Saturday 30 April 2011

நாரதர் சென்னை வருகை


திரிலோக சஞ்சாரியான நாரதர்.. சில தினங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்துக்கு வந்து சென்றதாக நேற்று இரவில் கனவில் வந்து சொன்னார்.

"இங்கே வந்து என்ன செய்தீர்கள்"

"வயது முதிர்ந்த ஒரு பெரியவரை சந்தித்து அவருக்கு கதை சொன்னேன்"

மிகுந்த ஆர்வத்தில், "யாரை சந்தித்தீர்கள்"

"அது தேவ ரகசியம் என்றும் அதை சொல்வதற்கில்லை"

"சரி என்ன கதை சொன்னீங்க"

"அந்த உரையாடலை அப்படியே இங்கே சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்

நான் சந்திக்கும் போது அந்த முதியவர் மிகவும் கவலையில் இருந்தார். அவருக்கு நிறைய பொறுப்புகள் என்பது எனக்கு தெரியும் ஆகையால் சமாதானம் சொன்னேன். அவருக்கு சமாதானம் உண்டாகவில்லை;நான் அவருக்கு பாரதத்தில் வரும் சம்பவம் ஒன்றையும் அதை ஒட்டிய கதை சொன்னேன்

பாரதத்திலே கிருஷ்ணனிடம் அறிவுரைகள் பெற்றவர்கள் ஏராளம்

கீதையாகவும், எச்சரிக்கையாகவும், பதவிசாகவும், மறைமுக எச்சரிக்கையாகவும் ஏராளம் ஏராளம்

ஆனால் கிருஷ்ணனே ஆலோசனை கேட்கும் தருணம் உண்டு.. அதை அம்புப் படுக்கையில் இருந்தவாறு பீஷ்மர் தர்மனுக்கு சொல்லும் அறிவுரைகளில் சொல்கிறார்

“ போற்றுதலுக்குரிய பாட்டனாரே. ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்ட உறவினர்களைக் கொண்ட அரசன் அவர்களைக் கையாள்வது எப்படி”

“என் பிரியத்துக்குரிய யுதிஷ்டிரா. இதற்கு நான் கிருஷ்ணன் ஒரு சமயம் நாரதரிடம் பெற்ற உபதேசத்தை மேற்கோளாக காட்டினால் உனக்கு எளிதில் புரிந்து விடும்”

கிருஷ்ணர் நாரதரிடம் கேட்கிறார்,

“ நாரதரே. நான் ஒரு பரந்த தேசத்தினை ஆள்கிறேன் என்று வெளிப்பார்வைக்கு சொல்லலாம். ஆனால் நான் என் உறவுகளின் அடிமை போல உணர்கிறேன். அவர்களின் சுடு சொற்களும், குத்தலும் குதர்க்கமும் நிறைந்த பேச்சுகளும் என்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றன. அவர்களில் தங்கள் அழகினால் கர்வம் கொண்டவர்களாகவும், சிலர் தங்கள் பதவிகளால் கர்வம் கொண்டவர்களாகவும்
இருக்கிறார்கள். மூர்கமாகவும் நடக்கிறார்கள் என்னை ஆலோசியாமல் அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பின்னர் நான் பழி சுமக்கிறேன்”

“கேசவா, நாராயணா , மதுசூதனா... பரந்த ராஜ்ஜியத்தில் சில பொறுப்புகளை நீ அவர்களுக்கு தந்திருக்கலாம். அவர்களின் சுடு சொற்களை நீ நல்ல வார்த்தைகள்மூலமே எதிர் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிப்பது நீ கக்கிய உணவை நீயே சாப்பிடுவது போல். அவர்களை மென்மையானதும் அதே சமயம் இரும்பைவிட உறுதியானதுமான ஒரு சக்தி ஆயுதம் கொண்டு கையாளவேண்டும்”

“அதென்ன ஆயுதம் நாரதா”

”அவர்களின் சக்திக்கு தக்கவாறு உணவு, தேவையான அளவே கருணை, நாம் எப்போதும் பொறுமையாக இருப்பது. மிக முக்கியமாக தகுதிக் கேற்ற அளவே அவர்களை மரியாதையாக நடத்துவது இது தான் நான் சொன்ன ஆயுதம்”

இந்த கிருஷ்ண நாரத உரையாடலை பீஷ்மர் தர்மனின் கேள்விக்கு பதிலாக சொல்கிறார்

இது தான் நான் அந்த முதியவரிடம் சொன்ன கதை"

”இதற்கு அந்த முதியவர் என்ன பதில் சொன்னார்”

”முதியவர் ஏதும் பதில் சொல்லவில்லை அவர் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார் தன் பெயர் வடிவேலு எனச் சொன்னார். அவர் தான் எனக்கு பதில் சொன்னார்”

"என்ன பதில்"

ஏம் பெரிசு இதச் சொல்லத்தான் வந்தியா நீ லேட் பிக் அப்; இதான் ஊருக்கே தெரிஞ்ச சங்கதியாச்சே" எனச் சொன்னார்

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 29 ஏப்ரல் 2011

கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டங்களை தவறவிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் அறிவிப்பு பார்க்கும் போதும் நினைத்துக் கொள்வேன். ஆனால் தவற விட்டுவிடுவேன். இந்த முறை ஒரு சங்கல்பம் செய்து கொண்டதால் தவறாமல் கலந்து கொள்ள முடிந்தது

கூட்டத்தின் பேச்சாளர் திரு ரகோத்தமன் அவர்கள் (சி.பி.ஐ ல் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி‍; இராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை புலன் விசாரணை அதிகாரி)

பேச எடுத்துக் கொண்ட டாபிக் : 2 ஜி ஸ்பெக்ட்ரம் + சிபிஐ எனவெல்லாம் இருந்ததால் தான் சங்கல்பம் செய்து கொண்டேன்.

1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி நடந்த இந்திரா காந்தி கைது சம்பவத்தை சுவையாக விவரித்தார்

ஆனால் சில தகவல் சறுக்கல்களைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது

இந்திரா காந்தியை கைது செய்ய சென்ற போது என். கே சிங் டி.ஐ.ஜி அந்தஸ்த்தில் இருந்தத்தாக சொன்னார். மன்னிக்க வேண்டும் அப்போது என்.கே சிங் எஸ்.பி அந்தஸ்த்தில் இருந்தார்.

அதே போல் இந்திரா அப்போது சப்தர்ஜங் சாலையில் இருந்த வீட்டில் இருந்தார் எனவும் திரு இரகோத்தமன் சொன்னார் ஆனால் அப்போது இந்திரா வசித்த முகவரி நம்பர் 12 வெலிங்க்டன் கிரசன்ட். (தற்போது அந்த முகவரியில் எம்.எஸ் கில் வசிக்கிறார் என நினைக்கின்றேன்)

இந்திராவை கிங்க்ஸ் வே கேம்பில் வைத்திருந்தது , பின்னர் மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் செய்தது, பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சொதப்பியது அதனால் மாஜிஸ்திரேட் இந்திராவை விடுவித்தது எல்லாம் சுவையாகச் சொன்னார்

சொல்லியிருக்கலாம் என நான் நினைத்தது :

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் என். கே சிங் 29 ஜனவர் 1980 அன்று ஹரியான‌ போலிசால் கைது செய்யப்பட்டது ; அவர் லீவில் சென்றது; பின்னர் 31‍ ஜனவரி 1980 அன்று என்.கே சிங் விசாரணைக்காக கூர்கான் கொண்டு செல்லப்ப்பட்டது இவை எல்லாம் சொல்லியிருக்கலாம்

சிபிஐ முன்பு உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டிலும் பின்னர் அது பிரதமர் அலுவலக கட்டுப்பாடிலும் இந்திரா‍ காந்தி ‍-‍‍ மொரார்ஜி - இந்திரா காலங்களில் மாறி மாறி இயங்கியதை சொன்னார்

இந்த சந்தர்ப்பத்தில் ஞானி ,'இப்ப சிபிஐ உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் தானே இருக்கு என்றார்" இதற்கு இரகோத்தமன் இல்லை இப்போது சிபிஐ பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கு என்றார்.

இங்கேயும் ஒரு விளக்கம் சொல்ல கடமையாகிறது:

சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது. இந்த அமைச்சராக த்ற்போது பிரதமர் இருக்கிறார். ஆகவே சிபிஐ பிரதமர் அலுவலகக கட்டுப்பாட்டில் வருவதாக சொல்லியிருக்கலாம்

கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவதாக ரகோத்தமன் தெரிவித்தார்.

