Wednesday 25 May 2011

திஹார் சிறைச்சாலை

இந்த இடம் என்னவோ பெரும் குற்றம் செய்தவர்களுக்கான இடம் போலவே சித்தரிக்கப்படுவதால் நிஜத்தை சொல்லலாம் என தேடி எழுதிய பதிவு.

டெல்லி யூனியன் பிரதேச அரசின் சிறைத் துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு சிறை வளாகங்கள் திஹார், ரோஹினி

இதில் திஹார் வளாகம் தன்னகத்தே ஒன்பது மத்திய சிறைச்சாலைகளை உள்ளடக்கி உலகின் பெரிய சிறை வளாகம் எனும் பெருமையைக் கொள்கிறது. இட அளவில் பெரியதாக இருந்தாலும் எங்களூரில் பெரிய ஜெயில் இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் ஒரு சங்கடமும் இருக்கிறதோ !!!

1958 க்கு முன்பு வரை டெல்லி யூனியன் பிரதேச சர்க்காருக்கான சிறைச்சாலை மிகச் சிறியதாக டெல்லி கேட் அருகே இருந்தது. பின்னர் பெரிய சிறை வளாகம் அமைக்க டெல்லிக்கு மேற்கே இந்த திஹார் கிராமம் தேர்வு செய்யப்பட்டது ; முதன் முதலில் ஒரு மத்திய சிறைச்சாலை 1273 பேரை அடைத்து வைக்கும் அளவுடன் தான் தொடங்கப்பட்டது

1966 ம் ஆண்டு வரை திஹார் சிறை வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பு பஞ்சாப் மாநிலத்திடம் இருந்தது. 1988 ம் ஆண்டு டெல்லி சிறை வழிகாட்டும் முறைகள் அமுலுக்கு வரும் வரை பஞ்சாப் சர்க்கார் தான் இந்த சிறை நிர்வாகத்திற்கு பொறுப்பு வகித்திருக்கிறது

திஹார் வளாகத்தில் அமைந்துள்ள நம்பர் 6 என அடையாளம் கொண்ட மத்திய சிறைச்சாலை பெண்களுக்கானது. இங்கே தான் கனிமொழி ரிமாண்ட் வாசம் கொண்டிருக்கிறார்

இந்த 6 ம் எண் சிறைச்சாலையில் 400 பேரைக் காவலில் வைக்க இடமுண்டு ஆனால் டிசம்பர் 31 2010 அன்று கணக்குப்படி இங்கே 505 பேர் காவலில் இருந்துள்ளனர். இப்படி ஓவர் ஃப்ளோ ஆகும் அளவுக்கு நமது புலனாய்வு அமைப்புகள் கடமை ஆற்றுவதில் மிக்க மகிழ்ச்சி

பின்னர் இருக்காதா !!! சிபிஐ சமீபத்தில் Ruth T Zaplin எழுதிய Female offenders Critical Perspectives and Effective Interventions எனும் புத்தகத்தை தனது லைப்ரரிக்கு வாங்கியுள்ளது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் http://cbi.nic.in/cbinews/cbilib_english.pdf என உங்கள் ப்ரவுசரில் லிங் தந்து உறுதி செய்து கொள்ளவும் . இந்த புத்தகத்தின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்களை கூகிள் புக்ஸில் படித்தேன்; தற்போது படித்துக் கொண்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் ஓரம் கட்டிவிட்டு இந்த புத்தகத்தை வரவழைத்து படித்துவிட வேண்டும் என ஒரு யோசனை துளிர்க்கிறது

மீண்டும் திஹாருக்கு வருவோம் : இந்த சிறை வளாகப் பாதுகாப்பு பொதுவாக டெல்லி சர்க்கார் வசம் இருந்தாலும் , சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கமாண்டோக்கள் உள்ளனர்.

இவர்கள் மத்திய ரிசர்வ போலிஸ், இந்தோ திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படை , தமிழ்நாடு சிறப்புக் காவல் படை எனும் அமைப்புகளைச் சேர்ந்த கமாண்டோக்கள்.

தமிழ்நாட்டிலிருந்து திஹார் சிறைக்கு குற்றம் சாட்டப்பட்டு ரிமாண்டில் மட்டும் ஆட்கள் செல்வதில்லை; சிறப்புக் காவல் பணிக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதில் சின்ன ஆறுதல்

இந்த சிறை வளாகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க வருபவர்களுக்கான முறையினைக் கவனிக்கலாம் ; திங்கள் முதல் வெள்ளி வரை தான் பார்வையாளர்கள் அனுமதி. அதுவும் சிறை எண் 1 முதல் 9 வரை உள்ள சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து, கிழமை எனும் காம்பினேஷனில் தான் பார்வையாளர் முறை வைக்கப்பட்டுள்ளது . உதாரணமாக ஆங்கில எழுத்து கே வில் முதல் பெயர் தொடங்கும் ஒரு பெண் கைதி (இவர் சிறை எண் 6 ல் இருப்பார்) யை சந்திக்க
பார்வையாளர்கள் திங்கள் அல்லது வியாழன் அனுமதிக்கப்படுவர். ஆர் எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவருக்கு செவ்வாய் வெள்ளி என இரண்டு மங்கள நாட்களை சிறை நிர்வாகம் ஒதுக்கி உள்ளது இது போல மற்ற எழுத்துக்கள் நாட்கள் காம்பினேஷனில். இதற்கு டெலி புக்கிங் என தொலைபேசி வழி புக்கிங் செய்து கொள்ள வசதியும் உள்ளது. டெல்லி எஸ்டிடி கோட் சுழற்றி 28520202 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவரை சந்திக்க போன் புக்கிங் செய்வது மட்டுமல்ல ; உள்ளிருப்பவர்கள் வெளியே இருக்கும் தங்கள் உற்வுகளுடன் வாரம் ஒரு முறை பேச டெலிபோன் வசதியுள்ளது ; இந்த வசதி கடந்த2010 மார்ச் 28 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வாரம் ஒரு முறை 5 நிமிடம் மொத்தம் அதுவும் இரண்டு நம்பர்க்ளுடன் பேசலாம்.

“ஹலோ தலைவரே நான் --- பேசறேன். இங்க வரைக்கும் வந்தீங்க என்னைப் பார்கவேயில்லையே” என ஐந்து நிமிடத்துக்குள் பேசி விட முடியாதா என்ன. ஆனால் இன்னார் பேசுகிறேன் என சொன்ன உடன் லைன் கட்டாகி விட்டால் சிறை நிர்வாகம் பொறுப்பல்ல. அவர்களிடம் வடிவேலு சினிமாவில் சொல்வது போல் ஹலோ என்பது ஒரு பேச்சா என சண்டை போட முடியாது


திஹார் , ரோஹினி வளாகம் தவிர தற்போது மன்டோலி எனும் சிறை வளாகமும் தயாராகி வருகிறது இந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரஹப்பிரவேசம் இருக்கலாம் எனத் தெரிகிறது

7 comments:

சுரேகா.. said...

அழகாக, வித்யாசமான கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்!
எவ்வளவு தகவல்கள்!

வாழ்த்துக்கள் சார்!

Rajagopal V said...

Dear Sri Mouli
I am regularly reading your blogs which are coming to me on my E Mail. I wonder how you are able to give such crisp points on any subject, especially current topics. The twist at the end of the blog given to the titles are very good. Please carry on your good work. With best wishes
Rajagopal V

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - தகவல் திலகம் அள்ளித் தரும் தகவல்கள் அத்தனையும் நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

saara said...

Thinking Superb

NR SARAVANA KANNI

VSK said...

தற்போதைய நாட்டு/உலக நடப்புகளின் யதார்த்தத்தை உடனே தந்துதவும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

D. Chandramouli said...

இதில் திஹார் வளாகம் தன்னகத்தே ஒன்பது மத்திய சிறைச்சாலைகளை உள்ளடக்கி உலகின் பெரிய சிறை வளாகம் எனும் பெருமையைக் கொள்கிறது. இட அளவில் பெரியதாக இருந்தாலும் எங்களூரில் பெரிய ஜெயில் இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் ஒரு சங்கடமும் இருக்கிறதோ !!!//

Yes, you are right. This is nothing to be proud of.

BalHanuman said...

அருமையான தகவல்கள். உங்கள் சேவை தொடரட்டும்.