Wednesday 30 April 2008

ஏற்காடு


போனவாரக் கடைசியில் ஏற்காடு போயிருந்தேன். உபயம் நான் வேலை பார்க்கும் கம்பெனி.

நாங்கள் ”பாலா” என்று கூப்பிடும் எங்கள் கம்பெனி டைரக்டர் திரு. பாலமுருகன் இப்படி எங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுவார். அவரும் எங்களுடன் வந்திருந்தார்

இந்த மாதிரி பயணம் கிளம்பும் போது பஸ் டிரைவர் பற்றி கொஞ்சம் புலன்விசாரணை செய்ய வேண்டும் போலும். நாங்கள் போன பஸ் டிரைவர் முன்னால் போகிற வண்டிகளின் பின்புறத்தை தரிசனம் செய்வதில் அபார பிரேமை கொண்டவர் போலும். அந்த வண்டிகாரர்கள், “இந்தாப்பா ஓவர் டேக் செஞ்சுக்கோ “என்று பெரிய மனசாய் கைகாட்டினாலும் எங்கள் டிரவைர் “ ஊஹூம் மாத்தேன் போ “ என்று குழந்தையாக பவ்யமாய் பின் தொடர்ந்தார். பயணத்தின் பெரும்பால நேரம் தார்ப்பாய் மூடிய லாரிகளின் பின்னால் தான்.

ராத்திரிக்குள் போய் சேர்ந்துவிடுவோமா என்ற சந்தேகம்.. ஒருவழியாய் நடு ராத்திரி கொண்டு போய்ச்சேர்த்தார். அந்த நடுநிசியிலும் எங்களுக்காக நிலா, நட்சத்திரம், அடர்த்தியான பனி, நாங்கள் தங்க இருந்த காட்டேஜ் சிப்பந்திகள் எல்லாரும் ஓவர் டைம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் காலையில் காட்டேஜுக்குள் “கிறீச் கிலுங்”என தொடர் சப்தத்தில் என் தூக்கம் கலைந்தது. சத்தம் வெளியில் இருந்து. ஒரு ஜன்னலை திறந்து பார்த்தேன். அபாரம். காபி தோட்டத்தின் மிக சமீபம். வகை வகையாய் சின்னச் சின்ன பறவைகள். இத்தனை ரகமா !!


”கழனி செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரை கைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனிகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும் “

என கொஞ்சம் சிலப்பதிகாரம் ஞாபகம் வந்தது

நாங்கள் தங்கியிருந்த MM Holiday Inn ஊர்க் கோடியில் . ஜன சந்தடியில்லாத இடம். மேகங்கள் அவ்வப்போது பக்கத்து பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு போயின

காதலர்கள், புதுசாய் கல்யாணம் ஆனவர்களுக்கு ஏற்காடு ஏரி படகு சவாரி அவ்வளவு உசிதமில்லை. அந்தரங்கமாய் ஒரு இடத்துக்கு படகை அவசரமாய் மிதித்துக் கொண்டுபோய் ஜோடியை வாத்சாயனமாய் வாசனை பார்க்கும் சாத்தியக் கூறுகள் கிஞ்சித்தும் இல்லை. மறைவிடம் என்பதே கிடையாது

ஏற்காடு ஏரி சின்னதுதான். ஊட்டி, கொடைக்கானல் போல அவ்வளவு விஸ்தீரணமில்லை. காக்காய் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் தலையை அசைக்குமே அது மாதிரி தலையை திருப்பினால் போதும். ஏரி முழுக்க பார்வையில் பதிவாகிவிடும். கொஞ்சம் நீட்டி விட்ட டபிள்யூ மாதிரி சைசில் இருக்கிறது.

கரைநெடுக திண்பண்டங்கள் கடை அணிவகுப்பு . அதன் முன் ஜனக் கூட்டம். ஒரு அலுமினியப் பாத்திரக் கடை கூடப் பார்த்தேன். அதன் முன்பும் கூட்டம். ஏற்காடு வந்து அலுமினியப் பாத்திரம் வாங்க வேண்டும் என்று சங்கல்ப்பம் போலும்.

ஏற்காடு ஏரியை உள்ளூர் நிர்வாகத்துடன் சேர்ந்து மதராஸ் அலுமினியம் லிமிடெட் என்ற கம்பெனியும் பராமரிப்பு செய்கிறது. இவர்கள் ஏரிக்கு நடு நாயகமாக ஒரு பவுண்டன் வைத்திருக்கிறார்கள்

பகோடா பாயிண்ட் என்ற ஸ்தலம் ஏற்காட்டில் பிரபலம். இப்படி ஒரு பட்சண லட்சணமாய் காரணப் பெயர் எப்படி வந்தது.

பகோடா என்றால் அடுக்கடுக்கான கட்டட அமைப்பு. ஸ்தூபி மாதிரி. கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் புத்தவிகார கட்டடங்கள் பகோடா வகை. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் ” லில்லி மலருக்கு கொண்டாட்டம் “என்று மஞ்சுளாவுடன் பாடிக்கொண்டிருக்கும் போது பாட்டின் கடைசியில் குண்டடிபட்டு ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து விழுவார் . அந்த கட்டடமும் பகோடா வகை.. இதே மாதிரி பிரமிடு அமைப்பு கற்கள் நாலு இங்கு பழங்குடி மக்களால் செய்யப்பட்டு உள்ளதால் இந்தப் பெயர் இங்கே ராமர் கோவில் ஒன்றும் இருக்கிறது.

இங்கிருந்து பார்க்கையில் பள்ளத்தாக்கு பரவசம் கண்ணிலும் பயம் அட்ரினிலாய் வயிற்றிலும். கம்பிக் கட்டையை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்கணும். பக்கம் போனால் அடிவயிறும் காலும் கூசும். ”எனக்கு அப்படியெல்லாம் இல்லை” என்று யாராவது சொன்னால் , அவர் முந்தின ராத்திரி கொஞ்சம் ஜாஸ்தி ஜல போஜனம் பண்ணியிருக்கணும். அப்படியும் இல்லை என்றால் அவரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போகவும்

மலை வாசஸ்தலங்களின் இலக்கணமாய் சில கோவில்கள், அருவி, சீட்டர்கள் இங்கும்.

Sound Sleep by night; study and ease,
Together mixt, sweet recreation;
And innocence, which does most please
With meditation

Thus let me live unseen unknown

என்று அலெக்சாண்டர் போப் சொன்ன மாதிரி இரண்டு நாள் ஒய்வு

ஆர்கே நாராயணின் மிஸ்டர் சம்பத் கொஞ்சம் படித்தேன். மத்தபடி ஓய்வுதான்.
ஞாயிறு மதியம் புறப்பட்டோம். ராத்திரி 10 மணிக்கு வந்த என்னை கரண்ட் போயிருந்த மாம்பலம் வரவேற்றது.

ஏற்காட்டில் காட்டேஜ் சிப்பந்திகள் , “இப்ப கிளைமேட் சூப்பர் சார் !! வேர்வையே இருக்காது “ என அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - இன்பச் சுற்றுலா சென்று வந்தால் கட்டுரை அழகாக, படங்களுடன் இருக்க வேண்டும். ஏன் படங்களைப் பிரசுரிக்க வில்லை. ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா