Monday, 18 August 2008

பச்சை மைப் பேனா


ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப் பார்த்த ”பச்சை மைக் கையெழுத்தை” தானே போட முடியும். அதான் கெஜெட்டட் ஆபிசர். இப்பெல்லாம் யார் ப்ரமோஷனும் கெஜெட்டில் வர்றதில்ல. ஆனாலும் அந்த பேர் அப்படியே இருக்கு.

இன்னிக்கே போற வழில ஒரு நல்ல பேனா வாங்கணும். பச்சை இங்க் வாங்கணும். என்ன இந்த ப்ரமோஷன் உள்ளூரிலிருந்தால் வீட்டு வாசலுக்கு ஜீப் வந்து கூட்டிண்டு போகும். இப்ப என்னடாண்ணா தினம் அறுபது கிலோமீட்டர் பஸ்ஸில தினம் பிரயாணம் பண்ணனும். இருக்கட்டும் இப்போ போய் ஜாயிண் பண்ணிடலாம் அப்புறமா மெள்ள டிரான்ஸ்பர் வாங்கிண்டு வந்திடலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் வர்ற ஜோசியக் காலம் பலிக்றது.. பீட்டர் வைடால் இப்பத்தான் ரெண்டு வாரம் முன்னால எழுதினான். இதோ ப்ரமோஷன் வந்திடுத்தே. ஆனாலும் இந்த ராமுடு சுத்த மோசம். இதுக்கெல்லாம் மெட்ராஸ் போகணும் மந்திரியப் பாக்கணும். டைரக்டரை சேவிக்கணும் அப்படி இப்படினு பயம் காட்டிட்டானே. இன்னும் எல்லாம் சீனியாரிட்டிப்படி தானே நடக்கிறது. இதோ நிதர்சணமாத் தெரியறதே. நான் யாரையும் போய்ப் பார்கலே; குழையலே, பைசா தரலே.. ஆட்டோமேடிக்கா வந்துடுத்தே. என் சர்வீஸ் புக் க்ளியர். ஒரு மெமோ கிடையாது.. எல்லா டிபார்ட்மெண்ட் டெஸ்டும் கிரமமா பாஸ் பண்ணிருக்கேன். நான் வேலை பார்த்த எல்லா இட்த்திலேயும் பி. ஆர் வாங்கிப் பாருங்கோ. கண்லே ஒத்திக்ற மாதிரி இருக்கும். டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் எனக்கு அத்துப் படி.
ஒரு விசை கவர்னர் எங்க டிபார்ட்மெண்ட் எக்சிபிஷனை பார்க்க வந்திருந்தார். நான் தான் அவரோட பயண ஏற்பாடெல்லாம் கலெக்டர் ஆபிசோட கோஆர்டினேட் பண்ணினேன். அப்பத்தி கலெக்டர் என்னைப் பத்தி சிலாகிச்சி கவர்னரண்டையே ஒரு வார்த்தை சொன்னார். அதை குறிச்சிக்க சொல்லி கவர்னர் தன்னோட காரியதரிசிகிட்ட சொன்னார். ஒரு வாரம் இருக்கும் கவர்னர்கிட்டேயிருந்து ஒரு கடிதாசி வந்த்து. என்னைப் பாராட்டி புகழ்ந்து ஒரு அஞ்சாறு வரி எழுதி கவர்னரே கையெழுத்துப் போட்டிருந்தார். இந்த மாதிரி பாராட்டு வந்தா சர்வீஸ் பொஸ்தகத்திலே பதியனும். அப்ப இருந்த ஈ.ஓ பொறாமைப்பட்டுண்டு கண்டுக்கலை. ஏதாவது சென்ஷியூர், சார்ஜ் மெமோன்னா உடனே அதை காரியமா எழுதுவார் அவர். அப்படி ஒரு நல்ல மனசு.. ஆனா நான் அதை லேசிலே விடலை.. ஒரு விசை கலெக்டர் இன்ஸ்பெக்‌ஷன் வர்றச்சே நைசா அவருக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினேன். அவரே ஈ.ஓ கிட்டே இதெல்லாம் உடனே சர்வீஸ் பொஸ்தகத்தில எழுதணும் தள்ளிப் போடப்பிடாதுனு சொல்லிட்டார். இப்ப அதெல்லாம் பேசிருக்கு அதான் எனக்கு நியாயமான முறையில டர்ன் படி ப்ரமோஷன் கிடைச்சிருக்கு
பேனா வாங்கியாச்சு பச்சை மையும் வாங்கியாச்சு. புது போஸ்ட்லே ஜாயின் பண்ணின உடனே அங்கேயும் ஒரு பாட்டில் மை வாங்கி வச்சிடணும். இங்கே இருக்ற மாதிரி எல்லாரண்டையும் லேசா இருக்கப் பிடாது. கொஞ்சம் கரார் சேத்துக்கணும். அந்த ஜி செக்‌ஷன் சோம சுந்தரம் மாதிரி. அவனும் என் ரேங்க்தான். ஆனா என்னை மாதிரியில்லியே. மிடுக்கா இருப்பான். அவன் செக்‌ஷன் ஆளுங்க எல்லாம் சூப்பிரண்ட் சார் சூப்பிரண்ட் சார்னு பவ்யமா இருப்பாளே. அவனும் நானும் ஒரே பேட்ச் ஒரே நாள் ஜாயினிங் டேட் ஆனா இந்த ப்ரமோஷன் அவனுக்கு வரல. அவன் ஒரு டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எழுதவேயில்லை. நானும் சொல்லிப் பார்த்தேன். அவன் கேக்கலை அவன் எழுதி பாஸ் பண்ணிருந்தான்னா இப்ப அவனும் என்ன மாதிரியே பச்சை மை ஊத்தி பேனாவை ஜோபில சொருகிக்கலாம்.
இன்னிக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணனும். அந்தப் பிள்ளையார் சக்தி வாஞ்சவரா இருக்கார். இந்தப் பச்சை மைப் பேனாவை அவர் பாத்த்திலே வச்சி வாங்கணும்.

புது ஆபிஸ் நல்ல இடம் தான். பக்கத்திலே ஒரு நல்ல காபி கிடைக்குமானு விசாரிக்கணும். இவாள்ளாம் ப்ரு காபிதான் போடுவா. டிகாஷன் காப்பியே சாப்பிட்டு நாக்கு பழகிப் போச்சி. அதும் ருசி வேறதுக்கும் வராது. அதும் ‘ஏ’ கிரேட் கொட்டை வாங்கிப் பதமா வறுத்து மெஷின்ல போட்டு மெதுவா கையாலே சுத்தி பொடியோட சிக்கரி சேர்த்து... சிக்கரினோன்ன ஞாபகம் வர்றது. இன்னிக்கி திரும்பிப் போறச்சே வாங்கணும்.

என்ன இந்த ஆபிஸ்ல ஃபைல் மூவ்மெண்ட் தாமதமா இருக்கு. ஆசையா முழு கையெழுத்து ஸ்ரீநிவாசன் அப்படினு ஒரு பைல்ல கையெழுத்துப் போடணும்னு நம நமனு இருக்கு.

நான் எல்லாம் கிரம்மா செய்யணும்னு நினைக்கிறவன். ஜாயினிங்க் ரிப்போர்ட்லே நான் நீலக் கலர் மைலதான் கையெழுத்துப் போட்டேன். காரணம் இருக்கு; இங்க ஜாயின் ஆனதுக்கப்புறம் தானே ஆபிசர். அப்புறம் தான் பச்சை மை. ஆபிஸ் சூப்பிரண்டெண்டெண்ட் ( இப்படித்தான் சொல்லனும் சூப்பிரண்ட் அப்படின்னா என்னவோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு) கிட்டே சொன்னேன். முதல் பைல் அக்கப்போரா ஒண்ணைக் கொண்டு வந்து அப்ரூவ் பண்ணுனு சொன்னா நான் பண்ண மாட்டேன்னு. நல்ல விதமா ஒரு ஆபிஸ் நோட் எழுதி எடுத்துண்டு வந்தா கூட அதுல இனிஷியலுக்குப் பதிலா முழு கையெழுத்து விஸ்தாரமா போடறதுன்னு தயாரா இருக்கேன். இதுக்கோசரம் வெத்து வெள்ளைப் பேப்பர்ல இது வரை ஒரு அம்பது தரம் போட்டுப் பார்த்திருப்பேன். அதெல்லாம் நீலக் கலர் தான். முதல் பச்சை மைக் கையெழுத்து அரசாங்க காகித்த்துல தான். அதும் நல்ல சங்கதியா இருக்கணும்.

மேஜை கண்ணாடிக்குக் கீழே ஸ்வாமி படங்கள் இருக்கு. பரவாயில்ல நாமும் நாளைக்கு ஒரு பிள்ளையார் படம் கொண்டு வந்து வைக்கணும். கண் மூடி நினைச்சிண்டேன். இந்தப் பேனாவினால யாருக்கும் உபத்திரவம் தர்ற் மாதிரி ஒரு மெமோ, சார்ஜ் மெமோ, இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட் இப்படி எதுவும் கையெழுத்துப் போடற மாதிரி வரப்பிடாது. எல்லாம் சுப காரியமாவே இருக்கணும். சாத்தியமில்ல தான். இருந்தாலும் நல்லதே நினைப்போமே.

இதோ என் காபின் கதவை தட்றாளே- முதல் பைல் வந்திடுத்து.

“என்ன சூப்பிரண்டெண்டெண்ட் பஞ்சாபகேசன் சார். நான் சொன்ன மாதிரி ஒரு நல்ல விஷயமான பைல் தானே “ னு கேட்டுண்டே நாடாவை நாசுக்கா பிரிக்கிறேன்.
நான் இந்த டாட்டன்ஹாம் சிஸ்ட்த்தில எத்தனை வருஷம் இருந்திருக்கேன் அப்படினு நான் பைலோட டேப்பை அவிழ்க்ற வித்த்திலேயே தெரிஞ்சிக்கலாம். இருங்கோ முதல் பச்சை மைக் கையெழுத்து. என்ன சப்ஜெக்ட்னு படிக்கிறேன்.

என்ன இது கோர்ட் ஆர்டர் மாதிரின்னா இருக்கு

படிச்சிட்டு பஞ்சாபகேசனை நிமிர்ந்து பாத்தேன்

‘’ ஆமாம் சார். இந்தக் கட்டிடம் வாடகைக் கட்டிடம். இதோட ஓனர். இதைக் நாம காலி பண்ண என்னென்னெவோ செஞ்சார். நாம சரியா நடந்துக்கல. அப்புறம் கோர்ட்டுக்குப் போனார். நாமளும் கௌர்மெண்ட் ப்ளீடர் சொன்னதாலா வாய்தா வாய்தாவா வாங்கி இழுத்தடிச்சிருக்கோம். நான் இங்க வந்தே ஒரு ஆறு வருஷம் இந்த இழுத்தடிப்பைப் பார்த்திருக்கேன். கடைசில கோர்ட் அவருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி நாம போன வருசமே காலி பண்ணிருக்கணும். கோர்ட் கெடு தேதி கூட வச்சிருந்த்து. இதுக்கு முன்னே இங்க இருந்த ஈ.ஓ அதை சரியா டிபார்ட்மெண்ட்டுக்கு கன்வே பண்ணலை. இத்தனைக்கும் இந்த வழக்கில நம்ம டிபார்ட்மெண்ட் டைரக்டரும் ஒரு பிரதிவாதி. அவர் தரப்பில ஒரு கௌண்டர் கூட தாக்கல் ஆகிருக்கு. காலி பண்ண கெடு தேதி சொல்லியும் காலி பண்ணாத்தால கட்டிட ஒனர் கோர்ட்டை மூவ் பண்ணி ஜப்தி ஆர்டர் வாங்கிட்டார். இப்ப கோர்ட் ஸ்டாப், போலிஸ் சகிதம் வெளில ஹால்லே உக்கார வச்சிருக்கேன். இதிலே நீங்க உங்க முன்னாடி தான் இந்த ஆபிஸ் ஜப்தி ஆச்சினு கையெழுத்துப் போட்டுத் தரணும். நாம இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. மேல் கொண்டு அப்பீல் செய்யலாம். அவாள்ளாம் வெயிட் பண்றா”

ஸ்ரீநிவாசன் என்ற என் சின்னப் பெயரை அந்த கோர்ட் காகித்த்தில் தினத்தந்தி தலைப்பு செய்தி அளவில் பச்சை மையில் விஸ்தாரமாய் நான் ஏன் கையெழுத்திடுகிறேன் எனப் புரியாமல் பார்க்கிறார் பஞ்சாபகேசன்

Saturday, 9 August 2008

கடிதம்-4


J Krishnamurthy என் ஆதர்சங்களில் ஒருவர். அவரது எளிமையான எழுத்துக்கள் என்னை வசீகரிக்கும் நீண்ட நாள் ஆச்சரியங்கள். அவரின் Sri Lanka Talks ம் Letters to Schools ம் என் புத்தக சேமிப்பில் பொக்கிஷம் என்றே சொல்லுவேன்

கிருஷ்ணமூர்த்தி தான் தொடங்கிய பள்ளியின் மாணவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுதி.

