Tuesday 24 January 2023

Enrollment for Lessons for Better Mental Health

 Get to see the reality as clearly as possible, without coloured by your prejudices and ingrained biases, accept that reality even it is unpleasant

இந்த reality தெரிந்து கொள்கின்றவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர்கள் தான் நல்ல மன நலம் ( mental health ) கொண்டவர்கள்
இது இல்லாமல் இருப்பவர்களுக்கு anxiety, depression, strained relationship issues, வேலையில் சிக்கல், productivity problems, etc etc
இப்படி கஷ்டப் படாமல் இருப்பதற்கு வழி உண்டா என்று கேட்டால் , வழி உண்டு என்று சொல்ல வேண்டும்
இத்தனை பெரிய விஷயத்தை எளிமையாக்கி சில பதிவுகள் எழுதலாம் என யோசித்த போது, இதை பொதுவில் ஃபேஸ்புக்கில் எழுத வேண்டாம், அங்கே படித்துவிட்டு, அதை மறுபடி வாசிக்க அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று ஒரு நண்பர் நல்ல கருத்து சொன்னார்
அதனால், தெரிந்து கொள்ளவிருப்பம் இருப்பவர்கள் தங்கள் விருப்பத்தை எனக்கு இமெயிலில் தெரிவித்தால், அவர்களை இந்த programme ல் இணைத்து கொள்கிறேன்
இதில் இணைந்தவர்களுக்கு மட்டும் பதிவுகள் மெயிலில் அனுப்புகிறேன்.
whatsapp மூலமும் telegram செயலி மூலமும் அனுப்பும் எண்ணமும் உள்ளது
விருப்பமிருப்பவர்கள்

இந்த சுட்டி பயன்படுத்தி

Name
Mobile Number
Email address

பதிவு செய்யவும்

நீங்கள் பதிவு செய்யும் இமெயில் முகவரிக்கு, வாரம் ஒரு முறை இமெயில் பதிவுகள் அனுப்புகிறேன்

ஏற்கனவே இமெயில் அனுப்பி பதிவு செய்தவர்கள் மீண்டும் இங்கே பதிவு செய்ய வேண்டாம்

அன்புடன்
சந்திரமௌளீஸ்வரன் வி

Friday 7 August 2015

சிறகுகள் - Thought Process-1

சிறகுகள் தொடரில் முதல் பதிவு 


""அம்மா இன்னிக்கு College Notice Board ல் Semester Exam time table போட்டுட்டாங்க.. நேரமே இல்லை.. படிக்கணும்.. ரொம்ப பயமா இருக்கு கவலையா இருக்கு"

""எதிர்பார்த்த மாதிரி பணம் கிடைக்கலை.. delivery timeline இதோனு வந்து நிக்குது.. ஆடிட்டர் என்ன்டான்னா cash-flow statement மெயிலில் அனுப்பி, ஜாக்கிரதை சார்னு phone வேற பண்றார்"

"" இந்த காலத்துப் பசங்க என்ன வேலை செய்றாங்கனே தெரியலை.. நேத்திக்கு ஒரு வேலை முடிச்சு கொடுப்பானு சொல்லி அந்த ____ கிட்ட சொன்னேன்.. இதோ நாளைக்கு வந்து முடிச்சு தரேன்னு நேத்தி சொல்லிட்டுப் போனான். ஆனா இன்னிக்கு எஸ் எம் எஸ் அனுப்பறான்.. இன்னிக்கு லீவு வேணும்னு"


"மொத்தம் நாலு மூகூர்த்த தேதி தந்திருக்கார் சாஸ்த்திரிகள். இந்த தேதிக்கு, நமக்கு தோதா பட்ஜெட்டுக்குள் மண்டபம் கிடைக்கனும் , அது கூட பரவாயில்லை சரியான cook வேணும்.. சம்பந்தி வீட்டுல they are very specific of this"

மாணவர்கள் ( Students), தொழில் முனைவோர்( running their own business), சம்பளத்துக்கு பணி செய்கின்றவர்கள்( salaried ) குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவோர் ( owning family responsibilities) என மனிதர்களை வகைப்படுத்திக் கொள்ள இயலும்

அவர்களுக்கான பொறுப்புகளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் அந்த கடமைகளை நிறைவேற்ற‌ தேர்வு செய்து கொள்ளும் வழி முறைகளிலும் திட்டமிடுதல், திட்டத்தை செயல்படுத்துதல், எனும் இரண்டு செயல்கள் உண்டு

இந்த இரண்டுக்கும் தேவைப்படும் resource alignment எனும் மிக முக்கியமான செயலுக்கு அவரவர்களின் thought process  முக்கியமான வேலை செய்கிறது

thought process  அப்படின்னா என்ன ?

Wednesday 14 January 2015

க்ருஷ்ணாவதாரம்-8

க்ருஷ்ணாவதாரம்-8
----------------------------------

"ஸ்வாமி.. இதென்ன சோதனை.. ஆயர்பாடி மக்கள் என்ன தவறு செய்தார்கள்.. கம்ச ராஜாவுக்கு எங்கள் மேல் என்ன கோபம்"
" எனக்குத் தெரிந்த விபரத்தை சொன்னேனப்பா.. கம்சனின் சேவகர்கள் கோகுலத்தை முற்றுகையிட்டு கஷ்டம் கொடுக்க இருப்பது எனக்கு மிகவும் தாமதமாகக் தெரிகிறது.. அதனை உன்னிடத்தில் சொல்லிப் போகலாம் என வந்தேன்.. சொல்லிவிட்டேன்"
" ஸ்வாமி .. தங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் .. வரவிருக்கும் இந்தக் கஷ்டத்திலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள் நல்லதொரு உபாயமும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்"
"அதைச் சொல்லத்தான்.. உன்னை உன் குடிலுக்குள் அழைத்து வந்தேன்.. இது தேவ ரகசியம்.. பிறர் அறியத் தகுந்ததல்ல.. அருகே வா சொல்கிறேன்.. "
இந்த சமயத்தில் நந்தகோபரின் குடில் வாசலுக்கு ஒரு குதிரை விரைந்து வந்து நின்றது.. அது நின்ற வேகத்தில்,, அதன் குளம்புகள் எழுப்பிய ஒலி, நாலாபுறமும் எழுப்பிய தூசி,., உள்ளே பேசிக் கொண்டிருந்த கர்க்காச்சாரியார், நந்தகோபரின் கவனத்தை சேர்த்தே கலைத்தது
"ஸ்வாமி யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. குதிரை குளம்படி சப்தம் கேட்டதே"
"சந்தேகமே வேண்டாம், நந்தா,, இதோ குதிரை கனைக்கும் சப்தமே கேட்டதே.. வா.. போய் யாரென்று பார்ப்போம்.., நான் சொல்ல வந்த தேவரகசியம் நீ அறிந்து கொள்ள நேரம் வரவில்லை என நினைக்கிறேன்"
குதிரை மேல் ஆரோகணித்திருந்த வீரன் யாருமே விசாரிக்க அவசியமில்லாது, தான் ஒரு ராஜாங்க ஊழியன் என்பதை சொல்லிக் கொள்ளும்படிக்கு அலங்காரத்தில் இருந்தான்.
"என்ன விஷயமாக வந்தாயாப்பா"
ராஜாங்க உத்தியோகஸ்தருக்கான மிடுக்கு இருந்தாலும், அந்த வீரனுக்கு இங்கிதம் நன்றாகத் தெரிந்திருந்தது..
"ஸ்வாமி.. என் நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள்"
"நன்றாக இருப்பாயப்பா.. உனக்கு குறையேதும் வராமல் இறைவன் காப்பாற்றுவான்.. வந்த விஷயத்தை சொல்லப்பா" "நான் நமது நந்தகோபருக்கு இளவரசரிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்"

நந்தகோபரின் கண்களில் மிரட்சியைப் பார்த்துவிட்டு ஆறுதலாக அவரது கரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டே கர்க்காச்சாரியார் வினவினார்
"எதுவும் லிகிதம் இருக்கிறதா.. இல்லை வாய் மொழிச் செய்தியா ????"
"ஸ்வாமி.. வாய்மொழிச் செய்தி தான்.. நமது நந்தகோபர் மதுராவுக்கு வந்து இளவரசர் கம்சன் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது செய்தி.. இதனை என்னிடம் இளவரசரே சொன்னதை அறியவும்.. அது மட்டுமில்லை.. இது வேண்டுகோளோ,, விருப்பமோ இல்லை.. அவசியம் என்பதை இளவரசர் கட்டளையாக தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த கோபருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்"
வந்த வீரன் மறுமொழிக்கு காத்திருக்காமல், லாவகமாக கடிவாளம் இழுத்து குதிரையைத் திருப்பிக் கொண்டு விரைந்து போனான்.. குளம்படிச் சப்தம்ம் மெதுவாக தேய்ந்து கேட்பது நின்று போனது.. காற்றில் எழும்பிய புழுதியும் மெதுவாக ஓய்ந்து தரை சேர்ந்தது.
அந்த  வீரன் பேசிய கடைசி வரிகள் அடங்காமல் நந்தகோபரின் யோசனையில் சுழன்று கொண்டே இருந்தன ---"இளவரசர் கட்டளையாக தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த கோபருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்"
"என்ன யோசனை நந்தகோபா"
"ஸ்வாமி நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன விருஷ்ணி குலத்தாருக்கும், யாதவருக்கும் இருக்கும் கசப்பு, மன வேறுபாடுகள், சச்சரவுகள் என்று போகுமோ.. நமக்கு வழி என்று பிறக்குமோ.. எது எப்படியோ.. நான் மதுராவுக்குப் புறப்பட தேவையான ஆயத்தங்கள் செய்கிறேன்"

இத்தனையும் கவனித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த யசோதை மௌனம் கலைத்து பேசினாள்
"ஸ்வாமி.. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. இவர் மதுராவுக்கு இப்போது போவது உசிதமா.. ஆறு வருஷங்களாக இளவரசர் கம்சனின் கோபம் அதிகமாகியிருக்கிறது.."
"யசோதை.. என்னைத் தடுக்காதே.. நான் போய் வருகிறேன்.. எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வான்"
ஆதிசேஷா,, என்னமோ சொன்னாயே பக்தனுக்கு என் மீது சந்தேகம் என்று.. பார்த்தாயா,, நந்த கோபனை..

"ஸ்வாமி.. நிஜமாகவே என் ஆவல் அதிகமாகிறது.. தங்கள் அவதாரம் நிகழ இருப்பதற்குள் இன்னமும் என்ன என்ன நிகழ்த்திக் காட்டுவீர்களோ.. நந்தகோபருக்கு மதுராவில் ஏதும் ........"
"உனக்கு எப்போதும் அவசரம் தான்.. பொறுமையாகக் கவனி.. அதோ பார்.. நந்த கோபன் மதுராவை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டான்"
(தொடரும்)

Sunday 5 May 2013

க்ருஷ்ணாவதாரம்-7

க்ருஷ்ணாவதாரம்-7
-----------------------------

"ஆதிசேஷா, நான் சொன்னதை நன்றாக கவனித்து மனசிலே பதிந்து கொண்டாயல்லவா, இந்த அவதாரத்திலே.. உன்னுடைய பங்கு எது எப்படி என்று சொல்லிவிட்டேன்.. நீ கணித்து தந்த நேரமெல்லாம் சரிதானே.. அப்படியே செய்துவிடலாம் அல்லவா"

"பிரபு.. அனைத்தும் செய்வது நீங்கள்.. நான் என்னவோ தனியாக செய்வது போலவே கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள்"
"நன்றாக நினைவிருக்கட்டும் . இந்த அவதாரத்தில் செய்து தீர்க்க வேண்டியதான காரியங்கள் நிறைய இருக்கின்றன"
"ப்ரபோ.. இந்த லோகம் இயங்குவதும், உயிரினங்கள் ஜீவிப்பதும் , அவை மரணமெய்துவதும், நதியிலே பிரவாகம் உண்டாவதும், மழை பொழிவதும், பனி உண்டாவதும், வெயில் இருப்பதும் எல்லாம் தங்கள் லீலா விநோதங்கள்.. ஏன் இப்போது நான் தங்களுடன் சம்பாஷித்துக் கொண்டிருப்பதும் கூட நீங்கள் சித்தத்தில் நினைத்திருப்பதால் தான்.. அப்படியிருக்க நீங்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் இப்படி சொல்லிக் கொள்வது தான் விந்தையாக இருக்கிறது"
"அதிருக்கட்டும் சேஷா... அங்கே பார்.. கோகுலத்து நந்தகோபனை"