இதற்கு கிரிமினினல் ப்ரொசிஜர் கோட் செக் ஷன் 24 ஐ மேற்கோள் காட்டினார்

சிஆர்பிசி என சுருக்கமாக அழைக்கப்படும் கிரிமினல் ப்ரொசிஜர் கோட் அதே செக் ஷன் தான் ஆனால் அரசாங்கம் தான் பப்ளிக் ப்ராசிக்யூட்டரை நியமிக்கும் கோர்ட் அல்ல. புலன் விசாரணை எப்படி அதி அற்புதமாக நடந்து சாட்சிகளும்,வாக்குமூலமும் புலன் விசாரணை அமைப்புகள் செய்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு அந்த வழ்க்கினை நீதி மன்றத்தில் அந்த அமைப்பின் சார்பில் நடத்த வேண்டியவர் இந்த பப்ளிக் ப்ராசிக்யூட்டர் தான். இவர் சொதப்பினால் / சறுக்கினால் ... நாங்கள் என்ன செய்ய இயலும் என
இரகோத்தமன் கேட்டது நியாயம் தான்

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விசாரிக்கையில் அவரையே அவருக்கு எதிரான சாட்சியாக நிர்பந்திக்க இயலாது என்பதை அழகாக சில சம்பவங்களுடன் விளக்கினார். இந்திய அரசமைபுச் சட்டம் ( Constitution of India) ஷரத்து 20(3)ன் கீழ் இது அடிப்படை உரிமை. No person accused of any offence shall be compelled to be witness against himslef.

இந்த உரிமை குறித்து உச்ச் நீதி மன்றம் 1961 ம் ஆண்டு State of Bombay vs Kathi Khalu Oghad எனும் வழ்க்கில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்களை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த தீர்ப்பில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்

1. குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலிஸ் கஸ்டடியில் பெறப்படும் வாக்குமூலம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

2. குற்றம் சாட்டப்பட்டவரை புலன் விசாரணை அதிகாரி விசாரிப்பதும் அதற்காக அவரிடம் ஸ்டேட்மெண்ட் பெறுவதும் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

3. to be witness என்பது ஆதாரம் வழங்குவதற்கு ஈடல்ல

4. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தினை நிரூபிக்க அவரிடம் பெறப்படும் கைரேகை அல்லது கையொப்பம் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அவரை நிர்பந்தித்ததாக ஆகாது

5 அடிப்படை உரிமையான இந்த ஷரத்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே பொருந்தும் அதாவது அவரிடம் விசாரிக்கும் போது அவர் குற்றம் சாட்டப்ப்ட்ட்வராக இருக்க வேண்டும்

இரகோத்தமன் பேசி முடித்ததும் கேள்வி கேட்கலாம் என அறிவித்து பலர் கேள்வி கேட்டு என் கைக்கு மைக் வந்த போது நான்

கேட்டது, " சாதிக் பாட்சா , இராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் அவருக்கு இந்த 2 ஜி வழக்கில் தொடர்பு இருக்கலாம் என

கருதுவதால் அவரிடம் முதல் கட்டமாக விசாரணையும் நடத்தப்பட்டது ஆனால் அவர் ஏன் கைது செய்யப் படவில்லை"

இரகோத்தமன் ,'குட் கொஸ்டின் ; நான் இந்த வழக்கை விசாரித்து இருந்தால் நிச்சயம் அவரைத்தான் கைது செய்து இருப்பேன் "

நிகழ்ச்சி முடிந்து விடை பெறும் போது அருகில் வந்த இரகோத்தமன் ,"தட் வாஸ் அ குட் கொஸ்டின்" என சொல்லி கை குலுக்கி சென்றார்

இட் வாஸ் அ குட் ப்ரொக்கிராம்.. கிழக்குக்கு பாராட்டுகள்

Tuesday 26 April 2011

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா


தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

ஒன்றை நன்றாக கவனிக்க முடிகிறது. இந்திய அளவில் பேசப்படும் விஷயங்கள் சோஷியல் நெட்வொர்க்கில் நன்றாக அலசப்படுகின்றன.

டுவிட்டர், பேஸ் புக், லிங்ன்ட் இன். ஆனால் அவற்றில் எல்லாம் உணர்ச்சி மிதப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கின்றேன். காரணம் அந்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போதெல்லாம் ஊடகங்களில் சுடச் சுடச் கிடைக்கின்றன. ஊடக செய்திகள் சுட்டிக் காட்டும் தன்மையைத் தாண்டி சுவாரசியம் சேர்ப்பதற்காக விவாதம் எனும் பெயரில் செய்தியினை விரிவாக சொல்கிறோம் எனும் பெயரில் ஒரு கண்ணோட்டத்தினை ஓர் எண்ண அலையினை மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கின்றார்கள்

உதாரணத்திற்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை; தொடர்புடைய அமைச்சகத்தில் பொறுப்பு வகித்த அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையால் கைது, தொடர்ச்சியா விசாரணை குற்றப் பத்திரிக்கை தாக்கல்.. இன்னொரு வழக்கில் மற்றுமொரு புள்ளி கைது..

இவர் கைது ஆவாரா .. இத்தனை கோடி ரூபாய் என்ன ஆனது. சம்பவங்களை யூகிக்க இயலாத கோணத்தில் வீடியோவாக காண்பித்த வண்ணம் உள்ளார்கள்;

செய்தியில் வீடியோவில் காட்டப்படும் எல்லோரும் குற்றம் இழைத்தே இருப்பார்கள். இவர்களுக்கு என்ன விசாரணை வேண்டியிருக்கிறது. உடனே தூக்கில் போடாமால் என்கிற அளவில் கூட சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் பரவலாகவும் உணர்வு பூர்வ்மாகவும் ஆதங்கங்கள் தென்படுகின்றன‌

ஒருவர் ரிமாண்டில் கைதாகி இருக்கும் போதே அல்லது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் எண்ணம் கொண்டு அவர் தண்டனை அனுபவித்து வருவதாகவும் எண்ணம் கொண்டு அதனை ஒட்டியவாறே சிந்தனை துளிகள் இந்த தளங்களில் பார்க்க முடிகிறது. இதன் நீட்சியை யோசித்துப் பார்க்கிறேன். செய்திகளின் அதீத
தன்மையால் நம் மனதில் ஒருவகையாக நீதிபதி பொறுப்பு ஏற்றுக் கொண்டு குற்றவாளி முத்திரை குத்திவிடுகிறோம்.

ஆனால் நிதர்சனத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய நீதி பரிபாலன முறைகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் முறையீடு, மேல் முறையீடு, மறு முறையீடு என நிவாரணம் தேடும் போதும், ஏற்கனவே மனதில் வடிவம் பெற்று விட்ட தண்டனை பிம்பம் கலைகிறது


இப்போதும் புலன் விசாரணை அமைப்புகள் அதன் அதிகாரிகளின் செயல் திறன் மீது , நேர்மை மீது, நீதி அமைப்பின் செயல் திறன் மீது அதன் நேர்மை மீது, அவசர அவசரமாக களங்கம் கற்பிக்கும் மன நிலைக்கு உந்தப்பட்டு மீண்டும் டுவிட்டர், பேஸ் புக் லிங்ன்ட் இன் எங்கும் அவதூறு மழை.

பிம்பத்தினை வரையும் போது என்ன அவசரமோ அதே அவசரம் அது நிதர்சனத்தில் மாற்றம் காணும் போது.. மீண்டும் திருத்தி எழுதும் போது

இந்திய நீதி மன்ற நடை முறைகளில் உள்ள படிக்கட்டை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு லட்சம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருந்தாலும். இந்தப் படிக்கட்டு தவிர்க்க இயலாது

வழக்கு பதிவு செய்யப்படுதல் ‍ இது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்.. குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேத் நீதி மன்றம் அல்லது மாவட்ட அந்தஸ்தில் உள்ள நீதி மன்றம்

வழக்கினை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல்

குற்றப்பத்திரிக்கையினை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கி அவர் தரப்பினை கேட்டல்

வழக்கு விசாரணை.. வாதப் பிரதிவாதங்கள்

வழக்கின் தீர்ப்பு

இந்த தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் முறையீடு

உயர்நீதி மன்றத்தில் வழக்கு முறையீட்டு அளவில் விசாரண‌

உயர் நீதி மன்ற தீர்ப்பு

உயர் நீதி மன்றத்திலேயே அதிக நீதிபதிகள் கொண்ட் பெஞ்சிடம் மேல் முறையீடு

அந்த பெஞ் தீர்ப்பு

அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு

இதில் எல்லாப் படிகளும் குற்றம் சாட்டும் புலனாய்வு அமைப்புக்கும் , குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொது. இரு தரப்புக்கும் சம் வாய்ப்பு

செய்தி ஊடகங்கள் மக்கள் மனதுக்குள் தனது செய்தி வழங்கும் தன்மையால் ஊடுருவி ஒருவருக்கு குற்றவாளி அந்தஸ்த்தை வழங்கி ஒரு பிம்பம் வரையப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தப் படிக்கட்டுகளில் ஏறும் போது அந்த பிம்பம் உடைகிறது. அந்த வ்ழக்கினை விசாரித்த புலன் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவ்ரி ஏவலாள் ஆகிவிட்டது போலவும் புது பிம்பம் உருவாகிறது.

அந்த அமைப்பின் நேர்மை எள்ளி நகையாடப்படுகிறது

இதெல்லாம் நம்மை நாமே பலவீனமாக்கிக் கொள்வதல்லாது வேறொன்றுமில்லை

குற்றம் சாட்டப்பட்டுள்ள எவருக்கும் ஆதரவு தெரிவிப்பதல்ல நோக்கம்

ஆனால் குற்றம் சாட்டப்படும் நிலையிலிருந்து குற்றம் நிரூபணம் ஆகும் வரையிலான பயணம் நெடும் பயணம். இதனை புரிந்து

கொள்ளும்

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

Sunday 24 April 2011

சக பயணி 4

சக பயணி 4


"சார் ! வாழ்க்கையில் எல்லோரும் பல பொறுப்புகளை சுமந்திருக்கின்றோம். அலுவலகத்தில் சிப்பந்தியாக, குடும்பத்தில் உறவு முறையாக, நட்புகளுடன் தோழமையாக, தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களுடன் சக மனிதனாக இப்படி பல; இவை என்னவோ ஒரு கல்லூரி அல்லது பள்ளிப் படிப்பில் நமக்கு உண்டான பல பாடத்திட்டங்கள் போல ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சங்கதிகள் போல; ஆனால் இவை எல்லாம் ஒரே மனிதனால் நிறைவேற்றப்படும் கடமைகள் எனும் அடிப்படையில் ஒரு அடிப்படை சிந்தாந்தம் இதனை
நிர்வகிக்கும். அது வெளியில் புலப்படாது"

"இல்லையே அலுவலக வாழ்க்கை வேறு; வீட்டு வாழ்க்கை வேறு"

" நீங்கள் நான் சொல்ல வந்த கருத்தை சற்று ஆழமாக கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்; ஒருவன் பொது வாழ்வில் ஒரு மாதிரியும் தனி வாழ்வில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒன்று தான் அவரது இயல்பாகவும் மற்றொன்று இயல்புக்கு முரண்பட்டதாகவும் இருக்குமல்லவா"

"ஆமாம் நிச்சயமாக"

"அந்த இயல்பை வழி நடத்திச் செல்லும் சித்தாந்தம் அல்லது அவரது கேரக்டர் என ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் அது இயல்போடு இயைந்ததாகவும் இயல்போடு இசைய மறுப்பதாகவும் இரட்டை நிலைப்பாடு கொண்டதாகவும் இருக்க இயலுமா"

"இன்னும் சற்று விளக்கமக சொல்ல முடியுமானால் பயனுள்ளதாக அமையும்"

"Howard Gardner எழுதிய Unschooled Mind எனும் நூலில் சொல்வதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்: ஒருவன் தனக்கு எப்படி பயிற்சியினை அமைத்துக் கொள்கிறானோ அப்படியே தனது செய்கைகளில் நடத்தையில் சிறப்பினை வெளிப்படுத்த முடிகிறது. அவன் போதிக்கப்பட்ட வழிகளில் தனது செய்கையை செலுத்துகிறான்.. சூழல் மாறும் போது அவனது செய்கைகள்
தடுமாறுவது மட்டுமல்ல அவை முழுமை பெறாமலும் போகின்றன. இவ்வகைப் பயிற்சி Compartmentalisation என அழைக்கப்படுகிறது.. அதாவது ஒரு இரயில் பெட்டி போல மனதிற்குள் அடுக்குகளை சமைத்துக் கொள்வது. ஒரு பெட்டி வசதியானதாக ஒரு பெட்டி சாதாரண வசதிகள் கொண்டதாக சமைக்கப்பட்டது போல நமக்குள்ள பொறுப்புகளை வழி நடத்தும் சித்தாந்தங்களை ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒன்றாக சமைத்துக் கொள்வது; ஆனால் இப்படி சமைத்துக் கொள்வதில் சமரசங்கள் தான் இருக்குமே அல்லாது அவை நிரந்தரமானது
அல்ல. ஒரு பொறுப்பு மற்றொன்றை எதிர் கொள்ள நிகழும் தருணத்தில் எந்தப் பொறுப்பு முக்கியமானது என கேள்வி கேட்டு பதில் கிடைக்க இயலாமால் இரண்டும் சமரசம் செய்யும் போராட்டம் ஆனால் காந்தியாரிடம் இது போன்ற தருணங்களில் சங்கடங்களே இருந்ததில்லை. காரணம் அவர் இப்படி அடுக்குகள் சமைத்துக் கொள்வதில் அடிப்படையாக ஒரே சித்தாந்தத்தை முன் வைத்தார். Moral tenets applied to men in every situation என்பது அவரது சிந்தாந்தம். அதில் ஒரு போது அவர் சமரசம் செய்து கொண்டது இல்லை அவர் எடுத்துக் கொண்டு நடத்திய வழக்கில் அவர் ஆதரித்த கட்சிக்காரர் பிழையானவர் எனத் தெரிந்த உடன் அவர் இந்த அடிப்படை சித்தாந்தத்தின் வழி நின்று பேசினார்.. அவருடைய சுயசரிதையிலிருந்தே இதை சொல்கிறேன்

I discovered that my client had deceived me; I saw him completely breakdown in the witness box; So without any argument I asked the magistrate to dismiss the case; The opposing counsel was astonished and the magistrate was pleased. I rebuked my client for bringing a false
case to me: He knew that I never accepted false case.. At any rate my conduct did not affect my practice for the worse, indeed it made my work easier"

" மிக்க நன்றி.. காந்தியாரின் மதப் பற்று கடவுள் நம்பிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்"

"நம்மில் பலரும் கருதுவதைப் போல், கடவுள் நம்பிக்கை கொண்டவரல்ல காந்தி "

(பயணம் தொடரும்)

Monday 18 April 2011

விஜயகாந்துக்கு அம்மா சொன்ன கதை


(இந்தக் கற்பனை உரையாடலால் ஆட்டோவோ வக்கீல் நோட்டிசோ வராது என நினைக்கின்றேன்)

விஜயகாந்த் அம்மா சந்திப்பு இடம் அம்மா வீடு தான்

"என்ன விஜயகாந்த் என்ன இந்தப் பக்கம்"

"தேர்தல் முடிந்து கூட்டணித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது மரபாச்சே அதான் வந்தேன்"

"ஓ அப்படியா"

" அம்மா இந்த தேர்தலில் வேலை செய்த தொண்டர்களின் எண்ணிக்கைxxx அதில் ஆண்கள் zzzz பெண்கள் zzzz

"நான் உங்களுக்கு ஒரு கூட்டணிக் கதை சொல்றேன்; கவனமா கேளுங்க‌


காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது. காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக்
கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.

”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார். ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லப்க்கென கடிக்கக் கூடாது”

எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை.

எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.

எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.

எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும்
அங்கிருந்து விலகின.

பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது

“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு
ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”

அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து.

பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர். நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.

ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக்
காத்தாய். நான் இனி உன் நண்பன். வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.

”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு
தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது


Saturday 16 April 2011

வைகோ வுக்கு கலைஞர் சொன்ன கதை


எஸ்.வி.சேகர் கலைஞர் குதிரை பதிவு ரேஸ் குதிரை மாதிரி ஆகிவிட்டது. தமிழ் இன்டெலி எனும் வலைத் திரட்டி தளத்தில் கொடுத்துப் பாருங்கள் என என் நண்பர் சொன்ன யோசனை வேறு அதன் மவுசைக் கூட்டி விட்டது. பதிவின் லிங்கை காப்பி பேஸ்ட் தான் செய்தேன். ஒரே நாளில் அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது. இன்டெலியிலிருந்து ஒரு மெயில் வேறு வந்தது. இன்டெலி
உபயோகிப்போர் ஒன்று கூடி அதனை பாப்புலர் பதிவு என செய்துவிட்டதாக. அங்கே ஆரம்பித்தது இன்னும் வேகம். அந்தப் பதிவு டாப் டென் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு ஒரே இரவில் வந்துவிட்டது. கூகிள் அனலிடிக்ஸ் ஹிட் எண்ணிக்கை தருகிற நம்பரைக் கவனித்தால் எஸ்.வி சேகரின் மகத்துவம் புரிந்தது.

இந்தப் பதிவு இப்படி ஈகோ ட்ரிப் அடிபதற்கல்ல. இந்தப் பதிவை நினைத்துக் கொண்டே உறங்கப் போனேன். கனவில் வைகோ வந்தார்.

உங்களுக்கு நம்புவதற்கு சிரமமாகத் தான் இருக்கும். என் போன்ற ஆசாமிகள் கனவில் அந்த கால டி. ஆர் இராஜகுமாரி தேவிகா வருவது தான் நியதி வாஸ்தவமும் கூட. திரிஷா. ஷ்ரேயா கனவில் வருவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூட பலிக்க்கவில்லை.

அதிர்ஷ்டமாய் வைகோ வந்தார்

"ஏங்க நான் எப்பவுமே புலிக்கு எதிரா பேசற ஆசாமி.. என் கிட்ட சண்டை புடிக்க வந்தீங்களா"

"அது இல்லீங்க.. எஸ்.வி.சேகர் கலைஞருக்கு குதிரைக் கதை சொன்னதாவும் பதிலுக்கு அவர் ஒரு குதிரைக் கதை சொன்னதாகவும் எழுதிருந்தீங்களே"

"அது கற்பனைங்க.."

"நல்லது நான் போனவாரம் தேர்தலுக்கு முன்னே கலைஞருக்கு போன் செய்தேன். அப்ப எனக்கு ஒரு குட்டிக் கதை சொன்னாரு"

"என்னது குட்டிக் கதையா”

"சின்னக் கதைங்க"

"சின்னக் கதையா"

"அதாங்க பாரபிள்னு ஆங்கிலத்துல சொல்வாங்களே"

"சொல்லுங்க சொல்லுங்க"

"போன் செய்தனா;; அவரே போனை எடுத்தார்

என்ன தம்பி நலமா"

"எங்கண்ணே உங்களுக்குத் தெரியாதா"

"ஒரு கதை சொல்கிறேன் கேள்" அப்படின்னார்

"எனக்கு கொஞ்சம் பதை பதைப்பு. ஏதானும் சினிமாவுக்கு எழுதும் கதையை போன்ல சொல்லப் போறாரா. ப்ரிபெய்டு சிம்.. பாலன்ஸ் வேற கம்மியா இருந்தது. இருந்த காசெல்லாம் அம்மா வீட்டுக்கு ஆட்டோவிலே போய் வந்தே கரஞ்சு போச்சு அதான்"

"ஓக்கே ஒக்கே புரிஞ்சுது ..நீங்க மேட்டருக்கு வாங்க'

"அவர் சொன்ன கதை இது தான். அப்படியே சொல்றேன் நீங்க உங்க வலையிலே போடணும்"

கலைஞர் வைகோவிடம் சொன்ன கதை

வளம் பெருகிய நாடு

ஆனால் அந்த நாட்டின் அரசி கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு தன்னை விமர்சனம் செய்பவரைக் கண்டால் ஆகாது.

உடனே கடும் சிறைத் தண்டனைதான். அப்படியாக ஒரு நாடக ஆசிரியரை தன்னை விமர்சனம் செய்தார் என சிறையில் தள்ளினாள்.

அரசியின் காவலர்கள் அந்த நா.ஆ வைக் கைது செய்யும் போது அவர் செய்த சூளுரைகள் நாடெங்கும் பேசப்பட்டன.

சிறையில் நாடக ஆசிரியர் சும்மா இருக்கவில்லை. அங்கே ஊர்ந்து கொண்டிருந்த ஓர் எறும்பை நட்பாக்கிக் கொண்டார். தனது விடா முயற்சியால் தொடர் முயற்சியால் அந்த எறும்புக்கு பேசக் கற்றுக் கொடுத்து விட்டார். நாடக ஆசிரியரின் எழுச்சி முழக்கங்களையும், நாடக வசனங்களையும் அந்த எறும்பு நன்கு பேசப் பழகிவிட்டது. அவரது இந்த அரிய முயற்சி சிறைக் காவலர்களின் கவனத்தில் வராமலே நடந்தது.. ஆண்டுகள் உருண்டோடின. நா.ஆ விடுதலை ஆகும் நாளும் நெருங்கியது. அப்போது அந்த எறும்பு நா.ஆ அளவுக்கே பேச, முழங்க தயாராகி இருந்தது.

நாடக ஆசிரியரின் நம்பிக்கை இப்போது பன்மடங்கு பெருகியிருந்தது..

தனது கொள்கை முழக்கங்களை ஒரு எறும்பைக் கொண்டு நாடெங்கும் பரப்பிட நல்ல வாய்ப்பு கிட்டியிருப்பதாக நினைத்தார். ஓர் எறும்பு பேசுகிறது அதுவே பெரும் ஆச்சரியம். அதுவும் தூய தமிழில் கொள்கை முழக்கம் செய்கிறது. தனது முழக்கங்களுக்கு சரியான ஆதரவு கிட்டும் என அவருக்கு திண்ணமாக தோன்றியது..

விடுதலை நாள் வந்தது.. சிறைக் கதவுகள் திறந்தன ... நா.ஆ வெளியே வந்தார்.. பல ஆண்டுகள் கழித்து வெளி உலகம் காணும் உவகை. அதுவுமின்றி தன்னிடம் இருக்கும் கருத்துக்கள்.. அதை முழங்கும் எறும்பு..

கால்களை அழுந்தப் பதிந்து நடந்தார்.. களைப்பு இருந்தாலும் உற்சாகம் குறையவில்லை.. ஆனால் பசித்தது.

ஆ அதோ ஓர் உணவு விடுதி.. என்னவோ பெயர் பலகையில் காணப்படுகிறதே.. ஜெயம்மா உணவு விடுதி..இங்கேயே பசியாறலாம்..

நா.ஆ உள்ளெ நுழைந்தார்.

அங்கே ஒரு பணியாள் வந்த அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்

இவரிடம் வந்து என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பதில் ஒன்றைக் கொடப்பா என்றார் நா.ஆ என்னது இருபத்தி ஒன்றா என்றான் பணியாள்.. இருபத்தி ஒன்றல்ல அப்பா இருப்பதில் ஏதாவது ஒன்று எனச் சொன்னேன் என்றார் நா.ஆ

அவனும் சென்றான்.. நா.ஆ சிந்தித்தார். இந்த உணவு விடுதியில் ஆட்கள் நிறைய உள்ளனர். இங்கேயே பேசும் எறும்பைக் காட்டி அதனை பேச வைத்து மக்களை தன் பக்கம் இழுத்தால் என்ன.. இது தான் நல்ல வாய்ப்பு அப்படியே செய்யலாம் என முடிவும் செய்தார்

பத்திரமாக வைத்திருந்த மேசை மேல் அந்த அதியசய எறும்பை எடுத்து வைத்தார் நா.ஆ

கையில் ஒரு தட்டுடன் வந்தான் பணியாள்.

நா.ஆ அவனிடம் ஆர்வமாக அந்த எறும்பைக் காட்டி இதோ பார்த்தாயா எனக் கேட்டார்

அவன் பதறிப் போய் அந்த எறும்பை சடேரென தன் கையால் அடித்து நசுக்கிக் கொன்று போட்டான்.. என்னை மன்னித்து விடுங்கள்

அய்யா உணவு அருந்தும் இடத்தே எறும்பு வந்தது எங்கள் தவறு தான் எனவும் சொன்னான்

Thursday 14 April 2011

எஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை


சமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர்.

அப்போது நடந்த உரையாடல் ( கற்பனை உரையாடல் சாமி )

"ஏம்பா சேகர் இதென்ன குதிரைப் படம். உள்குத்து ஏதும் இருக்கா

"இல்லீங்க ஆனா ஒரு குதிரைக் கதை சொல்ல நீங்க அனுமதிக்கனும்"

"தாராளமா சொல்லுப்பா"

சேகர் சொன்ன குதிரைக் கதை :

“என்னப்பா என்னிக்கு உன்னோட மரண தண்டனையை நிறைவேத்தறாங்க”

”தண்டனையா.. அடப் போங்க பெரியவரே.. இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்கு”

“நீ என்னப்பா சொல்றே”

“ இப்ப வேண்டாம். சாப்பிட எல்லாரையும் ஒண்ணா உக்கார வைப்பாங்களே அப்ப
விவரமா சொல்றேன்”

நடந்தது இது தான். ஓர் இளைஞன். செய்யாத குற்றத்திற்கு சிறைப்பட்டான். மரண
தண்டனை விதித்து விட்டனர். தண்டனை நிறைவேற்றம் செய்ய நாள் குறிக்கும்
நடைமுறைக்காக அவனை அரசர் முன் அழைத்துப் போனார்கள். அங்கிருந்து திரும்பு வரும் போது எதிர்ப்பட்ட சக் கைதியிடம் அவன் செய்த உரையாடல் தான் அது.

“சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்னு சொன்னியே என்னனு சொல்லு”

“ அது வந்துங்க. நம்ம மன்னருக்கு குதிரைங்க வளர்க்கறதுல ஆசைனு
உங்களுக்குத் தெரியுமே”

“ அதான் ஊருக்கே தெரியுமே. நம்ம கிட்ட வாங்கற வரிக்காசெல்லாம் குதிரைக்கே போகுது”

“அங்கதான் இருக்கு விஷயம்.. நீ கடைசியா ஏதாவது சொல்ல விரும்பறியானு ராசா கேட்டாரு”

“ அட அப்புறம்”

“ஆமா ராசா ஆனா அதை உங்க காதுல தான் சொல்லுவேன்னு சொன்னேன்”

“ரொம்பத் தைரியம் தான் உனக்கு. என்ன ஆச்சு ராசா ஒத்துகிட்டாரா இல்லியா”

“ கொஞ்சம் தயங்கினாரு. அப்புறம் சரின்னாரு”

“ சீக்கிரம் சொல்லுப்பா”

“ நான் ராசா இருந்த மேடைக்கு மெதுவா ஏறிப்போனேன். மண்டி போட்டுகிட்டேன். ராசாவும் மெதுவா கொஞ்சம் குனிஞ்சாரு. அவரு காதுல சொன்னேன்.. அப்புறம் நிமிர்ந்து கூட்டத்தைப் பார்த்து இவனின் மரண தண்டனை இன்னும் ஒரு மாசம் தள்ளி வைக்கிறேன் அப்படின்னாரு “

“ அட அப்படி என்னதான் சொன்னே”

“ ராசா எனக்கு குதிரைங்களை பறக்கிற சக்தி உள்ளதா மாத்திடற மந்திரம்
தெரியும்னேன். மொதல்ல நம்பல. அப்புறம் நான் சொன்னேன். என்னை உங்க
குதிரைங்க கிட்ட விடுங்க நான் மெதுவா மந்திரம் சொல்லி அதுங்க பறக்கிற
மாதிரி செஞ்சிடுவேன்னேன். ஒரு மாசம் அந்த மந்திரத்தை குதிரைங்க கேட்டா
நிச்சயம் பறந்துரும்னேன்”

“அடப்பாவி அந்த மாதிரி ஒரு மந்திரம் உனக்குத் தெரியும்னு சொல்லவேயில்லையே”

”எனக்கு அந்த மாதிரி ஒரு மந்திரம் தெரியாது ஆனா பாருங்க- இப்ப ஒரு மாசம்
தண்டனை தள்ளிப் போயிருக்கு. இன்னும் ஒரு மாசம் உயிரோட இருக்கப் போறேன்.

இந்த ஒரு மாசத்துல ராசா மனடசு மாறலாம். தண்டனை குறையலாம். இல்லே வேற ராசா வரலாம். ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம் யாருக்குத் தெரியும்”

"தம்பி சேகர் கதை நல்லாத்தான் இருக்கு நானும் ஒரு குதிரைக் கதை சொல்லவா"

"அய்யா அதைக் கேட்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. சொல்லுங்க சொல்லுங்க‌

கலைஞர் சொன்ன குதிரைக் கதை

ஒரு விவசாயி. தன்னுடைய பண்ணைத் தேவைகளுக்காக ஒரு குதிரை வாங்கினார்.

அவரது நண்பர்கள் அவர் அதிக விலை கொடுத்து விட்டார் அந்தக் குதிரை அவ்வளவு விலை பெறாது என சொல்லி அவரை கேலி செய்தனர். அவர் நன்றாக ஏமாந்து விட்டதாகச் சொல்லி வந்தனர். ஆனால் அவர் இதையெல்லாம் சட்டை செய்யவில்லை

ஒரு நாள் அந்தக் குதிரை கட்டியிருந்த கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

விவசாயி அதை துரத்திப் பிடிக்க முயன்றார். அது பக்கத்தில் இருந்த
காட்டினுள் ஓடி மறைந்தது. விவசாயி சோர்ந்து போனார்.குதிரை ஓடிப்போன
விஷயம் அவர் நண்பர்களுக்குத் தெரிந்தது. கேலி அதிகமாகி விட்டது. ஆனாலும் விவசாயி தான் ஏமாறவில்லை என்று சொல்லிக் கொண்டார்

ஓடிப் போன குதிரை ஒரு நாள் அதுவாகவே காட்டிலிருந்து திரும்பி வந்து
விட்டது. தனியாக வரவில்லை. இன்னொரு குதிரையை கூடவே கூட்டிக் கொண்டு வந்தது. விவசாயிகு ஆனந்தம் பிடிபடவில்லை. இப்போது அவர் தன் நண்பர்களிடம் பெருமையாக பேசினார் , “ பார்த்தீர்களா. என்னவோ நான் ஏமாந்து விட்டதாக சொன்னீர்களே. இப்ப என்ன சொல்றீங்க” நண்பர்கள் ஒன்றும் சொல்லவில்லை

வந்த் இரண்டாவது குதிரை மிகவும் முரடாக இருந்தது. விவசாயியின் பையன் 18 வயது இளைஞன். அவனுக்கு இந்த புது குதிரை ரொம்ப பிடிச்சி போச்சு. அதன் மீது தாவி ஏறி அதை ஓட்டிப் பழக முயற்சித்தான். இப்படி செய்து
கொண்டிருக்கும் போது ஒரு நாள் அந்த முரட்டுக் குதிரை அவனைக் கீழே தள்ளி அவனுக்கு கால் எலும்பு முறிந்து விட்டது.

விவசாயியின் நண்பர்கள் ,” அது ஏதோ காட்டுக் குதிரை போலிருக்குப்பா பாரு
பையன் காலை உடைச்சிருச்சு, குதிரைஐ துரத்தி விடுப்பா “ என்றனர்

விவசாயி அதெல்லாம் எதுக்கு வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று விட்டு
விட்டார்

மறுநாள் அந்த நாட்டின் மீது அண்டை அரசன் படையெடுத்து வந்தான், இந்நாட்டு அரசன் 18 வயதான இளைஞர்கள் எல்லோரும் படையில் சேர வேண்டும் என்று அறிவிப்பு செய்து உடனே வீடு வீடாக சென்று அப்படியான இளைஞர்க்ளை படையில் சேர்த்து வர தன் தளபதிகளைப் பணித்திருந்தான்

படைத் தளபதிகள் வீடு வீடாக வந்தனர். விவசாயியின் மகன் காலை முறித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனை விட்டு விட்டனர். ஆனால் விவசாயியின் நண்பர்களின் மகன்கள் அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்
வலுக்க்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்

அப்போது விவசாயியின் நண்பர்கள் அந்தக் குதிரை தான் விவசாயியின் மகனை படையொ சேர்வதிலிருந்து காப்பாற்றிற்று என்றனர்

விவசாயி இருக்கலாம் என்றார்


Sunday 10 April 2011

தாகம்


இப்படித் தலைப்பைப் பார்த்த உடன் இது ஒரு மலையாளப் படத்தின் விமர்சனம் என்றோ, தேர்தல் சமயத்தில் நடந்த ஒரு விவாதக் கூட்டத்தின் வியாஜ்யம் என்றோ நினைத்து வாசிக்க வந்திருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இப்போது எந்த அளவில் இருக்கிறது என தெரியவில்லை

1943 ஜூலை மாதத்தில் ஒரு நாள். அமெரிக்க கடற்படையின் ஜார்ஜ் ஸ்மித் புகழ்பெற்ற குடால்கனாலினருகில் கடலில் ஒரு ரப்பர் மிதவையில் மிதந்து கொண்டிருக்கிறார். மிகுந்த தாகத்தில் இருக்கிறார். கடல் தண்ணீரை அருந்த இயலாத மனிதனின் இயலாமையை நொந்து கொண்டிருந்தார். கண்ணுக்கு எதிரே பார்வைக்கு எட்டிய பரப்பெங்கும் தண்ணீர். ஆனால் அதைக் குடிக்க முடியாது. அவரது ஆதங்கத்தை அதிகப்படுத்தியது ஒரு கடற்பறவை . கடல் பரப்பின் மீது லாவகமாகப் பறந்தபடி அந்தப் பறவை கடல் நீரை அருந்தியது

அந்த அசாதாரண சூழ்நிலையிலும் ஸ்மித்துக்கு ஒரு கேள்வி பிறந்தது. நானும் இந்தப் பறவையும் இரத்தமும் சதையும் தான். அந்தப் பறவையால் கடல் தண்ணீரைக் குடிக்க முடிகிறது; என்னால் முடியவில்லை ஏன்.

