Monday 3 December 2012

க்ருஷ்ணாவதாரம்-6

கம்ஸனுக்கு அந்த யோசனை வந்தது..

"வ்ருஷ்ணி வம்சத்திலே அக்ரூரன் இருக்கிறானே அவனை அழைத்து வாருங்கள்.. இந்த நேரம் போக வேண்டாம்.. நாளை சூரியோதயத்துக்குப் போனால் போதும்.. மிகவும் கவனம்.. அவனிடம் யாரும் சினம் கொண்டு பேசிவிட வேண்டாம். பக்குவமாகப் பேசிட வேண்டும்"

காலையில் கம்ஸனை சந்திக்க அக்ரூரன் வந்தான்.

"மன்னா தாங்கள் என்னை அழைத்ததாக ராஜாங்க சேவகர்கள் வந்து செய்தி சொன்னார்கள்"

"ஆம் ஆம் நான் தான் உன்னை அழைத்து வரும்படி சொன்னேன்.. நீ சௌக்கியம் தானே"

"நான் நன்றாக இருக்கிறேன் மஹாராஜா.. விஷயத்தைச் சொல்லுங்கள்.."

" முனிசிரேஷ்டரான வியாஸர் வரவிருக்கின்றாராமே .. அது குறித்து ஏதும் உனக்குத் தெரியுமா.. அதுவுமில்லாமல் நேற்றைக்கு ஹஸ்தினாபுரத்திலிருந்து பீஷ்மரிடம் இருந்து வசுதேவரை அனுப்பி வைக்கும்படி ஓலை வந்திருக்கிறது"

"மஹாராஜா இதெல்லாம் ராஜாங்க காரியம் எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்"

"ஹா ... ஹா.. இதை என்னை நம்பச் சொல்கிறாயா அக்ரூரா.. உனக்கும் வசுதேவருக்கும் இருக்கும் சிநேகிதமும் நெருக்கமும் எனக்குத் தெரியும்.. அதுவுமில்லாமல்.. நீ போன மாசம் தானே ஹஸ்தினாபுரம் போனாய்"

"பிரபு நீங்கள் வசுதேவரை சிறைபிடித்து வைத்த பின்பு நான் போயிருக்கிறேன்.. இந்த சிறை விவகாரம் எல்லா தேசத்துக்கும் தெரிந்து விட்டது.. இதில் என்ன ஒளிவு மறைவு ரகசியம் இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை"

"அதிருக்கட்டும், அங்கே ஹஸ்தினாபுரத்திலே மூத்தவன் திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது,, பாண்டுவோ பரம் சாது.. அவனும் நோய் பீடிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.. அந்த ராஜ்ஜியம் என்ன ஆகும் அக்ரூரா"

"மன்னாதி மன்னா.. அங்கே தான் பீஷ்மர் இருக்கிறாரே.. அவர் இருக்கும் போது அந்த ராஜ்ஜியத்துக்கு ஒரு கெடுதலும் வந்துவிடமுடியாது.. அவரிடம் யுத்தம் செய்ய அந்த எமதர்மனுக்கும் யோசனை வராது"

"அது தானப்பா கவலை.. அந்த பீஷ்மன் வசுதேவரைக் கூட்டிக் கொண்டு போக வேணும் என்கிறான்.."

"அனுப்பிவிட்ட்டால் என்ன மஹாராஜா"

"எப்படி எப்படி அவர்களது மகன் என்னைக் கொல்லுவான் என தேவரிஷி சொல்லியிருக்கிறாரே"

"அதனாலென்ன தேவகி இங்கே இருக்கட்டும். வசுதேவரை மட்டும் அனுப்புங்கள்.. தீர்ந்தது காரியம்"

"ஆ ..அதெல்லாம் நான் ஆலோசித்துப் பார்க்காமல் இருப்பேனா.. தேவகியை என்னிடத்திலே விட்டுவிட்டு தான் மட்டும் ஹஸ்தினாபுரம் போக வசுதேவர் சம்மதிக்க மாட்டார்

"அப்போது இருவரையும் அனுப்புங்கள்"

"அக்ரூரா.. நீ தான் எனக்கு உதவ வேண்டும்"

"எப்படி"

"வசு தேவரை சந்திக்க வேண்டும்.. அதன்பின்னே பீஷ்மருடன் செல்ல வசுதேவருக்கு விருப்பமில்லை என்பதாக அவரே மனமுவந்து சொல்வது போல செய்ய வேண்டும்"

"அதாவது சிறைப்பட்டிருக்கும் ஒருவர் அந்த சிறையிலிருந்து வெளியே ஸ்வந்தந்திரமாக வருவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் தருணத்திலே அதை தானே வேண்டாம் என சொல்லனும்.. எப்படி மஹாராஜா நீங்கள் இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள்.. உங்களோடு வசுதேவரை அனுப்ப முடியாது என பீஷ்மரிடம் சொல்லிவிட வேண்டியது தானே"

" என் பலம் சினம் இதெல்லாம் தெரிந்து தான் பேசுகின்றாயா அக்ருரா.."
..
"எனக்கென்ன மஹாராஜா.. இந்தக் காரியத்தை நான் செய்யப் போவதில்லை.. மரணம் என்பது பகவான் கையில் இருக்கிறது.. நான் வருகிறேன்"


"போங்கள் யாரும் எனக்குத் தேவையில்லை.. நான் பீஷ்மனுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.. அந்த க்ருஷ்ண த்வைபாயன வியாசனை நான் பார்க்கப்போவதுமில்லை.. யாரங்கே !!!!!.. நான் நாளை வேட்டைக்கு கானகம் போக முடிவு செய்து விட்டேன்.. வேண்டியதைச் செய்யுங்கள்"


நதிக்கரையிலே அலங்கரிக்கப்பட்ட ரதம் நின்று கொண்டிருக்கிறது.. வியாச முனிவர் வருவதால் அவரை சம்பிரதாயமாக வரவேற்க படை பரிவாரங்களுடன், உக்கிரசேனன் வந்திருந்தான்.. கம்சனின் மாமன் தேவகன், அக்ரூரன் இன்னும் பிரதானிகள் அங்கே நின்று கொண்டிருந்தனர். கம்ஸன் வரவில்லை..

தூரத்திலே படகு நதிப் பிரவாகத்திலே முந்திக் கொண்டு வருவது தெரிகிறது.. உக்கிரசேனன் இப்போது வாத்தியம் வாசிப்பவர்களைப் பார்த்து தலையசைக்கிறான்.. அவர்கள் மங்களமானதொரு இசையினை வாசிக்கின்றார்கள்.. அந்த படகு இப்போது கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்துக்கு வந்துவிட்டது

இரண்டு படகுகள்.. முதல் படகிலே தான் வியாஸர் இருக்கிறார்.. பராசர மஹாரிஷியின் புதல்வர்.. குருவம்சத்தின் மூத்தவர்.. சில வருஷங்களுக்கு முன்பு அவர் மதுராவுக்கு விஜ்யம் செய்த போது மதுரா நகரமே கோலாகலமாக இருந்தது.

ஆடி ஆடி படகு கரைக்கு சமீபித்தது.. சேவகர்கல் விரைந்து சென்று படகைப் பிடித்த ஒரு மரத்திலே கயிறு கொண்டு கட்டினார்கள்.

வியாஸர் மெதுவாக இறங்கினார்

"என்ன அக்ரூரா.. சௌக்கியமா"

அக்ரூரன்.. ரிஷியை நமஸ்கரித்து அவரிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்கினபின்னாலே அவருக்குப் பக்கத்திலே மாஹா தேஜசுடன் நின்று கொண்டிருந்தவரைக் கவனித்தான்.

