Monday 12 November 2012

க்ருஷ்ணாவதாரம் -2

அரண்மனை கோலாகலம் கொண்டிருந்தது.. மேல் மாடத்திலே அனைத்து தூண்களிலும் கதம்பமாக பூக்கள் சுற்றப்பட்டிருந்தது.. ராத்திரி நேரத்திலே அரண்மனையினைப் பார்த்தவர்கள் இது தேவேந்திரனின் அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகப் பேசிக் கொண்டார்கள். அப்படியாக தீபங்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.

வ்ருஷ்ணி தேசத்திலே இப்படி ஒரு கோலாகலக் கொண்டாட்டம் நடந்ததில்லை என்பதே எங்கும் பேச்சாக இருந்தது.. அரண்மனை மட்ட
ுமல்ல... தலைநகரமான மதுரா எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது..

அரண்மனையின் முன் மாடத்திலே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டதொரு ரதம் த்யாராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, யாரோ முக்கியஸ்தர் வெளியிலே கிளம்ப் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது..ரத சாரதி, அந்த அஸ்வங்களுக்கு போதுமான தீனியும் , குடிக்க ஜலமும் தந்து தயார் செய்திருக்க வேண்டும். அவை ரதத்திலே பூட்டப்பட்டிருப்பதனாலோ, நீண்ட பிரயாணத்திலே நில்லாமல் ஓட வேண்டும் என்ற காரியத்தினாலோ சோர்வு கொண்டதாகத் தெரியவில்லை .. மாறாக வெகு உற்சாகமாக துள்ளியபடி இருந்தன.. அந்த குதிரைகள் அரண்மனை வாசலைலைப் பார்ப்பதும் பின்னர் கொஞ்சம் ஏமாற்றம் கொள்வதும், அதன் பின்னர் சுபாவமாகத் துள்ளுவதுமாக இருந்தன..

ரதசாரதியும் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.. அரண்மனையின் வெளியிலேயிருந்த தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வாசலைப் பார்ப்பதாகவே இருந்தார்கள்

வருகை அற்வித்து கட்டியம் கூறுகின்றவன் கூட அந்த ப்ரம்மாண்ட கதவுகளின் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார்.. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தபடியால், அந்தக் கதவுகளில் வேலைப்பாடாகக் கோர்க்கப்பட்டிருந்த சின்ன மணிகள் அசைந்து, டிங் டிங் என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.. சில சமயம் எல்லா மணிகளும் ஆடி சப்தமெழுப்புகின்ற மாதிரி காற்றானது வேலை செய்தது

இருபது குதிரை வீரர்கள் முன்னேயும், நாற்பது ரதங்களில் சீதனங்கள் பின் தொடரவும், பிரதான ரதம் நடுவிலேயுமானதாக அந்தப் பவனி அரண்மனையினை விட்டுக் கிளம்பத் தயாராக இருக்கிறது..

வாத்தியக் கோஷ்டியினர் மங்கள இசையினை வெகு ரசனையுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

அரண்மனையின் உள்ளே, விருந்து தடபுடலாக இருக்கிறது.. பக்கத்து தேசத்திலிருந்தெல்லாம், ராஜாக்கள் வந்திருந்தார்கள்..

அவர்களெல்லாம் மஹாராஜா கம்சனின் ஆப்த சிநேகிதர்கள்.. கம்சனின் தங்கை தேவகியின் திருமணத்திற்கு வாராதிருப்பார்களா.. திருமணம் நேற்றே முடிந்துவிட்டது.. இன்றைக்கு விருந்து முடிந்து தேவகி, தன் புருஷன் வீட்டுக்கு கிளம்புகிறாள்.

எந்த தேசத்து ராஜாவோ கம்சனின் காதுகளில் என்னமோ ஹாஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டும்

கம்சனின் பரிகாசச் சிரிப்பு வெடித்துக் கிளம்பி காற்றிலே கலந்து கொண்டிருந்தது..

இந்தக் கணத்திலே அந்த இடத்திலே தேவ ரிஷியான நாரதர் தோன்றினார்.

"வருக வருக தேவ ரிஷி வருக.. உங்கள் வருகையால் இந்தக் கம்சன் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறான். நீங்கள் என் தங்கை தேவகியையும் மாப்பிள்ளை வசுதேவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.."

"அதெற்கென்ன கம்சா.. என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.. நீ தான் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.. அதைச் சொல்லவே நான் வந்தேன்..... நாராயண நாராயண"

"எனக்கென்ன வந்தது தேவ ரிஷி அவர்களே.. என்னை நெருங்க துணிவுள்ளவுள்ளவன் பூவுலகில் இருக்கின்றானா என்ன"

" நீ இப்படி நினைத்துக் கொள்வது தான் ஆபத்து கம்சா.. இதோ புது மணப்பெண்ணாக சிரித்துக் கொண்டிருக்கின்றாளே உன் தங்கை தேவகி.. அதோ பிரமுகர்களிடம் விநயமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே யது குல மன்னர் ,, உன் மாப்பிள்ளை வசுதேவர்.. இவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை.. உன்னைக் கொல்வான்.. அவனே உனக்கு எமன்"

இந்த வாக்கியம் முடிந்து போன போது கம்சனின் பதிலுக்கு காத்திருக்காமல் நாரதர் அந்த இடத்திலிருந்து மறைந்தார்..

கம்சன் முகம் இறுகியிருந்தது...

காற்றும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அசையாமல் நின்று போயிருந்தது

(தொடரும்)

No comments: