Saturday 12 July 2008

வைகுண்ட பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா)


”பாஸ் என்ன இது மௌண்ட் ரோடு ரெஹேஜா டவர்ஸ் மாதிரி இருக்கு; மேலோகம்னா வேற மாதிரி கற்பனை பண்ணிண்டிருந்தோமே எல்லாரும்”

அந்த முகப்பு மிகப் பிரம்மாண்டமாய்... வழுக்கும் தரைகள்.. மூன்று பவுண்டன்கள்.. பீய்ச்சியடிக்கும் தண்ணீர்... அதற்கு கலர் சேர்க்கும் Focus லைட்கள்... சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்..

க்யூப் டைப்பிலான லிப்ட்கள்.. அவற்றில் சிரித்த முகங்களுடன் மனிதர்கள்.. அங்கும் இங்கும் உலாவும் சீருடை தரித்த சிப்பந்திகள்..

”சார் நிஜமாவே இது மேலோகம் தானா.. என்னவோ JFK ஏர்போர்ட் மாதிரி இருக்கு”

“ஏம்பா! எனக்கு மட்டும் என்ன தெரியும்; நான் என்ன பத்து தரம் இங்கே வந்து போயிருக்கேனா”

பார்ப்பதற்கு பளிச்சென்றிருந்த ஒரு பெண் சிப்பந்தி மூவரையும் அணுகி,

“நீங்கள் அந்த வரிசையில் நின்றால் உதவியாக இருக்கும்; அதுவுமில்லாமல் நீங்களும் அதிக சிரமம் இல்லாமல் இருக்கலாம்”

“மிஸ்; நான் உங்களை ஒரு கலை விழாவில பார்த்திருக்கேன்”

“வசந்த்.... இங்க இந்த ட்ரிக்கெல்லாம் எடுபடாது... அவாள்ளாம் மேலோகப் பிரஜைகள். மந்திரமெல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பா.. உன்னை டபக்குனு ஆட்டுக்குட்டியா மாத்திட்டானா கஷ்டம்”

“சார் நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.. இல்லேன்னா நான் ஆடா மாறி... பாஸுகு வேற மட்டன்னா பிடிக்காது”

“உன்ன திருத்தவே முடியாதுடா வசந்த்”

பளிச் பெண் காட்டிய வரிசை டிக்கெட் கௌண்டர் மாதிரி இருந்த இடத்தை நோக்கி நீண்டிருந்தது..

கௌண்டர் ஆசாமி வரிசையில் வரும் எல்லார் தலையிலும் தொப்பி மாதிரி ஒரு சமாச்சாரத்தை வைத்து பின் அங்கிருந்த கம்யூட்டர் மாதிரி ஒரு வஸ்துவிலிருந்து என்னவோ படித்துக் காட்டி பின்னர் ஒரு அட்டையைக் இடுப்பில் கட்டினான்.


“பாஸ் கன்பார்ம். இது வைகுண்டம் தான்.. பாருங்க தலைல சடாரி வைக்கிறாங்க”

”வசந்த்.. கேலி பண்ணாத.. சடாரி எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா”

“சொன்னா தெரிஞ்சுக்கிறேன்..”

”சடம் என்றால் போன ஜென்மா வினையான காற்று; பிறக்கிற குழந்தை முன் ஜென்மா வினையால அழறது. பெருமாள் பாதம் படறதினால போன ஜென்மா வினையெல்லாம் முறிஞ்சிடறது. நாம பெருமாள் பாதம் தேடி போகலேன்னாலும் அவர் நம்மைத் தேடி வருவார்.. அது தான் இது”

”சார்... உங்க பிரெண்ட் அப்துல் கலாம் ஒரு தரம் சுவாமி சிவானந்தரிடம் கேட்டாராம் How can I find my right teacher? அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives! – Wings of Fire ல் படிச்சிருக்கேன்... அது மாதிரி பகதன் ரெடின்னா ஸ்வாமியும் ரெடி.. அதானே”


இப்போது சுஜாதாவின் முறை.. தொப்பி மாட்டினவுடன்.. கௌண்டர் ஆசாமி பவ்யமானான்..

“அய்யா நீங்கள் தானே ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...”

“ஆமாம்பா .. ஆனா ஸ்ரீரங்கத்தில் நான் மட்டும் ரங்கராஜனில்லை”

“அய்யா இந்த கருவி மூலம் உங்களின் விதியைப் படிக்க இயலும்.. இதை பூவுலகில் தலையெழுத்து என்று சொல்கிறீர்கள் அல்லவா. அதுதான்;.. இங்கே பல வருஷ காலம் பிரஜையாயிருக்கும் ஒருவர் புதிதாக கவர்ந்து கொண்டுவரப்படும் உயிர்க்கு சிறப்பு பிரஜா அந்தஸ்த்து அளிக்க பரிந்துரைக்க முடியும்.. அப்படி ஓரு பரிந்துரை ஒருவர் உங்களுக்கு செய்திருக்கிறார்”

“ எனக்கா .. யாருப்பா அது ரொம்ப ஆச்சரியமா இருக்கே”

“அவர் இப்போது ஸ்ரீஹரியின் சந்நிதியில் இருக்கிறார்.. அவர் பெயர் விப்ர நாராயணர்”

“ ரங்கநாதா !!... தொண்டரடிப்பொடியாழ்வாரா !!! .. அவரை நான் தரிசிக்க முடியுமா“

“ஆமாம்.. அவரேதான். நிச்சயம் சந்திக்க இருக்கிறீர்கள். இது உங்களுக்கான அடையாள அட்டை.. உங்களின் படைப்பான இந்த இருவரும் உங்களுடனே இருப்பதற்கும் அனுமதி உண்டு... இதோ அந்த வாயில் வழியாக செல்லுங்கள். ஒரு தோட்டம் வரும்.. அங்கே தாடியுடன் ஒரு பெரியவர் இருப்பார்.. அவர் உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் மேல்விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.....வந்தனம்”

“கணேஷ்.. இது ஒன்ணும் கனா இல்லியே.. நிஜமாகவே தொண்டரடிப்பொடியாழ்வாரா !! எனக்கு பிரமிப்பா இருக்குப்பா”

“எனகும் தான் சார்.. அவன் சொன்ன மாதிரி அந்த வாசல் வழியா போவோமே”

கௌண்டர் ஆசாமி காண்பித்த வாசல் அந்த ஹாலின் ஒரு மூலையில் இருந்தது.. மூவரும் நடந்தனர்.

“கைடா ஒரு பெண் பிள்ளையைப் போட்டால் சௌகரியமா இருக்காதோ..”

நீ சும்மா இருக்க மாட்டே இப்போ”

அந்த வாசல் கொஞ்சம் உயரம் குறைச்சலாக இருந்தது.. குனிந்து வெளியில் வந்தால்.. மிக விசாலமான் இடம்.. ரம்மியமான தோட்டம்.. தாடி வைத்த பெரியவர் அவராகவே நாடி வந்தார்

“வந்தனம் நான் தான் இங்கே உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப் பட்டுள்ளேன் நீங்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. இது கணேஷ்.. சரி தானே.. வசந்த் என்று இன்னொருவரும் வருவதாக தகவல்.. அவரெங்கே”

”பாஸ் இங்கே சீக்கிரம் வாங்க “ என்ற வசந்தின் அலறல் பின்னாலிருந்து கேட்டது

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

கதை நன்கு செல்கிறது

சடாரி, கலாம்-சிவானந்தர் உரையாடல், வசந்தின் வழக்கமான "மிஸ் உங்களை கலை விழாவில் பாத்துருக்கேனே " - "ஸ்ரீரங்கத்தில் மட்டும் நான் ரங்கராஜனில்லை " - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

Anonymous said...

சந்திரமெளளீஸ்வரன்.- தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
Uma jayaraman.