Monday 26 November 2012

க்ருஷ்ணாவதாரம்-5

கம்ஸன் இப்போது மிகவும் ஆவேசம் கொண்டவனாகவும், அடுத்து நடக்க வேண்டியதான காரியங்களை மள மள என்று செய்து கொண்டிருப்பவனாகவும் இருக்கிறான்

"யாரங்கே "

சேவகன் ஒருவன் ஓடி வந்து தண்டனிட்டு நின்றான்

" வாயிலில் காத்திருக்கும் ரதங்கள் எல்லாம் அரண்மனையின் பின் புறம் செல்லச் சொல்லு.. ஒரே ஒரு ரதம் மட்டும் நிற்கட்டும். சேனாதிபதி... எங்கே போனாய்...."

கம்சனின் ஆத்திரம் கொப்பளித்து எழும்பி, வார்த்தைகளாக ஆணைகளாக அந்த சபா மண்டபத்தினை நிறைத்தது..

"இதோ என் தங்கை தேவகியை கொலைக் களத்துக்கு அழைத்துப் போய், சிரச்சேதம் செய்து விடுங்கள்.. எப்படி குழந்தை பிறந்து வந்து என்னைக் கொல்வதென்பதைப் பார்த்து விடுகிறேன்"

கம்ஸனின் தகப்பனார் உக்கிரசேனன் அவனை நெருங்கி," கைகளைப் பிடித்துக் கொண்டு, மகனே.. இதென்ன கோரம்.. உன் நாவிலிருந்தா இப்படி வார்த்தைகள் வருகின்றன.. என்னால் நம்ப முடியவில்லை.. இதெல்லாம் கனவாகத்தான் இருக்க வேண்டும்"

"அப்பா இது கனவல்ல.. நிஜம்.. நிஜமே.. என்ன தயக்கம் .. இழுத்துப் போ தேவகியை"

அந்தக் காவல் வீரன் தேவகியை சமீபித்து செல்லும் போது வசுதேவர் , சற்றே மறிப்பது போல நின்று கொண்டு, கம்சனை நோக்கி இரண்டு கரங்களையும் யாசிக்கும் பாவனையில் நீட்டிக் கொண்டு,

" மன்னர்க்கெல்லாம் மன்னா .. எங்களுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி உங்களைக் கொல்லும் அது .. உங்களுக்கு மருமகளாகவோ மருமகனாகவோ அல்லவா ஆகிறது.. நீங்கள் தூக்கி கொஞ்சி மகிழும் குழந்தை.. அதெப்படி கொல்லும்.."

" இதோ பார்.. உன் கோரிக்கையெல்லாம் என்னிடம் எடுபடாது.. கொண்டு செல். வீரனே.. இன்னும் ஒரு விநாடி தாமதம் செய்தாயானால் என்ன செய்வேன் என எனக்குத் தெரியாது"

இப்போது வசுதேவர் இன்னும் கெஞ்சும் குரலில், " மன்னருக்கு இன்னும் மனமிரங்கவில்லையா.. எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நானே கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறேன்.. தேவகி ஒரு பாவம் அறியாதவள்.. அவளை விட்டு விடுங்கள்" 

கம்சன் இப்போது முன்னும் பின்னும் நடக்கலானான்.

" சரி.. உங்கள் இருவருக்கும் உயிர் பிச்சை தருகிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனையுடன்.. நீங்கள் இருவரும் கைதிகளாக கஜராஜ அரண்மனையில் மிகவும் கடும் காவலுடன் சிறை வைக்கப்படுகின்றீர்கள்.. அங்கே தான் உங்களுக்கு எல்லாம்.. .. வசுதேவரே.. நீர் இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அது போல உங்கள் குழந்தை பிறந்த மறு கணம் அது என்னிடம் வர வேண்டும்.. அது பிறந்த நேரம் தொடங்கி, என் பார்வைக்கு வரும் நேரம் வரை தான் அதன் ஆயுள்.. என் கைக்கு வந்ததும் அதனை எமனுலகம் அனுப்புவேன்.. அக்ரூரா... கஜராஜ அரண்மனையில் காவல் அதிகம் செய்ய வேண்டும்"

சில வருஷங்கள் கடந்து போயிருந்தன.. தேவகியின் இரண்டு குழந்தைகளை அதன் மாமன் கம்சன் எமனுலகம் அனுப்பியிருந்தான்.. யதுகுலத்தினரிடையே உண்டான போரட்டத்தையும் அடக்கியிருந்தான்.. எட்டாவது குழந்தைக்கு அவனது வெறி அடங்கா மனது காத்திருந்தது

அன்றைக்கு அரண்மனையிலே, சபா மண்டபத்திலே முக்கியமானதொரு ராஜ்ஜிய ஆலோசனையில் இருந்தான்.. இரண்டு மந்திரிகள் அவனிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்த சமயம்.. மண்டப வாயிலில் சேவகன் ஒருவன் மணடியிட்டு மன்னனின் கவனத்தைக் கவர்ந்தான்.


கம்சன் கம்பீரமாக தலை அசைத்து அவனை அருகே அழைத்தான்..

சேவகன் தாள் பணிந்து , "ராஜாதி ராஜ சமூகத்தினை நாடி ஹஸ்தினாபுரத்திலிருந்து தூதுவன் ஒருவன் வந்திருக்கிறான்'

"வரச் சொல்"

தூதன் வணங்கிவிட்டு, "மன்னா நான் கங்கை மைந்தர். மஹா வீரர் பீஷ்மரின் சொற்களைத் தாங்கி வந்திருக்கிறேன்.."

"விஷயத்தைச் சொல்"

" தங்கள் தங்கையையும் மாப்பிள்ளை வசுதேவரையும் , பீஷ்மர் தனது விருந்தினராக அழைத்துப் போக பிரியப்படுகிறார்.. அதன் பொருட்டு என்னை இங்கே தூது அனுப்பியிருக்கிறார்"

கம்சனின் கோபம் தலைக்கு ஏறியது..

சிம்மாசனத்தினைப் பின்னுக்குத் தள்ளி எழுந்தான்.. ஆனால் அவனது மந்திரிமார்கள் அவனை சைகயால் அமைதி செய்து விட்டு அவனிடத்திலே வந்து, "பிரபோ இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய சங்கதி.. இதிலே சினம் கொண்டால் பின்னர் நமக்கே இடைஞ்சல் வரலாம்.. பீஷ்மர் மஹா வீரர்.. அவரது பகை நம்மை அழித்து விடும்.. இந்த தூதுவனுக்கு நாளை பதில் சொல்வதாக சொல்லி, விருந்தினர் அரண்மனைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்..

நாளை சூரியோதத்திற்குள் இந்த தூதுவனுக்கு நல்ல பதில் சொல்வதற்கு என்ன உபாயம் என்பதை யோசித்து விடலாம்"

அரண்மனை மேன்மாடத்திலே அந்தரங்கமானவர்களுடன் கம்சன் ஆலோசனை தொடங்கினான்.. அடிவானத்திலே நிலவு வந்திருந்த நேரம் தொடங்கின சம்பாஷணை.. நிலவு சற்றேறக்குறைய நடுவானத்திற்கு வந்திருந்தது.. கருமை நிறைந்த இரவானபடியால் நஷத்திரங்கள் அதிகம் காட்சிக்குத் தெரிந்தன.. 

கம்சனின் மனதிலே அந்த திட்டத்தின் முதல் வித்து உதித்தது.. அதனால் என்னவோ நிலவு அந்த சமயம் .மிகவும் கறுத்திருந்த மேகத்தின் பின்னே பயந்து ஒளிந்து கொண்டது போலிருந்தது

(தொடரும்)


No comments: