Thursday 2 October 2008

கடிதம்- 5


நான் இப்படியான உருக்கமான கடிதம் வாசித்ததேயில்லை எனச் சொல்லலாம். இனிமேலும் வாசிப்பேனா என்பதும் சந்தேகம்தான்.
அந்தக் கடிதம் வார்த்தை வார்த்தையாக இன்னதென்று எனக்குத் தெரியாது. ஆனால் யார் யாருக்கு எது பற்றி எழுதினார் எனத் தெரியும்

ஒரு சின்னப்பையன். புகைபிடித்தது தப்பென்று மனசுக்குப்பட்டதால், தன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு எழுதுகிறான். அதுவும் படுத்த படுக்கையாக இருக்கின்ற அப்பாவிடம். அவரின் ரியாக்‌ஷனிலிருந்து அந்தக் கடிதம் எப்படியானதொரு மனோபாவத்தை அந்த அப்பாவுக்கு சொல்லியிருக்கலாம் என யூகிக்கலாம். அந்தச் சிறுவனே எழுதுகிறான் :

”அவர் முழுவதும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கண்களில் கண்ணீர்....... “

அந்தக் கண்ணீர் தன்னை அப்பா மன்னித்துவிட்டதை உணர்த்தியதாக எழுதும் சிறுவன் இன்னும் சொல்கிறான்..

“இவ்விதமான் உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று; கோபமடைவார். கடும் சொற்களைக் கூறுவார். தலையில் அடித்துக் கொள்வார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்கு காரணம் என நம்புகிறேன். மன்னிப்பு அளிக்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கு சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது என்னைப் பற்றி கவலை இல்லை என்று என் தந்தையை உணரும்படி செய்தது என்பதை அறிவேன்”
அந்த சின்னப் பையனுக்கு இன்றை தேதிக்கு 139 வயசாகி விட்டது. ஆனாலும் அவன் கடிதமோ அந்த எழுத்தோ அந்த சிந்தனையோ இன்னும் இளமையாகத் தான் இருக்கு.
I would strongly say HE IS STILL relevant

Wednesday 1 October 2008

ஆயுதம் செய்வோம்


இப்படியாக ஒரு தலைப்பை வைத்து ப்ளாக்கில் இலவசமாக வெப்பன் கலாச்சாரம் வளர்க்கிறேன் என பிராது வராது என நம்புகிறேன்.

இருந்தாலும் ஆயுத பூஜை சமீபத்தில் வருவதால் தமிழ் வாசகர்களுக்கு சில தேவையான ஆயுதங்களை சிபாரிசு செய்துவிட்டால் தேவைப்படுபவர்கள் யூஸ் பண்ணலாம் அல்லவா

ஆயுதம் 1

நல்ல முறுக்கான கயிறு. ஒரு பத்தடி நீளம் இருந்தால் சிலாக்கியம்.
இது பொதுவான கயிறன்று. எங்கே எதற்கு எதிராக பிரயோகம் செய்யலாம் என்ற லிமிட்டேஷன் கொண்டது. “குட்டிக் கதைகள்” என்ற பெயரில் உசத்தியான ”பாரிலே” போய் குடிப்பதைப் பற்றியே பிரஸ்தாபம் செய்து வருவதிலிருந்து தடுக்க. குடிகாரன் என ஊருக்கே தெரிந்த பிறகு அதை சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை எனச் சொல்லி கையைக் கட்டிப் போட வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிப் போட்டு விட்டால் வாய் சும்மா இருக்குமா அதனால் .

ஆயுதம் 2

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்திரி

என்னை தினசரி 21 தேசத்திலிருந்து 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் சந்த்தித்து வருகின்றனர். நான் அவர்களுடன் பேசவில்லை என்றாலோ அவர்களுக்கு லெட்டர் எழுதவில்லை என்றாலோ அவர்களுக்கு ஒரு மாதிரி பசலை நோய் வந்துவிடும் என்கிறதான அபாராமான சித்தபிரம்மை உளறலை நிறுத்த..

உளறலை நிறுத்திவிட்டால் பைத்தியம் சும்மா இருக்குமா. இருக்காது முரண்டு பிடிக்கும்.. அதனால்....

ஆயுதம் 3


உண்டியல்...

பைத்தியத்துக்கு தான் பைத்தியம் என்பதும் தெரியாது. பைத்திய நிலையிலேயே கட்டிப்போட்ட கையோடு, மூடப்பட்ட வாயோடு எப்படி ஜீவனம் செய்யும். சாப்பாட்டுக்கு காசு வேண்டும் எனக் கேட்க முடியாது. அதனால் அதும் பக்கத்திலேயே ஒரு உண்டியலை வைத்து விட்டால் யாசகம் ரொம்பவே சுலபமாகிவிடும்..

ஆயுதம் 4

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்டிக் சுத்தியல்

இதென்னடா பிளாஸ்டிக் சுத்தியல் என யோசிக்க வேண்டாம். முகம் பார்ர்கும் கண்ணாடியில் பைத்தியம் தன்னையே பார்த்து வியந்து கொள்ளும் போது இன்னும் நிறைய பிம்பம் இருந்தால் அதீத சந்தோஷமாகும். அதனால் அந்தக் கண்ணாடியையே சுக்கலாக உடைத்தால் ஒவ்வொரு துண்டிலும் தன் மூஞ்சி தெரியுமல்லவா

இத்தனை ஆயுதம் வாங்க காசு வேண்டுமே. என்ன செய்வது. யாராவது பைத்தியங்களை போஷிக்கும் நல்லிதயமாக தேடவேண்டியது தான்

Saturday 13 September 2008

அச்சமில்லை அச்சமில்லை


பூஜையை முடித்து தீபாராதனை காட்டிப் பாடினேன்

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கு மெரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
பாடி முடித்து தீபத்தை ஒற்றியெடுக்க குனிந்தேன். தீபச் சுடரளவு ஜாஸ்தியாகி வளரத் தொடங்கிற்று

”என்ன இன்றைக்கு சக்தி வ்ழிபாடு ரொம்பவுமே அதிகமாக இருக்கிறது ?“ என்ற கேள்வியுடன் அந்த ஜ்வாலை முண்டாசு கட்டிய பாரதியாக மாறி இருந்தது.

எனக்கு இந்த திடீர் பிரசன்னத்தால் பிரமிப்போ தூக்கிவாரிப் போடுதலோ இல்லை. என்னவோ ரொம்ப காலம் எதிர்பார்த்த சம்பவம் மாதிரி சௌஜன்யத்தில் தான் இருந்தேன்.

“என்ன ஸ்வாமி பதிலே காணோம். இன்றைக்கு மட்டும் என்ன என் பராசக்தியிடம் இத்தனை உருக்கம்”

”என்னது உங்க பராசக்தியா; விட்டா நானே சிருஷ்டித்தேன் என்றே சொல்லுவீங்களே”

“நன்றாக யோசித்துப் பாரும். நானின்றி நீர் அறிந்தனையோ பராசக்தியை ?”

அவனைப் போலவே அவன் கேள்வியும் நிதர்சனமாய் எதிரே. ஒரு கணம் அந்தக் கேள்வியை முழுசாக உள்வாங்கி மூச்சை இழுத்துப் பிடித்துப் பார்த்தேன். எதிரே இருந்த அவன் ஒரு கணம் சுடராக நெடிந்து வளர்ந்து மீண்டும் மனித ரூபமாகவே தெரிந்தான்.

“பதில் சொல்ல முடியாத கேள்வியா கேட்டேன்”

“ இப்ப நான் உங்களைக் கேள்வி கேட்கலாமா”

“ ம் கேளுமே . என்ன தயக்கம். சரஸ்வதி தேவிக்கு லஜ்ஜை அதிகம்னு நான் எழுதியது இன்று வரை சத்தியமாகவே இருக்கிறது”


”இது அச்சமில்லை அச்சமில்லை பாட்டைப் பத்தி”

“என்னவோ உம் ஐயம்”

“ அதில்லை உலகம் எதிர்த்து நின்றால், யாரவது மதிக்கலேன்னா, வறுமை வந்தா, எல்லாம் இழந்து போண்டியானா, நண்பர் விஷம் கொடுத்தாக் கூட, படையே வந்தாலும், வானம் இடிந்து விழ்ந்தாலும் இதுக்கெல்லாம் அச்சமில்லைனு பாடினீங்க சரி. அதென்ன கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை டக்குனு எங்கேயோ சறுக்கின மாதிரி தெரியறதே. சும்மா எதுகையும் சந்தமும் வரணும்னு இச், துச் நச்னு எழுதி கச் னு எழுதிட்டீங்களா”

என்னையே தீர்க்கமாக பார்த்தான்.

“ ஒருவருக்கு அச்சம் எப்போது உதிக்கும்—சொல்லுமே”

“ அறியாமையால். அதாவது ஏதாவது புரியலேன்னா அதோட சம்பந்தப்படுத்திக்ற சந்தர்ப்பத்தில் அச்சம் வரும். அறிந்தால் அச்சம் நீங்கும்”


‘நன்று சொன்னீர் ஸ்வாமி – இப்போது நீர் அடுக்கடுக்காக எம் பாட்டிலிருந்து கேட்டீரல்லவா அதனை ஒவ்வொன்றாய் நினைவு கொள்க. இந்த அவகாசத்தில் நான் தாம்பூலம் தரித்துக் கொள்கிறேன் ”

“ஆச்சுங்க”

"உலகம் உன்னை அறியாமையால் அல்லது நீ உலகை அறியாமையால் உலகம் உன்னை எதிர்த்து நிற்கும் சூழல், உன்னை பிறர் அறியாமையாலேயே உம்மை துச்சமாக எண்ணி தூறு செய்வர், வாழும் வகை அறியாமையால்லேயே பிச்சை வாங்கும் நிலை தோன்றும், பொருளே வாழ்வு எனும் அறியாமையாலேயோ அன்றி அதனை மீண்டும் ஈட்டும் வலுவுண்டு என்பதனை அறியாமையாலேயோ தான் பொருளை இழந்தால் அச்சம் தோன்றும், உன்னை அவனோ அவனை நீரோ அறியாமையாலேயே நண்பன் விடமிட முன் வருவான், உன்னுள் இருக்கும் ஐந்து உணர்ச்சியும் படை அதனை அறியாமை அச்சம் தருவதே, வாழ்வின் உயர்வின் இலக்கு இதுவே என்று வானத்தை சொல்வர். அப்படி ஒரு இலக்கே இல்லாது இடிந்ததென வாழ்வு நோகும் அறியாமை- இந்த சூழலையே நான் அச்சப்பட வேண்டாத சூழல். அச்சமின்றி அறிவன அறிந்தால் அச்சம் அகலுமென்றே சொன்னேன். அன்றி வானம் இடிந்து தலை மீது வீழுமென்ற வீண் கற்பனையோ அல்லது நீர் கூறீனீரே இச் கச்சென்ற சந்தமும் எதுகையும் என் நோக்கமில்லை. சொற்கள் நான் பிரயோகிக்க தவமிருக்கும் என்று ஒருமுறை நீரே என் திருவல்லிக்கேணி வீட்டிலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எழுதியிருக்கிறீர். நினைவிருக்கட்டும்”

“அதெல்லாம் சரி; நான் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை வரவில்லையே. நீங்க சொன்ன விளக்கத்தில் எல்லாம் இருக்கு அந்த ஒரு இடம் மட்டும் விட்டுட்டு தாவிட்டீங்களே”

“ஹ்ம். உமக்கு எல்லாம் புளி போட்டு விளக்க வேண்டும். எனக்கு இப்போது வேதபுரத்துக் கடற்கரையில் ஒரு சிறு பணி அதனை முடித்து திரும்புகிறேன். அடுத்த முறை சந்திக்கையில் அதற்க்கும் விளக்கம் தருகிறேன். அதற்குள் உமக்கே புரிந்தாலும் புரிந்து விடும்”

ஜ்வாலை டக்கென்று மறைந்தது

Monday 8 September 2008

குட்டிக் கதை- முட்டாள் மாறமாட்டான்

ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக் கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.

”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா”

” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமை மாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்

மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்

“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”

கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து கடையில்லை”

“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக் கடையா மாத்திட்டீங்களா”

“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”

“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”

“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”

வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார். தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும் ,

“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக் கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி சொல்லிடுங்க”

Monday 18 August 2008

பச்சை மைப் பேனா


ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப் பார்த்த ”பச்சை மைக் கையெழுத்தை” தானே போட முடியும். அதான் கெஜெட்டட் ஆபிசர். இப்பெல்லாம் யார் ப்ரமோஷனும் கெஜெட்டில் வர்றதில்ல. ஆனாலும் அந்த பேர் அப்படியே இருக்கு.

இன்னிக்கே போற வழில ஒரு நல்ல பேனா வாங்கணும். பச்சை இங்க் வாங்கணும். என்ன இந்த ப்ரமோஷன் உள்ளூரிலிருந்தால் வீட்டு வாசலுக்கு ஜீப் வந்து கூட்டிண்டு போகும். இப்ப என்னடாண்ணா தினம் அறுபது கிலோமீட்டர் பஸ்ஸில தினம் பிரயாணம் பண்ணனும். இருக்கட்டும் இப்போ போய் ஜாயிண் பண்ணிடலாம் அப்புறமா மெள்ள டிரான்ஸ்பர் வாங்கிண்டு வந்திடலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் வர்ற ஜோசியக் காலம் பலிக்றது.. பீட்டர் வைடால் இப்பத்தான் ரெண்டு வாரம் முன்னால எழுதினான். இதோ ப்ரமோஷன் வந்திடுத்தே. ஆனாலும் இந்த ராமுடு சுத்த மோசம். இதுக்கெல்லாம் மெட்ராஸ் போகணும் மந்திரியப் பாக்கணும். டைரக்டரை சேவிக்கணும் அப்படி இப்படினு பயம் காட்டிட்டானே. இன்னும் எல்லாம் சீனியாரிட்டிப்படி தானே நடக்கிறது. இதோ நிதர்சணமாத் தெரியறதே. நான் யாரையும் போய்ப் பார்கலே; குழையலே, பைசா தரலே.. ஆட்டோமேடிக்கா வந்துடுத்தே. என் சர்வீஸ் புக் க்ளியர். ஒரு மெமோ கிடையாது.. எல்லா டிபார்ட்மெண்ட் டெஸ்டும் கிரமமா பாஸ் பண்ணிருக்கேன். நான் வேலை பார்த்த எல்லா இட்த்திலேயும் பி. ஆர் வாங்கிப் பாருங்கோ. கண்லே ஒத்திக்ற மாதிரி இருக்கும். டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் எனக்கு அத்துப் படி.
ஒரு விசை கவர்னர் எங்க டிபார்ட்மெண்ட் எக்சிபிஷனை பார்க்க வந்திருந்தார். நான் தான் அவரோட பயண ஏற்பாடெல்லாம் கலெக்டர் ஆபிசோட கோஆர்டினேட் பண்ணினேன். அப்பத்தி கலெக்டர் என்னைப் பத்தி சிலாகிச்சி கவர்னரண்டையே ஒரு வார்த்தை சொன்னார். அதை குறிச்சிக்க சொல்லி கவர்னர் தன்னோட காரியதரிசிகிட்ட சொன்னார். ஒரு வாரம் இருக்கும் கவர்னர்கிட்டேயிருந்து ஒரு கடிதாசி வந்த்து. என்னைப் பாராட்டி புகழ்ந்து ஒரு அஞ்சாறு வரி எழுதி கவர்னரே கையெழுத்துப் போட்டிருந்தார். இந்த மாதிரி பாராட்டு வந்தா சர்வீஸ் பொஸ்தகத்திலே பதியனும். அப்ப இருந்த ஈ.ஓ பொறாமைப்பட்டுண்டு கண்டுக்கலை. ஏதாவது சென்ஷியூர், சார்ஜ் மெமோன்னா உடனே அதை காரியமா எழுதுவார் அவர். அப்படி ஒரு நல்ல மனசு.. ஆனா நான் அதை லேசிலே விடலை.. ஒரு விசை கலெக்டர் இன்ஸ்பெக்‌ஷன் வர்றச்சே நைசா அவருக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினேன். அவரே ஈ.ஓ கிட்டே இதெல்லாம் உடனே சர்வீஸ் பொஸ்தகத்தில எழுதணும் தள்ளிப் போடப்பிடாதுனு சொல்லிட்டார். இப்ப அதெல்லாம் பேசிருக்கு அதான் எனக்கு நியாயமான முறையில டர்ன் படி ப்ரமோஷன் கிடைச்சிருக்கு
பேனா வாங்கியாச்சு பச்சை மையும் வாங்கியாச்சு. புது போஸ்ட்லே ஜாயின் பண்ணின உடனே அங்கேயும் ஒரு பாட்டில் மை வாங்கி வச்சிடணும். இங்கே இருக்ற மாதிரி எல்லாரண்டையும் லேசா இருக்கப் பிடாது. கொஞ்சம் கரார் சேத்துக்கணும். அந்த ஜி செக்‌ஷன் சோம சுந்தரம் மாதிரி. அவனும் என் ரேங்க்தான். ஆனா என்னை மாதிரியில்லியே. மிடுக்கா இருப்பான். அவன் செக்‌ஷன் ஆளுங்க எல்லாம் சூப்பிரண்ட் சார் சூப்பிரண்ட் சார்னு பவ்யமா இருப்பாளே. அவனும் நானும் ஒரே பேட்ச் ஒரே நாள் ஜாயினிங் டேட் ஆனா இந்த ப்ரமோஷன் அவனுக்கு வரல. அவன் ஒரு டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எழுதவேயில்லை. நானும் சொல்லிப் பார்த்தேன். அவன் கேக்கலை அவன் எழுதி பாஸ் பண்ணிருந்தான்னா இப்ப அவனும் என்ன மாதிரியே பச்சை மை ஊத்தி பேனாவை ஜோபில சொருகிக்கலாம்.
இன்னிக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணனும். அந்தப் பிள்ளையார் சக்தி வாஞ்சவரா இருக்கார். இந்தப் பச்சை மைப் பேனாவை அவர் பாத்த்திலே வச்சி வாங்கணும்.

புது ஆபிஸ் நல்ல இடம் தான். பக்கத்திலே ஒரு நல்ல காபி கிடைக்குமானு விசாரிக்கணும். இவாள்ளாம் ப்ரு காபிதான் போடுவா. டிகாஷன் காப்பியே சாப்பிட்டு நாக்கு பழகிப் போச்சி. அதும் ருசி வேறதுக்கும் வராது. அதும் ‘ஏ’ கிரேட் கொட்டை வாங்கிப் பதமா வறுத்து மெஷின்ல போட்டு மெதுவா கையாலே சுத்தி பொடியோட சிக்கரி சேர்த்து... சிக்கரினோன்ன ஞாபகம் வர்றது. இன்னிக்கி திரும்பிப் போறச்சே வாங்கணும்.

என்ன இந்த ஆபிஸ்ல ஃபைல் மூவ்மெண்ட் தாமதமா இருக்கு. ஆசையா முழு கையெழுத்து ஸ்ரீநிவாசன் அப்படினு ஒரு பைல்ல கையெழுத்துப் போடணும்னு நம நமனு இருக்கு.

நான் எல்லாம் கிரம்மா செய்யணும்னு நினைக்கிறவன். ஜாயினிங்க் ரிப்போர்ட்லே நான் நீலக் கலர் மைலதான் கையெழுத்துப் போட்டேன். காரணம் இருக்கு; இங்க ஜாயின் ஆனதுக்கப்புறம் தானே ஆபிசர். அப்புறம் தான் பச்சை மை. ஆபிஸ் சூப்பிரண்டெண்டெண்ட் ( இப்படித்தான் சொல்லனும் சூப்பிரண்ட் அப்படின்னா என்னவோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு) கிட்டே சொன்னேன். முதல் பைல் அக்கப்போரா ஒண்ணைக் கொண்டு வந்து அப்ரூவ் பண்ணுனு சொன்னா நான் பண்ண மாட்டேன்னு. நல்ல விதமா ஒரு ஆபிஸ் நோட் எழுதி எடுத்துண்டு வந்தா கூட அதுல இனிஷியலுக்குப் பதிலா முழு கையெழுத்து விஸ்தாரமா போடறதுன்னு தயாரா இருக்கேன். இதுக்கோசரம் வெத்து வெள்ளைப் பேப்பர்ல இது வரை ஒரு அம்பது தரம் போட்டுப் பார்த்திருப்பேன். அதெல்லாம் நீலக் கலர் தான். முதல் பச்சை மைக் கையெழுத்து அரசாங்க காகித்த்துல தான். அதும் நல்ல சங்கதியா இருக்கணும்.

மேஜை கண்ணாடிக்குக் கீழே ஸ்வாமி படங்கள் இருக்கு. பரவாயில்ல நாமும் நாளைக்கு ஒரு பிள்ளையார் படம் கொண்டு வந்து வைக்கணும். கண் மூடி நினைச்சிண்டேன். இந்தப் பேனாவினால யாருக்கும் உபத்திரவம் தர்ற் மாதிரி ஒரு மெமோ, சார்ஜ் மெமோ, இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட் இப்படி எதுவும் கையெழுத்துப் போடற மாதிரி வரப்பிடாது. எல்லாம் சுப காரியமாவே இருக்கணும். சாத்தியமில்ல தான். இருந்தாலும் நல்லதே நினைப்போமே.

இதோ என் காபின் கதவை தட்றாளே- முதல் பைல் வந்திடுத்து.

“என்ன சூப்பிரண்டெண்டெண்ட் பஞ்சாபகேசன் சார். நான் சொன்ன மாதிரி ஒரு நல்ல விஷயமான பைல் தானே “ னு கேட்டுண்டே நாடாவை நாசுக்கா பிரிக்கிறேன்.
நான் இந்த டாட்டன்ஹாம் சிஸ்ட்த்தில எத்தனை வருஷம் இருந்திருக்கேன் அப்படினு நான் பைலோட டேப்பை அவிழ்க்ற வித்த்திலேயே தெரிஞ்சிக்கலாம். இருங்கோ முதல் பச்சை மைக் கையெழுத்து. என்ன சப்ஜெக்ட்னு படிக்கிறேன்.

என்ன இது கோர்ட் ஆர்டர் மாதிரின்னா இருக்கு

படிச்சிட்டு பஞ்சாபகேசனை நிமிர்ந்து பாத்தேன்

‘’ ஆமாம் சார். இந்தக் கட்டிடம் வாடகைக் கட்டிடம். இதோட ஓனர். இதைக் நாம காலி பண்ண என்னென்னெவோ செஞ்சார். நாம சரியா நடந்துக்கல. அப்புறம் கோர்ட்டுக்குப் போனார். நாமளும் கௌர்மெண்ட் ப்ளீடர் சொன்னதாலா வாய்தா வாய்தாவா வாங்கி இழுத்தடிச்சிருக்கோம். நான் இங்க வந்தே ஒரு ஆறு வருஷம் இந்த இழுத்தடிப்பைப் பார்த்திருக்கேன். கடைசில கோர்ட் அவருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி நாம போன வருசமே காலி பண்ணிருக்கணும். கோர்ட் கெடு தேதி கூட வச்சிருந்த்து. இதுக்கு முன்னே இங்க இருந்த ஈ.ஓ அதை சரியா டிபார்ட்மெண்ட்டுக்கு கன்வே பண்ணலை. இத்தனைக்கும் இந்த வழக்கில நம்ம டிபார்ட்மெண்ட் டைரக்டரும் ஒரு பிரதிவாதி. அவர் தரப்பில ஒரு கௌண்டர் கூட தாக்கல் ஆகிருக்கு. காலி பண்ண கெடு தேதி சொல்லியும் காலி பண்ணாத்தால கட்டிட ஒனர் கோர்ட்டை மூவ் பண்ணி ஜப்தி ஆர்டர் வாங்கிட்டார். இப்ப கோர்ட் ஸ்டாப், போலிஸ் சகிதம் வெளில ஹால்லே உக்கார வச்சிருக்கேன். இதிலே நீங்க உங்க முன்னாடி தான் இந்த ஆபிஸ் ஜப்தி ஆச்சினு கையெழுத்துப் போட்டுத் தரணும். நாம இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. மேல் கொண்டு அப்பீல் செய்யலாம். அவாள்ளாம் வெயிட் பண்றா”

ஸ்ரீநிவாசன் என்ற என் சின்னப் பெயரை அந்த கோர்ட் காகித்த்தில் தினத்தந்தி தலைப்பு செய்தி அளவில் பச்சை மையில் விஸ்தாரமாய் நான் ஏன் கையெழுத்திடுகிறேன் எனப் புரியாமல் பார்க்கிறார் பஞ்சாபகேசன்

Saturday 9 August 2008

கடிதம்-4


J Krishnamurthy என் ஆதர்சங்களில் ஒருவர். அவரது எளிமையான எழுத்துக்கள் என்னை வசீகரிக்கும் நீண்ட நாள் ஆச்சரியங்கள். அவரின் Sri Lanka Talks ம் Letters to Schools ம் என் புத்தக சேமிப்பில் பொக்கிஷம் என்றே சொல்லுவேன்

கிருஷ்ணமூர்த்தி தான் தொடங்கிய பள்ளியின் மாணவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுதி.

முன்னுரை பாருங்கள்:

இந்தக் கடிதங்கள் நீங்கள் ஆயாசமாக் இருக்கும் போது படிப்பதற்கல்ல; இவற்றை நான் சிரத்தையுடன் எழுதினதைப் போலவே, சிரத்தையுடன் படியுங்கள். ஒரு பூவை அதன் இதழ், வர்ணம், மணம் கூடிய அழகை பார்த்துப் பயிலுவது போல இந்தக் கடிதங்களையும் பயிலுங்கள்

ஜனவரி 15 1982ல் எழுதப்பட்ட கடிதம் :

I think it is important to learn the art of thinking together. The scientists and the most uneducated human beings think. They think according to their profession, specialization and according to their belief and experience. We all think objectively or according to our own particular inclination, but we never seem to think together, to observe together. We may think about something, a particular problem or experience but this thinking does not go beyond its own limitation.

இப்படியாகத் தொடரும் இந்தக் கடிதத்தை

I am in stream with that which is godness, compassion and intelligence. That intelligence is acting, confronting the madness of the present world. That intelligence will be acting where the ugly is

என்று முடித்திருக்கிறார்

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday 3 August 2008

கடிதம்-3


நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.

கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்

அதை அப்படியே தருகிறேன்..

“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.

இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்


(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday 27 July 2008

யக்ஷகானம் (மீண்டும் சுஜாதா)



”கணேஷ அது என்னனு பாருப்பா.. நான் இங்கே இவரோட கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கேன்”

“சரி சார்.. இதோ பார்க்கிறேன்”

“கவலை வேண்டாம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. வசந்துக்கு எதுவும் நிகழாது”

“இரண்டு விஷயம்.. என்னை வாக்கியத்துக்கு வாக்கியம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்று நீளமாக கூப்பிட வேண்டாம். என்னை பூலோகத்தில் எல்லோரும் சுஜாதா என்று கூப்பிடுவார்கள்.. நீங்களும் சுஜாதா என்றே கூப்பிடலாம்.. வசந்துக்கு எதுவும் ஆகாது என்று எனக்குத் தெரியும். அவனால் மத்தவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரி”

”உங்களுக்கு விப்ரநாராயணர் சிறப்பு அழைப்பு தந்திருப்பதாக அறிந்தேன்.. அதற்கு உதவுவதே என் பணி... நீங்கள் இங்கே யாரையெல்லாம் பார்க்க நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லவும்; நான் ஏற்பாடு செய்கிறேன்”

“சற்று அவகாசம் தாருங்கள்—ஒரு பட்டியலே தருகிறேன்—நீங்கள் என்னை மன்னிக்க வேணும். இப்படி அட்சர சுத்தமா தமிழ் பேசறது எனக்கு அலர்ஜி. யாதார்த்தமா பேசலாமே.. இல்லேன்னா சாண்டில்யன் கதை மாதிரி நீள நீளமா வாக்கியம் வரும்”

“அதுவும் சரி தான்.. ஆனால் எனக்கு உங்கள் வழக்கப்படி பேசி பழக்கமில்லை.. ஆனால் நீங்கள் பேசினால் புரியும்.. நீங்கள் கதை புனைபவர் என்று சொன்னார்கள்.. உங்கள் படைப்பில் யக்ஷகானம் வைத்து ஒரு புனைவு செய்திருக்கிறீர்கள் என்று ஞாபகம்”

“அட ஆச்சரியமா இருக்கே.. என் கதை உங்களுக்கு எப்படி தெரியும்.. அது மூன்று நிமிஷம் கணேஷனு ஒரு த்ரில்லர்.. யக்ஷகானத்தில் வரும் நிமிஷா, நிமிஷா, நிமிஷா அப்படினு அந்த வார்தை மூணு தரம் சொன்னவுடனே குண்டு வெடிச்சி ஒரு விஐபியை கொல்ற மாதிரி பிளாட்.. இந்த கணேஷ் வசந்த் தான் அதை பிரேக் பண்றமாதிரி எழுதினேன்.”

“ஞாபகம் இருக்கிறது ஸ்ரீரங்.... மன்னிக்கவும் சுஜாதா. இங்கே ஒரு பெரிய நூலகமே இருக்கிறது.. அதில் தான் எடுத்து படித்தேன்.”

“ஆஹா லைப்ரரி இருக்கா அதும் போதும் எனக்கு.. “

” யக்ஷகானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லமுடியுமா”

”அது வந்திட்டு... ஆந்திரா, கர்நாடகாவிலே அதும் பேரு யக்ஷகானம். தமிழ்நாட்டிலே ‘பாகவத மேளா’னு கூட சொல்வாங்க.. பழைய குறவஞ்சி நாடகம் கூட இந்த டைப் தான். பெங்கால்ல இதை “யாத்ரா” னும் அஸாமில “பாவநா” அப்படினு சொல்வாங்க.. நீங்க “பொன்னியின் செல்வன்” படிச்சிருப்பீங்க”

“ஆமாம் படித்திருக்கிறேன்.”

“அதில கூட தேவராளன் தேவராட்டி டான்ஸ் வருமே.. அதெல்லாம் இந்த மாதிரி இசை நாடகம் தான். தமிழ்ல கோபால கிருஷ்ண பாரதியாரோட “நந்தனார் சரித்திரம்” ரொம்ப பிரசித்தம்.. அதே மாதிரி தெலுகிலே தியாகராஜர் “ பிரஹல்லாத பக்த விஜயம்” அப்படினு பண்ணிருக்கார்.. அதுவும் இந்த டைப் தான். தமிழ்ல மெரட்டூர் வெங்கட்ராம சாஸ்த்திரி, ஷாஹாஜி மஹாராஜா இவங்கெல்லாம் கூட இந்த மாதிரி இசை டிராமா போட்டிருக்காங்க”

‘இதோ கணேஷும் வசந்தும்”

வசந்தை ஆலிங்கனம் செய்தபடி ஒரு ஆசாமி

(தொடரும்)

கடிதம்-2



கடிதம் என்று சொன்னாலே காதல் இல்லாமல் இருக்காது. எனது குடும்ப நண்பர் ஒருவர் ”பேனா நண்பராக” ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி ரொம்ப நாள் சுவாரசியமாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் தீடீரென “ஐ லவ் யூ” என்று கடுதாசி போட்டுவிட்டது. மனுஷன் முதலில் தயங்கினார். என்னைப் போல புண்ணிய ஆத்மாக்கள் எதற்கு இருக்கிறோம்.. அவரை உசுப்பேத்தி சம்மதம் பெற்றோம். அதன் பின் இரண்டு கடிதங்கள்.. அந்தப் பெண் இலங்கையிலிருந்து வந்த அகதி என்று தெரிந்தது. நண்பர் குடும்பம் அவசரமாக அவருக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள்.. அந்த இலங்கைப் பெண் என்ன ஆனாள் என்று தெரியவில்லை..

அகிலன் அவர்களின் “ஆனால் “ என்ற கதையை என்னால் மறக்கவே முடியாது.. 1954 லிலேயே இத்தனை சுவாரசியமான ஒரு கதை இருந்திருக்க முடியுமா என்று இப்போதும் வியக்கிறேன்.
திருச்சியிலிருக்கும் கல்யாணராமன்.. குன்னூரிலிருக்கும் தியாகராஜன் இவர்களின் கடிதங்களே கதை.

கதை 1954 செப்டம்பர் 15 கல்யாணராமனின் கடிதமாய் தொடங்கி அதே செப்டம்பர் 30 தியாகராசனின் அவசரத் தந்தியுடன் முடிகிறது.

அப்போதே பெண்களை இவ்வளவு உன்னிப்பாக “அப்சர்வ்” செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஹாய்ஸத்துக்குப் பஞ்சமில்லாத நடை.

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday 13 July 2008

கடிதம்-1


பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.

இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டது

கடிதம் என்று சொன்னாலே எனக்கு பண்டித நேருவின் ஞாபகம் தான் வரும். அவரின் Glimpses of World History இந்திரா காந்தி அவர்களுக்க் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அதில் ஒரு கடிதம்.. நான் அடிக்கடி குறிப்பிடும் வரிகள்

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man, it was written, wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

(நேருவை முழுசாத் தெரிஞ்சிக்க அவரோட இந்த புத்தகத்தை படிக்க சிபாரிசு செய்கிறேன்)

இந்த கடித வரிகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள் ஞாபகம் வரும்


“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம்

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

மாதவியை கணிகையர் குலத்தவளாகவே இளங்கோ அறிமுகம் செய்கிறார். ஆயினும் தான் பண்பு நெறி தவறாதவளே என அவளே கடிதம் வழி சொல்வதாகவும் காட்சி அமைக்கிறார்

நான் இந்த சுவாரசியங்களை இன்னும் விடாமல் வைத்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தின் போது அதற்கு வருந்தி ஓர் இரங்கல் கடிதம் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதும் அவர் அதற்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் ,’ நான் உங்கள் அன்பிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நானும் பிரியங்காவும், ராகுலும் நன்றி சொல்கிறோம்” என்று எழுதியது இப்போதும் எனது சேகரிப்புப் பொக்கிஷத்தில்

மொரார்ஜி தேசாய் அவர்களின் சுய சரிதையில், அமெரிக்க தூதுவர் ஒருவரிடம் பண்டித நேரு அவர்களின் முகம் காட்டாப் பேச்சுதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து ஆவல் காரணமாக அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் சாதாரண Inland லெட்டரில் தன் கைப்பட எனக்கு எழுதிய பதில் கடிதமும் (விளக்கக் கடிதம்) என் பொக்கிஷத்தில் ஒரு முத்து

நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் M. ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக இருக்கும்போது நான் அனுப்பிய தீபாவளி வாழ்த்துக்கு தன் கைப்பட பாராட்டியும் வாழ்த்தியும் எழுதிய கடிதம், பின்னர் ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய ஆசிர்வாதக் கடிதம்.. என் நினைவில் நீங்கா இடம் பெற்றவை

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Saturday 12 July 2008

வைகுண்ட பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா)


”பாஸ் என்ன இது மௌண்ட் ரோடு ரெஹேஜா டவர்ஸ் மாதிரி இருக்கு; மேலோகம்னா வேற மாதிரி கற்பனை பண்ணிண்டிருந்தோமே எல்லாரும்”

அந்த முகப்பு மிகப் பிரம்மாண்டமாய்... வழுக்கும் தரைகள்.. மூன்று பவுண்டன்கள்.. பீய்ச்சியடிக்கும் தண்ணீர்... அதற்கு கலர் சேர்க்கும் Focus லைட்கள்... சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்..

க்யூப் டைப்பிலான லிப்ட்கள்.. அவற்றில் சிரித்த முகங்களுடன் மனிதர்கள்.. அங்கும் இங்கும் உலாவும் சீருடை தரித்த சிப்பந்திகள்..

”சார் நிஜமாவே இது மேலோகம் தானா.. என்னவோ JFK ஏர்போர்ட் மாதிரி இருக்கு”

“ஏம்பா! எனக்கு மட்டும் என்ன தெரியும்; நான் என்ன பத்து தரம் இங்கே வந்து போயிருக்கேனா”

பார்ப்பதற்கு பளிச்சென்றிருந்த ஒரு பெண் சிப்பந்தி மூவரையும் அணுகி,

“நீங்கள் அந்த வரிசையில் நின்றால் உதவியாக இருக்கும்; அதுவுமில்லாமல் நீங்களும் அதிக சிரமம் இல்லாமல் இருக்கலாம்”

“மிஸ்; நான் உங்களை ஒரு கலை விழாவில பார்த்திருக்கேன்”

“வசந்த்.... இங்க இந்த ட்ரிக்கெல்லாம் எடுபடாது... அவாள்ளாம் மேலோகப் பிரஜைகள். மந்திரமெல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பா.. உன்னை டபக்குனு ஆட்டுக்குட்டியா மாத்திட்டானா கஷ்டம்”

“சார் நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.. இல்லேன்னா நான் ஆடா மாறி... பாஸுகு வேற மட்டன்னா பிடிக்காது”

“உன்ன திருத்தவே முடியாதுடா வசந்த்”

பளிச் பெண் காட்டிய வரிசை டிக்கெட் கௌண்டர் மாதிரி இருந்த இடத்தை நோக்கி நீண்டிருந்தது..

கௌண்டர் ஆசாமி வரிசையில் வரும் எல்லார் தலையிலும் தொப்பி மாதிரி ஒரு சமாச்சாரத்தை வைத்து பின் அங்கிருந்த கம்யூட்டர் மாதிரி ஒரு வஸ்துவிலிருந்து என்னவோ படித்துக் காட்டி பின்னர் ஒரு அட்டையைக் இடுப்பில் கட்டினான்.


“பாஸ் கன்பார்ம். இது வைகுண்டம் தான்.. பாருங்க தலைல சடாரி வைக்கிறாங்க”

”வசந்த்.. கேலி பண்ணாத.. சடாரி எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா”

“சொன்னா தெரிஞ்சுக்கிறேன்..”

”சடம் என்றால் போன ஜென்மா வினையான காற்று; பிறக்கிற குழந்தை முன் ஜென்மா வினையால அழறது. பெருமாள் பாதம் படறதினால போன ஜென்மா வினையெல்லாம் முறிஞ்சிடறது. நாம பெருமாள் பாதம் தேடி போகலேன்னாலும் அவர் நம்மைத் தேடி வருவார்.. அது தான் இது”

”சார்... உங்க பிரெண்ட் அப்துல் கலாம் ஒரு தரம் சுவாமி சிவானந்தரிடம் கேட்டாராம் How can I find my right teacher? அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives! – Wings of Fire ல் படிச்சிருக்கேன்... அது மாதிரி பகதன் ரெடின்னா ஸ்வாமியும் ரெடி.. அதானே”


இப்போது சுஜாதாவின் முறை.. தொப்பி மாட்டினவுடன்.. கௌண்டர் ஆசாமி பவ்யமானான்..

“அய்யா நீங்கள் தானே ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...”

“ஆமாம்பா .. ஆனா ஸ்ரீரங்கத்தில் நான் மட்டும் ரங்கராஜனில்லை”

“அய்யா இந்த கருவி மூலம் உங்களின் விதியைப் படிக்க இயலும்.. இதை பூவுலகில் தலையெழுத்து என்று சொல்கிறீர்கள் அல்லவா. அதுதான்;.. இங்கே பல வருஷ காலம் பிரஜையாயிருக்கும் ஒருவர் புதிதாக கவர்ந்து கொண்டுவரப்படும் உயிர்க்கு சிறப்பு பிரஜா அந்தஸ்த்து அளிக்க பரிந்துரைக்க முடியும்.. அப்படி ஓரு பரிந்துரை ஒருவர் உங்களுக்கு செய்திருக்கிறார்”

“ எனக்கா .. யாருப்பா அது ரொம்ப ஆச்சரியமா இருக்கே”

“அவர் இப்போது ஸ்ரீஹரியின் சந்நிதியில் இருக்கிறார்.. அவர் பெயர் விப்ர நாராயணர்”

“ ரங்கநாதா !!... தொண்டரடிப்பொடியாழ்வாரா !!! .. அவரை நான் தரிசிக்க முடியுமா“

“ஆமாம்.. அவரேதான். நிச்சயம் சந்திக்க இருக்கிறீர்கள். இது உங்களுக்கான அடையாள அட்டை.. உங்களின் படைப்பான இந்த இருவரும் உங்களுடனே இருப்பதற்கும் அனுமதி உண்டு... இதோ அந்த வாயில் வழியாக செல்லுங்கள். ஒரு தோட்டம் வரும்.. அங்கே தாடியுடன் ஒரு பெரியவர் இருப்பார்.. அவர் உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் மேல்விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.....வந்தனம்”

“கணேஷ்.. இது ஒன்ணும் கனா இல்லியே.. நிஜமாகவே தொண்டரடிப்பொடியாழ்வாரா !! எனக்கு பிரமிப்பா இருக்குப்பா”

“எனகும் தான் சார்.. அவன் சொன்ன மாதிரி அந்த வாசல் வழியா போவோமே”

கௌண்டர் ஆசாமி காண்பித்த வாசல் அந்த ஹாலின் ஒரு மூலையில் இருந்தது.. மூவரும் நடந்தனர்.

“கைடா ஒரு பெண் பிள்ளையைப் போட்டால் சௌகரியமா இருக்காதோ..”

நீ சும்மா இருக்க மாட்டே இப்போ”

அந்த வாசல் கொஞ்சம் உயரம் குறைச்சலாக இருந்தது.. குனிந்து வெளியில் வந்தால்.. மிக விசாலமான் இடம்.. ரம்மியமான தோட்டம்.. தாடி வைத்த பெரியவர் அவராகவே நாடி வந்தார்

“வந்தனம் நான் தான் இங்கே உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப் பட்டுள்ளேன் நீங்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. இது கணேஷ்.. சரி தானே.. வசந்த் என்று இன்னொருவரும் வருவதாக தகவல்.. அவரெங்கே”

”பாஸ் இங்கே சீக்கிரம் வாங்க “ என்ற வசந்தின் அலறல் பின்னாலிருந்து கேட்டது

(தொடரும்)

Tuesday 8 July 2008

குட்டிக் கதை-4 கோணல் புத்தி


ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும். தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான். ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.

வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”

“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”


நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி

(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)

Saturday 5 July 2008

வைகுண்ட பிரவேசம்-1(மீண்டும் சுஜாதா)


ஒரு நீளமான டிரெயின் மாதிரி வாகனத்தில் சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் பிரயாணம். மேக மண்டலங்களில் அசாத்திய வேகத்தில் அந்த வாகனம் பிரயாணிக்கிறது...

சற்று நேரத்தில் ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வாசலில் அந்த வண்டி நிற்கிறது.. ரயில்வே ஸ்டேஷன் போலவே பலர் இறங்குகின்றனர். பிளாட்பாரம் இல்லை.. எல்லாம் அப்படியே அந்தரத்தில் நிற்கின்றனர்.

“பாஸ் இது என்ன இடம்.. ராத்திரி பத்தரை மணிவாக்கில சுஜாதா சார் கூப்பிட்டாரேனு டிவில பாலமுரளிகிருஷ்ணா கச்சேரியைக் கூட தியாகம் பண்ணிட்டு வந்தேன்.. மேக மேகமா வந்ததே”

“வசந்த் நீ ராத்திரி என்ன மாதிரி டிவி ப்ரோகிராம் பார்ப்பேனு எல்லாருக்கும் தெரியும்.. பேசாம வா”

“எல்லாம் என் நேரம் பாஸ். சார் எழுதி எழுதி வசந்த ஒரு சோக்காளியாவே தெரியறான் இல்ல.. இது என்ன இடம்.. எதுவும் புது கேஸ் எடுத்திண்டிருக்கேளா.. சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவேள்”

“ஏம்பா வசந்த் இன்னும் புரியலையா. எனக்கு பூமில ஆயுசு முடிஞ்சது.. இது மேலோகம்.. என்னால படைக்கப்பட்ட நீங்க ரெண்டு பேரும் கூட வந்திருக்கேள்.. கணேஷைக் கூப்பிட போகும் போது அவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன்.. உன் கிட்ட சொல்லாம கூட்டிண்டு வந்தது தப்புதான்”

“சரிதான்.. கதையில தான் பாஸ் எல்லாத்தியும் முன்னயே தெரிஞ்சிண்டு பலியாடு மாதிரி சில எடத்துக்கு என்ன அனுப்புவார்.. அதையே மெயிண்டய்ன் பண்றாரு”

வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் சகிதமாக அங்கே ஒருவன் வந்தான்..

‘எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.. இது தான் மேலுலக முன்றில்.. இன்னும் சற்று நேரத்தில் கதவுகள் திறக்கப்படும்”

“இந்தோ பார்ப்பா இந்த சாருக்குதான் தமிழ் ப்ரீத்தி ஜாஸ்தி.. ஒரு நாலு வார்த்தை கொடுத்து இதில எது தமிழ் வார்த்தை இல்லை இப்படியெல்லாம் கேள்வி போடுவார்.. முன்றில் னா என்ன”

“நான் சொல்றேன் வசந்த்.. முன்றில் னா கிட்டத்தட்ட ரிசப்ஷன் மாதிரி..

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

அப்படினு புறநானுறில் வருது”


“அடடா இங்கே வந்தும் கற்றதும் ... பெற்றதும் மாதிரி ஆரம்பிச்சுட்டார்”

”வசந்த் ... என்ன இது சார்கிட்டே போய்... பேசாமா வா”

“ ஓகே பாஸ்”

சற்று நேரத்தில் அந்த மாபெரும் கதவு கொஞ்சம் கூட சப்தமில்லாமல் மெதுவாகத் திறந்தது...

உள்ளே......

Friday 4 July 2008

மீண்டும் சுஜாதா....


தமிழ் எழுத்துலகில் பல வருஷம் பல தளத்தில் இயங்கிய எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக இந்த தொடர்.. இந்த தொடரின் ஹீரோ அவர் தான்..
நம் ஆதர்ச சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் வைகுண்ட பிரவேசம் செய்வதில் கதை தொடங்குகிறது.. அவர் அங்கே ஆழ்வார்கள் பின்னர் கைலாயத்தில் நாயன்மார்கள் இன்னும் பிற சங்கத் தமிழ் புலவர்களையும்.. சந்திக்கிறார்.. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களையும் அங்கே மறு உலகத்தில் சந்திக்கிறார் கூடவே கணேஷ் வசந்த்..


இந்தத் தொடரின் பதிவுகள் ”மீண்டும் சுஜாதா” என்ற தலைப்பின் கீழ் பதியப்படும். ஒவ்வொரு பதிவும் தனித் தனி தலைப்பிட்டதாக இருக்கும்..

முதல் பதிவு இன்னும் இரண்டு தினங்களில்...

Saturday 14 June 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-3


”நாளை சென்னை வருகிறேன்.. இந்த விமானத்தில் வருகிறேன்” என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒரு இமெயில்.. மனுஷன் அமெரிக்கா போயிருந்தார். அவரோட மூத்த பையன் அங்கே இருக்கான். ஒரு மாசம் இருந்துவிட்டு வருகிறார்.. ஒரு சர்ப்ரைஸ் தரலாமே என்று ஏர்போர்ட் போயிருந்தேன்.

சென்னை ஏர்போர்ட் நிர்வாகம் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. டாய்லெட் இத்தனை சுகாதாரக் குறைச்சலாக இருக்க வேண்டாம்..


விடிகாலை நேரத்தில் வந்த அந்த விமானத்தில் தான் கிராமர் கிருஷ்ணமூர்த்தி வந்தார். என்னை ஏர்போர்ட்டில் எதிர்பார்ர்கவில்லை..


“என்னப்பா வேற யாரையும் ரிசீவ் பண்ன வந்தியா”

“இல்ல சார் உங்கள அழைச்சிண்டு போகத்தான் வந்தேன்”

“சரி வா போகலாம்”

”பயணம் எல்லாம் எப்படி சார் பையன்,, மாட்டுப்பொண்ணு எல்லாம் சௌக்கியம இருக்காளா.. உங்க பேரப் பசங்க”

“எல்லாம் சௌக்க்கியம்.. ரொம்ப சுத்தி பாக்க முடியல.. ஆனா முக்கியமான சில இடம் பார்த்தோம்.. பையன் எல்லாம் வீடியோ எடுத்தான்.. கொண்டு வந்திருக்கேன்.. சாவகாசமா பார்க்கலாம்.. ஆமா நீ உன் கார்ல தானே வந்தே”

“ஆமாம் சார்.. ஏன் கேட்றேள்”

“இல்லப்பா.. இங்கேர்ந்து போனேன் இல்லியா .. எம் பையன் ஏர்போர்ட் வந்திருந்தான். ஆனா டாக்ஸி பிடிச்சி வந்தான்.. ஏன்னு கேட்டேன்.. தன் கார் சின்னது.. நாலு பேர் தான் சௌகரியமா போலாம்.. இப்படி ஏதேதோ சொன்னான்.. அதான் கேட்டேன்”

“ஓஹோ... இப்படியெல்லாம் யோசிக்கணுமா”

“ஏம்பா பொஸ்தகம் வேணுமின்னு மெயில் பண்ணியே.. இங்க மதராஸில கிடைக்காததா”

”அதில்ல சார்.. அங்கெல்லா எல்லா பொஸ்தகமும் பேப்பர் பேக் எடிஷன் வரும்னு ஒரு சிநேகிதன் சொன்னான்.. அதான்.. சரி நீங்க தான் போய்ருக்கேளேனு ஒரு மெயில் அனுப்பினேன்”

“அது சரி.. பொஸ்தகம் பேர் சரியா அனுப்ப வேண்டாமா.. வெறுமன எழுதினவன் பேரு மட்டுமிருந்தா போதுமா பொஸ்தகப் பேரு.. யார் பப்ளிஷர் இதெல்லாம் வேண்டாமா”

இதற்குள் அவர் வீடு வந்துவிட்டது..

“ஏம்பா உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கோலத்து மேல காரை நிறுத்தாதேனு.. எத்தனை சிரமப்பட்டு கோலம் போடறா.. பாரு டயரை தேச்சி நிறுத்தி அழிச்சிட்டே”

“ I am sorry Sir.. I will not repeat this again”

மாட்டிக் கொண்டேன்..

ஆங்கில சொற்றொடருக்காக மனுஷன் காத்திருந்த மாதிரி தோன்றியது..

“நீ உள்ள வா”... முகம் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறதோ

“இல்ல சார் பிரயாணக் களைப்பாயிருக்க்கும்.. நீங்க ரெஸ்ட் எடுங்கோ நான் அப்புறமா வர்றேன்”

“இல்ல ரெண்டு நிமிஷம் கூட ஆகாது”

சரி இனி தப்பிக்க முடியாது

“சந்துரு இந்தா இத தமிழில் எழுது” .. ஒரு பேப்பரில் எதையோ எழுதிவிட்டு நீட்டினார்..

I WILL NOT REPEAT என்று இருந்தது.. அதற்கு எதிரே.. நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்று எழுதி அவரிடம் நீட்டினேன்

“பாத்தியா இங்க சரியா எழுதின.. வாசல்ல என்ன சொன்னே I will not repeat this again-- repeat னு சொன்னாலே மறுபடியும்னு தானே அர்த்தம் அப்புறம் ஏன் ஒரு again எக்ஸ்ட்ராவா.. அது தப்பு .. இப்ப கிளம்பு..

“சரி சார் வர்றேன் .. நீங்க ரெஸ்ட் எடுங்கோ

காரை ஸ்டார்ட் செய்யும் போது யோசித்தேன்.. இனிமே இவர்கிட்ட இங்லீஷ்ல பேசக்கூடாது.. ஒரு வார்த்தை கூட ஆமா I will not repeat this …

Saturday 31 May 2008

பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்


டெல்லி சர்க்கார் ரொம்ப கில்லாடி. இத்தனாம் தேதி லிட்டருக்கு பெட்ரோல் விலையும் டீசல் விலையும், காஸ் சிலிண்டெர் விலையும் இத்தனை உசத்தலாம் என்று ஒரு வழியாய் முடிவு செய்துவிட்டு , அதற்கு ஒரு வாரம் முன்னாலேயே லிட்டருக்கு 17 ரூபாய் ஜாஸ்தியானாலும் ஆகலாம், சிலிண்டெர் 100 ரூபா ஜாஸ்தியாகப் போறது என அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்புறம் இத்தனாம் தேதி இன்னின்னார் கூடி விவாதம் செய்து கடைசியாக இத்தனை என்று சொல்லுவோம் என்று சொல்கிறார்கள்.

பொது ஜனம் என்ற அப்பாவி எதைச் சொன்னாலும் நம்பிவிடுவான். அவனுக்கும் வேறு வழியில்லை. ஐபிஎல் கிர்கெட் மாட்சுக்கு நடுவே டிவி ஸ்கிரீன் கீழ் மூலையில் இந்த செய்தி எப்படியும் வல இடமாக ஜிலு ஜிலு என ஓடும். பதினேழு ரூபா ஏறிவிடும் என்று எதிர்பார்த்தால் 2 ரூபாயோ 3 ரூபாயோ உசந்திருக்கும். ஆஹா பரவாயில்லை என சமாதானம் ஆகிவிடுகிறோம்.

”லெப்ட் பார்டிகள் விடமாட்டார்கள் பாரேன்” என்று அசட்டுத்தனமாய் நம்பிக் கொண்டு இருக்கிறோம்

பெட்ரோலியப் பொருள் விலையேற்றம் எப்படி ஏன் நடக்கிறது. வித விதமாய் படம் போடுகிறார்கள்

பெட்ரோலியப் பொருள் தாராளமாய் கிடைத்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒரு சங்கம் வைத்துள்ளன. அதாவது OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், ஐக்கிய அரபு தேசம், இரான், இராக், சௌதி அரேபியா, குவைத், கத்தார், வெனின்சுலா, நைஜீரியா ஆகிய நாடுகள் அங்கத்தினர். இவர்கள் உலக் பெட்ரோலிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் கனவான்கள், இவர்கள் தவிர மெக்சிகோ வளைகுடாவில் கொஞ்சம், பழைய சோவியத ரஷ்யா பக்கம் கொஞ்சம் எண்ணெய் வருகிறது.. ஆக எண்ணெய் சாம்ராஜ்யம் OPEC தயவில் தான். ஆனால் இந்த அமைப்பு எண்ணெய் விலை எங்கள் கையில் இல்லை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு எங்கள் கையில் இருப்பதால் நாங்கள் நினைத்தால் உற்பத்தியை கூட்டவோ குறைக்கவோ செய்வோம் என சொல்கிறார்கள்.

இந்த மாதிரி திடுக் திடுக் என்று விலை ஏறுவதற்கு எல்லாரும் சொல்லும் காரணம் தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லை.. காசு ஜாஸ்தி தந்தால் எப்படி உற்பத்தி ஜாஸ்தியாகிறது என்று யாரும் கேட்கக் கூடாது.. காசை கையில் ஜாஸ்தி வாங்கிக் கொண்டு தோண்டினால் பூமி மாதா, “சரியான காரியவாதிப்பா நீ.. சமயம் பார்த்து ஜாஸ்தி வாங்கிட்டியேனு” சிலாகிச்சு ஜாஸ்தி எண்ணை தருவாளா என்ன

வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளை கொஞ்சம் மான்யம் தடவி (பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 17 ரூபாய் மான்யம்) நமது டெல்லி சர்க்கார் ஜனங்களுக்குத் தருவதாகவும் இனியும் மான்யம் தடவித்தர வழியில்லை.. விலையேற்றம் நிச்சயம் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் மே 31ம் தேதி என்று அதற்கு சுப முகூர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். ஆக 31ம் தேதி பெட்ரோல் பங்குகாரர்கள் ”ஸ்டாக் இல்லை”என்று சின்னதாய் ஒரு காலண்டர் அட்டையில் எழுதி ஏற்கனவே வாங்கிய பெட்ரோலையும் டீசலையும் ஒளித்து வைத்து (பதுக்கி என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்) ஒரே நாளில் சில ஆயிரங்களை பார்த்துவிடுவார்கள். இந்த பகல் கொள்ளையை ரெகுலேட் செய்ய மத்திய் சர்க்கார் ஒரு துரும்பைக் கூட அந்தண்டை இந்தண்டை நகர்த்தாது..

பின்னே என்ன ஸ்வாமி நாட்டில் இருக்கும் எல்லா பெட்ரோல் பங்குக்கும் பங்க் ஒன்றுக்கு ஒரு ஆள் போட்டு ”இந்தாப்பா உன்னோட பெட்ரோல் பங்கில் இன்னி தேதிக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் இத்தனை லிட்டர் டீசல் இருப்பு இருக்கு.. இதெல்லாம் நீ பழைய விலைக்கு வாங்கினாய்.. இதை நீ பழைய விலைக்கு தான் வித்தாகணும்.. இனி புதுசா வாங்ற ஸ்டாக்கைத்தான் புது விலைக்கு விற்கலாம்” என சொல்ல சர்க்காருக்கு எத்தனை சிரமம்; எவ்வளவு ஆள் பலம் வேண்டும்..

இருக்கிற போலிஸ் பூராவும் முக்கியஸ்தர் பந்தோபஸ்துக்கே பத்த மாட்டேங்றது

பொது ஜனத்துக்காக இதை ஏன் செய்ய வேண்டும் ? அவர் தான் எதற்கும் கேள்வி கேட்கப் போவதில்லையே.

சர்க்கார் என்பதே பொது ஜனத்துக்குத்தான் என்று யாராவது சொன்னால்தான் அவருக்கே தெரியும். எல்லா சுமையும் அவர் தலையில்தான். அவர் தான் எல்லா வீக்கத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன திறப்பு விழா .. அதில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து ஸ்பெஷசல் ஏர்கிராப்டில் வந்து சின்னதாய் ஒரு பொத்தானை அழுத்திவிட்டு அரை பக்க அறிக்கை ஒன்றை இரண்டு தடவை நிமிர்ந்து பார்த்து படித்துவிட்டு போவதற்கு பாதுகாப்பு செலவு உட்பட பல கோடி செலவாகிறது. ”இதெல்லாம் என்னோட காசுப்பா. இப்படி விரயம் பண்றேளே “ அப்படினு என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா.

வெயில், குளிர், மழை காலம் இப்படி எல்லா காலத்திலேயும் பார்லிமெண்டைக் கூட்டிவிட்டு , சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நடுஹாலில் வந்து நின்று கொண்டு ஹர்த்தால் பண்ணி, ஒத்தி வச்சு முக்கியமான விஷயம் பேசாமலேயே தப்பாமல் அலவன்சு மட்டும் வாங்கிண்டு போறதை டிவில பார்த்துட்டு என்னிக்காவது பொது ஜனம் தலையில் அடிசிண்டுருக்காரா. இல்லை “அதெல்லாம் என்னோட காசு என்னோட காசுன்னு” புலம்பிருக்காரா

இவா அவாளோட சகவாசம் வச்சிண்டு அப்புறம் அவா இவாளோட சகவாசம் வெச்சிண்டானு சொல்லிட்டு திடீர்னு ஆதரவு வாபஸ் ,” வா எலக்‌ஷன்ல உன்னைப் பார்த்துக்றேன்னு “ சவால் விட்டுட்டு தேமேன்னு இருக்ற பொது ஜனத்துக்கிட்ட ,” இதோ பார்ப்பா கொள்கை பிரச்ச்னையால திருப்பி தேர்தல் வந்துடுத்து இப்ப எனக்கு ஓட்டு போடுனு” வந்து கேக்றப்போ அதையும் நம்பிண்டு காலம் கார்த்தால ஏழு மணிக்கே போய் ஓட்டுப் போட்டுட்டு வர்றாரே பொது ஜனம்; “ஏம்பா இப்படி என் காசைக் கரியாக்றேள்னு” என்னிக்காவது கேட்டிருக்கிறாரா.

”இதோ பாருங்க டீசல் விலை ரெண்ட்ரூவா ஏறிடுச்சு அதனால இனிமே சவாரி குறைஞ்சது 40 ரூபா ஆகும் “ என்ற குரலுக்கு தன்னை பழக்கிக் கொண்டவர்தானே பொது ஜனம்.. “ஏம்பா லிட்டருக்கு 2 ரூபாதானேப்பா ஏறிருக்கு 20 ரூபாய்க்கு வந்த தூரத்துக்கு இன்னிக்கு டபுளாக்கி கேக்றியேப்பானு “ என்னிக்காவது பொது ஜனம் கேட்டிருக்காரா. இல்லை போலிஸ் ஸ்டேஷன் போய், ”இதை என்னனு சித்த விசாரிங்கோனு” பிராது கொடுத்திருக்காரா.

”டீசல் பெட்ரோல் விலையெல்லாம் ஏறிடிச்சி இனிமே கிலோ இத்தனை கொடுத்தாத்தான் கட்டுபடியாகும்” என்று சொல்லும் போதும் ,”ஆஹா பேஷா செய்துடலாம்னு தானே” சொல்றார் பொது ஜனம்.

மிகச் சாதாரணமான பொது ஜனம், கெடு தேதி தவறாமல் வரி செலுத்தி விட்டு சமத்தாய் வீட்டுக்கு வந்து டீவி போட்டுக் கொண்டு சர்க்காரின் எல்லா விழாவையையும் தவறாமல் பார்க்கிறார். “ஏம்பா இந்தாள் இத்தனை கோடி ரூபா வரி பாக்கி தரணும்னு சொல்றாளே.. இவாளுக்கெல்லாம் இப்படி உசந்த அவார்டா தரேளேனு “ என்னிக்காவது சொல்லிருக்காரா

இப்படியும் இன்னும் பலவிதமாயும் அபார சகிப்புத்தன்மை கொண்ட இந்த அப்பாவி பொது ஜனத்துக்காக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டெர் விலையில் இன்னும் கொஞ்சம் மான்யம் தடவித்தரலாகாதா..

டெல்லியில் நார்த், சௌத் இன்ன பிற பிளாக்குகளில் கோலோச்சும் கோட்டு சூட்டு போட்ட, வெள்ளை வேட்டி சட்டை அணிந்த, ஷெர்வாணி அணிந்த சம்பந்தப்பட்ட இலாக்காக்களில் உசந்த பொறுப்பிலிருக்கும் பெரியோர்களிடம் ஒரு விண்ணப்பம். இப்படி ஒரு சகாயம் நீங்கள் இந்த பொது ஜனத்துக்கு செய்தால் அவர் கொஞ்ச நேரம் நம்ப மாட்டார். அப்புறம் உத்சாகத்தில் தேம்பி தேம்பி அழுவார்.. நம்பிக்கையில்லை என்றால் செய்துதான் பாருங்களேன்

Saturday 24 May 2008

டார்ச் லைட்


“ஏண்டா பாஸ்கி.. போன் பண்ணா எடுக்க இவ்வளவு நேரமா? “

“இல்லை புரொபசர்.. டாய்லெட்ல இருந்தேன்.. சொல்லுங்கோ “

”எப்டிடா ஒருமாசம் லீவு நல்லா போச்சா “

“ஆச்சு ... நாளைக்கி வந்து ஜாயின் பண்ணிடுவேன்.. அத ஞாபகப்படுத்தான் கூப்பிட்டேளா “

“இல்லைடா.. இது அதைவிட முக்கியம்.. காரணமாத்தான் உனக்கு ஒரு மாசம் லீவு கொடுத்து அனுப்பிச்சேன்.. ஆனா நான் சும்மா இல்லை.. ஒரு புது இன்வென்ஷன்.. நீ இன்னிக்கே ஜாயின் பண்ணிடு அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்தில... அதுவும் நாலு நாள் வெளியூர் போய் தங்கர மாதிரி ரெடியா வா.. நாம இன்ன்னிகு ஊட்டி போறோம்”

”புரொபசர்.. என்ன இந்த ஸ்பீடு.. ஊட்டி அது இதுன்றேளே .. விவரமா சொல்லுங்கோ .. “

“உங்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லப் போறேன்.. எல்லாம் நேர்ல சொல்றேன்.. வரும் போது மறக்காம ஒரு பெரிய தோசைக்கல்.. கிரேன்ல இருககுமே ஸ்டீல் ரோப் அதுல ரெண்டு மீட்டர்.,, ஒரு கெட்டி பெட்ஷீட்.. ம்ம்ம் அப்புறம்.. இது போதும் வாங்கிண்டு வந்திடு”

சொன்னபடியே இந்த வஸ்துக்களை சேகரம் பண்ணிக்கொண்டு பாஸ்கியாகப்பட்ட பாஸ்கர் சடகோபன் எதிரில் ஒரு மணி நேரத்தில் ஆஜரானான்.

“என்னடா கிளம்பலாமா?”

”நீங்க ரொம்ப மோசம் புரொபசர்.. ஒரு விவரமும் சொல்ல மாட்டேங்கறேளே.. இந்த ப்ராஜக்டில் நான் கிடையாதா”

“பறக்காதேடா.. ஊட்டி வரை போக இன்னும் எத்தனை நாழியிருக்கு.. போறச்சே எல்லாம் விலாவரியா சொல்றேன்.. நாழியாறது .. இப்ப கிளம்பினாத்தான்.. கார்தால போக முடியும். நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கார் ஓட்டலாம்”.


”அதான் கிளம்பி 100 கிலோ மீட்டர் பக்கம் வந்தாச்சே. இன்னும் நீங்க சொல்லலை”

“விட மாட்டியே... சரி இப்ப நான் கேக்றதுக்கு ஒவ்வொண்னா பதில் சொல்லு”
“கேளுங்கோ”

“உன் முடி ஏன் இப்படி ஆடறது”

“விளையாடறேளா.. 70 ல கார் ஸ்பீடா போறது அதான்”

“கார் ஸ்பீடா போனா உன் கேசம் ஏண்டா ஆடணும்”

“காத்தடிச்சா வேகமா அடிச்சா ஆடாதா.. புரொபசர்.. ஏன் கடிக்றேள்”

“சரியாச் சொன்னே.. இப்ப காரை நிறுத்தறேன் “

நிறுத்திவிட்டு பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன டார்ச் லைட் எடுத்தார்.. அதை உயிர்பித்து வெளிச்சத்தை பாஸ்கி முடி மேல் அடித்துவிட்டு ,

“இப்பவும்தான்.. லைட் உன் முடிமேல வேகமா அடிச்சது.. ஏன் ஆடலே..”

“இதென்ன பைத்தியக்காரத்தனம்.. சாரி புரொபசர் ..வாய் தவறிடுத்து.. லைட் எப்படி பொருள நகர்த்தும்.. இட் இஸ் நாட் அ மேட்டர். ஐ மீன்.. அது திடமோ, திரவமோ, வாயுவோ இல்லையே “


“கிட்டக்க வந்துட்டடா... இப்ப பிஸிக்ஸல மேட்டர்னா என்ன”

“ அதுக்கு வெயிட் இருக்கணும்.. இடத்தை அடைத்துக் கொள்ளும் குணாதிசயம் இருக்கணும்”

“பிரமாதம்டா... இப்ப காத்துக்கு வெயிட் இருக்றதால அது ஒரு வேகத்துல உம் மேல பட்டா. முடி, டிரஸ் எல்லாம் ஆடறது. சரியா. “

“ஆமாம்.. சரிதான்”

”இப்ப உம்மேல பட்ட லைட்டுக்கு வெயிட் அதாவது எடை இருந்தா அது உன்னை அசைக்குமா “”

”லைட்டுக்க்தான் வெயிட் கிடையாதே”

அதில்லைடா வெயிட் இருந்தா ... என்னவாகும்”

“அசையும்... நிச்சயம் அசையும்”

“அதாண்டா கண்ணா என்னோட புது இன்வென்ஷன்.. எடை இருக்கிற வெளிச்சம்.. அதாவது அந்த மாதிரி எடையுடன் வெளிச்சம் தர ஒரு டார்ச் லைட், பல்பு.. ரெண்டும் கண்டுபிடிச்சிருக்கேன்.. அதை டெஸ்ட் பண்ணத்தான்.. இப்ப ஊட்டி போறோம்.”

பாஸ்கி ரொம்பவுமே பிரமித்தான்...

“புரொபசர்.. பிரில்லியண்ட்.. ஆனா லைட்டோட வேகம் ஒரு செகண்டுக்கே கிட்டத்தட்ட 2 லட்சம் மைல் ஆச்சே புரொபசர்.. அந்த வேகத்தில ஒரு சின்ன வெயிட் மேல பட்டாலே.. எல்லாம் சிதறிடுமே..”

“அதாண்டா பாஸ்கி சூட்சுமம்.. எல்லாம் ஊட்டில விவரமா சொல்றேன்.. இனிமே எல்லாம் பிராக்டிகல் விளக்கம் தான்”

விடிகாலை அந்த மலைப்பாதை ரொம்பவுமே குளிராக இருந்தது.. இருவருக்கும் இரவு முழுநேர கார்ப்பயணம் ரொம்பவுமே களைப்பைத் தந்தது.. கார் கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது.

“புரொபசர்.. இது ஏதோ.. காட்டுப்பாதை மாதிரி தெரியறது.. இதுல ஏன் திருப்றேள்.. ”

“தெரிஞ்சுதாண்டா திருப்றேன்.. ஏன் இப்படி கத்றே.. ஊட்டி கிரவுடட் பிளேஸ்.. அங்க போய் இந்த லைட் வேகத்தில் பரிசோதனை செய்ய முடியுமா .. யோசிச்சுப் பாரு.. இப்படி ஆள் அரவம் இல்லாத வனாந்திரமா பார்த்து டெஸ்டெல்லாம் பண்ணிட்டு.. அப்புறமா.. ஊட்டி போறோம். அங்க கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணிட்டேன்.. ஒரு பிரஸ் கான்பிரன்ஸ் இருக்கு.. அவாளெல்லாம் ஊட்டிக்கு மேல தொட்டபெட்டா போற வழியில இதே மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிண்டு போய் டெமோ செஞ்சி காமிக்கப்போறோம்.. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு”

“அது சரி.. ரொம்ப பிரிபேர்டாத்தான் இருக்கேள்.. ஆள் இல்லாத வனாந்திரம் சரி.. அரவம் இல்லைனு சொல்ல முடியாது..”

கொஞ்ச தூரத்திலேயே சடகோபன் கற்பனைக்கு ஈடு கொடுத்த ஒரு சின்ன வெட்ட வெளி.. அங்கிருந்து சடக்கென சரியும் பள்ளத்தாக்கு.. தூரத்தில் சின்ன சின்னதாய் மலைகள் தொடர்ச்சியாய்.. மலையை சுற்றி செல்லும் எந்தப் பாதையும் கண்ணுக்கு தெரியவில்லை..

“இந்த இடம்தாண்டா ஐடியல் பாஸ்கி.. டயம் கூட இப்ப ஆறரைதான் ஆச்சி.. இங்க ஜன நடமாட்டமே இருக்காதுனு நினைக்கிறேன்.. ஜஸ்ட் 30 நிமிஷம்.. ரெண்டு மூணுதரம் டெஸ்ட் பண்ணி அத ஹேண்டிகாம்ல் பதிஞ்சிண்டுட்டு புறப்பட வேண்டியதுதான்”

“முதல்ல அந்த டார்ச் லைட்ட கண்ல காட்டுங்கோ”

சடகோபன் காரின் டிக்கியிலிருந்து ஒரு பெட்டியை சர்வ ஜாக்கிரதையாக இறக்கினான். அதைத் திறந்து அதிலிருந்து துணிகளுக்கு மத்தியில் ஏறக்குறைய ஒளித்து வைக்கப்பட்ட அந்த விஷேஷ டார்ச்சை எடுத்தான்..

‘இதாண்டா அது.. “

“எங்க குடுங்கோ பாக்றேன்”’

“இரு அவசரப்படாதே.. இதுல நிறைய விஷயம்.. கவனிக்கனும்.. இந்த டார்சுக்குனு விஷேஷ பல்பு, ஒரு ரியோஸ்டாட். அப்புறம் ஷாக் அப்சார்ப் பண்ண ஒரு செட்டிங்”

“புரியற மாதிரி சொல்லுங்கோ”

“மண்டு .. லைட்டோட வேகத்தில இங்கேயிருந்து சந்திரனுக்கே ஒன்றை செகண்ட்ல போய்டலாம்.. சோ அந்த வேகத்துக்கு அதோட வெயிட் சும்மா ஒரு கிராம் இருந்தா கூட இந்த மலையைக் கூட பேர்த்து எடுத்துடும். அதுவும் இல்லாம எடையுள்ள ஒரு வஸ்து காத்தைக் கிழிச்சிண்டு அந்த வேகம் போனா ப்ரிக்‌ஷன்ல என்ன சூடு ஜெனரேட் ஆகும். இதெல்லாம் விட நியூட்டன் விதிப்படி இந்த வேகத்தில் ஒரு வஸ்து முன்னே போனா அதோட ஆப்போஸிட் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்.. இதுக்குதான் இதெல்லாம்”

“எக்ஸலண்ட் புரொபசர்.. இப்போ இதெல்லாம் செட் பண்ணி இங்க அந்த டார்ச் லைட்டில் எடை தர வெளிச்சம் காமிக்கப் போறேள் அப்படித்தானே”

”ஆமாண்டா.. இந்த ரியோஸ்டாட்.. இந்த விஷேஷ டார்ச்/ பல்பிலிருந்து வரும் வெளிச்சத்தோட வெயிட்டை கூட்ட குறைக்க.. இப்போதைக்கு ஒரு கிராமில் ஒரு கோடியில் ஒரு பங்கு வரை எடை உள்ள வெளிச்சம் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். ஒரு தடவை இந்த டார்ச்சை ஆன் பண்ணினால் ” டக்னு” ஒரு பிளாஷ் மாதிரி லைட் அடிக்கும்.. ”எடையுள்ள வெளிச்சம்”. உடனே ஆப் ஆயிரும். அப்புறம் 5 அல்லது 6 செகண்ட் கழிச்சுதான் திருப்பவும் செய்யமுடியும்.. ஏன்னா தொடர்ச்சியா எடையுள்ள லைட் அடிச்சா அதிர்வு சூடு இதெல்லாம் தாங்க முடியாது. இந்தோ பார்த்தியா. இந்த பைபர் ஷாக் அப்சார்ப் சிஸ்டம் இந்த டார்ச் எடையுள்ள வெளிச்சத்தை தரும் போது பின்னால எகிறாம இருக்க. இந்த ஷாக் அப்சார்பர் நிரந்தரம் இல்லை அப்பப்ப லோட் பண்ணனும். ஒரு தடைவை 12 லோட் பண்ணலாம். 12 தடவை வெளிச்சம் அடிக்கலாம். இப்ப 12 லோட் பண்ணியிருக்கு . எக்ஸ்டிரா ஸ்டாக் இல்லை”

”புரொபசர் நீங்கள் ஒரு அதிசயம்... இப்போ எப்படி டெஸ்ட் பண்ணலாம்”

“அந்த தோசைக்கல்லை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிடு”

அந்த விஷேச டார்ச் உமிழ்ந்த எடையுள்ள வெளிச்சம் பௌதிக விதிகளை மீறாமல் அந்த அப்பாவி தோசைக்கல் மீது பட்டதுதான் தாமதம் தோசைக்கல் முதலில் ஒட்டையானது அதே ஷணத்தில் நொறுங்கியது..

”பாத்தியா பாஸ்கி.. எப்படி”

“புரொபசர்.. மார்வ்லெஸ்.. இந்த யுகத்தின் இணையில்லாத விஞ்ஞானி நீங்கள்தான்.. இந்த டார்ச் லைட்ட வெச்சி எதை வேணுமின்னாலும் சுட்டு வீழ்த்தலாம்”

“போடா மண்டு.. டிஸ்டரக்டிவா நினக்காதே.. கன்ஸ்ட்ரக்டிவா யோசி.. இந்த வேகத்தை எல்லா வகை டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்,, பூமியை தண்ணி எண்ணெய்க்காக தோண்டரதுக்கு, பாரம் தூக்றதுக்கு.. இப்படி நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணலாம்.. சரி கொண்டு வந்த பெட்ஷீட் எங்க அதை அந்த ரெண்டு மரத்துக்கும் இடையில் கட்டு”

“புரொபசர் இப்ப நான் சுடறேன்”

”ஏண்டா ஆயுதாமாவே நினைக்கிறாய்.. இந்தா அந்த பெட்ஷீட் மேல வெளிச்சம் அடி “

பாஸ்கி டார்சை பெட்ஷீட் எதிரே காட்டி ஸ்விட்சைப் போட்டான். காட்டன் பெட்ஷீட் குபுக்கென்று தீப்பிடித்தது.

”புரொபசர் போதும்.. இப்பவே, ரெண்டுதரம் ஆய்டுத்து.. அப்புறம் பிரஸ் ஆசாமிகளுக்கு காண்பிக்க லோட் இருக்காது “
“இருடா அங்க அவாளுக்கு ஒரு அஞ்சி தரம் தான் காண்பிக்கப்போறேன். இங்க இன்னும் ஒரு தடவை பார்ப்போம்.. மூணு தடவை ஆய்டும்.. ஊருக்கு திரும்றச்சே மிச்சம் நாலு லோட் கையில் இருக்கும்.. நம்ம லேப்ல இன்னும் கொஞ்சம் பண்ணிக்கலாம்”

“இப்ப எப்படி டெஸ்ட் பண்ணப் போறேள் “

”இந்த லைட்டோட வெயிட்டை இன்னும் கொஞ்சூண்டு ஜாஸ்தி பண்ணி.. இங்க இந்த பூமியில் அடிச்சுப் பார்ப்போம்”
“புரொபசர் எதுக்கும் ஜாக்ககிரதை. எல்லா அளவும் சரியா இருக்கானு பார்த்துட்டு பண்ணுங்கோ.. எதுக்கும் பூமாதாவை என்னை ஷமிச்சுடுமான்னு கேட்டுண்டுடுங்கோ “

சடகோபன் ரியோஸ்டாட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டு,, ஷாக் அப்சார்பர் சரியாயக இருக்கிறாதா எனப்பார்த்து விட்டு, அந்த கையை தோளளவில் நேராய் நீட்டிக் கொண்டு விஷேஷ டார்ச்சை தரைக்கு 90 டிகிரி செங்குத்தாய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஸ்விட்ச் போட்டான்.

ஒரு செகண்டுக்கு சுமார் 2 லட்சம் மைல் செல்லும் அந்த விஷேஷ, எடையுள்ள லைட் அந்த மஹா சொற்பமான நாலரை அடி தூரத்தைக் கடந்து தரையைத் தொட்டு துளைத்து மண், கல் எல்லாவற்றையும் வாரியெறிந்த வேகம், சடகோபன் சடக்கென கையை மடக்கிக் கொள்வதை விட பல லட்சம் மடங்கு வேகமாய் இருந்தது. அவன் கையில் இருந்த டார்ச்சை ஒரு கனமான கல் எகிறடித்து கண்கானாமல் தூக்கி எறிந்தது

Thursday 22 May 2008

இப்படிக்கு ... தொடர்ச்சி


மாற்றுக் கருத்தாயினும் எனது வலைப்பதிவில் செல்வேந்திரனின் பின்னூட்டத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கி பின்னூட்டமும் அங்கே அனைவர் பார்வைக்கும் உள்ளது (பார்க்க: இப்படிக்கு... பதிவின் பின்னூட்டங்கள்)

இந்த வலைப்பதிவில் இந்த பொருள் குறித்து முத்தமிழ் கூகிள் குழுமத்தில் (Google Groups) இரண்டு வரியில் ஓர் இழை சேர்த்தேன். அங்கே விவாதம் இன்னும் தொடர்ந்து நடக்கிறது. பல வகைக் கண்னோட்டங்கள் அங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அங்கே உறுப்பினராகி விவாதத்தில் பங்கு பெற அழைக்கிறேன்

இந்தப் பொருளில் வேந்தன் அரசு, சங்கர் குமார், பச்ச புள்ளே, ஸ்ரீ(முத்தமிழ் கூகிள் குழுமம்) செல்வேந்திரன் ஆகியோர் மாற்றுக் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் (யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க)

இப்பொருளில் பெண்கள் பக்கமிருந்து குழுமத்திலும்(முத்தமிழ் கூகிள் குழுமம்) வலைப்பதிவிலும் பின்னூட்டம் இல்லை.

ஆயினும் இரண்டு பெண்கள் எனக்கு தனிமடலில் அவர்கள் கருத்துக்களை அனுப்பியுள்ளனர்.

இந்த பொருள் விவாதமாக நடைபெறும் நிலையில், பொது விவாத மேடையில் பெண்கள் பங்கு கொள்ளும் அளவுக்கு இன்னும் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலையில் மனதளவில் வளரவில்லை

ஆயினும் இதில வியப்புக்குரிய செய்தி: ஒரு பெண் தன்னை பாலியல் தொழிலிலில் இருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு எழுதிய தனிமடலை குறிப்பிட வேண்டும். அவரது அறிமுகம் Bonafide ஆனதா என்ற ஐயம் எனக்கு உள்ளது. ஆனால் அவர் வெளிப்படுத்திய அவரது மனநிலை என்னை சற்று சங்க்டப் படுத்தியது. பாலியல் தொழில் அவரது தொழில் என்ற கூற்றை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு அதைப் படித்தால் இந்த தொழிலை ஒழித்தே ஆக வேண்டும் என்றே தோன்றுகிறது.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற சிலரின் வாதம் கேள்வி அறிவினாலும், இது தொடர்பான ஊடக செய்திகளின் வாயிலாகப் புரிந்து கொண்ட விதத்தினாலுமேயல்லாமல் அவர்தம் தனிப்பட்ட அனுபவம் என்று சொல்ல முடியாது.

பாலியல் தொழில் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற எனது ஆதங்கமும் கூட கால காலமாக கற்ற கல்வி, போதிக்கப் பட்ட அறிவு / பண்புகள் அதன் வழி ஏற்படுதிக் கொண்ட சிந்தனைப் பின்னல்கள், சட்டம் பயின்ற போது பெற்ற நூலறிவு, பெரியோர் அமைத்தளித்த வாழ்வு முறை இதன் பிண்ணனியிலேயே.

இப்போது ஒருவர் பாலியல் தொழிலாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது எண்ணத்தை வெளியிட்டிருக்கும் நிலையில் அவர் தம் கருத்தையும் பார்க்க வேண்டியதாகிறது. அவர் தனது பெயரை (பொய்ப் பெயர் ஆயினும்) வெளியிட வேண்டாம் என சொன்னதால் பெயரை மட்டும் மறைத்து அவரது கருத்தை எனது அடுத்த பதிவில் எனது வ்லைப்பதிவில் வெளியிடுகிறேன்.

மற்றுமொரு ஆச்சரியம்.. ஒரு பெண் போலிஸ் அதிகாரியின் தனி மடல்.. இவர் தன்னை நேரடியாகவே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இவரது கடிதம் ஆங்கிலத்தில்.. காரணம் தனக்கு தமிழில் எப்படி இமெயில் அனுப்ப வேண்டும் என தெரியாது என சொல்லியுள்ளார்.. அவரது ஆங்கில மெயிலை அப்படியே வெளியிட அனுமதியும் கொடுத்துள்ளார். அவரது ஆங்கில மெயிலை தமிழாக்கம் செய்து “இது சரியா- உங்கள் கருத்து அப்படியே வந்துள்ளதா” என கேட்டு மெயில் ஒன்று அனுப்ப உத்தேசித்துள்ளேன். காரணம் வாசகரில் சிலர் தமிழில் புலமை பெற்றுள்ள அளவு ஆங்கிலத்தில் பெற்றிருக்க மாட்டார்கள். அந்த காவல் அதிகாரி தனது ஆங்கில மெயிலின் தமிழாக்கம் சரி என்று சொன்னவுடன் அதனையும் (ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம்) எனது அடுத்த பதிவில் பதிகிறேன்

இது தவிர சகோதரர் வேந்தன் அரசு(முத்தமிழ் கூகிள் குழுமம்) எனக்குள் ஏற்படுத்திய திருக்குறள் அலை காரணமாக “வரைவின் மகளிர்” அதிகாரம் குறித்து நான் கலந்தாலோசித்த பேராசிரியர் ஒருவரின் ( இவர் திருக்குறளில் ஆராய்ச்சி செய்து இரண்டு முறை முனைவர் பட்டம் பெற்றவர்- மிக முக்கியமான செய்தி திருக்குறள் வேற்று நாட்டவருக்கும் தகுந்த நீதி நூலே என்பதனை புரியவைக்க சுமார் 17 நாட்டு கலாச்சார பிண்ணனியுடன் அந்த நாட்டு மொழியியல் வல்லுநர்கள் கலாச்சார ஆசிரியர்கள் இவர்களுடன் கலந்த்தாலோசனை செய்து அந்த 17 நாட்டு மொழியிலும் கட்டுரை வெளியிட்டவர்) விளக்க உரையினையும் எனது அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன்

இது தவிர இந்திய அரசியல் நிர்ணய சபையில் (Constituent Assembly) Constitution of India வின் 23 வது ஷரத்து(Right Against Traffic in Human Being and Forced Labour) ஏன் தேவை அது ஏன் ஒரு அடிப்படை உரிமையாகக் கருத்தப் படவேண்டும் என்று அம்பேத்கார் அவர்களின் விளக்கத்தினையும் சேகரித்து வருகிறேன். இந்த விவாதம் நான் பல வருடங்களுக்கு முன்பு படித்த்து. இப்போது Constituent Assembly விவாதங்கள் நூலை வேண்டி வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன். இந்த விவாதங்கள் இப்போது இணையத்திலேயே கிடைப்பினும் சில முன்னுரைகள் இந்திய கலாசாரத்தினை சாதாரணமாக நினைப்பவர்களுக்கு அது அப்படியல்ல என புரிய வைக்க பயன்படும். இது தவிர புகழ் வாய்ந்த Jurist H. M Seervai அவர்கள் Constitution of India க்கு எழுதிய Commentary லிருந்து குறிப்புகள் சேகரித்து வருகிறேன்.

மேலும் 1950 லிருந்து 2007 வரை இந்திய உச்சநீதி மன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் வழங்கிய பல வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்புகளையும் படித்து வருகிறேன். இந்த தீர்ப்புகள் முதிர்ந்த அனுபவமும், வாழ்வியல் நடைமுறையில் பல தரப்பட்ட நிலைகளைக் கடந்த நீதியரசர்களால் வழங்கப்பட்டவை. அந்த தீர்ப்புகளில் சட்டம் மட்டுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் ஆதங்கமும் மன் உணர்வுகளும் உள்ளன

எல்லாவற்றிலும் முக்கியமானது மூவாலுர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தேவதாசி ஒழிப்புக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பிறந்த வரலாறு குறித்து சில முதியவர்கள் எனக்கு குறிப்புதவிகள் செய்திருக்கிறார்கள்

மேலும் UNITED NATIONS Population Division Department of Economic and Social Affairs ன் EXPERT GROUP MEETING ON INTERNATIONAL MIGRATION AND DEVELOPMENT ன் அறிக்கைகள் ரெகுலராகப் படிக்கிற வழக்கம் உண்டு. இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் ஆழம் என்னை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றது.. எத்தனை தகவல்கள்.. பல நாட்டு கலாச்சார , சட்ட பிண்ணணியுடன் ஆராயும் அறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள்

ஐ.நா சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகத்தில் பாலியல் தொழில் தொடர்பாக விடுத்த/ விடுத்துக்கொண்டிருக்கும் எச்சரிக்கை செய்தி படங்களும் சேகரித்து வருகிறேன்

International Labour Organisation இந்த பாலியல் தொழில் தடை செய்யப்பட்டே ஆக வேண்டும் என்று பல ஆண்டுகளாக சில நாடுகளுக்கு எழுதிய மடல்கள் அதற்கு அந்த நாடுகள் தந்த பதிலுரைகளையும் சேகரித்து வருகிறேன்

பலருடன் உடல் உறவு செய்யின் (பாலியல் நோய் பாதுகாப்புடனே செய்தாலும்) ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் குறித்து புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவர் சில குறிப்புகள் தருவதாக சொல்லியுள்ளார்.


ஆக இதனை பல கோணங்களில் அணுகி வருகிறேன்.

வலைப்பதிவில் தொடர் பதிவாகத்தான் செய்ய வேண்டும்.. அலுவல் பணிகள் வேறு.. கொஞ்சம் கால அவகாசம் எடுத்து நன்றாக செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல்.

இவை அனைத்தும் சேர்த்து எனது வலைப்பதிவில் அடுத்த பதிவினை இடுகிறேன்

Sunday 18 May 2008

இப்படிக்கு


இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.

”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம் யாருக்காவது இருக்குமானால் நேரே பக்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரே போய் நின்று கொண்டு சண்டை போடவும்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பெண்களை இருட்டிலிருந்து மஹா வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ”உனது தொழில் சூட்சுமங்கள்” என்ன என்னவென்று கேள்வி கேட்டார்கள். எதிர்பாராமல் இந்த தொழிலில் சிக்கிக் கொண்ட பெண்மணியும், எனக்கு இது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு என சொன்ன பெண்ணும் டிவியின் பப்ளிசிட்டிக்கு ரொம்பவும் உபயோகமாக இருந்திருப்பார்கள். அதிலும் ஒரு ”வரைவுஇலா மான் இழையார்” எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.

மனிதனின் பாலியல் ஆசைகளும் அது மறுக்கப்படுவதும் தான் சமூகத்தில் CRIME RATE அதிகமானதற்கு காரணம் என ”வரைவுஇலா மான்இழையார்” சொன்னது வேதனை. அதைவிட சோதனை ”இந்த தொழிலுக்கு” சட்ட அங்கீகாரம் தந்துவிட்டால் குற்றங்கள் குறையும் என்ற வாதம்.

Traffic in Human Being என்று மிக நாகரீகமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 23 வது ஷரத்தில் சொல்லப்பட்டு தடை செய்யப் படவேண்டியதாகவும் சொல்லப் பட்ட இந்த தொழில் ஒரு குற்றம். தண்டனைக்குரிய குற்றம். இது Exploitation வகையிலான மனித உரிமைக்கு எதிரான குற்றம்.

இந்த தொழிலைச் செய்துவிட்டு தண்டனை அடையும் பெண்கள் மீண்டும் மீண்டும் அந்த அவலத்திற்கே தள்ளப்படலாகாது என்று சமூக அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் டிவி காற்றலைகளில் பரந்துள்ள TELECAST பலத்தால் அந்த அவலத்தை சட்ட ரீதியாக்க வேண்டும் என்ற குரலை பதிவு செய்ய முயற்சிப்பது CHEAP PUBLICITY ரகம்

ஐரோப்பாவில் சில நாடுகளில் நடக்கிறது , தாய்லாந்தில் நடக்கிறது.. அங்கேயெல்லாம் ஜன சபை கூடி இதைச் செய்யலாம் என அறிவித்து “தொழில்” அமோகமாக நடக்கிறது என்றும் இந்த நிகழ்ச்சியில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. அங்கேயெல்லாம் பாலியல் தொழில் அங்கீகாரம் பெற்றுவிட்டதனால் CRIME RATE குறைவாக இருப்பதாகவும் ராத்திரி 10 மணிக்கு மேல் பெண்கள் அங்கே வெளியில் சுதந்திரமாக போகலாம் வரலாம் என்ற எந்த புள்ளியியல் விபரமும் இல்லாத வாதம் வேறு.

சில பத்து வருஷங்களுக்கு முன்பு பாலைவனம் மாதிரி இருந்த துபாய் இப்போது எப்படி இருக்கிறது. பெரும்பான்மையாக Expatriate Work Force ஐ நம்பி இருக்கும் அந்த ஊரில் Sex Work Legalize பண்ணப்படவில்லை. அங்கு ராத்திரி 10 மணிக்கு ஒரு பெண் பாதுகாப்பாக வெளியே போய் வரமுடியும். உலகத்தின் எதோ ஒரு சில மூலைகளில் நடப்பதால் அது சௌகர்யம் என்று சொல்வது விதண்டாவாதம்.

Sex Urge பசி மாதிரி மலம் மாதிர் ஓர் உடலியற் கூறு என்று ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லிவிட்டு இதையெல்லாம் தடை செய்ய முடியுமா எனக் கேட்பது, நான் கெட்டுப் போய்விட்டேன். எல்லோரும் கெட்டுப் போகலாம் வாருங்கள் என கூப்பிடுவது மாதிரி இருக்கிறது. பசித்தால் எதை வேண்டுமானால் சாப்பிடலாமா.

அப்புறம், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு மாயை அது இந்தியாவில் ஐரோப்பியர்கள் வந்த பின் வந்த VICTORIAN MORAL என்று சொன்னது தான் நல்ல தமாஷ். பிரிட்டிஷ் சர்க்கார் வருவதற்கும் முன்பு இந்தியாவில் இந்த கொள்கையே இல்லை என்பது ”வரைவுஇலா மான்இழையார்” சொல்லும் வாதம்.

ஐரோப்பியர் இங்கே கால் வைப்பதற்கு பலப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே ”ஒருவனுக்கு ஒருத்தி”க்கு காப்பியங்களும் பாட்டுகளும் நிறைய இருக்கின்றன. அதே சமயம் கி.மு 300 ல் மௌரிய காலத்திய ”அர்த்த சாஸ்திரத்தில்” (ஆமாம் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் தான்) ”இந்த தொழிலில்” இருப்பவர் வருமான வரி கட்ட வேண்டும் என்றும் இந்த தொழிலை ரெகுலேட் செய்ய “Ganika Pratiganika “ என்று அரசு அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

மனித நாகரீகத்தின் எந்த நிலையையும் பிற நாட்டவரைப் பார்த்த் பின் தான் தெரிந்த கொள்ள வேண்டும் என்ற நிலை இந்தியாவுக்கு இல்லை. இதற்கு முன்பும் இருந்தது இல்லை


Human Trafficking சட்ட விரோதம் என்ற நிலையில் இருக்கும் போதே ஆள் கடத்தல் நடக்கும் போது சட்ட அங்கீகாரம் கொடுத்துவிட்டால் கடத்தல் ஜாஸ்தியாகிவிடாதோ.; எப்படி குறையும் என எதிர்பார்க்கிறார்கள் என புரியவில்லை.

Council of Europe Convention, Human Traffic ஐ அங்கீகரிக்க சொல்லவில்லை;மாற்றாக இந்த் வேலை செய்பவர்களை சுளுக்கு எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறது.

கி.மு காலத்திய சிந்தனையாளர் கன்பியூஷியஸ் சொன்னதை ”வரைவுஇலா மான்இழையார்” படித்திருக்க சாத்தியம் இல்லை.


”What is God given is what we call human nature. To fulfill the law of human nature is what we call the moral law. The cultivation of the moral law is what we call as culture.

The moral law is a law from whose operation we can not for one instant in our existence escape”



உலகம் முழுக்க AIDS ஐ ஒழிக்க போராடிக்கொண்டிருக்கும் போது இங்கே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கலாம் என ஆராதிப்பதும் அதற்கான டிவி நிகழ்ச்சிக்கு வியாபார நிறுவனங்கள் உபயதாரர் ஆகி இருப்பதும் Social Irresponsibility.

கண்டனத்துக்கு உரியது.

Wednesday 14 May 2008

ஜெயகாந்தன்




நான் ஒவ்வொரு முறை மதுரைக்குப் போகும் போதும் தவறாமல் சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகக் கடைக்குச் செல்வேன். எல்லா முறையும் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட ஜெயகாந்தன் அவர்களின் படைப்பு ஏதாவது வாங்கி வருவேன். அது என்னவோ அவரது புத்தகங்களை அங்கே வாங்கினால் தான் ஒரு திருப்தி வருகிறது. இப்போது சென்னையில் இருந்தாலும் எப்போது மதுரை போய் புத்தகம் வாங்குவோம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்

முன்னுரை படித்துவிட்டு சில நாட்கள் கழித்துதான் கதைக்குள்ளே போவது வழக்கம். காரணமிருக்கிறது. முன்னுரையில் கதையில் சொல்லாத சொல்ல முடியாத ஆனால் கதை வலுப்பெற சொல்லியே தீர வேண்டிய சங்கதிகளை முன்னுரையில் சௌகர்யமாகச் சொல்லலாம் என “பிரம்மோபதேச ” முன்னுரையில் சொல்கிறார்

பிரம்மோபதேசம் வெளியானது 1963ல். அப்போது அவருக்கு வயது 29. நான் பிறக்கவேயில்லை. நான் பிரம்மோபதேசம் முதலில் படித்தது 1994ல் அதாவது அந்த கதை வந்து 31 வருஷம் கழித்து. அப்போது எனக்குக் வயது 26. முதலில் படித்த போது நான் நினைத்துக் கொண்டேன். இந்த மனுஷன் இதை எழுதும் போது சுமார் நம் வயசுதான்; இவருக்கு மட்டும் இப்படி ஒரு பொறி எப்படி என்ற வியப்பு இன்று வரை சாஸ்வதமாய் இருக்கிறது.. பிரம்மோபதேசத்தில் இந்த வரிகளைப் பாருங்கள்,

“ஒரு சிறந்த மனிதன் தன்னைச் சுற்றி தானே அமைத்துக் கொள்ளும் அந்த வேலிக்குள் வளர்ந்து செழிக்கும் அவனது தனித்துவம் தான் பிற்காலத்தில் சமூகத்தையே ஆள்கிறது. சமூகத்தின் அழுகலிலிருந்து காப்பற்றப்படும் அந்த நெறியே பிறகு சமூகத்தின் சொத்தாகிறது”

ஒருவேளை தன்னைப் பற்றிதான் சொல்கிறாரோ எனத்தோன்றும். பிசகில்லை. ஒவ்வொரு அட்சரமும் அவருக்கு பொருந்தவே செய்கிறது

"ஒவ்வொரு கூரைக்கும் கீழே" யின் முன்னுரையில்

“சென்னை போன்ற வளர்ந்து வரும் தமிழகத்துப் பெருநகரங்களில், கூடி வாழ்தல் என்னும் பெரு நாகரிகத்தின் அடிப்படை போன்ற ஒண்டு குடித்தனக்காரர்களின் வாழ்கையை நான் வியந்து பயின்றிருக்கிறேன்”

அவருக்கு வயசாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இருக்கலாம். அந்த முறுக்கு மீசை இப்போது வெள்ளையாகிவிட்டது. கேசமும் தான்.

ஆனால் அந்த அகலமான கண்ணாடி அப்படியே. அதானால் அவர் பார்வையும் அப்படியே அகலமாய்த்தான் இருக்கும். அவர் இப்போது Active வாக எழுதுவதில்லை சுமார் 15 வருஷம் ஆகிவிட்டது என செய்தியாகச் சொல்கிறார்கள். லாபம் எனச் சொல்லலாம். பின்னே என்ன அவரை விட்டால் அவர் இன்னும் மெருகுடன் எழுதிக்கொண்டிருப்பார் அவருடன் யார் போட்டி போடுவது. அவர் தானாகத்தான், ”போதும் .. இளம் எழுத்தாளர்கள் கொஞ்சம் பயிற்சி எடுக்கட்டும் ” என எழுதுவதற்கு ரெஸ்ட் விட்டிருக்கிறார். ஒய்வில் இருக்கும் சிங்கத்தை ஆதர்சமாக பாருங்கள். சிங்கம் இப்படி நடக்க்கும், இப்படி கர்ஜிக்கும் என நாமும் கர்ஜிப்பது /நடப்பது எப்படி என பழகிப் பார்ப்போம். சிங்கத்தை சீண்டிவிட்டால் அது மீண்டும் வேட்டைக்கு கிளம்பினால்.. மற்றவர்களுக்கு ஏதாவது மிஞ்சுமா?

ஜேகே சார்... ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து கர்ஜித்து காமிங்க சார்

Tuesday 13 May 2008

ப்ரியமானவளே


ஒரு ஆங்கில உரையாடல். கட்சிக்காரர்- வக்கீலிடையே. விவாகரத்து வழக்குக்காக வக்கீலிடம் வந்த ஒருவர்,

“I want to get one of those dayvorces”
Advocate,”Well do you have any grounds?”
“Yes I have about 140 Acres”
“No; you do not understand- Do you have a case?”
“No; I do not have a case; but I have a John Deere”
“No; you really do not understand. I mean do you have any grudge?”
“Yes I have a grudge where I park my John Deere”
“No Sir. Please listen carefully; do you have a suite?”
“Yes I got it now. I have suit... And wear it to churches on Sunday”
“Aha ... Does your wife beat you up?”
“No attorney we both get up by 4.30 “
“My God. Why do you want a divorce?”
“Well, I can never have a meaningful conversation with her”

(எனது ஆதர்ச ஸ்டீபன் கோவேயின் 8TH HABIT புஸ்தகத்திலிருந்து.)

இவரது இன்னொரு பிரபலமான புஸ்தகம் THE SEVEN HABITS OF EFFECTIVE FAMILIES. இந்த புஸ்தகத்தை கல்யாணம் ஆகாத அல்லது சமீபத்தில் கல்யாணம் ஆனவர்கள் படிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.. குறைந்த பட்சம் ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை அல்லது அதுக்கு மேலே உள்ளவர்களுக்கான புஸ்தகம் அது.

புது கல்யாண மாப்பிள்ளைகள் எனது எச்சரிக்கையை மீறி படித்துவிட்டு ”நங்”கென்று மனைவிகையால் குட்டு வாங்கி, குட்டி கிண்ணம் சைசுக்கு தலையில் புடைத்துக் கொண்டால் நான் ஜாவாப்தாரியில்லை..

அந்த புஸ்தகத்தின் சாரம்சம் இதுதான்.
By Accepting people you are not condoning their weakness or agreeing with their opinion; you are simply affirming their intrinsic worth; you are acknowledging that they think or feel in a particular way. You are freeing them of the need to defend, protect and preserve themselves.”

நல்லது தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை இந்த நிலைக்கான பயிற்சி படிப்படியானது.; தினசரி வாழ்க்கையை யதார்த்தமாய் பார்த்தால் இந்த ஸ்டேஜுக்கு ஒரு வருஷத்தில் வந்துவிடலாம் எடுத்தவுடனே பாய்ந்தால் சொம்பால் அடிவாங்க வேண்டியதுதான்.

தினசரி எல்லாவற்றிற்கும் கணவனும் மனைவியும் நடுஹாலில் “ வா பார்த்துர்ரேன் இன்னிக்கு “ என்ற ரேஞ்சில் நின்றால் ரொம்ப விபரீதம்.

இந்த மாதிரி பொஸ்தகம் படித்துதான் கணவன் மனைவி உறவை ஸ்திரப்படுத்திக்கணுமா என்று கேட்பவர்களுக்கு வாங்கி படித்துவிட்டு சொல்லுங்கள். கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லையென்று சொன்னால் புத்தகப் பணத்தை நான் வாபஸ் செய்கிறேன். ஒரு கண்டிஷன் கணவன் மனைவி இரண்டு பேரும் படிச்சாகணும். இரண்டு பேருமே ஒரே மாதிரி ,”இந்த புஸ்தகம் வேஸ்ட்” என்று சொன்னால் உத்திரவாதமாய் பணம் வாபஸ்.

Sunday 11 May 2008

ஒரு வேளை


”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்”

”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது”

“என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..”

“ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில் இருக்கிறது. தற்செயலாக நடப்பது போலச் செய்யமுடியும். ஒரு ரன் அவுட்.. ஒரு காட்ச் நீங்கள் விரும்பினால் நேரடியாக போல்ட் .. எப்படி வேண்டுமானாலும் .. “

“அது முடியும்.. ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் எங்கள் அணியின் மிக முக்கிய ஆட்டக்காரன்.. தோற்க இருந்த மேட்சை வெற்றிப் பாதையில் திசை திருப்பியிருக்கிறேன்.. இன்று பகலிலேயே ஆட்டத்தை முடித்திருக்கலாம்.. வெளிச்சம் போதவில்லை. ஜஸ்ட் நான்கு ரன்கள்.. நாளை ஆட்டம் தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது”

“ அப்படியானால் உங்களால் முடியாது என்று சொல்கிறீர்களா.. உங்களுக்கு காத்திருக்கும் பரிசைப் பாருங்கள் “ கையிலிருந்த லாப் டாப்பை திறந்தான் அந்த பூனக்கண்ணன்.

“இந்த வீட்டைப் பாருங்கள்... முழுவதும் பர்னிஷ்ட்.. இது தவிர ரொக்கமாக டாலர்கள் வேறு.. யோசித்துச் சொல்லுங்கள்”

“நீங்கள் என்னை தாமதமாக அணுகியிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.. இப்போதைய சூழலில் நான் அவுட் ஆனால்.. மொத்த மைதானமும் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்.. அப்படியே தப்பித்து பெவிலியனுக்கு ஓடினாலும் எனது சொந்த ஊரில் என் வீட்டைக் குடும்பத்தோடு கொளுத்தி விடுவார்கள்.. போர்ட் விசாரணை ,போலீஸ் விசாரண என தொடரும்.. இப்போதே என்னை ஹோட்டலில் காணோம் என தேடுவார்க்ள்.. மீடியாக்களின் கண்கள் வேறு எல்லா பக்கமும்.. என்னை மன்னித்து விடுங்கள்”

“ எனக்கு சிரிப்புதான் வருகிறது.. பேட்டி என்ற பெயரில் ஒன்றை ஜோடித்து உங்களை இந்த படகு வீட்டுக்கு வரவழைத்து .. எவ்வளவு முன் ஜாக்கிரதியாக இருக்கிறோம் பார்த்தீர்களா.. இந்த டீலில் ஒரு மீடியா நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கிறது “

“நீங்கள் ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர்கள்.. இன்னொரு பேட்ஸ்மென் வேறு இருக்கிறார்.. அவரை எப்படி சரிகட்டுவது “

“அதையும் யோசித்தாகிவிட்டது.. இன்று மாலை ஆட்டம் முடியும் போது அதே ஒவரில் இன்னும் 4 பந்துகள் போடவேண்டும். நீங்கள் தான் ஸ்டிரைகிங் பேட்ஸ்மேன்.. காலையில் மேட்ச் ஆரம்பித்ததும் நேரத்தை விரயம் செய்யாமல் அவுட் ஆனீர்களானால் போதும்”

“உங்களைப் போன்ற ஆசாமிகள் முன்பெல்லாம் ஒரு நாள் போட்டியில் தான் தலையிட்டீர்கள்..”

“வியாபாரம்.. உங்களை தேடி ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கிறது.. பயன்படுதிக்கொள்ளுங்கள்.. நீங்கள் சரியெனச் சொன்னால் இன்னொரு விருந்து.. நீங்கள் ஒரு பேட்டியில் எனக்கு இந்த நடிகையை பிடிக்கும் என்று சொன்னீர்களல்லவா .. அவர் இதே படகு வீட்டில் இன்னொரு அறையில்...”

பிரம்மாஸ்த்திரம் வேலை செய்தது

“எனக்கு தருவதாக சொன்ன தொகை எனக்கு எப்போது கிடைக்கும்..”

“சபாஷ்.. இப்போதுதான் சரியாகவே பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இதோ.. பேசியதில் முக்கால் பங்கு உங்களின் ரகசிய வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்கிறேன்”

“எனது ரகசிய கணக்கு உங்களுக்கு எப்படித் தெரியும்”

“ என்ன இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீர்கள்... ம்ம்ம் .. முடிந்தது.. இப்போது நீங்கள் உங்கள் கணக்கை செக் செய்து கொள்ளலாம்”

மைதானம் நிரம்பிவழிந்தது.. நேற்று வரை ஈ அடித்தது.. ரிசல்ட் நிச்சயம் என்று தெரிந்ததால் கூட்டம் வேறு ஜாஸ்தி ஆகிவிட்டது

“எப்படி அவுட் ஆவது... பேசாமால் பேட்டை சுழற்றும் போது ஸ்டம்பில் இடித்துவிடலாமா.. அய்யோ அவ்வளவுதான்.. பட்டவர்த்தனமாய்த்தெரியும்.. காசை வேறு வாங்கியாகிவிட்டது”

கார்ட் எடுத்து நின்றான்.. எதிரே அந்த பவுலர்.. அவனும் நெர்வசாக இருகிறானோ.. இதோ ஒடி வருகிறானே.. அந்த நடிகை அவ்வளவு ஒன்றும் விஷேஷமில்லை.. “

யோசித்துக் கொண்டிருக்கும் போதே பந்து OFF STUMP க்கு கொஞ்சம் வெளியே நல்ல வேகத்தில் விழுந்து மட்டையை விசிறுவதற்குள் விக்கெட் கீப்பருக்கு பெப்பே காட்டி விட்டு தேர்ட் மேனிலிருந்து மூச்சிறைக்க ஓடி வந்தவனுக்கும் டேக்கா காட்டிவிட்டு பவுண்டிரியைத் தொட்டது.

ஏன் பவுலரும் கீப்பரும் சங்கேதாமாய் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.. ஒரு வேளை..

Saturday 10 May 2008

பாம்பு ஜாதகம்


துபாயில் இருக்கும் எனது சகா திருமதி. சித்ரா ராம்பிரசாத் சில அழகான படங்கள் அனுப்பியிருந்தார். எல்லாம் விளம்பரம் சம்பந்தமானது. முதல் படம் இங்கே

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னிடம் இருக்கும் SNAKES OF INDIA என்ற புத்தகம் ஞாபகம் வந்தது. P.J DEORAS என்பவர் எழுதியது.. NATIONAL BOOK TRUST வெளியீடு 1992 ல் சல்லிசாக 36 ரூபாய்க்கு கிடைத்ததே என்று வாங்கி வந்தேன். இதைப் படித்த பெரும்பாலன நாட்களில் ராத்திரி கனவில் “தொப்பு தொப்பு “ என்று என் மீது பாம்புகளாய் வந்து விழுந்தது. யாரோ சொன்னார்கள் என ஒரு கழுகு படத்தை படுக்கைக்கடியில் வைத்துப் பார்த்தேன். கழுகு “நங்” என்று தலையில் கொத்துவதாய் புதுசாய் கனவு வந்தது. ஒரே சமயம் கழுகையும் பாம்பையும் சமாளிப்பது கஷ்டம்.

P.J DEORAS இந்தியாவில் முதல் பாம்பு பண்ணையை 1952 ல் ஸ்தாபித்தவர்

இந்த புத்தகத்தின் ஆரம்பமே விஷப் பாம்பு விஷமில்லாப் பாம்பு என ஒரு பட்டியலுடன் …

TYPHLOPS BRAMINUS, UROPELTIS, PYTHON MOLURUS என்ற ஜூவாலஜிகல் நாமகரணமாய்ப் பாம்பு LIST இருக்கிறது.

பாம்பு கடித்தால் என்ன மந்திரம் சொன்னால் விஷம் ஏறாது என்ற சில அதிசய பக்கங்கள் இருக்கிறது. ஆனால் அதிலும் தமிழ் இல்லை. சமஸ்கிருதம் , ஹிந்தி, கன்னடம், மலையாளம். மராத்தி.. இப்படி இருக்கிறது. ரொம்ப விஷேஷம் என்னவென்றால் சில முயல்களை பாம்பைவிட்டு கடிக்க வைத்து இந்த மந்திரங்கள் வேலை செய்கிறதா என பார்த்திருக்கிறார்கள். பாவம் முயல்கள். மந்திரம் வேலை செய்யவில்லை என்ற மஹா முக்கியமான தகவலை பொடி எழுத்தில் FOOT NOTE ல் போட்டிருக்கிறார்கள்.

பாம்பு விஷத்தைப் பற்றி பல மங்களகரமான சங்கதிகள் தெரிய வருகிறது

இந்திய சினிமாக்கள் பாம்பு என பொதுமைப்படுத்திய நல்ல பாம்பின் விஷம் 12 கிராம் இருந்தால் போதும். ஆரோக்கியமான ஆசாமியை காலி செய்ய.

பலவித புரோட்டின்களின் சங்கமம் நல்ல பாம்பு விஷம். இதில் Neurotoxin என்பது பிரதான புரோட்டின். இதில் 71 அமினோ அமிலங்கள் உள்ளது. இந்த சக்திவாய்ந்த புரோட்டின் தான் ரத்தத்தில் க்லந்த உடன் எட்டே நிமிஷத்தில் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. சுமார் 50 நிமிஷத்தில் ஆள் காலி. Anti Snake Venom என்ற மருந்துகள் பாம்புக் கடி சாத்தியங்கள் ஜாஸ்தி உள்ள இடங்களில் அரசாங்க ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் இருக்கும்- திருத்துறைப்பூண்டி என்ற ஊரில் தினம் ஒரு”நல்ல பாம்பு கொத்து” கேஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வருவதைப் பார்த்திருக்கிறேன்.

நல்ல பாம்பு விஷம் 1/ 50000 பங்கு நீர்த்துப் போன நிலையிலும் ஒரு தவளைக்கு மஹா விஷம்

புளோரிடாவில் ஆராய்ச்சிக்காக ஒரு ஆசாமிக்கு நல்ல பாம்பு விஷம் தினம் கொஞ்சூண்டு “இந்தாப்பா பிரட்டுக்கு தொட்டுண்டு சாப்பிடு” என்று சில வருஷங்கள் கொடுத்துவிட்டு, அப்புறமாய் பாம்பை கொத்தவிட்டு விஷம் ஏறுகிறதா என்று பார்த்திருக்கிறார்கள். எத்தனை தடவை !!! 123 !!! தடவை. அந்த ஆசாமி அத்தனையும் தாங்கி உசிருடன் இருந்திருக்கிறார்.

பாம்பு விஷம் தினம் சாப்பிட்டதால் இம்யூனிட்டி ஜாஸ்தியாகி அவர் ஒரு மாதிரி நாகலோக வாசி அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டார். இதே மாதிரி தமிழில் “ பௌர்ணமி அலைகள்” என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கலாம்.

ஒரு கெமிஸ்டிரி பேராசிரியரிடம் இது சம்மந்தமாக கேட்டேன். பெயிண்டிங் வேலையில் ரொமப வருஷம் இருப்பவர்களுக்கு பெயிண்டில் இருக்கும் ஒரு வித அமிலம் நக இடுக்கு வழியே தினம் உடலில் கலந்து அவர்களுக்கு விஷ எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாகிவிடும் என்று சொன்னார். இனிமேல் பெயிண்டர்களிடம் சகஜாமாக பழகவும். ”சதுர அடிக்கு இத்தனை தானேப்பா “ என்று கறார் பேசி அவரை உசுப்தேத்த வேண்டாம்.


இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள ஒரு சங்கதியை ரகசியாமாக வைத்திருக்க ஆண் சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறேன்.

“பெண் நல்ல பாம்பை விட ஆண் நல்ல பாம்பே அதிக விஷம் கக்கும்”

அகஸ்மாத்தாய் இதை தெரிந்து கொண்ட பெண்மணிகள் கணவனிடம் சண்டை போடும் போது சமயம் பார்த்து Quote செய்யவும்

Tuesday 6 May 2008

இங்கேயிருந்து ... அங்கே


சடகோபன் இந்தமாதிரி ஒரு நிலவறையில் கச முசாவென ஒயர்கள் பிண்ணிய சூழலில் லாபரட்டரி வைத்திருப்பான் என ஒரு எறும்புக்குக் கூட சந்தேகம் வராது.

“ஹேமா.. இந்த தடவை பாரு.. ஹுயுமன் டிரான்சிஷன் சக்ஸஸ் ஆயிடும்.. அப்புறம் நோபெல் பரிசு நிச்சயம்.. உன் பேரும் பிரபலமாயிடும்”

ஹேமாவுக்கு நோபெல்லைவிட அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதே பிரதானமாயிருந்தது. அமெரிக்கா அனுப்புகிறேன் என்று சொல்லி சாமர்த்தியமாய் கிழவன் பாஸ்போர்ட்டை கவர்ந்து எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டான்.

“எங்கே இந்த பாஸ்கரை காணோம்” சடகோபன் நிலையில்லாமல் நடக்க ஆரம்பித்தான்

”வா பாஸ்கர்... ஆள் கிடைச்சுதா..”

“ஆமாம் புரொபசர்.. கடற்கரையில சிப்பி சேகரிச்சிண்டு.. நடந்துண்டிருந்தான்.. நைச்சியமா பேசி கூட்டிண்டு வந்திருக்கேன்’

” எங்கேடா அவன்”

“ மொத ரூம்லே உட்கார வச்சிருக்கேன்”

“ஆள் எப்படி .. விவரமெல்லாம் சொல்லிட்டியா.. சம்மதிச்சானா?”

“ஆரோக்கியமா இருக்கான். மேலோட்டமா சொன்னேன்.. சரின்னான்.. பைசா தருவேளான்னு கேட்டான்.. புரொபசர் தாராளமாய்த் தருவார்னு சொல்லியிருக்கேன்”

“வா பார்க்கலாம்”

அந்த ஆள் மத்திய வயசினன்.
“ உம் பேரென்னப்பா”
”மோகன்”
‘பாஸ்கி விவரம் சொன்னானா உனக்கு சம்மதமா”
“நீங்கள்தான் சடகோபனா”
”ஆமாம்”
“இது என்ன மாதிரி ஆராய்ச்சி.. நான் என்ன பண்ணணும்”
"உனக்கு பேக்ஸ்னா தெரியுமா”
“தெரியும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஓர் ஆவணத்தை நகலாக அனுப்ப்புவது”

“சபாஷ் .. சரியா சொன்னே. அதே மாதிரி. ஒரு மனுஷனையும் ஒரு மெஷின் வழியா அனுப்ப முடியும்னு நிரூபிக்க போறேன். அந்தமாதிரி இங்கேயிருந்து ... அங்கே டிரான்ஷிஷன் ஆகப் போற முதல் ஹியூமன் நீ தான்”

இது அவனை கொஞ்சமும் அதிர்ச்சியாக்கவில்லை.

”சரி இதற்கு முன் ஏதாவது விலங்குகளை வைத்து பரிசோதித்தாகிவிட்டதா”
“ ஓ பேஷா. ஒரு பூனை, ஒரு மூஞ்சூறு, சின்னதா ஒரு மான்குட்டி எல்லா பர்பெக்டா போச்சு .. நீ தான் முதல் மனுஷன்”

“எனக்காக ஒரு விலங்கை வைத்து செய்து காண்பிக்க முடியுமா”

“இதோ பண்றேனே.. இதோ பார்.. இது தான் அனுப்பற இடம்.. இங்க இந்த மூஞ்சூறை வைக்கிறேன் பார்” என்று சொல்லி ஒரு பெட்டியில் வைத்து மூடினான் சடகோபன்.

“அதோ அந்த் ரூமில் ஒரு குழாய் மாதிரி தெரியறது பார் . அதும் வழியா இந்த மூஞ்சூறு வந்துடும் பாரு”

“இந்த பெட்டிக்கும் குழாய்க்கும் சுரங்க வழி இருக்கிறதா”

“அப்படி இல்லைப்பா.. நீயே பாரு இந்த பெட்டியைத் தூக்கிக் காண்பிக்கிறேன்.. சுரங்கமெல்லாம் இல்லை தானே. என்ன பண்ணியிருக்கேன்னா. இந்த பொட்டியோட நான் கண்டுபிடிச்ச ஒரு விஷேஷ ஸ்கானர் அப்புறம் சக்தி வாய்ந்த ஒரு மோடம் இரண்டையும் சேர்த்திருக்கிறேன்.. ஸ்கானர் இந்த பிராணியை ஸ்கான் பண்ணி சின்ன சின்ன டிஜிட்டல் இமேஜா மாத்திடும் அப்புறம் மோடம் அதை அனலாக் சிக்னலா மாத்தி ஒரு டெலிபோன் லைன் வழியா அந்த குழாய்க்கு முன்னாடி இதே மாதிரி ஒரு மிஷினுக்கு அனுப்பிடும். அந்த மிஷின் திரும்பவும் அதை மூஞ்சூறா மாத்தி அந்த குழாய் வழியா தள்ளிவிடும்”

“புரிகிறது .. எங்கே செய்து காட்டுங்கள்”

சடகோபன்... எதேதோ சுவிட்சுகளை தட்டினான். டெலிபோன் மாதிரி ஒன்றில் டயல் செய்தான். கொஞ்ச தூரத்தில் குழாயுடன் கூடிய அந்த இன்னொரு மெஷினில் “ரூரூரூ ம்ம்ம்ம் “ என்று சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து இங்கே வைக்கப்பட்ட அந்த மூஞ்சூறு அந்த குழாய் வழியே அந்து விழுந்தது. கொஞ்ச் நேரம் அசைவில்லாமல் கிடந்த்தது. பின் எழுந்து ஒடியது.

சடகோபன் பெட்டியை திறந்து காட்டினான். “பார்த்தியா எலி இங்கெ இல்லை.. டாகுமென்டை பேக்ஸ்ஸில் அனுப்பினால் ரீசீவ் ஆகிற இடத்தில் காப்பிதான் கிடைக்கும். இங்கே ஒரிஜினாலாவே வருது பார்.. காரணம்.. பேக்ஸில் ஒரு பிரிண்டரும் இருக்கு. இங்கே ஒரு விஷேஷ டிரான்ஸ்மிஷன் சூட்ட்சுமம் வச்சிருக்கேன்”

“புரிகிறது.. எனக்கு சம்மதம்.. இந்த நவீன கருவி வழியே பயணப்பட நான் தயார்.. போய் அந்த பெட்டியில் படுத்துக் கொள்ளவா”

”இரு அவசரப படக்கூடாது.. ஒரு பெரிய சாதனையில பங்கு பெற போறாய்.. உன்னைப் பத்தி சில விஷயம் குறிப்பு எழுதி என்னோட ஆர்ரய்ச்சி குறிப்போட சேர்த்துறேன்.. உனக்கும் உலகப் புகழ் நிச்சயம்”

“நீ என்ன வேலை செய்றே”

“எழுத்து”

“புரியலைப்பா”

“நான் ஒரு இலக்கியவாதி”

“ஓ கதை கவிதை எழுதறியா .. பேஷ் பேஷ்”

“அப்படியும் சொல்லலாம். நான் சமூகத்தின் மீது தீவிர அவதானிப்பு கொண்டு அதனால் தேடல் பசி அதிகமாகி தினம் மானுடம் அருந்தும் ஒரு பிறவி”

“ஏம்பா சமீபத்தில் உனக்கு தலையில ஏதாவது அடிபட்டதா”

“ஏன் கேட்கிறீர்கள்”

”இல்ல சும்மா கேட்டு வச்சேன். சின்னதா ஒரு டெஸ்ட் எடுக்கணும் அதுக்கு தான் ஆமா இந்த மாதிரி பரிசோதனை பண்ண உன் வீட்டில் சம்மதிப்பாளா”

“வாழ்க்கையே ஒரு பரிசோதனை தானே”

“ஆமா வந்த போதே கேட்கணும்னு நினைச்சேன். அது என்ன பொஸ்தகம் கையில”

”மோ. அபராஜிதாவின் சமூக நோக்கு”

“யார் எழுதினது”

“நான் தான்”

“அபராஜிதா யாரு. பெரிய சோஷியலிஸ்டா”

“அது என் மகள்”

“என்னப்பா உன்னைப் பார்த்தா நாப்பது நாப்பத்தி அஞ்சு வயசு சொல்லலாம். உனக்கு அவ்ளவு பெரிய பொண்ணா?’

“எனது மகளுக்கு ஆறு வயது”

“சரி தான்.. ரொம்ப லாகிரி வஸ்து உபயோகிப்பியோ ?”

“ஏன் கேட்கிறீர்கள்”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். வைத்தியர். குணசீலத்தில் இருக்கார்.. முடிஞ்சா போய் பாரு.. அப்புறமா விலாசம் தரேன்... ஏம்பா பாஸ்கி.. என்னப்பா ஸ்திரமா ஒரு ஆளை அழைச்சிண்டு வான்னா.. என்னவோ.. மாதிரி பேசறானேப்பா.. ”

“புரொபசர்... அவன் எப்படி பேசினா என்ன பிசிக்கல் ஹெல்த் செக் பண்ணிப் பாருங்கோ.. ஒத்து வந்தா ஆச்சி இல்லைன்னா அனுப்பிடலாம்”

“அதுவும் சரிதான்.. இந்தாப்பா மோகன்.. இங்க வா”

சில பரிசோதனைகள் முடிந்து.
“மோகன் இப்ப போய் அந்த பெட்டியில் படுத்துக்கோ.. உலக சாதனை பண்ணப்போறே”

அவன் போய் பெட்டியில் படுத்தபின் மூஞ்சூறுக்கு செய்த மாதிரியே செய்தான்.

கொஞ்ச நேரம் வழக்கமான ரூரூம் ரூரூம் சப்தம். மோகன் அந்த குழாய் வழியே வந்தான்.

சடகோபனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை

“பாஸ்கி கை குடு கை குடு. இந்த வருஷம் நோபெல் நிச்சயம்..மோகன் மோகன் .. ரொம்ப தாங்ஸ்பா”

“ஐயா இந்த் குழாய் வழியே பயணமாகும்போது ஒரு வித பிழியப்பட்டதாய் உணர்ந்தேன். மற்றபடி வேறொன்றுமில்லை”

“அதுவா மோகன் .. இப்ப சரி பண்ணிடறேன். இப்பவே இன்னொரு தபா பண்ணலாம். சரியா”

“சரி “

“ஏய் பாஸ்கி.!! இந்தா இப்ப நீ நம்பர் டயல் பண்ணு.. நான் அந்த டியூப் டைமன்ஷன் சிஸ்டம் சரி பண்றேன்”
மோகன் அந்தப் பெட்டியில் படுத்தான்.. அதே ...

ஆனால் வழக்கமான சப்தம் வரவில்லை.

“ஏண்டா பாஸ்கி. என்னடா இது. அந்த ஆசாமியைக் கானோம் “

“புரொபசசர் .. பெட்டியை திறந்து பார்க்கவா ‘’

“ டிரான்ஸ்மிஷன் மெசேஜ் வந்ததா”

”வந்தது புரொபசர்”

“அப்ப திற”
“அய்யோ .. அந்தாளைக் காணோம்...”

என்னடா பாஸ்கி சொல்றே. ஒரு வேளை குழாய் நடுவிலே சிக்கிண்டுட்டானோ.. இல்லையேடா..” திறந்து பார்த்து விட்டு அலறினான் சடகோபன்.

“ஏண்டா பாஸ்கி போலீஸ் பிரச்சனையாடுமோடா”

”அதெல்லாம் வராது .. இவன் இங்க வந்தான்னு யாருக்குத் தெரியும்”

“ஏண்டா பாஸ்கி என்னடா இது கிரகச்சாரம்.. இரு டிஸ்பிளேயில் ஏதாவது மெசேஜ் இருக்கா பாக்கறேன்.. அட என்னடா இது.. என்னவோ நம்பர் டயல் பண்ணிருக்கே”.
“இல்லியே சரியாத்தானே பண்ணேன்”

”இல்லைடா இது அந்த குழாயோட பொறுத்தின போன் நம்பர் இல்லை.. எதுக்கும் இந்த நம்பரை லாண்ட் லைனிலிருந்து டிரை பண்ணு எங்க போறதுனு பார்க்கலாம்”

பாஸ்கி டயல் செய்தான்.

மறுமுனை “ Good Evening Pakistan Central Prisons .. Shall I turn the fax tone now” என்றது