Sunday 13 July 2008

கடிதம்-1


பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.

இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டது

கடிதம் என்று சொன்னாலே எனக்கு பண்டித நேருவின் ஞாபகம் தான் வரும். அவரின் Glimpses of World History இந்திரா காந்தி அவர்களுக்க் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அதில் ஒரு கடிதம்.. நான் அடிக்கடி குறிப்பிடும் வரிகள்

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man, it was written, wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

(நேருவை முழுசாத் தெரிஞ்சிக்க அவரோட இந்த புத்தகத்தை படிக்க சிபாரிசு செய்கிறேன்)

இந்த கடித வரிகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள் ஞாபகம் வரும்


“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம்

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

மாதவியை கணிகையர் குலத்தவளாகவே இளங்கோ அறிமுகம் செய்கிறார். ஆயினும் தான் பண்பு நெறி தவறாதவளே என அவளே கடிதம் வழி சொல்வதாகவும் காட்சி அமைக்கிறார்

நான் இந்த சுவாரசியங்களை இன்னும் விடாமல் வைத்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தின் போது அதற்கு வருந்தி ஓர் இரங்கல் கடிதம் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதும் அவர் அதற்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் ,’ நான் உங்கள் அன்பிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நானும் பிரியங்காவும், ராகுலும் நன்றி சொல்கிறோம்” என்று எழுதியது இப்போதும் எனது சேகரிப்புப் பொக்கிஷத்தில்

மொரார்ஜி தேசாய் அவர்களின் சுய சரிதையில், அமெரிக்க தூதுவர் ஒருவரிடம் பண்டித நேரு அவர்களின் முகம் காட்டாப் பேச்சுதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து ஆவல் காரணமாக அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் சாதாரண Inland லெட்டரில் தன் கைப்பட எனக்கு எழுதிய பதில் கடிதமும் (விளக்கக் கடிதம்) என் பொக்கிஷத்தில் ஒரு முத்து

நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் M. ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக இருக்கும்போது நான் அனுப்பிய தீபாவளி வாழ்த்துக்கு தன் கைப்பட பாராட்டியும் வாழ்த்தியும் எழுதிய கடிதம், பின்னர் ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய ஆசிர்வாதக் கடிதம்.. என் நினைவில் நீங்கா இடம் பெற்றவை

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

1 comment:

dondu(#11168674346665545885) said...

//நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் எஸ். ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர்.//

அவர் பெயர் எம். ஸ்ரீனிவாசன் (மாதவாச்சாரி ஸ்ரீனிவாசன்). என் சித்தப்பாவின் மைத்துனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்