முன்னுரை பாருங்கள்:

இந்தக் கடிதங்கள் நீங்கள் ஆயாசமாக் இருக்கும் போது படிப்பதற்கல்ல; இவற்றை நான் சிரத்தையுடன் எழுதினதைப் போலவே, சிரத்தையுடன் படியுங்கள். ஒரு பூவை அதன் இதழ், வர்ணம், மணம் கூடிய அழகை பார்த்துப் பயிலுவது போல இந்தக் கடிதங்களையும் பயிலுங்கள்

ஜனவரி 15 1982ல் எழுதப்பட்ட கடிதம் :

I think it is important to learn the art of thinking together. The scientists and the most uneducated human beings think. They think according to their profession, specialization and according to their belief and experience. We all think objectively or according to our own particular inclination, but we never seem to think together, to observe together. We may think about something, a particular problem or experience but this thinking does not go beyond its own limitation.

இப்படியாகத் தொடரும் இந்தக் கடிதத்தை

I am in stream with that which is godness, compassion and intelligence. That intelligence is acting, confronting the madness of the present world. That intelligence will be acting where the ugly is

என்று முடித்திருக்கிறார்

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 3 August 2008

கடிதம்-3


நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.

கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்

அதை அப்படியே தருகிறேன்..

“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.

இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்


(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 27 July 2008

யக்ஷகானம் (மீண்டும் சுஜாதா)



”கணேஷ அது என்னனு பாருப்பா.. நான் இங்கே இவரோட கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கேன்”

“சரி சார்.. இதோ பார்க்கிறேன்”

“கவலை வேண்டாம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. வசந்துக்கு எதுவும் நிகழாது”

“இரண்டு விஷயம்.. என்னை வாக்கியத்துக்கு வாக்கியம் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்று நீளமாக கூப்பிட வேண்டாம். என்னை பூலோகத்தில் எல்லோரும் சுஜாதா என்று கூப்பிடுவார்கள்.. நீங்களும் சுஜாதா என்றே கூப்பிடலாம்.. வசந்துக்கு எதுவும் ஆகாது என்று எனக்குத் தெரியும். அவனால் மத்தவர்களுக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரி”

”உங்களுக்கு விப்ரநாராயணர் சிறப்பு அழைப்பு தந்திருப்பதாக அறிந்தேன்.. அதற்கு உதவுவதே என் பணி... நீங்கள் இங்கே யாரையெல்லாம் பார்க்க நினைக்கிறீர்களோ என்னிடம் சொல்லவும்; நான் ஏற்பாடு செய்கிறேன்”

“சற்று அவகாசம் தாருங்கள்—ஒரு பட்டியலே தருகிறேன்—நீங்கள் என்னை மன்னிக்க வேணும். இப்படி அட்சர சுத்தமா தமிழ் பேசறது எனக்கு அலர்ஜி. யாதார்த்தமா பேசலாமே.. இல்லேன்னா சாண்டில்யன் கதை மாதிரி நீள நீளமா வாக்கியம் வரும்”

“அதுவும் சரி தான்.. ஆனால் எனக்கு உங்கள் வழக்கப்படி பேசி பழக்கமில்லை.. ஆனால் நீங்கள் பேசினால் புரியும்.. நீங்கள் கதை புனைபவர் என்று சொன்னார்கள்.. உங்கள் படைப்பில் யக்ஷகானம் வைத்து ஒரு புனைவு செய்திருக்கிறீர்கள் என்று ஞாபகம்”

“அட ஆச்சரியமா இருக்கே.. என் கதை உங்களுக்கு எப்படி தெரியும்.. அது மூன்று நிமிஷம் கணேஷனு ஒரு த்ரில்லர்.. யக்ஷகானத்தில் வரும் நிமிஷா, நிமிஷா, நிமிஷா அப்படினு அந்த வார்தை மூணு தரம் சொன்னவுடனே குண்டு வெடிச்சி ஒரு விஐபியை கொல்ற மாதிரி பிளாட்.. இந்த கணேஷ் வசந்த் தான் அதை பிரேக் பண்றமாதிரி எழுதினேன்.”

“ஞாபகம் இருக்கிறது ஸ்ரீரங்.... மன்னிக்கவும் சுஜாதா. இங்கே ஒரு பெரிய நூலகமே இருக்கிறது.. அதில் தான் எடுத்து படித்தேன்.”

“ஆஹா லைப்ரரி இருக்கா அதும் போதும் எனக்கு.. “

” யக்ஷகானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லமுடியுமா”

”அது வந்திட்டு... ஆந்திரா, கர்நாடகாவிலே அதும் பேரு யக்ஷகானம். தமிழ்நாட்டிலே ‘பாகவத மேளா’னு கூட சொல்வாங்க.. பழைய குறவஞ்சி நாடகம் கூட இந்த டைப் தான். பெங்கால்ல இதை “யாத்ரா” னும் அஸாமில “பாவநா” அப்படினு சொல்வாங்க.. நீங்க “பொன்னியின் செல்வன்” படிச்சிருப்பீங்க”

“ஆமாம் படித்திருக்கிறேன்.”

“அதில கூட தேவராளன் தேவராட்டி டான்ஸ் வருமே.. அதெல்லாம் இந்த மாதிரி இசை நாடகம் தான். தமிழ்ல கோபால கிருஷ்ண பாரதியாரோட “நந்தனார் சரித்திரம்” ரொம்ப பிரசித்தம்.. அதே மாதிரி தெலுகிலே தியாகராஜர் “ பிரஹல்லாத பக்த விஜயம்” அப்படினு பண்ணிருக்கார்.. அதுவும் இந்த டைப் தான். தமிழ்ல மெரட்டூர் வெங்கட்ராம சாஸ்த்திரி, ஷாஹாஜி மஹாராஜா இவங்கெல்லாம் கூட இந்த மாதிரி இசை டிராமா போட்டிருக்காங்க”

‘இதோ கணேஷும் வசந்தும்”

வசந்தை ஆலிங்கனம் செய்தபடி ஒரு ஆசாமி

(தொடரும்)

கடிதம்-2



கடிதம் என்று சொன்னாலே காதல் இல்லாமல் இருக்காது. எனது குடும்ப நண்பர் ஒருவர் ”பேனா நண்பராக” ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி ரொம்ப நாள் சுவாரசியமாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் தீடீரென “ஐ லவ் யூ” என்று கடுதாசி போட்டுவிட்டது. மனுஷன் முதலில் தயங்கினார். என்னைப் போல புண்ணிய ஆத்மாக்கள் எதற்கு இருக்கிறோம்.. அவரை உசுப்பேத்தி சம்மதம் பெற்றோம். அதன் பின் இரண்டு கடிதங்கள்.. அந்தப் பெண் இலங்கையிலிருந்து வந்த அகதி என்று தெரிந்தது. நண்பர் குடும்பம் அவசரமாக அவருக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள்.. அந்த இலங்கைப் பெண் என்ன ஆனாள் என்று தெரியவில்லை..

அகிலன் அவர்களின் “ஆனால் “ என்ற கதையை என்னால் மறக்கவே முடியாது.. 1954 லிலேயே இத்தனை சுவாரசியமான ஒரு கதை இருந்திருக்க முடியுமா என்று இப்போதும் வியக்கிறேன்.
திருச்சியிலிருக்கும் கல்யாணராமன்.. குன்னூரிலிருக்கும் தியாகராஜன் இவர்களின் கடிதங்களே கதை.

கதை 1954 செப்டம்பர் 15 கல்யாணராமனின் கடிதமாய் தொடங்கி அதே செப்டம்பர் 30 தியாகராசனின் அவசரத் தந்தியுடன் முடிகிறது.

அப்போதே பெண்களை இவ்வளவு உன்னிப்பாக “அப்சர்வ்” செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஹாய்ஸத்துக்குப் பஞ்சமில்லாத நடை.

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 13 July 2008

கடிதம்-1


பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.

இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டது

கடிதம் என்று சொன்னாலே எனக்கு பண்டித நேருவின் ஞாபகம் தான் வரும். அவரின் Glimpses of World History இந்திரா காந்தி அவர்களுக்க் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அதில் ஒரு கடிதம்.. நான் அடிக்கடி குறிப்பிடும் வரிகள்

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man, it was written, wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

(நேருவை முழுசாத் தெரிஞ்சிக்க அவரோட இந்த புத்தகத்தை படிக்க சிபாரிசு செய்கிறேன்)

இந்த கடித வரிகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள் ஞாபகம் வரும்


“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம்

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

மாதவியை கணிகையர் குலத்தவளாகவே இளங்கோ அறிமுகம் செய்கிறார். ஆயினும் தான் பண்பு நெறி தவறாதவளே என அவளே கடிதம் வழி சொல்வதாகவும் காட்சி அமைக்கிறார்

நான் இந்த சுவாரசியங்களை இன்னும் விடாமல் வைத்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தின் போது அதற்கு வருந்தி ஓர் இரங்கல் கடிதம் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதும் அவர் அதற்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் ,’ நான் உங்கள் அன்பிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நானும் பிரியங்காவும், ராகுலும் நன்றி சொல்கிறோம்” என்று எழுதியது இப்போதும் எனது சேகரிப்புப் பொக்கிஷத்தில்

மொரார்ஜி தேசாய் அவர்களின் சுய சரிதையில், அமெரிக்க தூதுவர் ஒருவரிடம் பண்டித நேரு அவர்களின் முகம் காட்டாப் பேச்சுதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து ஆவல் காரணமாக அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் சாதாரண Inland லெட்டரில் தன் கைப்பட எனக்கு எழுதிய பதில் கடிதமும் (விளக்கக் கடிதம்) என் பொக்கிஷத்தில் ஒரு முத்து

நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் M. ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக இருக்கும்போது நான் அனுப்பிய தீபாவளி வாழ்த்துக்கு தன் கைப்பட பாராட்டியும் வாழ்த்தியும் எழுதிய கடிதம், பின்னர் ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய ஆசிர்வாதக் கடிதம்.. என் நினைவில் நீங்கா இடம் பெற்றவை

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Saturday, 12 July 2008

வைகுண்ட பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா)


”பாஸ் என்ன இது மௌண்ட் ரோடு ரெஹேஜா டவர்ஸ் மாதிரி இருக்கு; மேலோகம்னா வேற மாதிரி கற்பனை பண்ணிண்டிருந்தோமே எல்லாரும்”

அந்த முகப்பு மிகப் பிரம்மாண்டமாய்... வழுக்கும் தரைகள்.. மூன்று பவுண்டன்கள்.. பீய்ச்சியடிக்கும் தண்ணீர்... அதற்கு கலர் சேர்க்கும் Focus லைட்கள்... சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்..

க்யூப் டைப்பிலான லிப்ட்கள்.. அவற்றில் சிரித்த முகங்களுடன் மனிதர்கள்.. அங்கும் இங்கும் உலாவும் சீருடை தரித்த சிப்பந்திகள்..

”சார் நிஜமாவே இது மேலோகம் தானா.. என்னவோ JFK ஏர்போர்ட் மாதிரி இருக்கு”

“ஏம்பா! எனக்கு மட்டும் என்ன தெரியும்; நான் என்ன பத்து தரம் இங்கே வந்து போயிருக்கேனா”

பார்ப்பதற்கு பளிச்சென்றிருந்த ஒரு பெண் சிப்பந்தி மூவரையும் அணுகி,

“நீங்கள் அந்த வரிசையில் நின்றால் உதவியாக இருக்கும்; அதுவுமில்லாமல் நீங்களும் அதிக சிரமம் இல்லாமல் இருக்கலாம்”

“மிஸ்; நான் உங்களை ஒரு கலை விழாவில பார்த்திருக்கேன்”

“வசந்த்.... இங்க இந்த ட்ரிக்கெல்லாம் எடுபடாது... அவாள்ளாம் மேலோகப் பிரஜைகள். மந்திரமெல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பா.. உன்னை டபக்குனு ஆட்டுக்குட்டியா மாத்திட்டானா கஷ்டம்”

“சார் நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க.. இல்லேன்னா நான் ஆடா மாறி... பாஸுகு வேற மட்டன்னா பிடிக்காது”

“உன்ன திருத்தவே முடியாதுடா வசந்த்”

பளிச் பெண் காட்டிய வரிசை டிக்கெட் கௌண்டர் மாதிரி இருந்த இடத்தை நோக்கி நீண்டிருந்தது..

கௌண்டர் ஆசாமி வரிசையில் வரும் எல்லார் தலையிலும் தொப்பி மாதிரி ஒரு சமாச்சாரத்தை வைத்து பின் அங்கிருந்த கம்யூட்டர் மாதிரி ஒரு வஸ்துவிலிருந்து என்னவோ படித்துக் காட்டி பின்னர் ஒரு அட்டையைக் இடுப்பில் கட்டினான்.


“பாஸ் கன்பார்ம். இது வைகுண்டம் தான்.. பாருங்க தலைல சடாரி வைக்கிறாங்க”

”வசந்த்.. கேலி பண்ணாத.. சடாரி எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா”

“சொன்னா தெரிஞ்சுக்கிறேன்..”

”சடம் என்றால் போன ஜென்மா வினையான காற்று; பிறக்கிற குழந்தை முன் ஜென்மா வினையால அழறது. பெருமாள் பாதம் படறதினால போன ஜென்மா வினையெல்லாம் முறிஞ்சிடறது. நாம பெருமாள் பாதம் தேடி போகலேன்னாலும் அவர் நம்மைத் தேடி வருவார்.. அது தான் இது”

”சார்... உங்க பிரெண்ட் அப்துல் கலாம் ஒரு தரம் சுவாமி சிவானந்தரிடம் கேட்டாராம் How can I find my right teacher? அதற்குச் சிவானந்தர் சொன்ன பதில் - When the student is ready, the Teacher arrives! – Wings of Fire ல் படிச்சிருக்கேன்... அது மாதிரி பகதன் ரெடின்னா ஸ்வாமியும் ரெடி.. அதானே”


இப்போது சுஜாதாவின் முறை.. தொப்பி மாட்டினவுடன்.. கௌண்டர் ஆசாமி பவ்யமானான்..

“அய்யா நீங்கள் தானே ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...”

“ஆமாம்பா .. ஆனா ஸ்ரீரங்கத்தில் நான் மட்டும் ரங்கராஜனில்லை”

“அய்யா இந்த கருவி மூலம் உங்களின் விதியைப் படிக்க இயலும்.. இதை பூவுலகில் தலையெழுத்து என்று சொல்கிறீர்கள் அல்லவா. அதுதான்;.. இங்கே பல வருஷ காலம் பிரஜையாயிருக்கும் ஒருவர் புதிதாக கவர்ந்து கொண்டுவரப்படும் உயிர்க்கு சிறப்பு பிரஜா அந்தஸ்த்து அளிக்க பரிந்துரைக்க முடியும்.. அப்படி ஓரு பரிந்துரை ஒருவர் உங்களுக்கு செய்திருக்கிறார்”

“ எனக்கா .. யாருப்பா அது ரொம்ப ஆச்சரியமா இருக்கே”

“அவர் இப்போது ஸ்ரீஹரியின் சந்நிதியில் இருக்கிறார்.. அவர் பெயர் விப்ர நாராயணர்”

“ ரங்கநாதா !!... தொண்டரடிப்பொடியாழ்வாரா !!! .. அவரை நான் தரிசிக்க முடியுமா“

“ஆமாம்.. அவரேதான். நிச்சயம் சந்திக்க இருக்கிறீர்கள். இது உங்களுக்கான அடையாள அட்டை.. உங்களின் படைப்பான இந்த இருவரும் உங்களுடனே இருப்பதற்கும் அனுமதி உண்டு... இதோ அந்த வாயில் வழியாக செல்லுங்கள். ஒரு தோட்டம் வரும்.. அங்கே தாடியுடன் ஒரு பெரியவர் இருப்பார்.. அவர் உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் மேல்விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.....வந்தனம்”

“கணேஷ்.. இது ஒன்ணும் கனா இல்லியே.. நிஜமாகவே தொண்டரடிப்பொடியாழ்வாரா !! எனக்கு பிரமிப்பா இருக்குப்பா”

“எனகும் தான் சார்.. அவன் சொன்ன மாதிரி அந்த வாசல் வழியா போவோமே”

கௌண்டர் ஆசாமி காண்பித்த வாசல் அந்த ஹாலின் ஒரு மூலையில் இருந்தது.. மூவரும் நடந்தனர்.

“கைடா ஒரு பெண் பிள்ளையைப் போட்டால் சௌகரியமா இருக்காதோ..”

நீ சும்மா இருக்க மாட்டே இப்போ”

அந்த வாசல் கொஞ்சம் உயரம் குறைச்சலாக இருந்தது.. குனிந்து வெளியில் வந்தால்.. மிக விசாலமான் இடம்.. ரம்மியமான தோட்டம்.. தாடி வைத்த பெரியவர் அவராகவே நாடி வந்தார்

“வந்தனம் நான் தான் இங்கே உங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப் பட்டுள்ளேன் நீங்கள் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.. இது கணேஷ்.. சரி தானே.. வசந்த் என்று இன்னொருவரும் வருவதாக தகவல்.. அவரெங்கே”

”பாஸ் இங்கே சீக்கிரம் வாங்க “ என்ற வசந்தின் அலறல் பின்னாலிருந்து கேட்டது

(தொடரும்)

Tuesday, 8 July 2008

குட்டிக் கதை-4 கோணல் புத்தி


ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும். தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான். ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.

வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”

“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”


நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி

(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)

Saturday, 5 July 2008

வைகுண்ட பிரவேசம்-1(மீண்டும் சுஜாதா)


ஒரு நீளமான டிரெயின் மாதிரி வாகனத்தில் சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் பிரயாணம். மேக மண்டலங்களில் அசாத்திய வேகத்தில் அந்த வாகனம் பிரயாணிக்கிறது...

சற்று நேரத்தில் ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வாசலில் அந்த வண்டி நிற்கிறது.. ரயில்வே ஸ்டேஷன் போலவே பலர் இறங்குகின்றனர். பிளாட்பாரம் இல்லை.. எல்லாம் அப்படியே அந்தரத்தில் நிற்கின்றனர்.

“பாஸ் இது என்ன இடம்.. ராத்திரி பத்தரை மணிவாக்கில சுஜாதா சார் கூப்பிட்டாரேனு டிவில பாலமுரளிகிருஷ்ணா கச்சேரியைக் கூட தியாகம் பண்ணிட்டு வந்தேன்.. மேக மேகமா வந்ததே”

“வசந்த் நீ ராத்திரி என்ன மாதிரி டிவி ப்ரோகிராம் பார்ப்பேனு எல்லாருக்கும் தெரியும்.. பேசாம வா”

“எல்லாம் என் நேரம் பாஸ். சார் எழுதி எழுதி வசந்த ஒரு சோக்காளியாவே தெரியறான் இல்ல.. இது என்ன இடம்.. எதுவும் புது கேஸ் எடுத்திண்டிருக்கேளா.. சொன்னா என்ன கொறஞ்சா போய்டுவேள்”

“ஏம்பா வசந்த் இன்னும் புரியலையா. எனக்கு பூமில ஆயுசு முடிஞ்சது.. இது மேலோகம்.. என்னால படைக்கப்பட்ட நீங்க ரெண்டு பேரும் கூட வந்திருக்கேள்.. கணேஷைக் கூப்பிட போகும் போது அவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன்.. உன் கிட்ட சொல்லாம கூட்டிண்டு வந்தது தப்புதான்”

“சரிதான்.. கதையில தான் பாஸ் எல்லாத்தியும் முன்னயே தெரிஞ்சிண்டு பலியாடு மாதிரி சில எடத்துக்கு என்ன அனுப்புவார்.. அதையே மெயிண்டய்ன் பண்றாரு”

வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் சகிதமாக அங்கே ஒருவன் வந்தான்..

‘எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.. இது தான் மேலுலக முன்றில்.. இன்னும் சற்று நேரத்தில் கதவுகள் திறக்கப்படும்”

“இந்தோ பார்ப்பா இந்த சாருக்குதான் தமிழ் ப்ரீத்தி ஜாஸ்தி.. ஒரு நாலு வார்த்தை கொடுத்து இதில எது தமிழ் வார்த்தை இல்லை இப்படியெல்லாம் கேள்வி போடுவார்.. முன்றில் னா என்ன”

“நான் சொல்றேன் வசந்த்.. முன்றில் னா கிட்டத்தட்ட ரிசப்ஷன் மாதிரி..

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

அப்படினு புறநானுறில் வருது”


“அடடா இங்கே வந்தும் கற்றதும் ... பெற்றதும் மாதிரி ஆரம்பிச்சுட்டார்”

”வசந்த் ... என்ன இது சார்கிட்டே போய்... பேசாமா வா”

“ ஓகே பாஸ்”

சற்று நேரத்தில் அந்த மாபெரும் கதவு கொஞ்சம் கூட சப்தமில்லாமல் மெதுவாகத் திறந்தது...

உள்ளே......

Friday, 4 July 2008

மீண்டும் சுஜாதா....


தமிழ் எழுத்துலகில் பல வருஷம் பல தளத்தில் இயங்கிய எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக இந்த தொடர்.. இந்த தொடரின் ஹீரோ அவர் தான்..
நம் ஆதர்ச சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் வைகுண்ட பிரவேசம் செய்வதில் கதை தொடங்குகிறது.. அவர் அங்கே ஆழ்வார்கள் பின்னர் கைலாயத்தில் நாயன்மார்கள் இன்னும் பிற சங்கத் தமிழ் புலவர்களையும்.. சந்திக்கிறார்.. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களையும் அங்கே மறு உலகத்தில் சந்திக்கிறார் கூடவே கணேஷ் வசந்த்..


இந்தத் தொடரின் பதிவுகள் ”மீண்டும் சுஜாதா” என்ற தலைப்பின் கீழ் பதியப்படும். ஒவ்வொரு பதிவும் தனித் தனி தலைப்பிட்டதாக இருக்கும்..

முதல் பதிவு இன்னும் இரண்டு தினங்களில்...