Sunday 3 August 2008

கடிதம்-3


நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.

கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்

அதை அப்படியே தருகிறேன்..

“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.

இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்


(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

1 comment:

Anonymous said...

Crisp and Tastty

மௌளீ நல்லா எழுதறீங்க

தொடருங்க

-சரவணன்