Sunday 27 July 2008

யக்ஷகானம் (மீண்டும் சுஜாதா)



”கணேஷ அது என்னனு பாருப்பா.. நான் இங்கே இவரோட கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கேன்”

“சரி சார்.. இதோ பார்க்கிறேன்”

“கவலை வேண்டாம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. வசந்துக்கு எதுவும் நிகழாது”

“இரண்டு விஷயம்.. என்னை வாக்கியத்துக்கு வாக்கியம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்று நீளமாக கூப்பிட வேண்டாம். என்னை பூலோகத்தில் எல்லோரும் சுஜாதா என்று கூப்பிடுவார்கள்.. நீங்களும் சுஜாதா என்றே கூப்பிடலாம்.. வசந்துக்கு எதுவும் ஆகாது என்று எனக்குத் தெரியும். அவனால் மத்தவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரி”

”உங்களுக்கு விப்ரநாராயணர் சிறப்பு அழைப்பு தந்திருப்பதாக அறிந்தேன்.. அதற்கு உதவுவதே என் பணி... நீங்கள் இங்கே யாரையெல்லாம் பார்க்க நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லவும்; நான் ஏற்பாடு செய்கிறேன்”

“சற்று அவகாசம் தாருங்கள்—ஒரு பட்டியலே தருகிறேன்—நீங்கள் என்னை மன்னிக்க வேணும். இப்படி அட்சர சுத்தமா தமிழ் பேசறது எனக்கு அலர்ஜி. யாதார்த்தமா பேசலாமே.. இல்லேன்னா சாண்டில்யன் கதை மாதிரி நீள நீளமா வாக்கியம் வரும்”

“அதுவும் சரி தான்.. ஆனால் எனக்கு உங்கள் வழக்கப்படி பேசி பழக்கமில்லை.. ஆனால் நீங்கள் பேசினால் புரியும்.. நீங்கள் கதை புனைபவர் என்று சொன்னார்கள்.. உங்கள் படைப்பில் யக்ஷகானம் வைத்து ஒரு புனைவு செய்திருக்கிறீர்கள் என்று ஞாபகம்”

“அட ஆச்சரியமா இருக்கே.. என் கதை உங்களுக்கு எப்படி தெரியும்.. அது மூன்று நிமிஷம் கணேஷனு ஒரு த்ரில்லர்.. யக்ஷகானத்தில் வரும் நிமிஷா, நிமிஷா, நிமிஷா அப்படினு அந்த வார்தை மூணு தரம் சொன்னவுடனே குண்டு வெடிச்சி ஒரு விஐபியை கொல்ற மாதிரி பிளாட்.. இந்த கணேஷ் வசந்த் தான் அதை பிரேக் பண்றமாதிரி எழுதினேன்.”

“ஞாபகம் இருக்கிறது ஸ்ரீரங்.... மன்னிக்கவும் சுஜாதா. இங்கே ஒரு பெரிய நூலகமே இருக்கிறது.. அதில் தான் எடுத்து படித்தேன்.”

“ஆஹா லைப்ரரி இருக்கா அதும் போதும் எனக்கு.. “

” யக்ஷகானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லமுடியுமா”

”அது வந்திட்டு... ஆந்திரா, கர்நாடகாவிலே அதும் பேரு யக்ஷகானம். தமிழ்நாட்டிலே ‘பாகவத மேளா’னு கூட சொல்வாங்க.. பழைய குறவஞ்சி நாடகம் கூட இந்த டைப் தான். பெங்கால்ல இதை “யாத்ரா” னும் அஸாமில “பாவநா” அப்படினு சொல்வாங்க.. நீங்க “பொன்னியின் செல்வன்” படிச்சிருப்பீங்க”

“ஆமாம் படித்திருக்கிறேன்.”

“அதில கூட தேவராளன் தேவராட்டி டான்ஸ் வருமே.. அதெல்லாம் இந்த மாதிரி இசை நாடகம் தான். தமிழ்ல கோபால கிருஷ்ண பாரதியாரோட “நந்தனார் சரித்திரம்” ரொம்ப பிரசித்தம்.. அதே மாதிரி தெலுகிலே தியாகராஜர் “ பிரஹல்லாத பக்த விஜயம்” அப்படினு பண்ணிருக்கார்.. அதுவும் இந்த டைப் தான். தமிழ்ல மெரட்டூர் வெங்கட்ராம சாஸ்த்திரி, ஷாஹாஜி மஹாராஜா இவங்கெல்லாம் கூட இந்த மாதிரி இசை டிராமா போட்டிருக்காங்க”

‘இதோ கணேஷும் வசந்தும்”

வசந்தை ஆலிங்கனம் செய்தபடி ஒரு ஆசாமி

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

அட்டகாசம் - யக்ஷகானம் - சுஜாதாவின் எழுத்துகளைப் பின்பற்றி, அவரது நடையிலேயே அவருக்கு சமர்ப்பணம் ச்செய்வது நன்று நன்று

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

27 சூலை 2008 - 09 அக்டோபர் 2008

ஏன் தொடரவில்லை- நேரமின்மை, பணிச்சுமை காரணமா ? அல்லது மறுமொழிகளே வரவில்லை என்ற ஆதங்கமா ? தொடர்க நண்பரே ! தொடர்க !

நல்வாழ்த்துகள்