பாவம் அந்தப் பறவை. ஸ்மித்தின் திடீர் விஞ்ஞான ஆர்வத்துக்கு பலியானது. ஆம் அந்தப் பறவையை சுட்டு கைப்பற்றி அதற்கு குடலாப்பிரேஷன் செய்து அதன் குடலில் தண்ணீர் கொழுப்பாக சேகரம் ஆகியிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆக இந்த கெட்டிக் கொழுப்பை வைத்துக் கொண்டு தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்ள யத்தனித்தார். கடல் நீரை அருந்தினாலும் ஏன் அந்தப் பறவைக்கு டீ
ஹைட்ரேஷன் ஆவதில்லை என்ற உண்மை அவருக்கு ஓரளவு புரிந்திருந்திருந்தது. அப்போதிலிருந்து தினம் கொஞ்சமாக அவர் கடல்

தண்ணீரை அருந்தி தன் தாகத்தினை ஓரளவு தணித்துக் கொண்டிருந்தார்

கடலில் மிதந்து கொண்டிருந்த அவரை அமெரிக்க கடற்படை 20 நாட்கள் கழித்து மீட்டது

அவர் கடல் நீரை அருந்தி அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சங்கதி பரவியது..

அமெரிக்க கடற்படை விமானப் படையின் சர்வைவல் மானுவலில் ஸ்மித்தின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஸ்மித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதமைக்கு விஞ்ஞானிகள் சொன்ன காரணம்: ஐந்து நாட்கள் கழித்து பெய்த கடல் மழையின் காரணமாக அவருக்கு தூய நீர் கிடைத்து அதனை அருந்தியிருக்கிறார் அதனால் அவருக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது

ஸ்மித் தனது அந்த உயிர்ப் போரட்ட பயணத்தின் போது, வெளியேறிய சிறுநீரின் அளவினை கவனித்து இருக்கிறார். அருந்திய கடல் நீரின் அளவினை விட மூன்று பங்கு அதிகம் . அதாவது கடல் நீரில் இருக்கும் உப்பு உடலில் கலந்த உடன் அங்கிருக்கும் உப்பில் கோளாறு செய்து வெளியேறும் அளவினை அதிகரித்து இருக்கிறது

தினசரி 50 மில்லி மட்டும் கடல் தண்ணீர் அருந்தி சுமார் ஆறு நாள் உயிர் வாழலாம் ஆனால் அதை பத்து பங்காக்கி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். ஆனால் ஆறாவது நாள் கட்டாயம் ஒரு லிட்டர் நல்ல தண்ணீர் குடித்த்தாக வேண்டும் இல்லையெனில் ஆள் காலி என்பதாக ஃப்ரெஞ்சு தேசத்து கடற்படை ஆய்வு சொல்கிறது

அந்தப் பறவை போலத்தான் ஒட்டகமும். ஒட்டகத்தின் திமிலில் தண்ணீர் சேகரிக்கப்படுவதாக நம்பினால் நம்புகின்றவர்களும் ஐயோ பாவம் அப்படி நம்பி தண்ணீர் கிடைக்கும் என ஒட்டக்த்தை காவு வாங்கினால் அந்த ஒட்டகமும் ஐயோ பாவம்

Dromedary Camel என்பது அரேபிய ஒட்டகம். ஒட்டகத்தில் இன்னொரு ரகம் Bactrian Camel முதல் ரகத்துக்கு ஒரு திமில். இரண்டாவது ரகத்துக்கு இரட்டை திமில்

இரண்டு வகையிலும் திமிலில் தண்ணீர் கொழுப்பு திசுக்களாகத்தான் சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம். அதைக் கிழித்தால் ஒட்டக ரத்தம் தான் வரும். தண்ணீர் வராது

யானையைப் போல இப்போதெல்லாம் ஒட்டகத்தை தெருவிலே கூட்டிக் கொண்டு வந்து பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் ஒட்டகத்துக்காகவே ஒரு அரசு சார்பு நிறுவனம் இருக்கு தெரியுமோ

http://nrccamel.res.in/

இந்த ஸ்தாபனத்தில் நாகராஜன் என்ற தமிழ்க்காரரும் இருக்கிறார் . டாக்டர் நாகராஜன். காமெல் டிசிசஸ் எனும் பிரிவில் ஆராய்ச்சி ஆர்வம் இருப்பதாக வலையில் காணப்பட்டது.

இந்தியன் படத்தில் மணீஷா கொய்ராலாவுக்கு கமல்ஹாசன் பரிசளிக்கும் ஒட்டகம் கவுண்டமணியைக் கடித்து விடுமே..

மணீஷா கொய்ராலா ஏன் இப்படி இருக்கிறார்.. மாப்பிள்ளை என ஒரு படத்தின் ட்ரைலர் காட்டுகிறார்கள் சன் டிவியின் எல்லா சானலிலும்; தனுஷின் மாமியாராக நடிக்கிறார் . இந்த மாமியார் மாப்பிள்ளை கதை அரதப் பழசு. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி ஜெயலலிதா படம்.. மாப்பிள்ளை என்றெ ரஜினி படம் ; ஸ்ரீ வித்யா மாமியார்;

மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதான எம்.எல்.வி யின் புதல்வி ஸ்ரீவித்யா என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்

எம்.எல்.வி அவர்களை நினைக்கும் போதே வெங்கடாச்சல நிலையம் எனும் புரந்தரதாசரின் சாஹிட்தியத்தினை அவர் பாடும் அழகும் ரம்மியமும் நினைவுக்கு வராமலா போகும். சிந்து பைரவியின் எல்லா லஷணங்களையும் எம்.எல்.வி பாடும் ரசனையே தனி

இதை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது "எஜமானரே ஊட்டக் பர்த்தீரா" என என்னை கன்னடத்தில் மனைவி அழைக்கிறார்

"ஒரு நாளும் உனை மறவாதா இனிதான வரம் வேண்டும்" என பாடி விட்டு. "என்ன டிபன்" எனக் கேட்டேன்

இது எஜமான் படப்பாட்டு இல்லையா என்றாள் மனைவி

ஆமாம் சிந்து பைரவி ராக சாயல் நிறைய இருக்கும் பாட்டு என சொல்லிவிட்டு டிபன் சாப்பிடப் போகிறேன்

Saturday 9 April 2011

சக பயணி 3

சக பயணி 3


“உங்களுக்கு காஃபி என்றால் மிகவும் பிரியம் போலிருக்கிறது”

“எனக்கு என்றில்லை சார். பலருக்கும் தான். அதுவும் காஃபி தவிர்த்த பயணம் இனிமையானது அல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்கலாம். கப்பலில் லண்டன் சென்ற காந்தியார் பயணத்தின் போது சூயஸ் கால்வாயில் உள்ள செயிட் துறைமுகத்தில்(Port Said) உள்ள காஃபி ரெஸ்டாரண்ட்களைக் குறித்து தனது பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அங்கு இசை கேட்டது குறித்தும் பதிவு செய்திருக்கிறார்”

“ஓ !! சரி !! அது தான் காஃபி வந்து நாம் குடித்தும் முடித்தோம். என் கேள்விக்கு இப்போது விடை சொல்வீர்களா ?”

”நிச்சயம் சொல்கிறேன்; காந்தியின் ஆதார சிந்தனை, கோட்பாடு சத்யாகிரஹம். இந்த வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது. இந்த
குணங்களை வைத்துக் கொண்டு ஒருவரை எதிர்ப்பதல்ல காந்தியாரின் வழி; இந்த குணங்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு பணியாற்றுவது, In other words Satyagragha is not used against anybody but is done with somebody"

"வார்த்தைக்கு அழகாகத்தானிருக்கிறது ஆனால் இது போன்ற கொள்கைககள் நடைமுறை சாத்தியமானதா"

"தொழிலில் ஈடுபட்டுள்ளவர் இந்தக் கொள்கையின் உயரத்தினை கவனத்தில் கொண்டால் சாத்தியம் தானே"

"எல்லோருக்கும் ஒரே மனோபாவம் என்பது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்லவா சார்"

"ஒவ்வொரு மனிதனும் அடிப்படை சிந்தாத்தம் என்று ஒன்றை வைத்திருக்கக் கூடும் அந்த அடிப்படை சித்தாந்தத்தை சரிவர அமைத்துக் கொண்டால் அதன்படி நடந்து கொள்வதில் சுலபம் இருக்குமல்லவா"

"எனக்கு புரியவில்லை.. இன்னும் விளக்கமாக சொன்னால் புரிந்து கொள்ளவேன்"

"சொல்கிறேன் சார்.. நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை அல்லது நம்பிக்கைகளை அது சார்ந்த சூழலில் மிகுந்த ஆழ்நிலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு , பரிசோதிக்கிறோமா.. உதாரணமாக சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என ஒரு செய்தி தாளில் ஒரு கட்டுரையினைப் படிக்கும் போது நமது ரியாக் ஷன் எப்படி இருக்கிறது. பெரும்பாலும் ரேஷனலாகத்தான் இருக்கும்.. ஆனால் அதே சமயம் கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போது புகை கக்கும் இன்னொரு காரை கவனிக்க அல்லது கடக்க நேர்ந்தால் நமது ரியாக் ஷன் எப்படி சற்று மிகையான உணர்ச்சிகளோடு கலந்து வருகிறது"

"ஆமாம் ஒப்புக் கொள்கிறேன்"

"சுற்றுப் புற சூழலினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையினை அதன் மீது நமக்குள்ள தீவிர நம்பிக்கையை பரிசோதித்துக் கொள்ள இந்த இரண்டு சூழலுமே நமக்கு இடம் தருகிறதா சொல்லுங்கள். பண்பு சார்ந்த அதுவும் கேரக்டர் சார்ந்த சித்தாந்தத்தை பரிசோதித்துக் கொள்ள நமக்கு மிகவும் டென்சிடியான ஒரு சூழல் தேவை; அதை அமைத்துக் கொண்டோ அல்லது தன்னார்வமாக அந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டோ சோதித்துக் கொள்ளாமல், நம்மால் அந்த குறிப்பிட்ட சித்தாந்தத்தை
வாழ்வின் பிற ப்ரியாரிட்டிசுடன் ஒப்பிட்டு எதை விட்டுக் கொடுப்பது எதில் சமரசம் செய்து கொள்வது எதில் சமரசம் செய்து கொள்ள்வே கூடாது என்பதை தீர்மானிக்க இயலுமா சொல்லுங்கள்; இப்படி டென்சிடியான சூழலில் உட்படுத்திக் கொள்ளாமல் தான் நமது நம்பிக்கை அடுக்குகள் அமைந்துள்ளது அதைத்தான் முன்பு சொன்னேன் நினைவிருக்கிறதா

"ஆம் சொன்னீர்கள் Opinions, Desires, Convictions, Values என"

" பெரும்பாலும் நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை கைக் கொள்வது அவை சமூகப் பொருத்தம் கொண்டவை என்பதால். அதாவது சமூக அங்கீகாரம் கொண்டவை என்பதால். ஆங்கிலத்தில் சொல்வதெனில் We adopt because they are socially appropriate ஆனால் காந்தி அப்படி பொதுவில் கைக் கொள்ளாதவர் என்பதனையும் அவர் அடர்த்தியான சூழலில் அதை பரிசோதித்து கைக் கொண்டார் என்பதையும் அதில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் ;சத்யாகிரஹம். இந்த
வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது ஒரு பாரிஸ்டராக காந்தியாரை கவனிக்கும் முன் அவரது இந்த ஆதாரக் கொள்கையினை புரிந்து கொள்ள வேணும்..

இப்ப அவரோ பாரிஸ்டர் வாழ்க்கைக்கு வருகிறேன் ...

(பயணம் தொடரும்)

Wednesday 6 April 2011

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 . மிக முக்கியமான நாள்.. இங்கே தேர்தல் நடக்கவிருப்பதால் சொல்லவில்லை. இதே ஏப்ரல் 13 1919 .. ஜாலியன் வாலாபாக்..

வாக்களிக்க செல்லும் முன்பு அந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக தாகூர் தனக்கு வழங்கப்பட்ட KnightHood பட்டத்தை துறந்தார்

அப்போது வைசிராய் அவர்களுக்கு தாகூர் ஒரு கடிதம் எழுதினார்

"The time has come when badges of honour make our shame glaring to their incourageous context by humiliation, and I for my part, wish to stand shorn of all special distinction by the side of those my countrymen who for their so-called insignificance , are liable to suffer
degradations not fit for human beings and these are the reasons which have painfully compelled me to ask Your Excellency with due deference and regret, to release me of my title knighthood"

பிரிகேடியர் ஜெனரல் டயர் ஆணைக்கு இணங்க நடந்த அந்த கொடூர சம்பவத்தை அப்போதைய பஞ்சாபின் லெப்டினட் கவர்னர் மைக்கேல் ஓட்வையர் சரிதான் எனச் சொன்னது தான் கொடூரத்தின் உச்சம்

ஒட்வைர் vs நாயர் எனும் புகழ் பெற்ற வழக்கிலே ஹௌஸ் ஆஃப் லார்ட்ஸ்ம் நீதிபதி மெக்கார்டியும் டயர் செய்த்தது சரிதான் என சொல்லிவிட்டார்கள்

ஆனால் ப்ரிடிஷ நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்கிவித் இந்த சம்பவம் நாட்டின் மிக கொடூரமான மனிதாபிமானமன்ற செய்கை எனச் சொன்னார்

ஓட்வயரின் செய்கையைனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாயர் : சேட்டூர் சங்கரன் நாயர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குறைஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தவர்

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏப்ரல் 13 , 1969 அன்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது (ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 50 ஆண்டுகள் கடந்து) அதில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கான திட்டம் லாகூரில் ஏப்ரல் 8, 1919 அரசு மாளிகையில் ஓடைவயர் முன்னிலையில் பல ப்ரிடிஷ் அதிகாரிகள் முன்னிலையில் தீட்டப்பட்டது எனவும் அதை baishakshi day எனும் நாளில் நிகழ்த்தினால் பஞ்சாப் முழுவதும் பயம் விளைவிக்க ஏதுவாகும் எனவும் விவாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டுள்ளது

இந்த ஓட்வயர் உத்தம் சிங் எனும் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

அதற்காக தூக்கிலிடப்பட்டான்

உத்தம் சிங் பெயரில் உத்ரகாண்ட் மாநிலத்திலே ஒரு மாவட்டம் இருக்கு

அம்மாவட்ட நிர்வாகத்தின் சுட்டி

http://usnagar.nic.in/

Sunday 3 April 2011

கூடுமாயில் பிரமசரியம் கொள்


மதராஸ் பட்டணத்தை சுற்றிப் பார்க்கவென வரும் வெளியூர் ஜனங்கள் தப்பாமல் வரும் இடம் எக்மோர் ம்யூசியம் கட்டிடம். பக்கத்தில் இருக்கும் கன்னிமரா நூலகத்திலே புத்தகம் யாசித்துப் பெற்று திரும்பினேன். வாகன நிறுத்துமிடத்தை நெருங்கின போது,

"ஓய் இங்கே வாரும் என 'அதட்டல்'" கேட்டது. வலப்புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தூரத்தில் முண்டாசு.

"உங்களுக்கு மூக்கு வேர்ப்பது எனக்கு புதிததல்ல"

"அது சரி பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே, என பட்டினத்துப் பிள்ளை சொன்னதைப் படித்திருப்பீரே"

"அது தான் நான் என்ன யோசித்திருந்தேன் என யூகித்து விட்டீர்களே"

" நீர் யூகித்ததும் யூகித்த வழி போய் உத்திரம் காணாது குழம்பியதும் தெரிந்த பின் மேலுலகில் என்ன வேலை என இங்கே வந்து விட்டேன். தென்னந்தோப்பும், கிணறும் கேட்டு பாட்டுக் கலந்திடவென் பத்தினிப் பெண் எனத் தானே கேட்டேன்
வெறுமனே பெண் எனக் கேட்டிருந்தால் இன்றைக்கு இன்றைக்கு நாகரீகக் கேடாக இளைஞரும் யுவதியும் களிப்பு என்ற பெயரில் கலாச்சார சீரழிவு செய்வதற்கு ஒப்பாக ஆகியிருக்குமே"

"எல்லாம் சரிதான் ; நேரடியாகவே பாடலுக்கு வருகிறேன்.

கூடுமாயில் பிரமசரியம் கொள்.
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து
ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்

இது தான் எனக்கு ஐயம் தந்த பாடல். கலியாணம் செய்து பிள்ளைகள் பெற்ற தகப்பன் எழுதும் பாடலா இது"

" ஹோ ஹோ ஹோ !!!!!! பராசக்தி பராசக்தி...இது தானா உமது ஐயம்"

"சிரிக்காமல் விஷயத்துக்கு வாருங்கள்"

" வீடு உறா வணம் யாப்பதை வீடு என்பர்
மிக இழிந்த பொருளை பொருள் என்பார்
நாடும்கால் ஓர் மணமற்ற செய்ய செய்கையை
நல்லதோர் மணம் ஆமென நாட்டுவார்

இப்படி நாட்டுவார்களை குறித்து பாடிய பின் தான் இம் மணம் என குறிப்பிட்டு உரைத்தேனயல்லாது பொதுவில் மணம் செய்யாதே எனவா பாடினேன்"

" நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வாதம் செய்யணும்"

சாஷ்டாங்கமாக விழுந்தேன்.

முண்டாசு பாடினான். பாடினான். பாடியபடியே விண்ணளவு உயர்ந்தான்.

அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் எப்படி நீர் கொள்வீரோ யானறியேன்.. ஆரியரே

காதலருள் புரிவீர் காதல் இல்லையென்றிடிலோ சாதல் அருளி தமது கையாற் கொன்றிடுவீர் எனக் குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் !!!!!!

என் கண்ணிலிருந்து மறைந்தான்

Saturday 2 April 2011

ராயர் மெஸ்‍- சாரு நிவேதிதா


நான் சாருவை எதிர்த்தே எழுதுவதாகவும் ஏன் என்றும் "அன்புடன்" என்னை அவரின் அபிமானிகள் விசாரிப்பதால் இந்தப் பதிவை எழுதியே தீருவது எனத் தீர்மானித்து விட்டேன்

அது ராயர் மெஸ் . சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருது. முன்பு கச்சேரி ரோடு போலிஸ் ஸ்டேஷன் சமீபத்தில் இருந்தது. இப்போது அருண்டேல் தெருவில் இயங்குது. போஸ்டாஃபீஸ் சமீபம்

தொபே எண் : 24670519 உரிமையாளர்கள் மோகன், குமார் ., மொபைல் எண் 9382118126
No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai - 600004

உரிமையாளர்களின் போட்டோவை இங்கே தந்திருக்கேன்

ஒரு சரித்திர ஆராய்ச்சிக்கு உதவிய‌ திருப்தியோடு நிறைவு செய்கிறேன்

சக பயணி- 2


நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் என் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பார்த்துக்

கொண்டிருந்தார். அந்த பேனாவில் காந்தியாரின் உருவம் பதித்திருந்தார்கள்

" சார் இந்தப் பேனா எனக்கு நான் பணியாற்றிய அலுவலகத்தில் எனக்கு அன்பு பரிசாக வழங்கியது. காந்தி குறித்து நீங்கள் என்னிடம் வினவியதற்கு இந்த பேனா காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன்"

" உங்கள் யூகம் மிகச் சரியானது. இது போன்ற பரிசுகளில் பெரும்பாலும் சாமி படங்கள் மதப் பெரியவர்களின் படங்கள் இருக்கும். முதன் முறையாக காந்தி படம் பதித்த கிஃப்ட் பேனாவைப் பார்க்கிறேன். உங்களுக்கு காந்தியின் மீது ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் தான் இப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும் என யூகித்து உங்களிடம் அப்ப்டி ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் பதிலுக்கு என்னைக் கேள்வி கேட்டதால், உள்ளுக்குள் விஷயங்களை கோர்வைப்படுத்திக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவுமல்லாது காந்தி சிற்சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் பொதுவில் He is a symbol of good அதனால் உங்கள் மேல் ஒரு நல்மதிப்பு வரும் அதற்காக இதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் யோசித்துக் கொண்டிருந்தேன்"

"நல்லது சார். நான் உங்களை பதிலுக்கு கேள்வி கேட்டது என்னை நான் தயார் செய்து கொள்ள ஒரு சிறிய அவகாசம்; நீங்கள் யூகம் என சொன்னதை நான் மித் (Myth) என சொல்வேன்.. எனது கருத்து இந்த விஷயத்தில் மிகவும் காரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு என் வருத்தங்கள் ஆனால் என் கருத்துக்கான விளக்கம் சொல்ல நீங்க்ள் எனக்கு அனுமதி அளிப்பீர்கள் என கருதுகிறேன்"

"தாரளமாக சொல்லுங்கள்"

"யூகம் என்றும் அனுமானம் என்றும் சொல்லப்படுபவை ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பில் (Belief Structure) ஒரு ஸ்தானம் எனச் சொல்லுவேன்"

"எனக்கு முழுமையாகப் புரியவில்லை சார்"

"ஒருவரின் நம்பிக்கை கட்டமைப்பு Opinions, Desires, Convictions, Values என அடுக்குகள் கொண்டவை என நான் கருதுகிறேன். இதில் கீழடுக்கு ஒப்பீனியன் எனக் கொண்டால் மேலான அடுக்கு வேல்யூஸ் என பொருள் கொள்ள் வேண்டும்."

"இதை இந்த தருணத்தில் ஏன் சொல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா"

"சொல்கிறேன் சார். காந்தி படம் வைத்துக் கொண்டால் அது நல்லவர் எனும் அடையாளத்துக்கு உதவும் என நீங்கள் யூகிப்பதாக சொன்னீர்கள் அல்லவா. அதன் பொருட்டு இதைச் சொன்னேன்"

"ஆம் அப்படித்தான் யூகித்தேன். இப்போது கோர்ட் ஹாலில் எல்லாம் காந்தி படம் மாட்டப்பட்டுள்ளது. எதற்க்காக ? இங்கே நல்லது நடக்கும் ; உண்மை இருக்கும் என ஒரு உணர்வைத் தோற்றுவிப்பதற்க்காக. அது மட்டுமல்லாது அவர் தேசப் பிதா எனும் அடையாளம் பெற்று விட்டார் என்பதற்க்காவும்; He is mere a convention there என்பது என் எண்ணம்”


"மிக எளிமையாக அல்ல அல்ல மிக சாதாரணமாக சொல்லிவிட்டீர்க்ள். இதில் எனது கருத்தினை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். எனக்கு உதவியாக இருக்கும் என கருதுவதால் எனது மடிக் கணிணியை உயிர்ப்பித்து உபயோகித்துக் கொள்ளலாமா"

"தாரளமாக சார்.. அதற்கு முன்னால் ஒரு கப் காஃபி அருந்தலாமா"

"செய்யலாம். நான் காஃபியில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை.. இதோ காந்திக்கு மீண்டும் வருகிறேன்

உண்மை என்பது வெறும் பொய் தவிர்ப்பது எனும் நிலையில் காந்தியார் இருக்கவில்லை. அதை எப்போதும் தவிர்ப்பது எனும் நிலையில் இருந்தார். நீங்கள் இராகவன் நரசிம்மன் அய்யர் என்பவர் குறித்து அறிந்திருப்பீர்கள்... ?"

"இல்லை சார்"

"இராகவன் அய்யர் எழுதிய The Moral and Political Thought of Mahatma Gandhi நூலில் காந்தியாரை மேற்கோள் காட்டி சொல்லியதை சுட்டினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்

As truth is the sbstance of morality , man is a moral agent only to the extent that he embraces and seeks the truth. By truth is not merely meant the absstention from lies, not just the prudential conviction that honesty is the best policy in the long run , but even more that we must rule our life by this law of truth at any cost. We must say No when we mean NO , regardless of the consequences

இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். உண்மை உரைப்பது என மேலோட்டமாக இல்லாமல் உண்மையை தேடுவது என ஆழமாக் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியான தேடலினால் தான் காந்தியார் படம் நீதிமன்ற கூடங்களில் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்"

"காந்தியாரே ஒரு பாரிஸ்டர்.. ஆனால் அவரால் இப்படி ஒரு உண்மைத் தேடலில் வெற்றி கொள்ள இயன்றதா "

"நீங்கள் காந்தியாரை கருப்பு அங்கி அணிந்து கொண்டு. கட்சிக்காரரை சட்டத்தின் பார்வையில் இருந்து காப்பாற்ற அல்லது சட்டத்தின் பார்வையில் வேண்டும் எனும் அளவுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் வக்கீல் / பாரிஸ்டர் அளவில் பார்த்தீர்கள் என்றால் இந்த சங்கதியினைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்"

"ஓ அப்படியா .. வேறு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்"

"மேலும் தொடர்வதற்குள் இதோ காஃபி வந்து விட்டது.. அருந்திய பின் தொடரலாம்"

(பயணம் தொடரும்)