Saturday 13 September 2008

அச்சமில்லை அச்சமில்லை


பூஜையை முடித்து தீபாராதனை காட்டிப் பாடினேன்

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கு மெரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
பாடி முடித்து தீபத்தை ஒற்றியெடுக்க குனிந்தேன். தீபச் சுடரளவு ஜாஸ்தியாகி வளரத் தொடங்கிற்று

”என்ன இன்றைக்கு சக்தி வ்ழிபாடு ரொம்பவுமே அதிகமாக இருக்கிறது ?“ என்ற கேள்வியுடன் அந்த ஜ்வாலை முண்டாசு கட்டிய பாரதியாக மாறி இருந்தது.

எனக்கு இந்த திடீர் பிரசன்னத்தால் பிரமிப்போ தூக்கிவாரிப் போடுதலோ இல்லை. என்னவோ ரொம்ப காலம் எதிர்பார்த்த சம்பவம் மாதிரி சௌஜன்யத்தில் தான் இருந்தேன்.

“என்ன ஸ்வாமி பதிலே காணோம். இன்றைக்கு மட்டும் என்ன என் பராசக்தியிடம் இத்தனை உருக்கம்”

”என்னது உங்க பராசக்தியா; விட்டா நானே சிருஷ்டித்தேன் என்றே சொல்லுவீங்களே”

“நன்றாக யோசித்துப் பாரும். நானின்றி நீர் அறிந்தனையோ பராசக்தியை ?”

அவனைப் போலவே அவன் கேள்வியும் நிதர்சனமாய் எதிரே. ஒரு கணம் அந்தக் கேள்வியை முழுசாக உள்வாங்கி மூச்சை இழுத்துப் பிடித்துப் பார்த்தேன். எதிரே இருந்த அவன் ஒரு கணம் சுடராக நெடிந்து வளர்ந்து மீண்டும் மனித ரூபமாகவே தெரிந்தான்.

“பதில் சொல்ல முடியாத கேள்வியா கேட்டேன்”

“ இப்ப நான் உங்களைக் கேள்வி கேட்கலாமா”

“ ம் கேளுமே . என்ன தயக்கம். சரஸ்வதி தேவிக்கு லஜ்ஜை அதிகம்னு நான் எழுதியது இன்று வரை சத்தியமாகவே இருக்கிறது”


”இது அச்சமில்லை அச்சமில்லை பாட்டைப் பத்தி”

“என்னவோ உம் ஐயம்”

“ அதில்லை உலகம் எதிர்த்து நின்றால், யாரவது மதிக்கலேன்னா, வறுமை வந்தா, எல்லாம் இழந்து போண்டியானா, நண்பர் விஷம் கொடுத்தாக் கூட, படையே வந்தாலும், வானம் இடிந்து விழ்ந்தாலும் இதுக்கெல்லாம் அச்சமில்லைனு பாடினீங்க சரி. அதென்ன கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை டக்குனு எங்கேயோ சறுக்கின மாதிரி தெரியறதே. சும்மா எதுகையும் சந்தமும் வரணும்னு இச், துச் நச்னு எழுதி கச் னு எழுதிட்டீங்களா”

என்னையே தீர்க்கமாக பார்த்தான்.

“ ஒருவருக்கு அச்சம் எப்போது உதிக்கும்—சொல்லுமே”

“ அறியாமையால். அதாவது ஏதாவது புரியலேன்னா அதோட சம்பந்தப்படுத்திக்ற சந்தர்ப்பத்தில் அச்சம் வரும். அறிந்தால் அச்சம் நீங்கும்”


‘நன்று சொன்னீர் ஸ்வாமி – இப்போது நீர் அடுக்கடுக்காக எம் பாட்டிலிருந்து கேட்டீரல்லவா அதனை ஒவ்வொன்றாய் நினைவு கொள்க. இந்த அவகாசத்தில் நான் தாம்பூலம் தரித்துக் கொள்கிறேன் ”

“ஆச்சுங்க”

"உலகம் உன்னை அறியாமையால் அல்லது நீ உலகை அறியாமையால் உலகம் உன்னை எதிர்த்து நிற்கும் சூழல், உன்னை பிறர் அறியாமையாலேயே உம்மை துச்சமாக எண்ணி தூறு செய்வர், வாழும் வகை அறியாமையால்லேயே பிச்சை வாங்கும் நிலை தோன்றும், பொருளே வாழ்வு எனும் அறியாமையாலேயோ அன்றி அதனை மீண்டும் ஈட்டும் வலுவுண்டு என்பதனை அறியாமையாலேயோ தான் பொருளை இழந்தால் அச்சம் தோன்றும், உன்னை அவனோ அவனை நீரோ அறியாமையாலேயே நண்பன் விடமிட முன் வருவான், உன்னுள் இருக்கும் ஐந்து உணர்ச்சியும் படை அதனை அறியாமை அச்சம் தருவதே, வாழ்வின் உயர்வின் இலக்கு இதுவே என்று வானத்தை சொல்வர். அப்படி ஒரு இலக்கே இல்லாது இடிந்ததென வாழ்வு நோகும் அறியாமை- இந்த சூழலையே நான் அச்சப்பட வேண்டாத சூழல். அச்சமின்றி அறிவன அறிந்தால் அச்சம் அகலுமென்றே சொன்னேன். அன்றி வானம் இடிந்து தலை மீது வீழுமென்ற வீண் கற்பனையோ அல்லது நீர் கூறீனீரே இச் கச்சென்ற சந்தமும் எதுகையும் என் நோக்கமில்லை. சொற்கள் நான் பிரயோகிக்க தவமிருக்கும் என்று ஒருமுறை நீரே என் திருவல்லிக்கேணி வீட்டிலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எழுதியிருக்கிறீர். நினைவிருக்கட்டும்”

“அதெல்லாம் சரி; நான் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை வரவில்லையே. நீங்க சொன்ன விளக்கத்தில் எல்லாம் இருக்கு அந்த ஒரு இடம் மட்டும் விட்டுட்டு தாவிட்டீங்களே”

“ஹ்ம். உமக்கு எல்லாம் புளி போட்டு விளக்க வேண்டும். எனக்கு இப்போது வேதபுரத்துக் கடற்கரையில் ஒரு சிறு பணி அதனை முடித்து திரும்புகிறேன். அடுத்த முறை சந்திக்கையில் அதற்க்கும் விளக்கம் தருகிறேன். அதற்குள் உமக்கே புரிந்தாலும் புரிந்து விடும்”

ஜ்வாலை டக்கென்று மறைந்தது

Monday 8 September 2008

குட்டிக் கதை- முட்டாள் மாறமாட்டான்

ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக் கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.

”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா”

” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமை மாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்

மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்

“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”

கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து கடையில்லை”

“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக் கடையா மாத்திட்டீங்களா”

“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”

“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”

“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”

வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார். தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும் ,

“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக் கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி சொல்லிடுங்க”