பூலோகத்திலே இந்த சமயம் கோகுலத்திலே ஆயர்களின் மூத்தவனான நந்தகோபன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனுக்கு அவனே பேசிக் கொண்டான்
' ஹ்ம் மழை பொய்த்துப் போனது .. பசுமை என்பதே காணாமல் போனது.. இந்த பசுக்களும் கன்றுகளும் மேய்ச்சலுக்கு போவதற்குக் கூட பசுந்தரைகள் இல்லாமல் போய்விட்டதே.. வற்றாத யமுனையிலே கூட  ஜலம் குறைந்து கொண்டே வருகிறது"
"அங்கே யாருடன் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்" நந்தகோபரின் மனைவியான யசோதை அவரை வினவியபடி அந்த கிருஹத்தை விட்டு வெளியே வந்து பார்த்தாள்
ஒருவருமில்லை.. நந்தகோபர் வானம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது
'அப்படி என்ன ஆகாசத்திலே அதிசயத்தைக் கண்டீர்கள்.. "
யசோதையும் வானம் பார்த்தாள்
வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு பூலோகம் பார்த்து கைகூப்பி வணங்குவதை ஆதிசேஷன் கவனித்தான்.
"ப்ரபோ இதென்ன ஆச்சரியம்.. ஸர்வலோகமும் கை கூப்பி தொழும் தாங்கள் யாரைத் தொழுகின்றீர்கள்"
"உஷ் .... இங்கே வா .. பூலோகத்திலே அந்த உரையாடலைக் கவனி"
"ஓ யசோதைத் தாயாரைக் கவனித்து தான் தாங்கள் தொழுது நின்றீர்களா"
"ஷ் ஷ்.. கவனி "
"யசோதை.. வானம் வறண்டு காண்கிறோம்.. நம் ஆயர் குலத்து பசுக் கூட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு மழை அவசியமாகிறது.. அதான் வானத்தைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தேன்"
"ஆமாம் ஸ்வாமி.. நானும் வேறொன்றை நினைத்திருந்தேன்.."
"என்ன அது"
"இது சமயம் மதுராவிலே தேவகி அம்மையாருக்கு பிறந்த  ஆறு குழந்தைகளை யமனுலகம் அனுப்பியிருப்பான் அந்த கம்ஸன்.. அந்த வேதனை சொல்லி மாளாது"
"ஹ்ம் .. என்ன செய்வது யசோதை.. விதி விளையாடுகிறது.. இதெல்லாம் அந்த மஹா விஷ்ணுவின் கண்களில் தெரியவே தெரியாதா.. பகவான் கல்மனசுக்காரனாக மாறிவிட்டான் என நினைக்கிறேன்"
" ஏன் இப்படி சிரிக்கிறாய் ஆதி சேஷா.... சொல்லி விட்டுத்தான் சிரித்தால் என்ன"
"இல்லை ஸ்வாமி.. பக்தனுக்கு எப்போதும் தங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.. ஆனால் நீங்கள் தான் எல்லாவற்றையும் மன்னித்து அருளும் தயாளனாக இருக்கின்றீர்கள்"
இந்த சமயம் கோகுலத்து தெருவிலே கர்காச்சாரியார் நடந்து வருவது கண்டு நந்தகோபரும், யசோதையும் அவரை வரவேற்றார்கள்
"வர வேண்டும் வர வேண்டும்"
"நந்தகோபா.. உன்னுடன் முக்கியமானதொரு சங்கதி பேச வந்தேன்"
கர்காச்சாரியாரின் குரலில் இருந்த விஷேஷ கவனம் நந்தகோபருக்கு ஆச்சரியம் தந்தது
(தொடரும்)

Monday 3 December 2012

க்ருஷ்ணாவதாரம்-6

கம்ஸனுக்கு அந்த யோசனை வந்தது..

"வ்ருஷ்ணி வம்சத்திலே அக்ரூரன் இருக்கிறானே அவனை அழைத்து வாருங்கள்.. இந்த நேரம் போக வேண்டாம்.. நாளை சூரியோதயத்துக்குப் போனால் போதும்.. மிகவும் கவனம்.. அவனிடம் யாரும் சினம் கொண்டு பேசிவிட வேண்டாம். பக்குவமாகப் பேசிட வேண்டும்"

காலையில் கம்ஸனை சந்திக்க அக்ரூரன் வந்தான்.

"மன்னா தாங்கள் என்னை அழைத்ததாக ராஜாங்க சேவகர்கள் வந்து செய்தி சொன்னார்கள்"

"ஆம் ஆம் நான் தான் உன்னை அழைத்து வரும்படி சொன்னேன்.. நீ சௌக்கியம் தானே"

"நான் நன்றாக இருக்கிறேன் மஹாராஜா.. விஷயத்தைச் சொல்லுங்கள்.."

" முனிசிரேஷ்டரான வியாஸர் வரவிருக்கின்றாராமே .. அது குறித்து ஏதும் உனக்குத் தெரியுமா.. அதுவுமில்லாமல் நேற்றைக்கு ஹஸ்தினாபுரத்திலிருந்து பீஷ்மரிடம் இருந்து வசுதேவரை அனுப்பி வைக்கும்படி ஓலை வந்திருக்கிறது"

"மஹாராஜா இதெல்லாம் ராஜாங்க காரியம் எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்"

"ஹா ... ஹா.. இதை என்னை நம்பச் சொல்கிறாயா அக்ரூரா.. உனக்கும் வசுதேவருக்கும் இருக்கும் சிநேகிதமும் நெருக்கமும் எனக்குத் தெரியும்.. அதுவுமில்லாமல்.. நீ போன மாசம் தானே ஹஸ்தினாபுரம் போனாய்"

"பிரபு நீங்கள் வசுதேவரை சிறைபிடித்து வைத்த பின்பு நான் போயிருக்கிறேன்.. இந்த சிறை விவகாரம் எல்லா தேசத்துக்கும் தெரிந்து விட்டது.. இதில் என்ன ஒளிவு மறைவு ரகசியம் இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை"

"அதிருக்கட்டும், அங்கே ஹஸ்தினாபுரத்திலே மூத்தவன் திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது,, பாண்டுவோ பரம் சாது.. அவனும் நோய் பீடிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.. அந்த ராஜ்ஜியம் என்ன ஆகும் அக்ரூரா"

"மன்னாதி மன்னா.. அங்கே தான் பீஷ்மர் இருக்கிறாரே.. அவர் இருக்கும் போது அந்த ராஜ்ஜியத்துக்கு ஒரு கெடுதலும் வந்துவிடமுடியாது.. அவரிடம் யுத்தம் செய்ய அந்த எமதர்மனுக்கும் யோசனை வராது"

"அது தானப்பா கவலை.. அந்த பீஷ்மன் வசுதேவரைக் கூட்டிக் கொண்டு போக வேணும் என்கிறான்.."

"அனுப்பிவிட்ட்டால் என்ன மஹாராஜா"

"எப்படி எப்படி அவர்களது மகன் என்னைக் கொல்லுவான் என தேவரிஷி சொல்லியிருக்கிறாரே"

"அதனாலென்ன தேவகி இங்கே இருக்கட்டும். வசுதேவரை மட்டும் அனுப்புங்கள்.. தீர்ந்தது காரியம்"

"ஆ ..அதெல்லாம் நான் ஆலோசித்துப் பார்க்காமல் இருப்பேனா.. தேவகியை என்னிடத்திலே விட்டுவிட்டு தான் மட்டும் ஹஸ்தினாபுரம் போக வசுதேவர் சம்மதிக்க மாட்டார்

"அப்போது இருவரையும் அனுப்புங்கள்"

"அக்ரூரா.. நீ தான் எனக்கு உதவ வேண்டும்"

"எப்படி"

"வசு தேவரை சந்திக்க வேண்டும்.. அதன்பின்னே பீஷ்மருடன் செல்ல வசுதேவருக்கு விருப்பமில்லை என்பதாக அவரே மனமுவந்து சொல்வது போல செய்ய வேண்டும்"

"அதாவது சிறைப்பட்டிருக்கும் ஒருவர் அந்த சிறையிலிருந்து வெளியே ஸ்வந்தந்திரமாக வருவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் தருணத்திலே அதை தானே வேண்டாம் என சொல்லனும்.. எப்படி மஹாராஜா நீங்கள் இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள்.. உங்களோடு வசுதேவரை அனுப்ப முடியாது என பீஷ்மரிடம் சொல்லிவிட வேண்டியது தானே"

" என் பலம் சினம் இதெல்லாம் தெரிந்து தான் பேசுகின்றாயா அக்ருரா.."
..
"எனக்கென்ன மஹாராஜா.. இந்தக் காரியத்தை நான் செய்யப் போவதில்லை.. மரணம் என்பது பகவான் கையில் இருக்கிறது.. நான் வருகிறேன்"


"போங்கள் யாரும் எனக்குத் தேவையில்லை.. நான் பீஷ்மனுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.. அந்த க்ருஷ்ண த்வைபாயன வியாசனை நான் பார்க்கப்போவதுமில்லை.. யாரங்கே !!!!!.. நான் நாளை வேட்டைக்கு கானகம் போக முடிவு செய்து விட்டேன்.. வேண்டியதைச் செய்யுங்கள்"


நதிக்கரையிலே அலங்கரிக்கப்பட்ட ரதம் நின்று கொண்டிருக்கிறது.. வியாச முனிவர் வருவதால் அவரை சம்பிரதாயமாக வரவேற்க படை பரிவாரங்களுடன், உக்கிரசேனன் வந்திருந்தான்.. கம்சனின் மாமன் தேவகன், அக்ரூரன் இன்னும் பிரதானிகள் அங்கே நின்று கொண்டிருந்தனர். கம்ஸன் வரவில்லை..

தூரத்திலே படகு நதிப் பிரவாகத்திலே முந்திக் கொண்டு வருவது தெரிகிறது.. உக்கிரசேனன் இப்போது வாத்தியம் வாசிப்பவர்களைப் பார்த்து தலையசைக்கிறான்.. அவர்கள் மங்களமானதொரு இசையினை வாசிக்கின்றார்கள்.. அந்த படகு இப்போது கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்துக்கு வந்துவிட்டது

இரண்டு படகுகள்.. முதல் படகிலே தான் வியாஸர் இருக்கிறார்.. பராசர மஹாரிஷியின் புதல்வர்.. குருவம்சத்தின் மூத்தவர்.. சில வருஷங்களுக்கு முன்பு அவர் மதுராவுக்கு விஜ்யம் செய்த போது மதுரா நகரமே கோலாகலமாக இருந்தது.

ஆடி ஆடி படகு கரைக்கு சமீபித்தது.. சேவகர்கல் விரைந்து சென்று படகைப் பிடித்த ஒரு மரத்திலே கயிறு கொண்டு கட்டினார்கள்.

வியாஸர் மெதுவாக இறங்கினார்

"என்ன அக்ரூரா.. சௌக்கியமா"

அக்ரூரன்.. ரிஷியை நமஸ்கரித்து அவரிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்கினபின்னாலே அவருக்குப் பக்கத்திலே மாஹா தேஜசுடன் நின்று கொண்டிருந்தவரைக் கவனித்தான்.

"என்ன பார்க்கிறாய் அக்ரூரா.. இது விதுரன்.. விசித்திரவீரியரின் புதல்வன்.. மஹா ஞானி.."

அக்ரூரன், விதுரரை நமஸ்கரித்தான்

'அக்ரூரா.. நாம் இப்போது நேராக. தேவகியைக் காணப் போகலாமா"

'அவர்கள் இருவர் படும் துன்பமும் சொல்லி மாளாது ஸ்வாமி.. உங்கள் தரிசனம் அவர்களுக்கு ஆறுதல் தரும்.. அங்கே போவதற்கு முன்பு தாங்கள் என் இல்லத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பது ப்ரார்தனை"

'அக்ரூரா இதென்ன உன் இல்லத்துக்கு சும்மா அழைக்கிறாய் என பார்த்தால்,, தின்பதற்கு இத்தனை வைத்திருக்கிறாய்"

"ஸ்வாமி பழம் மற்றும் பால் தானே வைத்திருக்கிறேன்.. நீங்கள் பசியாறும் தருணத்திலே நானும் வசுதேவர் , ,தேவகியின் கஷ்டங்களை உங்களுக்கு தனித்து சொல்ல வாய்ப்பிருக்குமே அது தான்"

வியாசர் பயணித்த ரதம், கஜராஜ அரண்மனை வாசலுக்கு வந்தது

வசுதேவரும், தேவகியும் வியாஸரைக் கண்டதும், மிகவும் ஆறுதலானார்கள்.. ஆனால் அவர்கள் அழுகை நிற்கவில்லை

"ஸ்வாமி.. தேவ வாக்கு மஹரிஷி நாரதர் சொன்னார் என்பதனால் என் அண்ணா கம்ஸன், என் குழந்தைகளைக் கொன்று வருகிறார்.. குழந்தைகளை இழந்த தாயின் வேதனை எப்படி என்பது உங்களுக்குத் தெரியும்.. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.. விதிக்கு இசைந்து,, கையாலாகதவளாக அப்படியே இருக்கிறேன்.. எனக்கென்னவோ நாரதரின் வாக்கிலே நம்பிக்கை இல்லை.. என் அண்ணா எல்லாக் குழந்தைகளையும் எமனுலகு அனுப்பி விட்டு நான் சோகம் அதிகமாகப் போய் சித்த ஸ்வாதீனம் இல்லாதவளாக ஆகலாம்"

இந்த இடத்திலே வசுதேவர் தேவகியை முறைத்துப் பார்த்தபடி, " தேவகி,, என்ன பேசுகிறாய்.. தேவ ரிஷியின் வாக்கிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.. அதனை வியாசரிடமே சொல்லுகிறாய்.. என்ன இது இப்படிப் பேசலாமா"

வசுதேவரின் கரத்தினைப் பற்றியபடி, வியாசர் பேசலானார், " மகளே தேவகி.. உன் துன்பம் எனக்கு புரிகிறதம்மா.. இது தெய்வ காரியம்.. நாரதனின் வாக்கு பலிக்கும்.. அந்த எட்டாவது சிசு உன் கர்ப்பத்தில் தானம்மா வர இருக்கிறது.. வசுதேவா கிட்டே வா.. இது தேவரகசியம்.. உங்கள் இருவருக்கும் சொல்கிறேன்"

இருவரும் முனிவருக்கு அருக்கே போனார்கள்..

