Saturday 26 November 2011

இவர்கள்-1

இவர்கள்-1

மத்திய அமைச்சர், சரத் பவாரினைக் கன்னத்தில் அறைந்ததன் எதிரொலியாக, இணையத்தின் சமூக தளங்களில் பரிமாறப்பட்ட கருத்துகள் உரையாடல்களில், பிரபல எழுத்தாளர், இரா. முருகன் அவர்கள் பதிந்திருந்த ஃபேஸ் புக் மெசேஜ் என்னை இதனை எழுதத் தூண்டியதெனச் சொல்லலாம்

காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரைக் கன்னத்தில் அறைய வாய்ப்புக் கிடைத்தால் கொலவெறியோடு கையை ஓங்குவது யாரை நோக்கி? எனக்கு - மகாபாரதத்தில் தருமன் என்பதாக முருகன் அவர்கள் சொல்லியிருந்தார்

பாரதம் சொல்ல விழைந்த மூலக் கருத்தின் அடையாளம் தர்மன் என்பது நான் நம்புகின்ற சிந்தனை. அதனை மறுமொழியாக்கி

Draupadi tells her husband, to give up this forest living, raise an army and fight evil kauravas for what is this rightfully thiers,
I think king of men, is time to use your authority on the greedy dhiridharashtras who are always offensive. there is no more time to ply the kurus with forgiveness: and when the time for authority has come, authority must be employed. the meek are despised, but the people shrink from the severe; he is a king who knows both
Yudhishtra respons by reminding draupadi that he has given his word. to figh, he says to her is easy; to forgive is more difficult. to be patient is not to be weak; to seek peace is always wiser course. Draupadi however wonders why her husband does not feel outrage, like kshatriya warrior, at the injustice of their situation

why does not your anger blaze ? truly O best of bharathas, you have no anger, else why is that your mind is not moved at the sight of your brothers and me ?
YUDISHTRA : FOREBEARANCE IS SUPERIOR TO ANGER
------

Let me add what the German Philosopher Immanuel Kant said : when moral worth is at issue, what counts is not actions, which one sees, but those inner principles of action that one does not see
------
பாரதம் சொல்ல வந்த சாரத்தின் மொத்த வடிவம் தர்மன் தான்.. முருகன் சார் கையைக் கெட்டியா புடிச்சுண்டு வாண்டாம் சார்னு சொல்லுவேன்.

இந்த மேற்கோள் குருசரண்தாஸ் எழுதிய The Difficulty of being good என்ற புத்தக்த்திலிருந்து

பிறகு உதித்த சிந்தனை தான் இந்த தொடர்

காப்பியக் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ஒரு தொடர் பதிவு

பாரதத்திலிருந்தே தொடங்கலாம்.. அகர வரிசையில்

அபிமன்யு
அர்ஜுனன்
அஸ்வத்தாமன்
பீமன்
பீஷ்மர்
தர்மன்
த்ருஷ்டத்யும்னன்
திருதராஷ்ட்டிரன்
திரௌபதி
துரோணர்
துச்சாதனன்
துரியோதனன்
கர்ணன்
காந்தாரி
க்ருஷ்ணன்
குந்தி
நகுலன்
சகாதேவன்
சகுனி
விதுரன்

என்பதாக நான் ஒரு முதற்கட்ட பட்டியலைத் தயார் செய்தேன்.. இவற்றில் விட்டுப் போனதாகக் கருதப்படும் பெயர்களை நண்பர்களும் சொன்னார்கள்

கதாபாத்திரங்கள் வெறும் புனைவின் வடிவமல்ல என நமது கிரேக்கப் பாட்டன் அரிஸ்டாட்டில் Poetics ல் சொன்னதில் எனக்கு முழு சம்மதம் இருக்கின்றது

இந்த முதல் பட்டியலில் யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதில் எனக்கு தடுமாற்றமும் தீர்மானமும் கலந்து இருக்கின்றது

அதை சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வந்து தொடரை தொடங்குகிறேன்

இவர்களில் யாரிலிருந்து தொடங்கலாம் என்று நீங்களும் சொல்லலாம்.. சுருக்கமாக ஒரு காரணமும் சொல்லி..

Thursday 24 November 2011

பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 3)

அரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூனை, கீரி, கோட்டான், வேடன் அடங்கிய கதை ஒன்றைச் சொல்கிறார்

காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.

காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.

”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது”
எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.

எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.

எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின.

பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது

“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”

அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர்.

நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.

ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.

”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது.
அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது

Wednesday 23 November 2011

பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 2)

பீஷ்மரிடம் தர்மன் கேட்கும் சுவாரசியமான கேள்வி

”பாட்டனாரே ! நல்லொழுக்கம் கொண்ட பெண்கள் எப்படி விளங்குகிறார்கள்?”

“தர்மா இதற்கு நான் இரண்டு பெண்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலைச் சொல்கிறேன்...
ஸூமனை எனும் பெண், சொர்க்கத்துக்கு அப்போது தான் வரும் சாண்டிலி எனும் பெண்ணைக்
கேட்கிறாள்


“நீ வரும் போது பார்த்தேன்.. மிகவும் ஒளியுடன் பிரகாசமாக வந்து இறங்கினாய்.. நீ
பூலோகத்திலே என்ன தவம் செய்தாய்.. என்ன மாதிரி யாகம் செய்தாய்”


“அதெல்லாம் ஒன்றும் இல்லை; நான் என் கணவனுடன் சுமூகமாக இருந்தேன். என் மாமியார்
, மாமனாருடன் நல்லுறவு வைத்திருந்தேன். என் குழந்தைகளை கோபித்ததில்லை.. என்
வீட்டில் பொருட்களை கவனமாக வைத்திருந்தேன். உணவு பொருட்களையும் தானியங்களையும்
கண்டபடி விரயம் செய்ததில்லை.. உணவு உண்ணும் போது அவை சிந்தாமல், விரயமாகாமல்
பார்த்துக் கொண்டேன்.. கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டால் நான்
அலங்காரமே செய்து கொள்ள மாட்டேன்”
-----------------------------
உபரியாகக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ;

கணவன் ஊரில் இல்லாத போது அலங்காரம் எதற்கு என கேட்கும் பாட்டு ஒன்று விவேக
சிந்தாமணியில் இருக்கிறது தெரியுமோ


உண்ணல்பூச் சூடல் நெஞ்சுஉவத்தல் ஒப்பனை
பண்ணல்எல் லாமவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்தம் பிரிவினை அறிந்தும் தோழீநீ
மண்ணவர் தனைஇது மடமை ஆகுமால்


இதே மாதிரி நம்ம பாட்டி ஔவை சொன்னதும் ஒன்னு இருக்கு
நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆளல்லா மங்கைக்கு அழகு

ராமாயணத்திலே இப்படித்தான் இராமனைப் பிரிந்தாள் சீதை.. அசோகவனத்தில் அலங்காரமின்றியே இருந்தாள்.. அவளைக் கண்ட அனுமன் இதை இராமனிட்த்திலே சொல்லியும் இருக்கான்.. ஆனால் இலங்கை மீது படை கொண்டு இராவணன் வதமும் முடிந்து இராமன் சீதையைப் பார்க்க இருக்கும் சமயம்..


சீதை தான் அதே கோலத்தில் தான் வர விழைகின்றாள்.. ஆனால். விபீடணன் வேண்டுகோளினால் அலங்காரம் செய்து கொண்டு வருகிறாள். இதைக் கண்ட இராமன் சீற்றம் கொண்டு ,” ஒரு குடும்ப்ப் பெண் கணவல்லாத தருணத்திலே இப்படி அலங்காரம் செய்வாளா என

கம்பராமாயணம் யுத்த காண்டம் திருவடி தொழுத படலம் பாடல் 47 முதல் 55 வரை
இராமனின் சீற்றம்

பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 1)

அம்பு படுக்கையிலிருக்கும் பீஷ்மரிடம் தர்மன் பல நீதிகளை கற்றுக் கொள்கிறான். அவன் கேட்கும் மிக முக்கியமான ஐயம்


“சில நேரங்களில் நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் காட்சி
அளிக்கிறார்கள் . அப்படியான தருணத்திலே அவர்களின் தன்மையினை எப்படி
அறிந்து கொள்வது”


இதற்கு ஒரு நரி, புலியின் கதையினை சொல்கிறேன்..


“புரிகன் என்ற அரசன் மக்களை கொடுமை செய்து அரசாண்டதால் மறு பிறவியிலே ஒரு
நரியாகப் பிறந்தான்.. தெய்வ அருளால் அந்த நரி தன் முற்பிறப்பின் நிலையினை
அறிந்த்து. இப்பிறப்பிலே நல்ல வாழ்வு வாழ வேண்டும் என நினைத்து, நரியின்
இயற்கை குணமான மாமிச குணத்தைக் கூட விட்டு காய், கனிகளை தின்று வாழ்ந்து
வந்த்து. காட்டிலே இல்லாமல் மயானத்திலே வாழ்ந்தது. இந்த நரியினை மற்ற
நரிகள் பொறமையுடன் பார்த்தன. ஒரு நரி இப்படி மாமிசன் உண்ணாமல் இருப்பது
இயற்கைக்கு முரணானது எனச் சொல்லி அந்த நரியின் உறுதியினைக் குலைக்க மற்ற
நரிகள் முயன்றன.


ஆனால் அந்த நரி மசியவில்லை.


ஒரு நரி இப்படி வாழ்வதை அந்த காட்டரசின் ராஜாவான புலி கேள்விப்பட்டது .

அப்படியான நரியினை தனது அமைச்சராக்கலாம் என நினைத்து அந்த நரியினை
வரவழைத்தது புலி..

புலியின் பேச்சைக் கேட்ட நரி நிதானமாகப் பதிலளித்தது


”உங்களின் அரச போகங்களைக் கண்டு எனக்கு மயக்கமோ ஈடுபாடோ உண்டாகவில்லை.
என்னுடைய குணத்தை அறிந்து நீங்கள் என்னை மந்திரியாக்க அழைத்த்தாகச்
சொன்னீர்கள். என்னுடைய குணம் இங்கே ஏற்கனவே பதவியிலிருப்பவர்களுடன்
ஒத்துப் போகாது. அதனால் நிறைய பிரச்சனைகள் தோன்றும். ஆதலால் உங்களிடம்
மந்திரியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை”

புலிக்கு நரியை விட மனமில்லை.

நரியின் குணத்திற்கு தகுந்த படியே தான் ஆட்சி செய்வதாகவும் ஏற்கனவே
பதவியிலிருப்பவர்களால் நரிக்கு எந்த சிரம்மும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் உத்திரவாதம் தந்து நரியை சம்மதிக்க வைத்துவிட்டது புலி.

நரியும் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. நிறைய நிர்பந்தங்களைச் சொன்னது


“இதோ பாருங்கள் புலி ராசா. நான் சொல்வதைக் கவனமாக கேளுங்கள்..

நான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனைகளை தனிமையில் தான் சொல்வேன். அதை
நீங்கள் என்னை சபையிலே சொல்ல வற்புறுத்தக் கூடாது.

என் மீது நீங்கள் ஒரு போதும் நம்பிக்கை இழக்க்க் கூடாது.

இங்கே ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்மீது
எந்த அபிப்ராயம் கொள்ளக் கூடாது. அதன் வழி என் மீது எந்தக் குற்றமும்
சுமத்தக் கூடாது.

நான் ஆலோசனை சொல்லும் போது சில ஆலோசனைகள் எச்சரிக்கை போலத் தோன்றும்.
அதன் காரணமாக நீங்கள் யாரையும் துன்புறுத்தக் கூடாது”

இத்தனை நிர்பந்த்த்தையும் புலி ராசா ஒப்புக் கொண்டார்

நரியின் செயல்பாடுகள் மிக திருப்தியாக இருந்தன.


ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் செய்த மோசடிகள் முறியடிக்கப்பட்டன.

அவர்கள் மேற்கொண்டு மோசடிகள் செய்ய முடியவில்லை..


நரியின் செல்வாக்கு அதிகமானது.


ஏற்கனவே பதவியில் இருந்து சுகமனுபவித்து வந்தவர்களுக்கு நரியின் நேர்மையான செயல்பாடு பெரும் எரிச்சலை உண்டு செய்தது. புலி ராசா நரியினை முழுமையாக நம்பினார். அதனால் அவை நரியை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டின


புலி அரசனுக்கு எனத் தயாரிக்கப்பட்ட விசேஷ விருந்து உணவினை ரகசியமாகக் கிளப்பிக் கொண்டு போய் அந்த நரியின் வீட்டிலே போட்டு விட்டன அப்படி திட்டம் தீட்டிய விலங்குகள். அப்படியே செய்தும் விட்டன.

இது அந்த நரிக்குத் தெரிந்தும் சும்மா இருந்து விட்டது; காரணம் புலி

அரசனுக்கு தான் விதித்த நிபந்தனைகளை அவன் கடைபிடிக்கிறானா என அறிய ஒரு
சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்தது நரி.


தனக்காக தயாரிக்கப்பட்ட விசேஷ உணவு களவு போனதாகவும் அது அந்த நரியின் வீட்டில் இருப்பதாகவும் தகவலை புலி அரசன் பெற்றான். அதனை சோதித்தும் அறிந்தான். அவனுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த நரியினை கடுமையாக தண்டிக்க முடிவு செய்து கர்ஜனை செய்தான்.


புலியின் தாயார் புலி தன் மகனுக்கு புத்திமதி சொன்னது. “இதோ பாரப்பா நீயாக மனம் உவந்து தந்த பரிசுகளையெல்லாம் அந்த நரி இதுவரை ஏற்றுக் கொண்டது இல்லை. அவையெல்லாம் மிக விலை உயர்ந்த பரிசுகள். அப்படிப்பட்ட நரி அரசனான உனக்காக தயாரிக்கப்பட்ட உணவை களவு செய்து இருப்பான் என நினைப்பது மடமை. அரசனாகிய உனக்கு இன்னும் சற்று பொறுமை வேண்டும். இது அந்த நரியின் மீது பொறாமை கொண்டவர்கள் செய்த செயலாக இருக்க வேண்டும். நல்ல ஆலோசனை கூற நீ அந்த நரியினை அமைச்சராக்கிய உடன் அந்த நரி சம்மதிக்கவில்லை. அது வெகு நேரம் யோசித்த்து. பின்னர் உனது வற்புறுத்தலின் பேரில் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது சம்மதித்த்து.”

இப்படி தாய்ப்புலி மகன் புலிக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில் புலி அரசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகன் ஒருவன் இது பொறாமை கொண்ட பிறர் செய்த சதி தான் என்பதை சாமர்த்தியமாக கண்டுபிடித்து புலி அரசனிடம் தெரிவித்தான்.


நரியினை அவசரப்பட்டு சந்தேகித்த தனது மட்ததனத்தை நினைத்து புலி ராசா ரொம்பவே வருந்தினான். அந்த நரியினை வரவழைத்து மன்னிப்பு கேட்டது . ஆனால் அந்த நரி இந்த சம்பவத்தை ஒரு அவமானமாக கருதி தான் உயிர் விட்த் தீர்மானித்திருப்பதாக சொன்னது. புலி அதிர்ச்சி அடைந்தது முடிவை மாற்றிக் கொள்ள மன்றாடியது.


நரி சொன்னது , புலி ராசாவே நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் தோன்றுவது இயற்கை. ஒரு அரசன் இதனை நல்ல ஆலோசனையின் மூலமும் அவசரப்படாத சிந்தனை மூலமுமே தீர்க்க இயலும் . என் மரணம் அதனை உனக்கு சொல்லட்டும்” எனச் சொல்லி உயிரை விட்டது

-----------

பாரத்த்திலே தர்மன் பலரிடம் ஆலோசனை கேட்பதாக சம்பவங்கள் வருவதைக் காணலாம். அது தர்ம்ம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில்
சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பெட்ரண்ட் ரஸ்ஸலின் Outline of Philosophy எனும் நூலில் படித்த்து நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்

Philosophy arises from an unusually obstinate attempt to arrive at real
knowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible.

தர்மனிடம் கேட்பதற்கு பொறுமை இருந்தது எல்லாவற்றையும் விட தெரிந்தது போதும்
எனும் lazy Sceptisim இல்லை. Cocksure இல்லை; vague இல்லை

Saturday 19 November 2011

ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது

இதனை எழுத ஆரம்பிக்கும் போது மணி இரவு 7.25 காண்பிக்கின்றது, என் வீட்டு ஹாலில் இருக்கும் சுவர்கடிகாரம்

அன்றைக்கும் இப்படி இரவு 7.25 ஆகியிருந்தது.. இரவு ட்யூட்டிக்கு அப்பாவைக் கவனித்துக் கொள்ள வர வேண்டிய நர்ஸ் இன்னும் வந்திருக்கவில்லை

போன் செய்த போது, கோடம்பாக்கம் சமீபத்தில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.

டிராபிக் ஜாம் சார்.. அதான் லேட்டாகுது.. பஸ் நகர மாட்டேங்குது சார்

என்னங்க எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. ஆட்டோ புடிச்சு வாங்க.

நர்ஸ் வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகிவிடலாம்..

தானே டியூப் ஃபீடிங் செய்வதாக என் மனைவி சொல்லி, அப்பாவுக்கு மூக்கு வழியே பொருத்தப்பட்ட குழாய் வழி அந்த திரவ உணவினை வார்த்தாள். அப்பாவின் வயிற்றில் அது சென்று விழும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

அளவுக் குவளையில் இருந்த உணவு முழுவதும் மூக்கு வழி சென்று முடிந்தது

நான் அப்பாவின் கால்பக்கத்தில் நின்று கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 20, 2008, இரவு 7.40 அப்பா கடைசி மூச்சை இழுத்து விட்டார்

தகனம் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்கு முன்னாலே , ஷவரம் செய்துண்டு போகணும்..

வீட்டுல போய் செய்துக்கலாமா

இல்லை வேண்டாம்.. சலூன்லே செய்துண்டு போங்க‌

நானும் என் அண்ணனும், அந்த சலூனின் பக்கத்து பக்கத்து இருக்கைகளில், வெள்ளை ஏப்ரான்கள் போர்த்தப்பட்டு, கன்னங்களில் கத்தி உறவாடிக் கொண்டிருந்த்து

சின்ன வயசில் நான் முடிவெட்டிக் கொள்ள ரொம்பவே அடம்பிடிப்பேன்.. அப்பா என்னை சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு ஏசியா சலூனுக்கு கொண்டு போவதற்குள் அழுது
அழுது சட்டைக் காலர் நனைந்திருக்கும்.

அன்றைக்கு சாயங்காலம் க்ருஷ்ணபவன் ஹோட்டலில் இட்லி வாங்கித் தருவாதாக அப்பா சத்தியம் செய்தபின்பு தான் தான் சலூன் நாற்காலியிலேயே உட்காருவேன்..

வாசலில் கால் அலம்பிக் கொண்டு வீட்டிற்குள் வந்தேன்.

ராத்திரிக்கு இட்லி..