"என்ன பார்க்கிறாய் அக்ரூரா.. இது விதுரன்.. விசித்திரவீரியரின் புதல்வன்.. மஹா ஞானி.."

அக்ரூரன், விதுரரை நமஸ்கரித்தான்

'அக்ரூரா.. நாம் இப்போது நேராக. தேவகியைக் காணப் போகலாமா"

'அவர்கள் இருவர் படும் துன்பமும் சொல்லி மாளாது ஸ்வாமி.. உங்கள் தரிசனம் அவர்களுக்கு ஆறுதல் தரும்.. அங்கே போவதற்கு முன்பு தாங்கள் என் இல்லத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பது ப்ரார்தனை"

'அக்ரூரா இதென்ன உன் இல்லத்துக்கு சும்மா அழைக்கிறாய் என பார்த்தால்,, தின்பதற்கு இத்தனை வைத்திருக்கிறாய்"

"ஸ்வாமி பழம் மற்றும் பால் தானே வைத்திருக்கிறேன்.. நீங்கள் பசியாறும் தருணத்திலே நானும் வசுதேவர் , ,தேவகியின் கஷ்டங்களை உங்களுக்கு தனித்து சொல்ல வாய்ப்பிருக்குமே அது தான்"

வியாசர் பயணித்த ரதம், கஜராஜ அரண்மனை வாசலுக்கு வந்தது

வசுதேவரும், தேவகியும் வியாஸரைக் கண்டதும், மிகவும் ஆறுதலானார்கள்.. ஆனால் அவர்கள் அழுகை நிற்கவில்லை

"ஸ்வாமி.. தேவ வாக்கு மஹரிஷி நாரதர் சொன்னார் என்பதனால் என் அண்ணா கம்ஸன், என் குழந்தைகளைக் கொன்று வருகிறார்.. குழந்தைகளை இழந்த தாயின் வேதனை எப்படி என்பது உங்களுக்குத் தெரியும்.. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.. விதிக்கு இசைந்து,, கையாலாகதவளாக அப்படியே இருக்கிறேன்.. எனக்கென்னவோ நாரதரின் வாக்கிலே நம்பிக்கை இல்லை.. என் அண்ணா எல்லாக் குழந்தைகளையும் எமனுலகு அனுப்பி விட்டு நான் சோகம் அதிகமாகப் போய் சித்த ஸ்வாதீனம் இல்லாதவளாக ஆகலாம்"

இந்த இடத்திலே வசுதேவர் தேவகியை முறைத்துப் பார்த்தபடி, " தேவகி,, என்ன பேசுகிறாய்.. தேவ ரிஷியின் வாக்கிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.. அதனை வியாசரிடமே சொல்லுகிறாய்.. என்ன இது இப்படிப் பேசலாமா"

வசுதேவரின் கரத்தினைப் பற்றியபடி, வியாசர் பேசலானார், " மகளே தேவகி.. உன் துன்பம் எனக்கு புரிகிறதம்மா.. இது தெய்வ காரியம்.. நாரதனின் வாக்கு பலிக்கும்.. அந்த எட்டாவது சிசு உன் கர்ப்பத்தில் தானம்மா வர இருக்கிறது.. வசுதேவா கிட்டே வா.. இது தேவரகசியம்.. உங்கள் இருவருக்கும் சொல்கிறேன்"

இருவரும் முனிவருக்கு அருக்கே போனார்கள்..

சில விநாடிகள் கழித்து தேவகியின் கண்களில் கோடி மின்னல் ப்ரகாசம்

"ஸ்வாமி நீங்கள் சொல்வது வேடிக்கை இல்லையே.. இந்த அபலையிடம் உங்களைப் போன்ற முனிவர்கள் பரிகாசம் செய்யமாட்டார்கள் என்று திட்டவட்ட்டமாக நம்புகிறேன்.. ஆனால் நீங்கள் சொல்லுவது போல் நடக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்"

இந்த நேரம் மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் ஆதிசேஷனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்

(தொடரும்)