Monday 9 February 2009

குருஷேத்ரம்-அறிமுகம்


பகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட்தாக நாம் அர்த்தம் செய்து கொள்வதால்.


ஸ்ரீ க்ருஷ்ணனின் உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமில்லை. தடுமாறுகின்ற எல்லோருக்கும் தான்.


நம்முடைய சாதாரண அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தடுமாற்றங்கள். சிலவற்றில் நமக்குத் தெரிகின்ற அளவில் முடிவெடுக்கிறோம். சிலவற்றில் முடிவெடுக்காமலே விடுகின்றோம். சிலவற்றில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். ஆனால் எப்போதும் அந்தத் தடுமாற்றங்களை நிரந்தரமாக தள்ளிவைக்க முடியவில்லை


ஸ்ரீ க்ருஷணரின் உபதேசம் முழுமையும் அந்த தடுமாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சி தான். அந்த தடுமாற்றத்தின் மூலத்தை நோக்கிய பார்வை தான்.


தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் , ஒரு நிலையில் அந்த தடுமாற்றமே வராத நிலையினை எய்துகிறான். அப்படியான ஒரு நிலை எப்படி இருக்கும் !!! அதை முயன்று தெரிந்து கொள்ள ஒரு சிறிய முயற்சிதான் இந்த குருஷேத்திரம்


இதற்காக நான் அன்றாடம் நிகழும் சம்பவங்களையே உதாரணமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீ க்ருஷ்ணர் இங்கே பஞ்சாயுதம் தாங்கி, துளசி மாலை அணிந்து வரப்போவதில்லை. அவருக்கு அந்த யுனிபார்மிலிருந்து கொஞ்சம் ஓய்வு தந்து அவரை நாம் தினசரி சந்திக்கும் ஒரு சராசரி மனுஷனாக காண்பிக்க முயற்சிக்கிறேன். அவரே தான் நான் எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவனே என்று சொல்லி எனக்கு இப்படி ஒரு சுதந்திரத்தை சமைத்துக் கொடுத்திருக்கிறாரே.


இந்தத் தொடரை வாரம் ஒன்று , இரண்டு வாரம் ஒன்று , மாசம் ஒன்று என்று எந்த கால அளவு நிர்ணயம் செய்தும் வெளியிட எண்ணமில்லை. எப்போதெல்லாம் ஸ்ரீ க்ருஷ்ணமந்திரம் கேட்பதாக எனக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு பதிவு.



4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல முயற்சி சார். தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

தொடர்க - நல்ல செயல்களைச் செய்ய நல்ல மனது வேண்டும். அது உங்களிடம் தாராளம். மனம் அமைதிப்பட உதவும் இப்பதிவுகள் இன்றைய சூழ்நிலையில் தேவை தான். நல்வாழ்த்துகள்.

BalHanuman said...

அருமையான முயற்சி. தொடருங்கள்.

rnatesan said...

இன்றைய நடை முறை வாழ்க்கைக்கு தேவையான ஒரு பதிவு.வாழ்த்துக்கள்!