ஹாலின் மூலையில் ஒரு விளக்கு வைத்திருந்தார்கள்.. அதன் முன்பு ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது

நாளைக்கு இந்த வருஷத்தின் நவம்பர் 20.

Thursday 17 November 2011

அப்பா என்ற உன்னதம்

நவம்பர் 3, 2008 , என் அப்பா மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.. தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் போதிய முன்னேற்றம் கிடைக்காதமையால் 11 நவம்பர் 2008 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்து வந்தோம். குழாய்களின் வழியாக உணவு.. படுத்த படுக்கையாக எந்த அசைவும் இன்றி இருந்தார்.. 20 நவம்பர் 2008 ல் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தபடி அவர் உயிர் பிரிந்தது

பேச்சின்றி, அழைத்த குரலுக்கு அவர் பதிலின்றி இருக்கும் போது, என் சகோதர சகோதரிகளுக்கு 18 நவம்பர் 2008 ல் எழுதிய மெயில்

--------

அப்பா என்ற உன்னதம்

இது இயற்கை- இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை

அவர் தனது கடமை எல்லாம் முடித்துவிட்டார். அவர் செய்தே ஆக வேண்டியதென ஒன்றும் இல்லை

நம்மை நன்றாக படிக்க வைத்தார்.

நாம் விரும்பியவாறே கல்யாணம் செய்து வைத்தார்.

பிறருக்கு தீங்கு நினைக்காத வாழ்க்கை வாழ்ந்திருக்கார்.

இதை நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்கார்.

நாம் எந்த தவமும் செய்யாமல் கிடைத்த வரம் அவர் பிள்ளை நாம் என்ற நிலை.

இதை விட அவர் நமக்கு என்ன செய்ய வேண்டும்.

அவருக்கு நாம் தான் எதுவும் செய்ய முடியாது.

நம்முள் அப்பா எத்தனை வியாபித்திருக்கார் என்பதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள ஒரு சோகமான சந்தர்ப்பத்தை அவரே நிறுவிக் கொண்டிருக்காரோ என நினைக்கிறேன்.

நமக்கு இன்னமும் ஒரு 40 ஆண்டு வாழ்வு என உத்தேசமாக கணக்கு வைத்தாலும் அவர் அத்தனை காலமும் நமக்கு பக்கத்தில் இருந்த வழி நடத்தினாலும் எனக்கு ஆசை அடங்காது.

ஆனால் இயற்கை அப்படி ஒரு தளர்ந்த நிலைக் கணக்கை எப்போதும் எழுதுவதில்லை.

இத்தனை புத்தகம் படிக்க சொல்லிக் கொடுத்த அவர் நடத்தும் கொஞ்சம் கஷ்டமான பிராக்டிகல் வகுப்பு இது.

நாம் பாஸ் பண்ணும் போது அவர் இருக்க மாட்டார்.

அவர் சபாஷ் என சொல்வது கேட்காது.ஆனால் கண்டிப்பாக சபாஷ் என சொல்லிருப்பார்.எப்பவும் நேரடியாகப் பாராட்டமாட்டாரே.இப்பவும் அப்படித்தான் செய்யப் போகிறார்.செய்யட்டுமே அப்பாதானே.

அவர் நம்மை விட்டுப் பிரிவதில்லை என்பது சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை.

தந்தை என்பது வெறும் உயிர் தந்த உறவில்லை.


அது நமது ஞானம்


என்றும் நம்மோடு உடன் வரும் ஞானம்

இன்றே புறப்பட்டுப் போய் நாளை என் பிள்ளை வருவான், பெண் வருவாள் அவாளுக்கு இப்படி இது பிடிக்கும் என பெருமாளிடம் வாதாடி நமக்கென மீண்டும் புத்தேளிர் உலகில் ஒரு கிளாஸ் ரூம் வைத்துக் கொண்டு காத்திருப்பார். அவரிடம் வாதாடி ஸ்ரீபாலாஜி தோற்றுத்தான் போவான்

அவர் அப்படியான ஓர் உன்னதம்


சும்மா மூன்றே எழுத்தில் இந்த உன்னதத்தை அப்பா எனச் சொல்கிறோம். அப்படிக் கூப்பிட்டால் எப்பவுமே என்ன எனத் திரும்பிப் பார்ப்பார்

இப்ப பார்க்காம இருக்கார்

Saturday 5 November 2011

டைரிக் குறிப்பு-4

“இத்தனை பொஸ்தகத்தையும் தூசி வராத, க்ளீனா வச்சிருக்கேன். எப்ப எந்த பொஸ்தகம் கேட்டாலும் கரெக்டா எடுத்துத் தரேன். ரொம்ப முக்கியமா இந்த பழைய டைரியெல்லாம், வரிசையா அடுக்கி வச்சிருக்கேன். என்னவெல்லாமோ எதைப் பத்தியெல்லாமோ டைரில எழுதி வச்சிருக்கீங்க., இத்தனை வருஷம் என்னை லவ் பண்ணிக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க.. என்னைப் பத்தி இந்த டயரிலெ எங்கயாவது எழுதிருக்கீங்களா”

ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, "அன்னிக்கு நான் பெங்களூருவுக்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டு கிளம்பிச் சென்றேன் நினைவிருக்கா.. மறுநாள் டைரியில் என்ன எழுதிருக்கேன்னு படிச்சுக் காட்டறேன்.. டைரியை எடுத்துட்டு வா”

ஆசையாக அவள் எடுத்து வந்த டைரியிலிருந்து :

முழு ராத்திரி பஸ்ஸில் உடகார்ந்து கொண்டு பயணித்து வருவது, ரொம்பவுமே ஆயாசத்தை உண்டாக்குகின்றது.. இன்றைக்கு ஆபிசுக்குப் போகவில்லை.. பகல்பொழுதிலே தூங்கி கழித்து, சாயங்காலம் வெளி வெராண்டாவிலே நாற்காலியினைப் போட்டுக் கொண்டு, ரோட்டைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்..

அப்போது தான் இதனை எழுதுகிறேன். கிராமத்துப் பக்கத்தில் இரண்டு வேளை குளிப்பார்கள் என்பதனை தினசரி ஊர்ஜிதம் செய்து கொள்கிறேன். குளித்து முடித்து ஈர உடையுடன் பெண்கள் அந்த ரோட்டின் வழியே நடந்து போகின்றார்கள்.. பக்கத்திலே இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்து ஸ்நானமாக இருக்க வேணும்.. இப்படி தினசரி நங்கையர்கள் மட்டும் குளித்து விட்டு வீடு போகின்றார்களே.. இவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குளிக்க மாட்டார்களா

இதென்ன நேற்றைக்கான பக்கம் எழுதுவுமே எழுதாமல் காலியாக இருக்கின்றதென்பதை

அப்போது தான் கவனித்தேன்.. சரி நேற்றைக்கு என்ன செய்தோம்.. பெங்களூருவில் இருந்தமையால் டயரி எழுதவில்லை..

ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்று திரும்பி வரும்போது, தலை வலிக்கிறதாகச் சொல்லி மாத்திரை கேட்டாள், வாங்கிக் கொடுத்தேன்.. தலை நோவு சரியானதா எனக் கூட விசாரிக்கவில்லை.. பஸ்ஸுக்கு நேரமானதால்,, அவசரமாக கிளம்பி வந்தேன்.. இன்றைக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதிப் போடலாம்.. தலைவலி விசாரணைக்கு போஸ்ட் கார்ட் போதும்

இப்போது புதுசா சில பெண்கள் அடுத்த தெரு பிள்ளையார் கோவில் குளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இத்தனை நாள் இந்தப் பெண்களை நான் கவனித்ததில்லை.. இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவந்தவர்களாக இருப்பார்களா?

சரி புதுசாக ஜெண்டில்மேன் என ஒரு படம் வந்திருக்கின்றதாகவும், அது நன்றாகவும் இருப்பதாகவும், பக்கத்து அறைகளில் வாசம் செய்யும் எல்லோரும் பொதுவாகப் பேசிக் கொள்கிறார்கள்.. இன்றைக்கு மாலை ஆட்டத்திற்கு செல்ல நேரமிருக்கின்றதா.. தாராளமாக இருக்கின்றது.. கொஞ்ச நேரத்திலேயே அந்த சினிமா ஆசையினைத் துறந்தேன்.

காரணமிருக்கின்றது…

இப்போது புதுசாக நாலு பெண்கள், குளத்துப் பக்கத்திலிருந்து வருவது தெரிகிறது..

“நீங்க எனக்கு படிச்சு காட்டினது போதும்”.. வெடுக்கென கையிலிருந்த டைரியினைப் பறித்தாள்

(2011 வருஷத்திய டைரியினை மட்டும், வெளியில் விட்டு வைத்து, எனது பிற டைரிகள் அனைத்தினையும், தனது பீரோவில் பூட்டி வைத்து விட்டாள் என் மனைவி)

Tuesday 1 November 2011

ஸப்த கன்னியர்


இதனை நவராத்திரி சமயத்தில் எழுதியிருக்க வேண்டும். கொஞ்சம் லேட்டாகி விட்டது. அத்தனை துக்கத்தில் இருந்தேனாகையால் எழுதவில்லை.

இதன் தொடக்கம் எனது இளம் பிராயத்தில், முதல் டில்லி பயணத்தில் என வைத்துக் கொள்ளலாம்

டில்லிக்கு முதன் முறை பயணிக்கின்ற எல்லோரையும் போல், அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் அம்சம் பின்னர் ஆக்ரா வரை ஒரு நடை சென்று தாஜ்மஹாலைப் பார்த்து விட்டு வரலாம் எனும் இன்னொரு அம்சமாக எனக்கும் வாய்த்தது.

பணிக்கர் டிராவல்ஸ் பஸ்ஸில் விடிகாலையிலேயே ஓல்ட் ராஜீந்திரா நகரில் ஏதோ ஒரு ஒடுக்கமான வீதியில் எப்படி அத்தனை பெரிய பஸ் நுழைகிறது என வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என் பக்கத்தில் வந்து நின்று என்னை ஏற்றிக் கொண்டார்கள்..

ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் என சென்று டெல்லிக்குத் திரும்பும் போது தான் அது நிகழ்ந்தது..

டீ குடிப்பதற்காக சாலையோரமாக நிறுத்தினார்கள்.. இறங்கி சாலையின் எதிர்ப்புறம் பார்த்தேன். எனக்கு அசாத்திய கோபம் வந்தது.. இந்த இடத்தை அந்த பணிக்கர் பஸ் ஆசாமி வெறுமனே டீ குடிக்க மட்டும் தேர்ந்தெடுத்திருந்த அநியாயாத்தினால் எனக்கு கோபம் வந்தது.

சிக்கந்த்ரா.. அக்பரின்.. நினைவிடம் எதிரே இருக்கும் டூரிஸ்ட் வசீகர டீ கடையில் ,'வண்டி 10 நிமிடம் நிற்கும்.. டீ காபி... ' என ஹிந்தி அறிவிப்பு செய்யும் இடமா அது..

பள்ளிப் படிப்பின் சரித்திர பாடங்களில் மொகலாய ராஜாக்களில், மிகவும் ஃப்ரென்டிலியான ராஜாவாக அறியப்பட்ட அக்பர் பாதுஷாவின் கல்லறை எதிரே இருக்கிறது.. அதை சுற்றிக் காட்டாமல், அதற்கு எதிரே இருக்கும் டீ கடைக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் அநியாயம்.

பஸ் டிரைவரை விசாரித்தேன்.. இந்த ட்ரிப்பிற்கு இது வரை காண்பித்த இடங்கள் தானாம். அக்பர் லிஸ்டில் இல்லை என கராறாகச் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் அக்பரையும் சேர்த்துக் கொண்டிருந்த பயணத்துக்கு துட்டு அதிகம் தர வேண்டுமாம். இது மஹா அநியாயம் அல்லவா

கூட வந்த எல்லா பயணிகளையும் அழைத்து விபரம் சொன்னேன்,' பாருங்கள் நாமெல்லாம் இதோ எதிரே இருக்கும் அக்பர் பாதுஷாவின் கல்லறையினைச் சுற்றிப் பார்த்துவிட்டு வர அதிகபட்சம் 45 நிமிடங்கள் ஆகலாம்.. ஆனால் இந்த இடம் அவர்கள் லிஸ்டில் இல்லை என டிரைவர் சொல்வது நியாயமில்லை.. இந்த இடத்தில் டீ குடிக்க நிறுத்துவார்களாம்.. ஆனால் அக்பரை பார்க்க நிறுத்த மாட்டார்களாம'

இந்த பிரசங்கம் நன்றாக வேலை செய்தது எனத் தெரியவந்தது.. என்னைக் காட்டிலும் ஹிந்தியில் பிரவாகமாகப் பேசக் கூடிய வட தேசத்து அன்பர்கள் சிலர் டிரைவரை உலுப்பி எடுத்தனர்.. ஏகதேசம் வண்டியில் இருப்பவர் எல்லோரும் அக்பரை தரிசிக்காமல் விடப்போவதில்லை என்பது டிரைவருக்கு ஒருவழியாகப் புரிந்தது

தான் செத்துப் போய் சுமாராக முந்நூற்றி என்பத்தி ஏழு வருஷம் கழித்து தன் சமாதி முன்பு, தீன் இலாஹிக்க்காக இப்படி ஒரு இந்தியக் குடிமகன், தனது சமாதிக்கு முன்பு அமைதியாக கை கூப்பி சேவிப்பான் என பாதுஷா நினைத்திருக்கவே மாட்டார்

ரோடு கிராஸ் செய்யும் போது தான் அந்த பொம்மைக் கடையினைக் கவனித்தேன்

வழக்கமான சாலையோர பொம்மைக் கடைதான் என்றாலும், ஒரு மாதிரியாக என்னை இழுத்தது..

எத்தனையோ வசீகரமான பொம்மைகளில் அந்த ஸப்த கன்னிகைகள் பொம்மை செட் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஆச்சரியமென்ன 24 பிராயமே நிறைந்து, கலியாணமாக பிரம்மச்சாரி பிள்ளைக்கு, மொழுக்கென்று செய்யப்பட்ட கன்னிகைகள் பொம்மைகள் பிடிக்காது போகுமா என்ன?. உபரியாக அந்த பொம்மைக் கலைஞன், மிக ஜாக்கிரதையாக எந்தப் பொம்மைக்கும் வஸ்திரம் இல்லாது செய்திருந்தான் என்பதையும் கவனித்தேன்.. வழக்கமாகவே கடைகளில் நான் பேரம் பேசுவதில்லை. சொன்ன விலையினைக் கொடுத்து வாங்கி விடுவேன்.. இந்த பொம்மைகளுக்கா பேரம் பேசப் போகின்றேன்.. ஏழு பொம்மைகளையும் கவர்ந்து கொண்டு டெல்லி வந்து சேர்ந்தேன்.

அக்கா , அத்திம்பேர், அப்பா, அம்மா எல்லோருக்கும் அந்த ஸப்த கன்னிகைகளை ரொம்ப பிடித்திருந்தது.. அந்த ஏழு பேரும் , நான் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆனாலும் என் சாமான் செட்டுகளோடு கூடவே வந்தார்கள்.. என் அறைகளில் பிரதான இடத்தினை வகித்தார்கள்

இது கலியாணம் ஆகும் வரை நீடித்தது. கலியாணம் ஆகி, புது மனைவியுடன், ஆரத்தி தட்டில் காசு போட்டு வீட்டுக்குள் வந்த முதல் காரியமாக, மனைவியாகப் பட்டவள் என் ரீடிங் ரூமைப் பார்க்க வேண்டும் என்றாள். பெருமையாக அழைத்துச் சென்றேன்.

மிகவும் பிரதான இடத்தில் வஸ்திரம் தரிக்காத இந்த ஸப்த கன்னியர் இருப்பதை கவனித்து முகம் சுளித்தாள். இந்த சிலைகளின் மீதான் எனது ரசனை, என் மனைவியின் மனதில் எனக்கு வழங்கப்பட்டிருந்த மரியாதை (!!! ) என்பதாக , புது மனைவி மனதில் ஒரு போராட்டம் நடந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிந்தது.. கராறாகச் சொல்லிவிட்டாள். இந்த ஸப்த கன்னியர்கள் சிலைகளை சின்னதாக ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து, பரணில் ஏற்றி வைக்க வேண்டும் என..

எனது மறுப்புகள் மெல்ல மெல்ல வலுவிழந்தன. ஸப்த கன்னியர்கள் பெட்டிக்குள் பேக்காகி, பரணை அடைந்தனர்.

என்னிடம் வந்ததிலிருந்து 6 வருடங்கள் அலங்காரமாக இருந்து பின்னர் பரணில் தஞ்சமான அந்த ஸ்ப்த கன்னியரையும் , ஒவ்வொரு நவராத்திரி சமயத்தில், கொலுவில் வைத்து விடலாம் என செய்த எந்த பிரார்த்தனைக்கும் என் மனைவி செவி சாய்க்கவில்லை.. ஏன் கலியாணம் ஆனபின்பு 13 வருடம் , அந்த அட்டைப் பெட்டி கூட என் கண்ணில் காட்டப்படவில்லை.

இந்த வருடம் எப்படியோ , அந்த அட்டைப் பெட்டி கண்ணில் பட்டுவிட்டது.. கொலு பொம்மைகளை இறக்கி வைக்க தனியாக ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தேன்.

அவர் பரணிலிருக்கும் பெட்டிகளை இறக்கி வைக்கலாம் என வந்த தருணம், என் மனைவி வீட்டில் இல்லாத தருணம்.. அது

ஆனாலும் அந்த கன்னிகைகளுக்கு இந்த வருடம் கொலுவில் கொலுவிருக்க சான்ஸ் தரப்படவில்லை.

" என்ன கண்றாவி இது ..என் ப்ரென்ட்ஸ் எல்லாம் இன்வைட் பண்ணுவேன்.. அவங்க கிட்டயெல்லாம்.. என்ன சொல்லுவேன். என் ஹஸ்பென்ட் இதை பல வருஷம் முந்தி வாங்கிட்டு வந்தார்.. ரொம்ப வருஷம் பொத்தி பொத்திப் பாதுகாத்தார்.. இப்படி சொல்லனுமா"

"ஏன் சொன்னா என்னவாம்"

"வரவங்க எல்லாம் .. ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்லப் போறாங்க " இது என் மகள்.

ஸப்த கன்னியர் மறுபடியும் பரண் வாசம் தொடங்கினர்

நவராத்திரி கடந்து இத்தனை நாளான பின்பு இப்ப என்ன திடீரென ஸப்த கன்னியர் ஸ்டோரி என்பவர்களுக்கு உபரியாக நானும் என் மனைவியும் நேற்று இரவு நிகழ்த்திய இந்த உரையாடல் தெளிவைத் தருவதாக‌

" அது என்ன புது புக் வாங்கிருக்கீங்களா"

ஆமாம். Akbar the Emperor of India அப்படினு Dr. Richard Von Garbe என்பவர் எழுதின பொஸ்கம்

இந்த புஸ்தகத்தையும் என்னிடம் இருந்து பறித்து ஒளித்து வைத்து விட்டாள்..