவியல் சட்டங்களின் தொடக்கமும் நோக்கமும் சொல்வார்களே.. அவையும் அப்படித்தானே இருக்கும்.. சரி தானே கணேஷ், வசந்து"

"என்னைப் பேர் சொல்லி நீங்களே அழைச்சது எனக்கு புல்லரிக்கிறது.. ஆனால் வசந்துனு சொல்லாதீங்க. ப்ளீஸ் வசந்த்... அத்தினிதான்.. து வெல்லாம் இல்லை.. அது என்னமோ வயசான மாமி கூப்பிடற மாதிரி இருக்கு'

"அய்யா நான் உங்களைக் ஒன்று கேட்கலாமா.. "

"தாராளமாகக் கேளுங்கள் கணேஷ்.. "

"சந்தோஷம் அய்யா.. இப்ப கிரிமினல் சட்டங்களைக் கவனிச்சீங்கன்னா IPC 511 செக்‌ஷன் தான்

1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு வந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.


மஹாபாரத யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது

இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.

தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்

அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்

இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் !!!!)

அர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது

இந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி படிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்

வைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில் சமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.

நீங்களும் இப்படி பெரிய நம்பரில் தொடங்கி யோசிச்சு குறைச்சதுண்டா"

(தொடரும்)

Uniform Civil Code-6

Uniform Civil Code-6

அரசியல் சாசன நிர்ணய சபையில் டிசம்பர் 1, 1948ம் தேதி பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் தொடங்கியது. அன்றைக்கும் துணைத் தலைவர் ஹெச். சி முகர்ஜியின் தலைமயில் தான் நடவடிக்கைகள் நடந்தேறின

அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துகளின் விவாதத்தின் போது மீண்டும், முகமத் இஸ்மாயில் சாஹிப், ஒவ்வொரு மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகைக்கு எனும் திருத்தம் ஒன்றினை முன் மொழிந்தார்

அதனை ஏற்க தேவை இன்னும் வரவில்லை என்பதை குறித்து கவனத்தில் வைக்க வேண்டும் என்பதாக சி. சுப்ரமணியம் தனது கருத்தினை முன் மொழிந்தார்


முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்தினைச் சொல்லுமாறு துணைத் தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்

இஸ்மாயில் சாஹிப் பேசினாதாவது :

இதற்கு முன்பு நாம் , இந்த அவையில் விவாதித்த போது, அரசின் வழி காட்டும் நெறிகள் அத்தியாயத்தினைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பமாக அமைந்தது.. அப்போது நாம் அடிப்படை உரிமைகள் குறித்தும் விவாதிக்க அவசியமானது.. ஆனால் இன்றைக்கு விவாதம் முழுக்க முழுக்க அடிப்படை உரிமைகள் குறித்தது என்பதை மறக்க வேண்டாம்.. இந்த சூழலில் தான் நாம் அந்த அந்த மதங்களுக்கான பெர்சனல் சட்டங்களைப் பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பதை விவாதிக்க வேண்டும்.

அன்றைய நாள் விவாதத்தில் பேசிய முன்ஷி அவர்கள் சிறந்த வக்கீல். அதனால் அப்படிப் பேசினார். பெர்சனல் சட்டங்கள் என்பவை மதம் சார்ந்தவை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்.. அதே போல் அம்பேத்காரும் அதே போலவே பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். பொது சிவில் சட்டத்தின் பல அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு அனுகூலமாகவும் அவர்கள் மதத்தின் பெர்சனல் சட்டங்களைக் கைக் கொள்வதில் எந்த தடங்கலும் வராதிருக்கும் வண்ணமும் இருக்கும் போது, அப்படி ஒரு அனுகூலம் இல்லாத மதத்தினரின் மன உணர்வுகளை அம்பேத்கார் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்

நானும் ஒரு உதாரணத்தினை சொல்ல ஆசைப்படுகின்றேன்.. பசுக்களை கொல்வது என்பது சில சமூகத்தினருக்கு அவர்கள் மதம் சார்ந்து புனிதமில்லாத செயல்.. பாவமான செயல்.. ஆனால் சில சமூகத்தில் பசுக்களை கொல்வதும் அதன் மாமிசத்தைப் புசிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.. ஆனாலும் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளைக் கூட அந்த சமூகத்தினர் உரிமை கோரவில்லை


இந்த நிலையில் கிழக்கு பஞ்சாப் பகுதியின் உறுப்பினர் பண்டிட் தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட்டார் : " நண்பருக்கு பாகிஸ்தானில் பசு வதை தடை செய்யப்பட்டுள்ளது தெரியுமா"

தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட வேண்டாம் என துணைத் தலைவர் கேட்டுக் கொள்ள முகமது இஸ்மாயில் சாஹிப் பேசலாம் என யத்தனித்தார்

ஆனாலும் தாக்கூர் தாஸ் பார்க்கவா சளைக்கவில்லை : " இந்த அவை என் குறுக்கீட்டிற்காக என்னை மன்னிக்க வேண்டும்.. ஆனாலும் பசு வதை என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. ஏன் இந்தியாவில் ஆட்சி செய்த பல முகமதிய அரசர்கள் பசு வதை செய்வதனை தடுத்திருக்கின்றனர் என்ற கருத்தினை அவையில் பதிவு செய்ய விழைகின்றேன்"

முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்துகளை வலியுறுத்திப் பேசிய போது மீண்டும் சி .சுப்பிரமணியம் குறுக்கிட்டார் : " நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. அடிப்படை உரிமைகளில் நாம் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படலாகாது என்பதை விவாதிக்கும் போது, இது போல மதம் சார்ந்த பெர்சனல் சட்டங்கள் குறுக்கிட்டால், நம்மால் நம் கிரிமினல் சட்டங்களை நிர்வாகம் செய்யவே முடியாது"

இஸ்மாயில் சாஹிப் தான் கொண்டு வந்த தீர்மானங்களை வலியுறுத்தினார்.. ஆனால் அவை அன்றைக்கு அந்தப் பொருளில் மேலும் எந்த விவாதத்தினையும் காணவில்லை..

அன்றைக்கு மறு நாள் டிசம்பர் 2 அன்று அவையில் அம்பேத்கார் இந்தப் பொருளில் ஆற்றிய உரை மிகவும் குறிப்பிடத் தகுந்தது

(தொடரும்)


Monday, 6 August 2012

Uniform Civil Code-5

Uniform Civil Code-5

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகத்தான் அம்பேத்காரின் கருத்து இருந்தது

" தலைவர் அவர்களே. பொது சிவில் சட்டத்தினை அமுல்படுத்துவதில் அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராமல் செய்ய வேண்டும், என இங்கே உறுப்பினர்கள் முன் மொழிந்த எந்தக் கருத்தையும் என்னால் ஏற்க இயலாது.

நண்பர்கள் கே எம் முன்ஷி அவர்களும், அல்லாடி அவர்களும் நான் பேச விழைந்ததை பேசியுள்ளார்கள்

நண்பர் ஹுசைன் இமாம் கேட்கிறார், இத்தனை பெரிய நாட்டில் எப்படி ஒரே பொது சிவில் சட்டம் சாத்தியமாகும் என .. அவரது வினா எனக்கு ஆச்சரியம் தான் அளிக்கிறது

இத்தனை பெரிய நாட்டில் நம்மால் பொது கிரிமினல் சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது, சொத்து பரிமாற்றத்துக்கு பொது சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது

இங்கே பேசிய இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் ஓர் உண்மையினை மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.. அதனை அவர்களுக்கு நினைவுக்கு கொண்டு வருவது என் கடமை என நினைக்கிறேன்
1935 ம் ஆண்டு வட மேற்கு எல்லை மாஹாணங்களில் இஸ்லாமியர் அவர்கள் மதம் சார்ந்த சட்டங்களை கைக் கொள்ளவில்லை. அந்த வட்டாரம் முழுமைக்கும் ஹிந்து மதச் சட்டங்களைத்தான் பின்பற்றினர்.. இஸ்லாமியர் உட்பட‌

அந்த பிரதேசம் மட்டுமென உறுப்பினர்கள் நினைத்துவிட வேண்டாம்.. 1937 ம் ஆண்டு வரைக்கும் ஒருங்கிணைந்த மாஹாணம், மும்பை மாஹாணப் பகுதிகளிலும் இஸ்லாமியர்களும் ஹிந்து மதச் சட்டங்களையே பின் பற்றி வந்தனர்.. இது நம் வரலாறு.

என்னுடைய நண்பர் கருணாகர மேனன் சொன்ன தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள்கிறேன்.. அது என்னவெனில் வடக்கு மலபார் பிரதேசத்தில் மறுமகத்திய சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமானது அல்ல.. இஸ்லாமியர்களுக்கானதும் தான்.

ஒன்றை இந்த அவையில் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்.. இன்று பொது சிவில் சட்டம் என நாம் முன்னிறுத்தும் சட்டம், ஹிந்துக்களுக்கோ வேறு மதத்தினருக்கோ சாதகமாக இருக்கிறதெனவும், இஸ்லாமியருக்கு விரோதமாக இருக்கிறதாகவும் நினைக்க வேண்டாம்.

முன்னிறுத்தப்படும் பொது சிவில் சட்டம் பொருந்தி வரும் தன்மையால் மட்டுமே முன்னிறுத்தப் படுகிறது

பொது சிவில் சட்டத்தினை முன் மொழிபவர்களோ அதனை உருவாக்கியவர்களோ இஸ்லாமியர்ளுக்கு பெரும் தீங்கிழைத்து விட்டார்கள் என கருதுவது சரியில்லாத செய்கை.. அதிலே நியாயமும் இல்லை

பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.. அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு ஏற்ப அதனை மாற்ற வேண்டும் எனும் கருத்துகளை நான் எதிர்க்கிறேன் என சொல்லி அமர்கிறேன்

இப்படியாக , பொது சிவில் சட்டத்தினை அமுல் படுத்துவதெனில் அதனை அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் நிறைவேற்றலாம் எனும் மாற்றங்களை அரசியல் நிர்ணய சபை அன்றை தினத்தில் ஏற்க மறுத்தது.

(தொடரும்)