Thursday 22 May 2008

இப்படிக்கு ... தொடர்ச்சி


மாற்றுக் கருத்தாயினும் எனது வலைப்பதிவில் செல்வேந்திரனின் பின்னூட்டத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கி பின்னூட்டமும் அங்கே அனைவர் பார்வைக்கும் உள்ளது (பார்க்க: இப்படிக்கு... பதிவின் பின்னூட்டங்கள்)

இந்த வலைப்பதிவில் இந்த பொருள் குறித்து முத்தமிழ் கூகிள் குழுமத்தில் (Google Groups) இரண்டு வரியில் ஓர் இழை சேர்த்தேன். அங்கே விவாதம் இன்னும் தொடர்ந்து நடக்கிறது. பல வகைக் கண்னோட்டங்கள் அங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அங்கே உறுப்பினராகி விவாதத்தில் பங்கு பெற அழைக்கிறேன்

இந்தப் பொருளில் வேந்தன் அரசு, சங்கர் குமார், பச்ச புள்ளே, ஸ்ரீ(முத்தமிழ் கூகிள் குழுமம்) செல்வேந்திரன் ஆகியோர் மாற்றுக் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் (யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க)

இப்பொருளில் பெண்கள் பக்கமிருந்து குழுமத்திலும்(முத்தமிழ் கூகிள் குழுமம்) வலைப்பதிவிலும் பின்னூட்டம் இல்லை.

ஆயினும் இரண்டு பெண்கள் எனக்கு தனிமடலில் அவர்கள் கருத்துக்களை அனுப்பியுள்ளனர்.

இந்த பொருள் விவாதமாக நடைபெறும் நிலையில், பொது விவாத மேடையில் பெண்கள் பங்கு கொள்ளும் அளவுக்கு இன்னும் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலையில் மனதளவில் வளரவில்லை

ஆயினும் இதில வியப்புக்குரிய செய்தி: ஒரு பெண் தன்னை பாலியல் தொழிலிலில் இருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு எழுதிய தனிமடலை குறிப்பிட வேண்டும். அவரது அறிமுகம் Bonafide ஆனதா என்ற ஐயம் எனக்கு உள்ளது. ஆனால் அவர் வெளிப்படுத்திய அவரது மனநிலை என்னை சற்று சங்க்டப் படுத்தியது. பாலியல் தொழில் அவரது தொழில் என்ற கூற்றை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு அதைப் படித்தால் இந்த தொழிலை ஒழித்தே ஆக வேண்டும் என்றே தோன்றுகிறது.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற சிலரின் வாதம் கேள்வி அறிவினாலும், இது தொடர்பான ஊடக செய்திகளின் வாயிலாகப் புரிந்து கொண்ட விதத்தினாலுமேயல்லாமல் அவர்தம் தனிப்பட்ட அனுபவம் என்று சொல்ல முடியாது.

பாலியல் தொழில் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற எனது ஆதங்கமும் கூட கால காலமாக கற்ற கல்வி, போதிக்கப் பட்ட அறிவு / பண்புகள் அதன் வழி ஏற்படுதிக் கொண்ட சிந்தனைப் பின்னல்கள், சட்டம் பயின்ற போது பெற்ற நூலறிவு, பெரியோர் அமைத்தளித்த வாழ்வு முறை இதன் பிண்ணனியிலேயே.

இப்போது ஒருவர் பாலியல் தொழிலாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது எண்ணத்தை வெளியிட்டிருக்கும் நிலையில் அவர் தம் கருத்தையும் பார்க்க வேண்டியதாகிறது. அவர் தனது பெயரை (பொய்ப் பெயர் ஆயினும்) வெளியிட வேண்டாம் என சொன்னதால் பெயரை மட்டும் மறைத்து அவரது கருத்தை எனது அடுத்த பதிவில் எனது வ்லைப்பதிவில் வெளியிடுகிறேன்.

மற்றுமொரு ஆச்சரியம்.. ஒரு பெண் போலிஸ் அதிகாரியின் தனி மடல்.. இவர் தன்னை நேரடியாகவே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இவரது கடிதம் ஆங்கிலத்தில்.. காரணம் தனக்கு தமிழில் எப்படி இமெயில் அனுப்ப வேண்டும் என தெரியாது என சொல்லியுள்ளார்.. அவரது ஆங்கில மெயிலை அப்படியே வெளியிட அனுமதியும் கொடுத்துள்ளார். அவரது ஆங்கில மெயிலை தமிழாக்கம் செய்து “இது சரியா- உங்கள் கருத்து அப்படியே வந்துள்ளதா” என கேட்டு மெயில் ஒன்று அனுப்ப உத்தேசித்துள்ளேன். காரணம் வாசகரில் சிலர் தமிழில் புலமை பெற்றுள்ள அளவு ஆங்கிலத்தில் பெற்றிருக்க மாட்டார்கள். அந்த காவல் அதிகாரி தனது ஆங்கில மெயிலின் தமிழாக்கம் சரி என்று சொன்னவுடன் அதனையும் (ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம்) எனது அடுத்த பதிவில் பதிகிறேன்

இது தவிர சகோதரர் வேந்தன் அரசு(முத்தமிழ் கூகிள் குழுமம்) எனக்குள் ஏற்படுத்திய திருக்குறள் அலை காரணமாக “வரைவின் மகளிர்” அதிகாரம் குறித்து நான் கலந்தாலோசித்த பேராசிரியர் ஒருவரின் ( இவர் திருக்குறளில் ஆராய்ச்சி செய்து இரண்டு முறை முனைவர் பட்டம் பெற்றவர்- மிக முக்கியமான செய்தி திருக்குறள் வேற்று நாட்டவருக்கும் தகுந்த நீதி நூலே என்பதனை புரியவைக்க சுமார் 17 நாட்டு கலாச்சார பிண்ணனியுடன் அந்த நாட்டு மொழியியல் வல்லுநர்கள் கலாச்சார ஆசிரியர்கள் இவர்களுடன் கலந்த்தாலோசனை செய்து அந்த 17 நாட்டு மொழியிலும் கட்டுரை வெளியிட்டவர்) விளக்க உரையினையும் எனது அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன்

இது தவிர இந்திய அரசியல் நிர்ணய சபையில் (Constituent Assembly) Constitution of India வின் 23 வது ஷரத்து(Right Against Traffic in Human Being and Forced Labour) ஏன் தேவை அது ஏன் ஒரு அடிப்படை உரிமையாகக் கருத்தப் படவேண்டும் என்று அம்பேத்கார் அவர்களின் விளக்கத்தினையும் சேகரித்து வருகிறேன். இந்த விவாதம் நான் பல வருடங்களுக்கு முன்பு படித்த்து. இப்போது Constituent Assembly விவாதங்கள் நூலை வேண்டி வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன். இந்த விவாதங்கள் இப்போது இணையத்திலேயே கிடைப்பினும் சில முன்னுரைகள் இந்திய கலாசாரத்தினை சாதாரணமாக நினைப்பவர்களுக்கு அது அப்படியல்ல என புரிய வைக்க பயன்படும். இது தவிர புகழ் வாய்ந்த Jurist H. M Seervai அவர்கள் Constitution of India க்கு எழுதிய Commentary லிருந்து குறிப்புகள் சேகரித்து வருகிறேன்.

மேலும் 1950 லிருந்து 2007 வரை இந்திய உச்சநீதி மன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் வழங்கிய பல வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்புகளையும் படித்து வருகிறேன். இந்த தீர்ப்புகள் முதிர்ந்த அனுபவமும், வாழ்வியல் நடைமுறையில் பல தரப்பட்ட நிலைகளைக் கடந்த நீதியரசர்களால் வழங்கப்பட்டவை. அந்த தீர்ப்புகளில் சட்டம் மட்டுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் ஆதங்கமும் மன் உணர்வுகளும் உள்ளன

எல்லாவற்றிலும் முக்கியமானது மூவாலுர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தேவதாசி ஒழிப்புக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பிறந்த வரலாறு குறித்து சில முதியவர்கள் எனக்கு குறிப்புதவிகள் செய்திருக்கிறார்கள்

மேலும் UNITED NATIONS Population Division Department of Economic and Social Affairs ன் EXPERT GROUP MEETING ON INTERNATIONAL MIGRATION AND DEVELOPMENT ன் அறிக்கைகள் ரெகுலராகப் படிக்கிற வழக்கம் உண்டு. இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் ஆழம் என்னை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றது.. எத்தனை தகவல்கள்.. பல நாட்டு கலாச்சார , சட்ட பிண்ணணியுடன் ஆராயும் அறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள்

ஐ.நா சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகத்தில் பாலியல் தொழில் தொடர்பாக விடுத்த/ விடுத்துக்கொண்டிருக்கும் எச்சரிக்கை செய்தி படங்களும் சேகரித்து வருகிறேன்

International Labour Organisation இந்த பாலியல் தொழில் தடை செய்யப்பட்டே ஆக வேண்டும் என்று பல ஆண்டுகளாக சில நாடுகளுக்கு எழுதிய மடல்கள் அதற்கு அந்த நாடுகள் தந்த பதிலுரைகளையும் சேகரித்து வருகிறேன்

பலருடன் உடல் உறவு செய்யின் (பாலியல் நோய் பாதுகாப்புடனே செய்தாலும்) ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் குறித்து புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவர் சில குறிப்புகள் தருவதாக சொல்லியுள்ளார்.


ஆக இதனை பல கோணங்களில் அணுகி வருகிறேன்.

வலைப்பதிவில் தொடர் பதிவாகத்தான் செய்ய வேண்டும்.. அலுவல் பணிகள் வேறு.. கொஞ்சம் கால அவகாசம் எடுத்து நன்றாக செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல்.

இவை அனைத்தும் சேர்த்து எனது வலைப்பதிவில் அடுத்த பதிவினை இடுகிறேன்

No comments: