Sunday 11 September 2011

கீதை இடைச் செருகலா- பகுதி 1

கீதை இடைச் செருகல் என விவாதிக்கும் ஜெயமோகனின் பதிவினைப் படித்த பின் அதற்கு பொதுவில் இணையத்தில் மறுப்பினை பதிவது நலம் என நினைக்கின்றேன்

ஜெயமோகனின் பதிவினை அடைய இங்கே சுட்டவும்


போதனை கேட்ட பின்னாலும் சஞ்சலப் பட்டான் என்பதால் போதனை நடக்க வில்லை எனச் சொல்ல முடியுமா என்ன‌

சஞ்சலத்தின் தன்மையினைக் கவனிக்கலாம். கீதையிலிருந்தே

அர்ஜுனன் கேட்கிறான் அலுப்புடன்

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்

இதைப் சற்று பதம் பிரித்துச் சொன்னால் எளிதாகி விடும்
மந்யே = நினைக்கிறேன்
நிக்ரஹம்= அடக்குவது
வாயோரிவ= காற்றைப் போல
ஸூதுஷ்கரம்= சாத்தியம் இல்லாத விஷயம்
தஸ்ய= மனதின்

க்ருஷணா இந்த மனதின் சஞ்சலம் என்பது காற்றை அடக்குவது போல சாத்தியமில்லாத சங்கதி என்று நினைக்கிறேன் என சொல்கிறான் .

இந்த மாதியிலிருந்து தான் கடையும் உபகரணம் மத்து ) இப்படி முடியாது எனச் சொன்னால் க்ருஷ்ணன் விடப் போகிறானா என்ன; ரொம்ப சுலபமான வழியினை சொல்லித் தருகிறான் 
இந்த ஸ்லோகத்திலே ப்ரமாதி என்ற சொல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்
மாதி என்றால் கலக்குவது, கடைவது ( அம்ருத மதனம் என்றால் பார்க்கடலைக்
கடைவது) 


அப்படி என்ன சுலபமான வழியினைக் க்ருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லிக்
கொடுத்தான் ?



அர்ஜுனன் சொல்வதை ஆமோதிக்கிறான் கண்ணன் 
மனசை அடக்குவது அத்தினி சுலபமில்லை தான் ; ”ஆமாம்பா நீ சொல்றது வாஸ்தவம் தான் ;


”அஸம்சயம் மஹாபஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்”
அஸம்சயம் = சந்தேகமில்லை
சலம் = சஞ்சலம்
மஹாபஹோ= மாவீரனே
துர்நிக்ரஹம் = கெட்டதை அடக்குதல்/ அழித்தல்


ஆனால் இது சாத்தியமில்லாத விஷயமில்லை


Conviction, persistence இரண்டும் இருந்தால் சாத்தியம்


வைராக்கியமும் , விடா முயற்சியும் தேவை அதான் Conviction, persistence


மனசு அது கட்டுப்படாமல் அங்கே இங்கே எனத் தாவும் இயல்பானது தான்
அது நிலையில்லாத அஸ்திரம் ( அஸ்திரம் என்ற வார்த்தைக்கு நிலையில்லாதது,
எய்வதற்குண்டானது என பொருள்)


“யதோ யதோ நிச்ரதி மநச சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்தோ நியமயைத ஆத்மந யேவ வசம் நயேத்”


மனதிற்கு தன்னைத் தவிர மற்றதையெல்லாம் தெரியும். அது மற்றதைக் கண்டு நாடி
ஓடிடும் இயல்பானது மனதுக்கு மனது தெரியும் போது ஆத்மாவின் தரிசனம் கண்டு
அது அடங்கிவிடும் ;அதனால் மனதை மனதிலே அது அதையே அறியச் செய்ய வேண்டும்
அதுதான் மனதை வசப்படுத்தும் வழி


அதற்கு வைராக்கியமும் விடாமுயற்சியும் தான் வழி


இங்கே இப்படி இருக்கும் அர்ஜுனனுக்கு பக்குவம் வரும் இடமும் இருக்கு






யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது
இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம்
என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை
வாட்டுகிறது.


தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு
அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்


அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், க்ருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,
நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்


இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும்
வேறுபட்டு நிற்கிறது (க்ருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect  !!!!)

பாரதத்தில் முழுக்க முழுக்க போதனை தான். திருதராஷ்ட்ரன் கேட்காத அறிவுரையா / அறவுரையா. ஆனாலும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே அவனுக்கு எந்த அறிவுரையும் நடக்கவில்லை எனும் புல்லரிக்கும் லாஜிக்கிற்கு வரலாம்




கீதோபதேசத்துக்குப் பின் அர்ஜுனன் தர்மரிடம் சண்டை போட்ட சந்தர்ப்பங்களை ஜஸ்ட் தகவல்களாகப் பார்க்கலாம் 

சம்பவம் ஒன்று : அபிமன்யு மரணத்திற்கு பின்.. அப்போதும் அவன் தனது சகோதரர்கள் அனைவரையும் ஏனைய உறவினர்களையும் திட்டுகிறான். இத்தனை பேர் இருந்தும் ஒரு சின்னப் பையனை சிக்க வச்சிட்டீங்களே என. மயக்கம் போட்டும் விழுவதாக வியாசர் பதிவு செய்திருக்கார். தர்மனின் ஆறுதல் மொழிகளில் தேறுகிறான் .பின்னர் செய்யும் சபதம் தான் , நாளை சூர்யோதயத்திற்குள் அந்த ஜயத்ரதன.... எக்ஸட்ரா

அடுத்த சம்பவத்தை விரிவாகப் பார்க்கலாம்

போரில் கர்ணனின் மறைவுக்கு முந்தைய நிகழ்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று

பார்க்கவ என்ற அஸ்திரத்தால் கர்ணம் பாண்டவர்களை மிகவும் தொந்தரவு
செய்துவிட்டான் ;கர்ணனை வெல்வது கடினம் என்ற முடிவுக்கு தர்மன் வருகிறான்


(இவர் இப்படி அடிக்கடி அவரை வெல்வது கடினம் இவனை வெல்வது கடினம் என்ற சஞ்சலமனத்துடனே போர் நடக்கும் எல்லா நாட்களிலும் தவறாமல் குழம்பியிருக்கிறார்) 

அதனால் போர்க்களத்திலிருந்து பாசறைக்குத் திரும்புகிறான். போர்களத்தின் வேறுபக்கத்தில் வேறு பக்கம் இருந்த அர்ஜுனன் பின்னர் தர்மன் பாசறைக்குத் திரும்பியதை அறிந்து அவருக்கு என்ன ஆனதென்று அறியும் அவாவில் அவனும் கண்ணனும் தர்மனின் பாசறைக்கு வருகின்றனர். தர்மன் படுகாயம் அடைந்திருக்கலாமோ என வரும் வழியில் அர்ஜுனனும் க்ருஷணனும் சொல்லிக் கொண்டே வருகின்றனர்

இருவரையும் பார்ர்கும் தர்மனின் மனதில் இப்படி ஓர் எண்ணம் : “போரின் இடையிலே தாம் தான் மனக் கலக்கத்தில் இருந்தோம். பாசறைக்கு வந்துட்டோம் ஆனால் அர்ஜுனன் அப்படி பாதியிலே வரக் கூடியவனில்லையே அதுவும் கண்ணனும் உடன் வருகிறான். ஒரு வேளை அர்ஜுனன் கர்ணனை மாய்த்து விட்டானோ அதை நேரில் என்னிடம் சொல்ல ஓடோடி வந்திருப்பானோ”

இந்த எண்னம் தோன்றியவுடன் அது நிஜமாக இருக்க வேண்டும் என்ற ஆவலும் அவனுக்குத் தோன்றியது. ஆகவே அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் வரவேற்க பாசறை வாசலுக்கே வந்துவிடுகிறான் தர்மன் தர்மன் காயம் அடைந்திருக்கலாம் என நினைத்த அர்ஜுனனுக்கும்

கிருஷ்ணனுக்கும் ஓடி வரும் தர்மனைப் பார்த்து மிக்க சந்தோஷம். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை பூக்கின்றனர்.

இந்த சந்தோஷப் புன்னகையும் பார்த்த தர்மன், ”நாம் கொண்ட எண்ணம் சரிதான் போலிருக்கு. யுத்தத்திலே கர்ணனனை வென்று கொன்றே இங்கு என்னிடம் ஆசி வாங்க வந்துள்ளான் தம்பி” என தன்னுடைய யூகத்தை தனக்குள்ளேயே வலுப்படுத்துகிறான்

அண்ணன் தர்மனுக்கு காயமில்லை அவர் நன்றாகவே இருக்கிறார் எனத் தெரிந்த அர்ஜுனன் சந்தோஷ மிகுதியில் ,” அண்ணா என்னை ஆசிர்வதியுங்கள்” என தர்மன் காலில் பணிகிறான்

இப்போது தர்மன் நிலையினைப் பாருங்கள். கர்ணன் மடிந்தான் என நிச்சயமே செய்து கொண்டான் தர்மன்.

‘அர்ஜுனா கர்ணனை நீ எப்படி கொன்றாய் விஸ்தாரமாக எனக்குச் சொல்ல வேண்டும் “ என கேட்கவும் செய்தான்

தான் இன்னும் கர்ணனைக் கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான் வந்ததே தர்மனுக்குக் கோபம். கர்ணன் மடிந்தான் என்பது தன் யூகமே என்பதை மறந்தான். அர்ஜுனனை கண்டபடி ஏசினான்

“நீயா சிறந்த வில்லாளி உன் காண்டீபத்தை யாரிடமாவது கொடுத்துவிடு அதை நீ இன்னமும் ஆயுதமாகத் தரிப்பதை நான் சகிக்கமாட்டேன் “ என்ற அளவுக்குப் போய்விட்டது தர்மனின் கோபம்

அர்ஜுனனும் சும்மா இல்லை , “ என் காண்டீபத்தைப் பழிப்பவர் உயிரை எடுப்பேன் இல்லையேல் என்னை நானே மாய்த்துக் கொள்வேன் “ என சபதம் செய்திருக்கிறேன். இதோ உங்களைக் கொல்கிறேன்” என்ற அளவுக்கு அவனும் சூடாகிவிட்டான்

என்ன நடந்திருக்கும்


அதான் ட்ரிக் மாஸ்டர் பக்கத்திலேயே இருக்காரே 

இருவரையும் சமாதானம் செய்கிறார் ஆனாலும் அர்ஜுனன் தான் காண்டீபத்தை அவமதித்தவரை கொல்லாமல் விட்டால் தன் சபதம் என்னாவது எனக் கேட்க அதற்கும் கண்ணன் வழி சொல்கிறான்

“அர்ஜுனா. நீ உன் அண்ணன் தர்மனை. நன்றாகப் பழித்துப் பேசு அது அவனைக் கொல்வதற்குச் சமம்”

” சரி கண்ணா அப்படி நான் பேசிய பின் அண்ணனை இழித்துப் பேசிய எனக்கு என்ன தண்டனை”

“அது சரி அண்ணனைக் கொன்றாலும் தப்பில்லை ஆனால் இழித்துப் பேச மறுக்கும் பாசக்காரத் தம்பிதானே நீ அதற்கும் ஒரு மாற்று வழி வைத்திருக்கேன். தர்மனைத் தீட்டி இழித்துப் பேசியபின் நீ உன்னை நீயே புகழ்ந்து கொள் அதுவும் மரணத்திற்குச் சமம்” அர்ஜுனன் அப்படியே பர நிந்தை ஆத்ம ஸ்துதி செய்தான்

இந்த யோசனைப்படி கிருஷ்ணன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்தான் என காட்டுகிறார் வியாசர்

ஆத்ம ஸ்துதி, பர நிந்தை- அதாவது தற்புகழ்ச்சியும், பிறரை இகழ்வது
இரண்டுமே ஒரே மாதிரி தான்


அடையாறு தியோசபிகல் சொஸைட்டியோடு தொடர்புடைய ட்டி. சுப்பா ராவ் என்பாரின் கருத்துக்களை இந்த சுட்டியில் படிக்கலாம்



சுவாரசியமாக இருக்கிறது. அவருடைய சிந்தனை ஓட்டம் எனக்கு பிடித்திருக்கிறது





இவையெல்லாம் 1912 லேயே பதிப்பாகியிருக்கிறது என்று வலை சொல்லுது

பாரத்த்திலே தர்மன் பலரிடம் ஆலோசனை கேட்பதாக சம்பவங்கள் வருவதைக் காணலாம். அது

தர்ம்ம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில் சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பெட்ரண்ட் ரஸ்ஸலின் Outline of Philosophy எனும் நூலில் படித்த்து நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்

Philosophy arises from an unusually obstinate attempt to arrive at real knowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible.

தர்மனிடம் கேட்பதற்கு பொறுமை இருந்தது எல்லாவற்றையும் விட தெரிந்தது போதும்
எனும் lazy Sceptisim இல்லை. Cocksure இல்லை; vague இல்லை

இந்த விஷயத்தில் அர்ஜுனன் எப்படி என கவனிக்கலாம்....ஒரு வேளை கேள்விக்கு விடை கிடைக்கலாம்

அர்ஜுனன் ,க்ருஷ்ணன், கீதை , சண்டை எனும் இந்த சப்ஜெக்ட்டை பாரத் நிகழுவுகளைக் கொண்டே அணுக வேண்டும் எனும் முயற்சியாகத் தான் பாரதத்தின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன். அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு சம்பவத்தினைக் கவனிக்கலாம்

போருக்கு முன்பான நிகழ்வுகளில் மிக முக்கியமானது க்ருஷ்ணனின் தூது. தூதுக்கு புறப்படும் ரோகிணி நஷத்திரத்து நாள் ( அந்த மாயக் கண்ணனின் ஜன்ம நஷத்திரம் !!!) பாண்டவர் அனைவரிடமும் ஆலோசிக்கிறான் க்ருஷ்ணன் . தர்மன், அர்ஜீனன், பீமன், நகுலன், சகாதேவன் இவர்கள் சமாதானம் சமாதானம் என்றே சொன்னார்கள், சாத்யகியும். திரௌபதி மட்டும் ஆவேசமாக சண்டை சண்டை என்றாள் . புறப்படும் சமயத்தில் கூட அர்ஜூனன் சமாதானம் சாத்தியமே இல்லை என்றால் தான் சண்டை என சொல்லி அனுப்புகிறான்

எப்படியாவது சமாதானத்தினை சாத்தியமாக்கிடணும் என க்ருஷ்ணன் கர்ணனை சந்தித்து அவன் பிறப்பின் மர்மத்தை சொல்லுகிறான். குந்தியை கர்ணனிடம் அனுப்றான். ஒரு படி மேலே போய் (கீழிறங்கி !!) யுத்தகளத்தில் பீஷ்மர், துரோணர்,க்ருபர் போன்ற பெரியவர்களிடம் ஆசி வாங்க தர்மன் போனபோது க்ருஷ்ணன் யுத்த களத்தில் இல்லாத கர்ணனிடம் சென்று ( பீஷமர் இருக்கும் வரை யுத்தம் செய்ய வர மாட்டேன் என்ற சபதம் கொண்டு இருக்கிறான் கர்ணன் என்பதனை நினைவில் கொள்க) மீண்டும் அவனை பாண்டவர் தரப்புக்கு வருமாறு சொல்கிறான்; ஒரு படி மேலே போய் பீஷ்மர் இறக்கும் வரை நீ பாண்டவர் பக்கம் இரு பின்னர் வேண்டுமானால் கௌரவர் சேனைக்குப் போகலாம் எனவும் சொல்கிறான்



இனி விஸ்வரூபங்களைக் குறித்து பார்ப்போம்

செய்வது தவறு எனத் தெரிந்தும் செய்து கொண்டே இருக்கும் குழந்தைகளிடம்,”

இப்ப என்ன செய்றேன் பார் என பெரியவர்கள் மிரட்டுவதில்லையா

கண்ணை உருட்டி பல்லைக் கடித்து குரலை உயர்த்தி

அது போல ஒரு மிரட்டல் துரியோதனனுக்கு

எனக்கு இதெல்லாம் எப்படி செய்வது என்பதில் குழப்பமாக இருக்கிறது என
பாடத்திலோ அல்லது வேறெதாகிலும் பிள்ளைகள் சந்தேகம் கேட்கும் போது
பெரியவர்கள் அவர்களுடனே கலந்து இது இப்படி இது அப்படி எனத் தெளிவு
செய்வார்கள். அப்போது தமது அனுபவங்களையும் சொல்லி குழந்தைகளை
ஊக்கப்படுத்துவார்கள். நானிருக்கிறேன் உன்னை வழி நடத்த. கவலைப்படாமல் உன் பாடத்தைப்படி, அந்த வேலையைச் செய் எல்லாம் சரியாக வரும்

அது போல அர்ஜுனனுக்கு 


கீதைக்குப் பின்னும் அர்ஜுனன் சஞ்சலம் அடைந்தான் அதனால் கீதை ஒரு இன்செர்ஷன் எனும் லாஜிக்கிற்கு, அது ஏற்கத்தகுந்தந்த லாஜிக் இல்லை என்பதனை சம்பவங்களைக் கொண்டு பட்டியல் இடலாம்



1. அறிவுரை / அறவுரை கேட்ட பின் சஞ்சலமே வரலாகாது என்பது ஏற்புடையது அல்ல‌



2. போர் முடிந்து இராஜ்யம் ஏற்க தயங்கும் தர்மனுக்கு அர்ஜுனன் சொல்லும் ஆறுதல், அறிவுரை அதில் காணப்படும் கீதை சாயல்

3. அர்ஜுனன் சமாதனமே விரும்பனான். க்ருஷ்ண தூதின் போது இதையே அவன் சொல்லுகின்றான். 

4. அர்ஜுனன் தர்மனிடம் வாதம் செய்த (சண்டை போட்ட ) சம்பவங்களைச் சொல்லியாயிற்று. க்ருஷ்ணர் உடனிருந்தார் என்ற தகவலுடன்

5. கீதையைக் கேட்டவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கீதை சொன்ன க்ருஷ்ணன். கீதை சொன்ன கொஞ்ச நேரத்திலேயே போர்க்களத்தில் இல்லாத கர்ணனை தேடி சென்று இந்தப் பக்கம் வந்துடு எனச் சொன்ன சம்ப்வமும் எடுத்துக் காட்டியாகி விட்டது . அதனால் க்ருஷ்ணனுக்கு சஞ்சலம் இருந்தது என சொல்லலாமா?

போர்க்களத்தில் இப்படி 700 ஸ்லோகங்கள் எப்படி சாத்தியம் எனும் வினாவினைக் கவனிக்கலாம்...

(தொடரும்)

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தான் இன்னும் **அர்ஜுனனைக்** கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான் வந்ததே தர்மனுக்குக் கோபம். கர்ணன் மடிந்தான் என்பது தன் யூகமே என்பதை மறந்தான். அர்ஜுனனை கண்டபடி ஏசினான்//

Dear Sir,
**அர்ஜுனனைக்** to be corrected as "கர்ணனைக்”
vgk

Sriram, Qatar said...

மகா பாரதத்தில் குரு க்ஷேத்திர யுத்தத்திற்கு பின்பு நடக்கும் "க்ருஷ்ண - உதங்க" சம்பாஷணையையும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வினையும் படித்து புரிந்து கொண்டால் கீதை இடை செருகலாக இருக்க வாய்ப்பில்லை என்பது புரியும்.


மேலும், ஒரு தொகுப்பு (இவ்விடத்தில் கீதை) தத்துவார்த்தமாக இடையில் செருகப்பட்டிருந்தால் தத்துவத்தின் மையத்தில் தான் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருக்கும். கீதையின் மைய கரு "யோக சாஸ்திரம்". (நடைமுறையில் சொல்லப்படும் யோகா அல்ல). அதாவது இருமை (நன்மை தீமை, நட்பு பகை, விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு .. போன்றவை) அற்று / நீக்கி இருப்பது.

அங்ஙனம் சொல்ல புகுந்த ஒரு தொகுப்பு எதிர் எதிராக உள்ள இரு வேறு பிரிவினரையும் சம நோக்கில் பார்த்திருக்கும். ஆனால் பகவத் கீதையின் ஆரம்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விவரிப்பதிலும் யார் யார் எந்த எந்த சங்கை ஊதினார்கள் என்பதை விவரிப்பதிலும் பாண்டவர் பக்கமே அதிகம் கவனம் செலுத்த பட்டிருக்கிறது,

மேலும், கிருஷ்ணரின் விஸ்வ ரூப தரிசனத்தில் அர்ஜுனன் எதிரியின் தரப்பில் உள்ள முக்கிய புள்ளிகளே விராட் ரூபத்தின் பற்களில் சிக்கி இருப்பதாக காண்கிறான். தன் தரப்பில் உள்ளவர்களை அல்ல.

மேலும், கிருஷ்ணர் "எதிரிகள் எல்லாரும் என்னால் முன்பே கொல்லப்பட்டு விட்டார்கள். இப்போது நீ நிமித்த மாத்திரம் இரு" என்று அர்ஜுனனை பார்த்து சொல்கிறார். இங்ஙனம் "இருமை அற்று இரு" என்று சொல்ல புகுந்த ஒரு தொகுப்பு ஒரு தலை பட்ச விவரித்தல்களுடனும். காட்சிகளுடனும் இருக்குமானால் அத்தொகுப்பு - இடை செருகலாய் இருக்கும் பட்சத்தில் - அது சொருகப்பட்ட நோக்கத்தையே நீர்த்து போக செய்து விடும்.

அதனால் கீதை மகாபாரதத்தின் போக்கில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே பார்க்க பட வேண்டும். கீதையில் உள்ள விவரிப்புகளும் காட்சிகளும் அர்ஜுனனை ஆசுவாச படுத்த கிருஷ்ணர் கையாண்ட யுக்தியாகவே நம்மால் புரிந்து கொள்ள பட வேண்டும்.

hayyram said...

///தான் இன்னும் அர்ஜுனனைக் கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான்////

'தான் இன்னும் கர்ணனைக் கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான்' - என்பது தானே சரி?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

Hayram & வை கோபாலகிருஷ்ணன்

சுட்டியமைக்கு நன்றி

திருத்தப்பட்டது

SURYAJEEVA said...

கீதை என்பது பல்வேறு வகையான மாறுதலுக்கு ஆட்பட்டது என்பதை யாரும் சுட்டவில்லை, முதல் ஆறு அத்தியாயங்களில் உள்ள கருத்துக்கள் கடைசி ஆறு அத்தியாயங்களில் வரும் கருத்துக்களுடன் படு பயங்கரமாக முரண் படும் என்பதையும் குறிப்பிடவில்லை... மாகாபாரதத்தில் இடை செறுகலா? என்பதே கட்டுரையின் நோக்கமாக இருப்பதால் என் கேள்விகளுக்கு பதிலை இங்கு எதிர் பார்ப்பது தவறு தான்..
you see what you want to see...

Ganpat said...

சிரபுஞ்சி மழைக்கு (ஜெயமோகன்),மும்பை மழை (சந்திரமெளளீஸ்வரன்)விளக்கம் அளிப்பதைப்பார்த்து இந்த சென்னை மழையாகிய (அதாவது தூறல்)நான் பிரமிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
நல்ல உழைப்பு,ஆய்வு,விளக்கம்...
நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

உங்களின் இந்த பதிவை படிக்கும் போது, எனக்கு முன்பிருந்தே உள்ள, தர்மனின் தலைமை பண்பின் மீதான சந்தேகம் உறுதியாகின்றது.
மனதுக்கு நிறைவான விளக்கம். அருமை