சில விநாடிகள் கழித்து தேவகியின் கண்களில் கோடி மின்னல் ப்ரகாசம்

"ஸ்வாமி நீங்கள் சொல்வது வேடிக்கை இல்லையே.. இந்த அபலையிடம் உங்களைப் போன்ற முனிவர்கள் பரிகாசம் செய்யமாட்டார்கள் என்று திட்டவட்ட்டமாக நம்புகிறேன்.. ஆனால் நீங்கள் சொல்லுவது போல் நடக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்"

இந்த நேரம் மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் ஆதிசேஷனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்

(தொடரும்)

Monday 26 November 2012

க்ருஷ்ணாவதாரம்-5

கம்ஸன் இப்போது மிகவும் ஆவேசம் கொண்டவனாகவும், அடுத்து நடக்க வேண்டியதான காரியங்களை மள மள என்று செய்து கொண்டிருப்பவனாகவும் இருக்கிறான்

"யாரங்கே "

சேவகன் ஒருவன் ஓடி வந்து தண்டனிட்டு நின்றான்

" வாயிலில் காத்திருக்கும் ரதங்கள் எல்லாம் அரண்மனையின் பின் புறம் செல்லச் சொல்லு.. ஒரே ஒரு ரதம் மட்டும் நிற்கட்டும். சேனாதிபதி... எங்கே போனாய்...."

கம்சனின் ஆத்திரம் கொப்பளித்து எழும்பி, வார்த்தைகளாக ஆணைகளாக அந்த சபா மண்டபத்தினை நிறைத்தது..

"இதோ என் தங்கை தேவகியை கொலைக் களத்துக்கு அழைத்துப் போய், சிரச்சேதம் செய்து விடுங்கள்.. எப்படி குழந்தை பிறந்து வந்து என்னைக் கொல்வதென்பதைப் பார்த்து விடுகிறேன்"

கம்ஸனின் தகப்பனார் உக்கிரசேனன் அவனை நெருங்கி," கைகளைப் பிடித்துக் கொண்டு, மகனே.. இதென்ன கோரம்.. உன் நாவிலிருந்தா இப்படி வார்த்தைகள் வருகின்றன.. என்னால் நம்ப முடியவில்லை.. இதெல்லாம் கனவாகத்தான் இருக்க வேண்டும்"

"அப்பா இது கனவல்ல.. நிஜம்.. நிஜமே.. என்ன தயக்கம் .. இழுத்துப் போ தேவகியை"

அந்தக் காவல் வீரன் தேவகியை சமீபித்து செல்லும் போது வசுதேவர் , சற்றே மறிப்பது போல நின்று கொண்டு, கம்சனை நோக்கி இரண்டு கரங்களையும் யாசிக்கும் பாவனையில் நீட்டிக் கொண்டு,

" மன்னர்க்கெல்லாம் மன்னா .. எங்களுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி உங்களைக் கொல்லும் அது .. உங்களுக்கு மருமகளாகவோ மருமகனாகவோ அல்லவா ஆகிறது.. நீங்கள் தூக்கி கொஞ்சி மகிழும் குழந்தை.. அதெப்படி கொல்லும்.."

" இதோ பார்.. உன் கோரிக்கையெல்லாம் என்னிடம் எடுபடாது.. கொண்டு செல். வீரனே.. இன்னும் ஒரு விநாடி தாமதம் செய்தாயானால் என்ன செய்வேன் என எனக்குத் தெரியாது"

இப்போது வசுதேவர் இன்னும் கெஞ்சும் குரலில், " மன்னருக்கு இன்னும் மனமிரங்கவில்லையா.. எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நானே கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறேன்.. தேவகி ஒரு பாவம் அறியாதவள்.. அவளை விட்டு விடுங்கள்" 

கம்சன் இப்போது முன்னும் பின்னும் நடக்கலானான்.

" சரி.. உங்கள் இருவருக்கும் உயிர் பிச்சை தருகிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனையுடன்.. நீங்கள் இருவரும் கைதிகளாக கஜராஜ அரண்மனையில் மிகவும் கடும் காவலுடன் சிறை வைக்கப்படுகின்றீர்கள்.. அங்கே தான் உங்களுக்கு எல்லாம்.. .. வசுதேவரே.. நீர் இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அது போல உங்கள் குழந்தை பிறந்த மறு கணம் அது என்னிடம் வர வேண்டும்.. அது பிறந்த நேரம் தொடங்கி, என் பார்வைக்கு வரும் நேரம் வரை தான் அதன் ஆயுள்.. என் கைக்கு வந்ததும் அதனை எமனுலகம் அனுப்புவேன்.. அக்ரூரா... கஜராஜ அரண்மனையில் காவல் அதிகம் செய்ய வேண்டும்"

சில வருஷங்கள் கடந்து போயிருந்தன.. தேவகியின் இரண்டு குழந்தைகளை அதன் மாமன் கம்சன் எமனுலகம் அனுப்பியிருந்தான்.. யதுகுலத்தினரிடையே உண்டான போரட்டத்தையும் அடக்கியிருந்தான்.. எட்டாவது குழந்தைக்கு அவனது வெறி அடங்கா மனது காத்திருந்தது

அன்றைக்கு அரண்மனையிலே, சபா மண்டபத்திலே முக்கியமானதொரு ராஜ்ஜிய ஆலோசனையில் இருந்தான்.. இரண்டு மந்திரிகள் அவனிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்த சமயம்.. மண்டப வாயிலில் சேவகன் ஒருவன் மணடியிட்டு மன்னனின் கவனத்தைக் கவர்ந்தான்.


கம்சன் கம்பீரமாக தலை அசைத்து அவனை அருகே அழைத்தான்..

சேவகன் தாள் பணிந்து , "ராஜாதி ராஜ சமூகத்தினை நாடி ஹஸ்தினாபுரத்திலிருந்து தூதுவன் ஒருவன் வந்திருக்கிறான்'

"வரச் சொல்"

தூதன் வணங்கிவிட்டு, "மன்னா நான் கங்கை மைந்தர். மஹா வீரர் பீஷ்மரின் சொற்களைத் தாங்கி வந்திருக்கிறேன்.."

"விஷயத்தைச் சொல்"

" தங்கள் தங்கையையும் மாப்பிள்ளை வசுதேவரையும் , பீஷ்மர் தனது விருந்தினராக அழைத்துப் போக பிரியப்படுகிறார்.. அதன் பொருட்டு என்னை இங்கே தூது அனுப்பியிருக்கிறார்"

கம்சனின் கோபம் தலைக்கு ஏறியது..

சிம்மாசனத்தினைப் பின்னுக்குத் தள்ளி எழுந்தான்.. ஆனால் அவனது மந்திரிமார்கள் அவனை சைகயால் அமைதி செய்து விட்டு அவனிடத்திலே வந்து, "பிரபோ இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய சங்கதி.. இதிலே சினம் கொண்டால் பின்னர் நமக்கே இடைஞ்சல் வரலாம்.. பீஷ்மர் மஹா வீரர்.. அவரது பகை நம்மை அழித்து விடும்.. இந்த தூதுவனுக்கு நாளை பதில் சொல்வதாக சொல்லி, விருந்தினர் அரண்மனைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்..

நாளை சூரியோதத்திற்குள் இந்த தூதுவனுக்கு நல்ல பதில் சொல்வதற்கு என்ன உபாயம் என்பதை யோசித்து விடலாம்"

அரண்மனை மேன்மாடத்திலே அந்தரங்கமானவர்களுடன் கம்சன் ஆலோசனை தொடங்கினான்.. அடிவானத்திலே நிலவு வந்திருந்த நேரம் தொடங்கின சம்பாஷணை.. நிலவு சற்றேறக்குறைய நடுவானத்திற்கு வந்திருந்தது.. கருமை நிறைந்த இரவானபடியால் நஷத்திரங்கள் அதிகம் காட்சிக்குத் தெரிந்தன.. 

கம்சனின் மனதிலே அந்த திட்டத்தின் முதல் வித்து உதித்தது.. அதனால் என்னவோ நிலவு அந்த சமயம் .மிகவும் கறுத்திருந்த மேகத்தின் பின்னே பயந்து ஒளிந்து கொண்டது போலிருந்தது

(தொடரும்)


Sunday 18 November 2012

க்ருஷ்ணாவதாரம்-4

"நாராயண நாராயண.. ஸ்வாமி இன்றைக்கு நான் தங்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும்படியாகிவிட்டது"

"அதிருக்கட்டும் நாரதா.. கம்ஸனிடம் அவன் முடிவு பற்றி சொல்லியாகிவிட்டதா"

"ஆமாம் ப்ரபோ.. நீங்கள் ஆணையிட்டபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து இங்குதான் வந்தேன்"

"ஸ்வாமி.. நாரதன் வந்தால், அவனைக் கொண்டு சேஷன் தான் காரணமென்று சொல்ல வைப்பதாக சொன்னீர்கள்.. நானும் சேஷனும் அதற்கே காத்திருக்கிறோம்.. இதோ நாரதனும் வந்தாயிற்று"

"லஷ்மி.. ஏன் இந்தப் பதற்றம்.. பொறுமை.. எல்லா விளக்கமும் கிடைக்கத்தானே போகிறது"

"நாராயண நாராயண.. ஓ ஏற்கனவே என் பெயர் இங்கே பிரஸ்தாபமாகியிருக்கிறது.. என்ன சங்கதி என்று தான் தெரியவில்லை.. ஆதி சேஷா நீயாவது சொல்லக் கூடாதா"

"தேவரிஷி.. நடப்பதெல்லாம் பெருமாளின் லீலை.. ஆனால் பகவானோ நானே காரணமெனச் சொல்லுகின்றார்"

"லஷ்மி, சேஷா, நாரதா.. இப்போது நான் பேசலாமா"

" ஸ்வாமி.. அடியாள் இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்"

"சொல்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு நான் பூலோகத்தில் அவதரிக்க வேண்டியதொரு அவசியம் வந்திருப்பதாக சேஷன் என்னிடம் சொன்னான்.. அதெப்படி சொல்கிறாய் எனக் கேட்டேன் - பஞ்சவித ஜோதிர் ஸிந்தாந்த பவர்த்த கத்வேன ஞான ப்ரகாச ஷோஸ்ய ப்ரஸித்தம் என்றும் சொன்னானப்பா அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்"

"நாராயண நாராயண.. சேஷா இது தான் சங்கதியா.. மனம் , வாக்கு , காயம் இதனை சுத்தி செய்ய வல்வனாயிற்றே நமது சேஷன்.. நஷத்திரம், அதனோடு கிரஹங்களுக்கு இருக்கும் சம்பந்தம், நமது சேஷனுக்கு தெரிந்த அளவுக்கு இங்கே யாருக்குத் தெரியும்.. அதிருக்கட்டும் ப்ரபோ.. எனக்கொரு ஐயம்"

"சொல் நாரதா..."

"தேவகி, வசுதேவருக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மட்டும் சொல்லச் சொன்னீர்கள்.. ஆனால் தாங்கள் தான் அந்த எட்டாவது குழந்தையாக அவதரிக்க இருப்பதாக சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டீர்களே அது ஏன் "

"மூவரும் கேளுங்கள்.. இந்த அவதாரம், கம்ஸனை வதைப்பதற்கானது மட்டுமல்ல.. இதிலே நிறைய வைபவங்கள், செய்தாக வேண்டியிருக்கிறது.. அவதாரங்களில் மிகவும் மஹத்துவம் கொண்டதான இதிலே எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.."

"ஸ்வாமி அடியாளுக்கு ஆவல் மேலோங்கியிருக்கிறது"

"என்ன அது லஷ்மி சொல் எல்லோரும் தெரிந்து கொள்வோம்"

"இந்த அவதாரத்திலே தாங்களின் திருநாமம் என்னவாக இருக்கப் போகிறது"

"உங்களுக்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதுமா.. இல்லை எப்படி இருக்கப் போகிறேன் என்றும் தெரிய வேண்டுமா"

"ப்ரபோ இதென்ன கேள்வி.. ஆவலைத் தூண்டி விட்டு, பின் ஏமாற்றம் தரும் வகைக்கு இஃது என் மாயை எனச் சொல்ல மாட்டீர்கள் தானே"

"சரி மூவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. நான் சொன்ன பிறகு கண்ணைத் திறக்கலாம்"

'நாராயண நாராயண.. ப்ரபோ.. ஆவல் தாங்க முடியவில்லை... கண்ணைத் திறக்கலாமா"


'கொஞ்சம் பொறுங்கள்... இப்போது திறக்கலாம்"

ப்ரும்மாண்ட உருவமில்லை.. கையிலே சார்ங்கமில்லை, சுதர்சனமில்லை. பாஞ்சஜன்யம் இல்லை, கௌமேதகம் இல்லை.. பத்மம் இல்லை.. ஏன் திருமார்பை அலங்கரிக்கும் துளசியுமில்லை.

ஆனாலும் மூவரும் அப்படியே லயித்துப் போயிருந்தார்கள்.. 

அவர்கள் எதிரே ஒரு சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தது.. கார்மேக வர்ணம்.. கையிலே குழல், தலையிலே மயிற் பீலி, பட்டுத் துணி.. ஆனாலும் மேலாடை இல்லை.மார்பிலே சின்னதாக இரண்டு முத்து மாலைகள் அத்தனை தான் அலங்காரம் 

லோகத்திலிருக்கும் ரம்மியமெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சின்னக் குழந்தையாக மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் இப்படி இருக்கும் என்று மாஹால்ஷ்மி, சேஷன், நாரதன் மூவரும் கை நீட்டி சொல்லியிருப்பார்கள்

இப்போதும் கை நீட்டி மூவரும் ஒன்று சேர குரல் தந்தார்கள், " ப்ரபோ.. ப்ரபோ... ப்ரபோ.. இந்தக் குழந்தையாகவா அவதரிக்கின்றீர்கள்.. இந்த திரு அவதாரம் என்ன பெயர் பெறவிருக்கிறது"

அந்தக் குழந்தை மிகச் சிவந்த உதடுகளைக் குவித்து பழிப்புக் காட்டி விட்டு, களுக் களுக் என்று சிரித்து விட்டு , மழலைக் குரலில்,,, க்ருஷ்ணாவதாரம் ... அதிருக்கட்டும் வாருங்கள் பூலோகத்திலே கம்ஸன் என்ன செய்கிறான்  என கவனிக்கலாம்.. இனிமேல் தான் நிறைய காரியங்கள் இருக்கிறது " என்று சொல்லியது

(தொடரும்)

Friday 16 November 2012

க்ருஷ்ணாவதாரம்-3

தன் விதியைக் குறித்து நாரதர் சொன்னதும், கம்சனுக்கு முதலில் குப்பென்று வியர்த்து தான் போனது. 

"நிறுத்துங்கள்.. இந்த ஆட்டம் கொண்டாட்டம் , சங்கீதம் எல்லாம் நிற்கட்டும்.. யாரங்கே "

கிட்டத்தட்ட முழங்கினான் என்றே தான் சொல்ல வேண்டும்.

நாரதர் வந்ததையோ, அவர் கம்சனின் மரணம் குறித்து சொன்ன செய்தியையோ , அந்த சபா மண்டபத்திலே இருந்த இன்னொருத்தரும் கேட்டிருக்கவில்லை.. எல்லோருக்கும் கம்சனின் கோபம் கொப்பளிக்கும் கண்களின் மீது கவனமாக இருந்தது.

சிலர் கம்சனை நெருங்கி, என்னவென விசாரிக்கலாம் எனத் தலைப்பட்டார்கள். அவர்களை கம்சன் நிமிர்ந்து உற்று நோக்கி பார்வையாலேயே , "நில்லுங்கள்" என்று சொல்வது போல் பார்த்தான்.

கம்சனின் தந்த உக்கிரசேனன் கம்சனை நெருங்கி, " குழந்தாய்.. கம்சா.. ஏன் இந்த பதற்றமும் , கோபமும் .. என்ன நடந்தது.."

"விபரமாகச் சொல்ல வேண்டுமா.. கையிலே தம்பூர் வைத்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் நாராயண நாமம் சொல்லிக் கொண்டு லோகமெல்லாம் சுற்றிவருவாரே.. தேவரிஷி நாரதர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் என் முன்னே தோன்றி, இதோ இந்த யது குல திலகம் வசுதேவனை  மணந்து கொண்டு உல்லாசமான வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளே உங்கள் ஆசை மகள் தேவகி, இவர்களின் எட்டாவது குழந்தை என்னைக் கொன்று விடுமாம் ... சொல்லிவிட்டு அதோ அந்த வானத்திலே கரைந்து போனார் அந்த தேவ ரிஷி"

கம்சனின் கை சென்ற திசையிலே உக்கிரசேனனின் கண் ஒரு தரம் அரண்மனை முற்றத்தின் வழியே , மிக சொற்பமாக தெரிந்த ஆகாசத்தைப் பார்த்து திரும்பியது.. 

அவரது முதுமைக்கு கம்சனின் இந்த ஆவேசம் கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்க வேண்டும்.. பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு, நிற்கவும் முடியாமல் தடுமாறினார்.. ஒரு சேவகன் விரைந்து வந்து, ஆசனம் ஒன்றை போட்டுவிட்டு, " பிரபோ.. அமர்ந்து கொள்ளுங்கள் " என்று சேவித்து நின்றான்.

அந்த கோலாகலமான விருந்து அப்படியே நின்று போயிருந்தது.. மீண்டும் உக்கிரசேனன் புதல்வனைப் பார்த்து கேட்டார்,

"குழந்தாய் கம்சா.. நாரதர் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. தேவரிஷி வேறெந்த விபரமும் சொல்லவில்லையா"

இவர்கள் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் , தேவரிஷி, வைகுண்டத்தில், ஶ்ரீ ஹரியின் தரிசனத்துக்கு காத்திருந்தார்.

அக்கறையாக துவாரபாலகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார், " என்றைக்கும் பெருமான் என்னைக் காக்க வைத்தது கிடையாது.. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நீங்கள் என்னைக் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

"மன்னிக்க் வேண்டும் தேவரிஷி,, நாங்களாக எதுவும் சொல்வதில்லை, பரமாத்மாவின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்"

'ம்ம்ம் புரிகிறது.. நான் அதோ அப்படி நிற்கின்றேன்.. ஆணை வந்ததும் சொல்லுங்கள்"

"ப்ரபோ.. இதென்ன விளையாட்டு.. நாரதன் வந்திருக்கிறான்.. உங்களைத் தரிசிக்க அவனை அழைத்து  ஆசிர்வதிக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

" மஹாலஷ்மி.. இதில் என்னுடைய காரியம் எதுவுமில்லை.. இதோ நம்மிருவரையும் மெத்தை போலத் தாங்கி, குடை பிடித்துக் கொண்டிருக்கின்றானே.. சேஷன். இவன் செய்யும் வேலை இது"

"ப்ரபோ.. இதென்ன உங்கள் லீலைகளுக்கு என்னைக் காரணம் சொல்லுகின்றீர்கள்....பாருங்கள் மாதா என்னை சந்தேகமாகப் பார்க்கின்றார்கள்"

"ஆதிசேஷா.. நீ தானேயப்பா கிரஹங்கள், அவை நல்கும் பலாபலன்களை வைத்து அன்றைக்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாய்"

"ப்ரபோ.. இதென்ன.. நீங்களும் சேஷனும்.. என்னை விட்டு விட்டு நிறைய விஷயங்கள் பேசுகின்றீர்கள் போலிருக்கிறதே"

" மஹா லஷ்மி, சேஷா நீங்கள் சற்று காத்திருங்கள்.. இதற்கு நாரதன் தான் சரியான விளக்கம் சொல்லக் கூடும்.. அவனை அழைக்கிறேன்"

(தொடரும்)

Monday 12 November 2012

க்ருஷ்ணாவதாரம் -2

அரண்மனை கோலாகலம் கொண்டிருந்தது.. மேல் மாடத்திலே அனைத்து தூண்களிலும் கதம்பமாக பூக்கள் சுற்றப்பட்டிருந்தது.. ராத்திரி நேரத்திலே அரண்மனையினைப் பார்த்தவர்கள் இது தேவேந்திரனின் அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகப் பேசிக் கொண்டார்கள். அப்படியாக தீபங்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.

வ்ருஷ்ணி தேசத்திலே இப்படி ஒரு கோலாகலக் கொண்டாட்டம் நடந்ததில்லை என்பதே எங்கும் பேச்சாக இருந்தது.. அரண்மனை மட்ட
ுமல்ல... தலைநகரமான மதுரா எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது..

அரண்மனையின் முன் மாடத்திலே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டதொரு ரதம் த்யாராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, யாரோ முக்கியஸ்தர் வெளியிலே கிளம்ப் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது..ரத சாரதி, அந்த அஸ்வங்களுக்கு போதுமான தீனியும் , குடிக்க ஜலமும் தந்து தயார் செய்திருக்க வேண்டும். அவை ரதத்திலே பூட்டப்பட்டிருப்பதனாலோ, நீண்ட பிரயாணத்திலே நில்லாமல் ஓட வேண்டும் என்ற காரியத்தினாலோ சோர்வு கொண்டதாகத் தெரியவில்லை .. மாறாக வெகு உற்சாகமாக துள்ளியபடி இருந்தன.. அந்த குதிரைகள் அரண்மனை வாசலைலைப் பார்ப்பதும் பின்னர் கொஞ்சம் ஏமாற்றம் கொள்வதும், அதன் பின்னர் சுபாவமாகத் துள்ளுவதுமாக இருந்தன..

ரதசாரதியும் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.. அரண்மனையின் வெளியிலேயிருந்த தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வாசலைப் பார்ப்பதாகவே இருந்தார்கள்

வருகை அற்வித்து கட்டியம் கூறுகின்றவன் கூட அந்த ப்ரம்மாண்ட கதவுகளின் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார்.. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தபடியால், அந்தக் கதவுகளில் வேலைப்பாடாகக் கோர்க்கப்பட்டிருந்த சின்ன மணிகள் அசைந்து, டிங் டிங் என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.. சில சமயம் எல்லா மணிகளும் ஆடி சப்தமெழுப்புகின்ற மாதிரி காற்றானது வேலை செய்தது

இருபது குதிரை வீரர்கள் முன்னேயும், நாற்பது ரதங்களில் சீதனங்கள் பின் தொடரவும், பிரதான ரதம் நடுவிலேயுமானதாக அந்தப் பவனி அரண்மனையினை விட்டுக் கிளம்பத் தயாராக இருக்கிறது..

வாத்தியக் கோஷ்டியினர் மங்கள இசையினை வெகு ரசனையுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

அரண்மனையின் உள்ளே, விருந்து தடபுடலாக இருக்கிறது.. பக்கத்து தேசத்திலிருந்தெல்லாம், ராஜாக்கள் வந்திருந்தார்கள்..

அவர்களெல்லாம் மஹாராஜா கம்சனின் ஆப்த சிநேகிதர்கள்.. கம்சனின் தங்கை தேவகியின் திருமணத்திற்கு வாராதிருப்பார்களா.. திருமணம் நேற்றே முடிந்துவிட்டது.. இன்றைக்கு விருந்து முடிந்து தேவகி, தன் புருஷன் வீட்டுக்கு கிளம்புகிறாள்.

எந்த தேசத்து ராஜாவோ கம்சனின் காதுகளில் என்னமோ ஹாஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டும்

கம்சனின் பரிகாசச் சிரிப்பு வெடித்துக் கிளம்பி காற்றிலே கலந்து கொண்டிருந்தது..

இந்தக் கணத்திலே அந்த இடத்திலே தேவ ரிஷியான நாரதர் தோன்றினார்.

"வருக வருக தேவ ரிஷி வருக.. உங்கள் வருகையால் இந்தக் கம்சன் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறான். நீங்கள் என் தங்கை தேவகியையும் மாப்பிள்ளை வசுதேவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.."

"அதெற்கென்ன கம்சா.. என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.. நீ தான் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.. அதைச் சொல்லவே நான் வந்தேன்..... நாராயண நாராயண"

"எனக்கென்ன வந்தது தேவ ரிஷி அவர்களே.. என்னை நெருங்க துணிவுள்ளவுள்ளவன் பூவுலகில் இருக்கின்றானா என்ன"

" நீ இப்படி நினைத்துக் கொள்வது தான் ஆபத்து கம்சா.. இதோ புது மணப்பெண்ணாக சிரித்துக் கொண்டிருக்கின்றாளே உன் தங்கை தேவகி.. அதோ பிரமுகர்களிடம் விநயமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே யது குல மன்னர் ,, உன் மாப்பிள்ளை வசுதேவர்.. இவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை.. உன்னைக் கொல்வான்.. அவனே உனக்கு எமன்"

இந்த வாக்கியம் முடிந்து போன போது கம்சனின் பதிலுக்கு காத்திருக்காமல் நாரதர் அந்த இடத்திலிருந்து மறைந்தார்..

கம்சன் முகம் இறுகியிருந்தது...

காற்றும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அசையாமல் நின்று போயிருந்தது

(தொடரும்)

Sunday 11 November 2012

க்ருஷ்ணாவதாரம் -1

க்ருஷ்ணரைக் குறித்த ஏராளனமான செவி வழிக் கதைகள், குழந்தைகளுக்கு சோறூட்டும் போது சொல்லப்படும் தந்திரங்கள் நிறைந்த கதைகள். தத்துவ உலகில் பகவத் கீதை குறித்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், பண்டிகைக் காலங்களில், காலட்சேபங்களில் சொல்லப்படும் கதைகள்

இந்தியாவில் க்ருஷ்ணன் புராணம் கலந்த அதிசயம்.. இந்த பரந்த தேசத்திலே பல தரப்பட்ட கலாச்சாரங்களில் கலந்திருக்கும் ஆச்சரியம் க்ருஷ்ணன்..

நான் வாசிக்கின்ற பொழுதெல்லாம் புதியதும், பரவசம் தரக்கூடியதுமான க்ருஷ்ண வைபவங்களை நினைத்து நினைத்து சந்தோஷிக்கின்றேன்.

பிள்ளைப் பிராயத்து விளையாட்டு, அரசியல் நிகழ்வுகளை நடத்தி வைத்தவன், பெரும் தத்துவ உரைக்கு ஆசிரியன்.

இரிஞ்சாலக்குடா எனும் கேரள நாட்டு ஊரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும் ( ஐ , ஜி ஆர் மரார் எனும் போலிஸ் அதிகாரி பாத்திரம் நினைவுக்கு வரலாம்.. அந்தப் பெயரில் வரும் ஐ .. குறிக்கும் ஊர் இரிஞ்சாலக்குடா !!!!!)

இந்த இடத்திலிருக்கும் ரயிலடிக்குப் பக்கத்திலே திருக்காட்கரை எனும் திவ்ய தேசமிருக்கிறது.. அங்கே நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் பெருமாள் காட்காரையப்பன்)

இந்தப் பெருமாளை பாசுரம் பாடி மகிழும் நம்மாழ்வாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்


என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

ஒருவன் கள்ளத்தனம் செய்கிறான்,, சூதுவாது செய்கிறான் என்றால் அவனை விட்டு விலகி நிற்க வேண்டாமா.. ஆனால் இந்த கள்ளத்தனம் கொண்ட கண்ணனை ராப்பகலாக நினைத்து தான் கரையேற வேண்டும்

நம்மாழ்வாரை மிஞ்சி சொல்ல என்ன இருக்கப் போகிறது

இரண்டு தினங்களில் தீபாவளி இருக்க, இந்த க்ருஷ்ணாவதாரம் தொடரை தொடங்குகிறேன்

இந்த பதிவு அறிமுகம் தான்.. கதையின் முதல் பதிவு... தீபாவளி கழித்து தொடங்குகிறேன்