Monday 13 August 2012

Uniform Civil Code-6

Uniform Civil Code-6

அரசியல் சாசன நிர்ணய சபையில் டிசம்பர் 1, 1948ம் தேதி பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் தொடங்கியது. அன்றைக்கும் துணைத் தலைவர் ஹெச். சி முகர்ஜியின் தலைமயில் தான் நடவடிக்கைகள் நடந்தேறின

அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துகளின் விவாதத்தின் போது மீண்டும், முகமத் இஸ்மாயில் சாஹிப், ஒவ்வொரு மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகைக்கு எனும் திருத்தம் ஒன்றினை முன் மொழிந்தார்

அதனை ஏற்க தேவை இன்னும் வரவில்லை என்பதை குறித்து கவனத்தில் வைக்க வேண்டும் என்பதாக சி. சுப்ரமணியம் தனது கருத்தினை முன் மொழிந்தார்


முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்தினைச் சொல்லுமாறு துணைத் தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்

இஸ்மாயில் சாஹிப் பேசினாதாவது :

இதற்கு முன்பு நாம் , இந்த அவையில் விவாதித்த போது, அரசின் வழி காட்டும் நெறிகள் அத்தியாயத்தினைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பமாக அமைந்தது.. அப்போது நாம் அடிப்படை உரிமைகள் குறித்தும் விவாதிக்க அவசியமானது.. ஆனால் இன்றைக்கு விவாதம் முழுக்க முழுக்க அடிப்படை உரிமைகள் குறித்தது என்பதை மறக்க வேண்டாம்.. இந்த சூழலில் தான் நாம் அந்த அந்த மதங்களுக்கான பெர்சனல் சட்டங்களைப் பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பதை விவாதிக்க வேண்டும்.

அன்றைய நாள் விவாதத்தில் பேசிய முன்ஷி அவர்கள் சிறந்த வக்கீல். அதனால் அப்படிப் பேசினார். பெர்சனல் சட்டங்கள் என்பவை மதம் சார்ந்தவை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்.. அதே போல் அம்பேத்காரும் அதே போலவே பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். பொது சிவில் சட்டத்தின் பல அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு அனுகூலமாகவும் அவர்கள் மதத்தின் பெர்சனல் சட்டங்களைக் கைக் கொள்வதில் எந்த தடங்கலும் வராதிருக்கும் வண்ணமும் இருக்கும் போது, அப்படி ஒரு அனுகூலம் இல்லாத மதத்தினரின் மன உணர்வுகளை அம்பேத்கார் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்

நானும் ஒரு உதாரணத்தினை சொல்ல ஆசைப்படுகின்றேன்.. பசுக்களை கொல்வது என்பது சில சமூகத்தினருக்கு அவர்கள் மதம் சார்ந்து புனிதமில்லாத செயல்.. பாவமான செயல்.. ஆனால் சில சமூகத்தில் பசுக்களை கொல்வதும் அதன் மாமிசத்தைப் புசிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.. ஆனாலும் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளைக் கூட அந்த சமூகத்தினர் உரிமை கோரவில்லை


இந்த நிலையில் கிழக்கு பஞ்சாப் பகுதியின் உறுப்பினர் பண்டிட் தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட்டார் : " நண்பருக்கு பாகிஸ்தானில் பசு வதை தடை செய்யப்பட்டுள்ளது தெரியுமா"

தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட வேண்டாம் என துணைத் தலைவர் கேட்டுக் கொள்ள முகமது இஸ்மாயில் சாஹிப் பேசலாம் என யத்தனித்தார்

ஆனாலும் தாக்கூர் தாஸ் பார்க்கவா சளைக்கவில்லை : " இந்த அவை என் குறுக்கீட்டிற்காக என்னை மன்னிக்க வேண்டும்.. ஆனாலும் பசு வதை என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. ஏன் இந்தியாவில் ஆட்சி செய்த பல முகமதிய அரசர்கள் பசு வதை செய்வதனை தடுத்திருக்கின்றனர் என்ற கருத்தினை அவையில் பதிவு செய்ய விழைகின்றேன்"

முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்துகளை வலியுறுத்திப் பேசிய போது மீண்டும் சி .சுப்பிரமணியம் குறுக்கிட்டார் : " நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. அடிப்படை உரிமைகளில் நாம் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படலாகாது என்பதை விவாதிக்கும் போது, இது போல மதம் சார்ந்த பெர்சனல் சட்டங்கள் குறுக்கிட்டால், நம்மால் நம் கிரிமினல் சட்டங்களை நிர்வாகம் செய்யவே முடியாது"

இஸ்மாயில் சாஹிப் தான் கொண்டு வந்த தீர்மானங்களை வலியுறுத்தினார்.. ஆனால் அவை அன்றைக்கு அந்தப் பொருளில் மேலும் எந்த விவாதத்தினையும் காணவில்லை..

அன்றைக்கு மறு நாள் டிசம்பர் 2 அன்று அவையில் அம்பேத்கார் இந்தப் பொருளில் ஆற்றிய உரை மிகவும் குறிப்பிடத் தகுந்தது

(தொடரும்)


1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

விவாத்தின் தொடர்ச்சிக்காக்க் காத்திருக்கிறோம். நன்கு எழுதப்பட்ட பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா